search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மேயர்"

    • மேயர் சென்ற கார் முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்து நடந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

    சென்னை மேயர் பிரியா ராஜன் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

    பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்னை குப்பம் அருகே நிகழ்ந்த விபத்தில் மேயர் பிரியா காயமின்றி தப்பினார்.

    மேயர் சென்ற கார் முன்னால் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் மேயரின் கார் மோதியதாக கூறப்படுகிறது.

    மேயரின் கார் நின்றதும், பின்னால் வந்த லாரி மோதியதால், மேயரின் கார் இருபுறமும் சேதம் அடைந்தது.

    இதையடுத்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மேயர் பிரியா புறப்பட்டு சென்றார்.

    விபத்து நடந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
    • புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை படித்தார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படும்.

    வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 கவுன்சிலர்களுக்கும் டேப் வழங்கப்படும்.

    வருவாய் துறையில் வழங்கப்படும் மதிப்பீட்டு ஆணைகளான புதிய மற்றும் கூடுதல் சொத்துவரி, மதிப்பீடு சொத்துவரி பெயர் மாற்றும், திருத்தம், புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள் கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தில் வழங்கப்படும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்கள், திறந்த வெளிகள், பூங்காக்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகளை தன்னார்வர்கள் மூலம் நடப்பட்டு அவைகளை முறையாக பராமரித்து பேணி காக்கப்படும். இதன் மூலம் நகரின் மாசு கட்டுப்படுத்தப்படும்.

    பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் நாவலர் நகர்-லாக்நகர், வாலாஜா காலணியில் இருந்து பாரதி சாலை, பாலாண்டியம்மன் கோவில் தெரு, சிங்காரவேலர் பாலத்தில் இருந்து-கைலாசபுரம் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு முண்டகக் கண்ணியம்மன் பாலம், பேங்க்ரோடு மயிலாப்பூர் பாலம், மந்தைவெளி பாலம் (இரண்டு பக்கமும்), சாலையோர பூங்காக்களை அழகுப்படுத்தும் பணி ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    சென்னையில் ஆண்களுக்கு உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டில் இருப்பது போல பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் எதுவும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மாத்தூர் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்ந்த முறையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்பான்ச் பார்க் வடிவமைக்கப்படும்.

    மேலும் மாநகராட்சி பூங்காக்களில் ஸ்பான்ச் பார்க் அமைக்க ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநகராட்சியால் 192 மயான பூமிகள் பராமரிக்கப்படுகிறது. இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளும் உற்றார் உறவினர்கள் மன அமைதியுடன் இருக்கைகளில் அமர்ந்து மன நிறைவுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் மயான பூமிகள் ரூ.10 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும்.

    255 சென்னை பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் வீதம் ரூ.7.64 கோடி மதிப் பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் முதல் முறையாக வழங்கப்படும்.

    சென்னை பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் 11-ம் வகுப்பில் சேரும் 50 மாணவர்களை இஸ்ரோ மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும்.

    மழலையர் வகுப்புகளில் இரண்டாம் ஆண்டு (யு.கே.ஜி.) பயின்று வரும் 5,944 மாணவ-மாணவிகளுக்கு மழலையர் வகுப்பை நிறைவு செய்வதற்கான பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.


    புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறி நாய் கடி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 3 வட்டாரங்களில் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் ரூ.60 லட்சத்தில் வாங்கப்படும்.

    மாடுகளை முறைப்படுத்த மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் கூடுதலாக 2 நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளில் ஓட்டுப்பணிகள் மேற்கொள்ள ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எந்திரம் வாங்கி ஒப்பந்ததாரர் மூலம் பணி மேற்கொள்ளப்படும். மேலும் 4750 சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் மேம்படுத்தும் பணி ரூ.404 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    2024-2025-ம் நிதியாண்டின் வருவாய் ரூ.4464.60 கோடியாகவும் வருவாய் செலவினம் ரூ.4727.12 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.252.52 கோடியாக உள்ளது.

    பட்ஜெட் மீதான விவாதம் நாளை நடைபெறுகிறது.

    • எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
    • எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் பேசியதாவது:-

    எனது வார்டில் புயலால் 100-க்கும் மேலான மின் கம்பங்கள் சாய்ந்தன. முருகப்பா நகர் குளத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மேயருக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள்.

    எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    தனியரசு (மண்டல தலைவர்): வட சென்னை வளர்ச்சி நிதி ரூ.1000 கோடி சி.எம்.டி.ஏ. ஒதுக்கியது. அந்த நிதியில் என்ன பணிகள் செய்யப்படுகிறது. அது என்ன திட்டம், எந்தெந்த பணிகளுக்கு அதில் இருந்து நிதி ஒதுக்குகிறீர்கள்.

    மகேஷ்குமார் (துணை மேயர்): 30 தொகுதிகளுக்கு அந்த திட்டத்தில் வேலை செய்வதாக கூறுகிறார்கள். அது என்ன வேலை என்று தெரியவில்லை.

