search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாம்பரம் மாநகராட்சி"

    • தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து நிறைவேற்றி அரசிதழில் வெளியாவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

    தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2-வது மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை (தி.மு.க.) சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    அதில், தமிழக முதலமைச்சரால் தகைசால் தமிழர் விருது பெற்ற சுதந்திர போராட்ட வீரர் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரான ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவருமான என்.சங்கரய்யா கடந்த மாதம் 15-ந்தேதி மரணம் அடைந்தார். மறைந்த என்.சங்கரய்யா மாநகராட்சி-2 பகுதியில் உள்ள குரோம்பேட்டை நியூ காலனியில் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வந்தவர்.

    எனவே மறைந்த என். சங்கரய்யாவை என்றென்றும் நினைவு கொள்ளும் வகையில், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் வாழ்ந்த குரோம்பேட்டை நியூ காலனி பகுதியை சங்கரய்யா நகர் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.

    இந்த தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து நிறைவேற்றி அரசிதழில் வெளியாவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இதையடுத்து இந்த சிறப்பு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

    • குடிநீரின் தரம்குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தண்ணீரின் தரம் குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும்.

    தாம்பரம்:

    மாடம்பாக்கம் ஏரியில் உள்ள 5 கிணறுகளில் இருந்து சிட்லபாக்கம் மற்றும் மாடம்பாக்கத்தில் உள்ள சுமார் 3,300 வீடுகளுக்கு தினமும் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதில் சிட்லபாக்கம் பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரமற்று பயன்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மாடம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பினர். இதன் முடிவில் மாடம்பாக்கம் ஏரியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் குடிநீருக்கு உகந்தவை என்பது உறுதியானது.

    இதையடுத்து குடிநீரின் தரம்குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களிடம் சிலர் மாடம்பாக்கம் ஏரி தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்று தவறான தகவல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சிட்லபாக்கம் பகுதியில் பொதுக்குழாயில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் குடிநீர் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் இந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என்று சான்றழிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாடம்பாக்கம் ஏரியில் அமைக்கப்பட்டு உள்ள கிணறுகளில் எடுக்கப்பட்ட மாதிரி தண்ணீரும் பொதுமக்கள் குடிப்பதற்கு ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே குடிநீர் குறித்து பொதுமக்களிடம் தவறான தகவல்கள் தெரிவிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    எனினும் ஏரியில் இருந்து வினியோகிக்கும் தண்ணீர் குடிநீருக்கு ஏற்றது இல்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, தண்ணீரின் தரம் குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும். ஏரியில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் கோலிபார்ம் பாக்டீரியா இருப்பதை அறிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன என்றார்.

    இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா கூறும்போது, "மாடம்பாக்கம் ஏரியில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் பற்றி கண்காணித்து வருகிறோம். தண்ணீரின் தரம் குறித்த சோதனையில் எந்த குறைபாடுகளும் இல்லை. பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. மாடம்பாக்கம் ஏரி அருகே புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ரூ.1,500 கோடியில் இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது என்றார்.

    • பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    • தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்களும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொ டர்ந்து சென்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிந்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு மீது மோதாமல் இருக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது லாரியில் சிக்கி பலியானார். இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தின்போது சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பிடிபடும் மாடுகள் காலியாக உள்ள மாநகராட்சி இடங்களில் கட்டி வைத்து அபராதம் செலுத்திய பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தாம்பரம், செம்பாக்கம் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை மாடம்பாக்கம் பகுதியில் கட்டி வைத்து வருகின்றனர். தற்போது சுற்றி உள்ள பல இடங்களில் இருந்து அதிக அளவு மாடுகள் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படுவதால் இப்பகுதியில் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. வரும் சில நாட்களில் மாடம்பாக்கம் பகுதியில் மாடுகளை கட்டி வைக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பல்லாவரம், பம்மல் மண்டலங்களில் பிடிபடும் மாடுகளை திருநீர்மலைப் பகுதியில் அடைத்து வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் பிடிபடும் மாடுகளை அடைத்து வைக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல தனியாக புதிய வாகனங்களும் வாங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
    • பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் உள்ளிட்ட சேவைகளுக்கு கியூ.ஆர். கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதனை செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த செயலி தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டில் சோதனை முறையில் அறிமுகம் செய்து உள்ளனர். இந்த வார்டில் உள்ள 2976 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1500 குடியிருப்புகளில் கியூ.ஆர். கோடு குறியீடு அட்டை ஒட்டப்பட்டு இருக்கிறது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    துப்புரவு ஊழியர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட்டு உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டதா? இல்லையா? என்பதையும் பதிவிட முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு அன்றாடம் கிடைக்கக்கூடிய சேவை சரியாக செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகார் அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கு தனித்தனியாக கியூ.ஆர். கோடு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். மேலும் இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் புகாராக தெரிவிக்க முடியும்.

    பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது. இதன் பின்னர் மாநகராட்சி முழுவதும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பொதுமக்களின் வீண் அலைச்சல், நேர விரயம் தவிர்க்கப்படும் என்றார்.

    • தி.மு.க.வில் ஒரு தரப்பினர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அனுமதி அளிக்க கூடாது என்றும் கூறி மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் காமராஜ், ஆணையர் அழகுமீனா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரியல் எஸ்டேட் தொடர்பான அனுமதி கேட்டு மன்ற பொருள் வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தி.மு.க.வில் ஒரு தரப்பினர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அனுமதி அளிக்க கூடாது என்றும் கூறி மாறி மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அ.தி.மு.க.கவுன் சிலர்கள் 9 பேர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் மக்களின் குறைகள் எதுவும் பேசாமல் ரியல் எஸ்டேட்டுக்காக தி.மு.க. உறுப்பினர்கள் மன்றத்தை நடத்த விடாமல் செய்வதாகவும், மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    • தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.

    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. புறநகர் பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள். தங்கள் வீட்டு குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் மொத்தமாக கொடுக்காமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை 'என்று பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், 50 வீடுகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உள்ள மறுசுழற்சி சாதனங்களை பயன்படுத்தி திடக்கழிவை சுத்திகரித்து கொள்ளவேண்டும். மேலும் மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.

    காகிதம் மற்றும் மக்காத பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் மட்டும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு ஒப்புக்கொள்ளாத குடியிருப்புகளில் குப்பை அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வரமாட்டார்கள். அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தனியார் குப்பை அகற்றும் ஏஜென்சி மூலம் அகற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறும்போம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு வாங்கிய பலருக்கு தாம்பரம் மாநகராட்சி விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மைக்கு வரி வசூலித்து வரும் நிலையில், குப்பையை அந்தந்த குடியிருப்புகளே அகற்ற வேண்டும் என்ற உத்தரவை தாம்பரம் மாநகராட்சி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    • மாநகராட்சி பள்ளிகளில் ரூ.14.4 லட்சம் செலவில் மாணவர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 10 பூங்காக்களில் ரூ.29.2 லட்சம் செலவில் குடிநீர், மின் விளக்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட 53 பணிகளை ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம், குரோம்பேட்டை பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள், ரூ.2 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டலத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில், கீழ்க்கட்டளை, ஈசாபல்லாவரம் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ரூ.14.4 லட்சம் செலவில் மாணவர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவை மட்டுமின்றி பல்லாவரம் மண்டலத்தில் தெருவிளக்கு, குடிநீர் பணிகள், வடிகால் சிறுபாலங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    பாழடைந்து கிடக்கும் லட்சுமிநகர், சித்ரா டவுன் ஷிப் கச்சேரி மலை, சுபம் நகர் 1, 2, 3, காசி விசாலாட்சிபுரம் ஆகிய 10 பூங்காக்களில் ரூ.29.2 லட்சம் செலவில் குடிநீர், மின் விளக்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட 53 பணிகளை ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஐந்து நகராட்சி, ஐந்து பேரூராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 15 கிராம ஊராட்சிகளும் அடங்கும்.
    தமிழக சட்டசபையில் தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றது. சமீபத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கான காவல் ஆணையம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது.

    பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனாகபுத்தூர் உள்ளிட்ட ஐந்து நகராட்சிகள் சிட்லபாக்கம், பெருங்களத்தூர், திருநீர்மலை, பீர்க்கன்கரணை ஆகிய பேரூராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் 15 கிராம ஊராட்சிகளும் அடங்கும்.
    ×