    ராதாகிருஷ்ணன்: மாநில அரசு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சி.எம்.டி.ஏ. மூலம் வளர்ச்சி நிதி தரப்படுகிறது. இது பல்வேறு துறைகளுக்கு செலவிடப்படும். எந்தெந்த பணிகளுக்கு இந்த பணம் ஒதுக்கப்படும் என்ற தகவலை இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் நான் உறுப்பினர்களுக்கு தருகிறேன்.

    டில்லிபாபு: (காங்கிரஸ்) கொடுங்கையூரில் குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டப்படி குப்பைகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இடம் மீட்கப்படும் என மன்ற கூட்டத்தில் கடந்த ஆண்டு கூறினீர்கள். ஆனால் இதுரையில் எந்த பணியும் அங்கு நடைபெறவில்லை. அந்த திட்டம் என்ன ஆனது?

    மேலும் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு சுடுகாடு அமைத்து தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்து சுடுகாடு பணிகள் மட்டும் மெதுவாக நடைபெறுகிறது. மற்ற சுடுகாடு பணிகள் நடைபெறவில்லை.

    மேயர் பிரியா:- வெகு விரைவில் குப்பை கிடங்கு பயோமைனிங் திட்டம் தொடங்கப்படும். 2 வருடத்தில் முடிக்கப்படும்.

    பரிதி இளம் சுருதி: பேரிடர் காலத்தில் வார்டுகளில் பணிகள் செய்யும் போது ஒரு பகுதி பாதிக்கிறது. அதனால் ஒரு வார்டுக்கு 2 உதவி பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    சுகன்யா செல்வம் (காங்கிரஸ்): சூளைமேடு பகுதியில் மழைக்கு பிறகு சாலைகள் புதிதாக போடப்பட்டது. அந்த சாலைகளை மின்வாரிய ஊழியர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

    கமிஷனர் ராதாகிருஷ்ணன்: இது தவறான செயல். அனுமதி இல்லாமல் சாலைகளில் கை வைக்கக்கூடாது. இது தொடர்பாக துறை செயலாளர்களிடம் பேசுகிறேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது.
    • சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தேங்கிய வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியாமலேயே உள்ளது.

    பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் மின்தடை ஏற்பட்டதுடன் மக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தண்ணீரை வெளியேற்ற தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் கேட்டனர்.

    இதையடுத்து மேயர் பிரியா அவர்களை சமாதானப்படுத்தினார். உங்கள் பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பால் தண்ணீர் கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்தி தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    இதையடுத்து முற்றுகை போராட்டத்தை வாபஸ் வாங்கிய பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஒவ்வொரு வார்டில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா காலை சிற்றுண்டி திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

    அப்போது மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது தொடர்பாக நன்றி தெரிவிக்கக்கோரி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்த் எழுந்து கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க. மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்கள் எம்.எஸ். திரவியம், ராஜசேகரன் உள்ளிட்டோர் பலர் எழுந்து எதிர்த்து குரல் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து உமா ஆனந்த் வெளிநடப்பு செய்தார்.

    கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் (24-வது வார்டு) சேட்டு பேசும்போது, எனது வார்டில் தனியார் நிறுவனம் ஒன்று கியாஸ் பைப்லைன் ரோட்டில் பதித்து செல்கிறது. அது என்ன திட்டம், யார் போடுகிறார்கள் என்ற எந்த தகவலும் எனக்கு தெரியாது.

    ஆனால் கியாஸ் பைப் வெடித்து அசம்பாவித சம்பவம் நடந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது எங்களை வந்து கேட்பார்கள். வார்டுகளில் எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    அவரது கருத்திற்கு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து ஒருமித்த குரலாக எழுப்பினர். வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பது இல்லை என்றும் பிரச்சனை வந்தால் மட்டும் எங்களிடம் கூறுகிறார்கள் என்று தி.மு.க. கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், ஒவ்வொரு வார்டில் நடக்கும் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த பணி நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு கேட்பதற்கு உரிமை உள்ளது. கவுன்சிலர்களுக்கு தகவல் சொல்ல 5 நிமிடங்கள் ஆகும். எந்த பணி நடந்தாலும் தகவல் தெரிவியுங்கள் என்றார்.

    துணை மேயர் மகேஷ் குமார் பேசும்போது, சாலைப் பணிகள் நடந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கண்காணிப்பார்கள் என்றார்.

    கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, சென்னை நகரம் 476 சதுர கி.மீ. தூரம் வளர்ந்துள்ளது. அதனால் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில் அதிகாரிகளுக்கு என்ன கஷ்டம், ஆய்வு பணிகள், வளர்ச்சி பணிகள், எது நடந்தாலும் கட்டாயம் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு பிரபல கர்நாடகா சங்கீத இசையமைப்பாளர் டாக்டர் எம்.பால முரளி கிருஷ்ணா மேம்பாலம் என பெயர் மாற்றம், 130-வது வார்டில் உள்ள குமரன் நகர் பிரதான சாலைக்கு "மாண்டோவின் ஸ்ரீநிவாஸ் பிரதான சாலை" என பெயர் மாற்றம், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு 50 சதவீத சலுகை, கொடுங்கையூர், பெருங்குடியில் பொது, தனியார் கூட்டாண்மை முறையில் பயோ-சி.எஸ்.ஜி. ஆலை உரம் தயாரிக்கும் அழகு பொருள் மீட்பு வசதி மற்றும் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் வசதி ஆகியவற்றிற்கு திட்ட அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    மேலும், சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.
    • புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, முதல்வர் கான்வாயில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி சென்ற காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    தென்சென்னையில் புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து, சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதமடைந்த படகுகளைப் பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்நிலையில், அங்கு செல்லும்போது சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மேயர் பிரியா தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
    • “என் குப்பை எனது பொறுப்பு” என்ற இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு சென்னை மேயர் கேட்டுக்கொண்டார்.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பை தரம் பிரிக்கும் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சி மணலி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு என் குப்பை எனது பொறுப்பு என்கின்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார்.

    பின்னர் மேயர் பிரியா தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை இந்த போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

    இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை ஒரு மாதம் நடைபெறும். இந்த குப்பை தரம் பிரித்து தரும் போட்டியில் பொதுமக்களும் கலந்து கொண்டு வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு கூடைகளில் பிரித்துக்கொடுத்து அதை படம் பிடித்து பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வெளியிட்டு 8925800864 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தாலோ அதே எண்ணில் வாட்ஸ் அப்பில் பதிவிட்டாலோ முதல் 3 பேருக்கு டி.வி. வாஷிங்மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.

    எனவே "என் குப்பை எனது பொறுப்பு" என்ற இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.

    இதில் மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், கவுன்சிலர்கள் தீர்த்தி, காசிநாதன், நந்தினி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராஜ் உட்பட அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.
    • உலகெங்கிலும் தொழிலதிபர்களாக திகழும் பல்வேறு துறைகளில் பல்வேறு வணிகங்களில் சாதித்துவரும் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்படைய செய்திருந்தார்கள்.

    சென்னை:

    உலக பறையர் கூட்டமைப்பு (டபுள்யு பி எப்) சார்பில் சர்வதேச தொழில்முனைவோர் வர்த்தக மாநாடு கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் சிம்சன் அரங்கத்தில் நடந்தது.

    மாநாட்டுக்கு கூட்டமைப்பின் தலைவரும் சென்னை துறைமுக பொறுப்பு கழக முன்னாள் அறங்காவலரும் நடிகருமான சி.ஜெய் ராஜ்குமார் தலைமை தாங்கினார். விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மேலும் அரங்கத்தில் உள்ள ஸ்டால்களை திறந்து வைத்து பார்வையிட்டு பாராட்டுகளையும தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் உலகெங்கிலும் தொழிலதிபர்களாக திகழும் பல்வேறு துறைகளில் பல்வேறு வணிகங்களில் சாதித்துவரும் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்படைய செய்திருந்தார்கள்.

    தமிழ்நாடு மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர். கண்ணகி பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ராஜேந்திரன் வரவேற்புரையும் டாக்டர் எம்.எஸ். செந்தில்குமார் விழா அறிமுக உரையும் நிகழ்த்தினார்கள். விழாவில் ஆதி திராவிட நலத்துறை ஆணையர் எஸ். மதுமதி தொழில் வாய்ப்புகளை பற்றியும், அது குறித்து விரிவான ஆலோசனைகளையும் வழங்கினார்.

    டாக்டர் வி. ராஜ்குமார் மருத்துவ துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றியும், தாட்கோவிலிருந்து துணை மேலாளர் தனலட்சுமி பல்வேறு வாய்ப்புகளை பற்றியும் விளக்கி கூறினார்கள். பல்வேறு தொழில் துறைகளில் சாதித்தவர்களுக்கும் கல்வி விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மலேசியாவிலிருந்து டத்தோ பாஸ்கரன், கத்தாரில் இருந்து டாக்டர் எஸ். கதிரவன், மும்பையிலிருந்து வி பாஸ்கர் ராஜ், ராஜு சண்முகம், அந்தமான் சேது, துபாய் முரளி சேகரன், பெங்களூருவில் இருந்து பாரதிராஜா, கருணாகரன், கோவை சங்கரபாண்டி, சென்னை பி.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    ஒளி மற்றும் வடிவமைப்பு இளங்கோவன், கோபி, பெருமாள், திவாகர், நாராயணன் ஆகியோரும், மெஸியா ஸ்டுடியோ ஜான் பீட்டரும் வரவேற்பை நட்சத்திரா, தமிழ்ப்பிரியன் ஆகியோரும் செய்து இருந்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை அகிலன், அனுசுயா ஆகியோர் செய்து இருந்தனர்

    ×