என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வார்டு வாரியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த சென்னை மேயர்
    X

    வார்டு வாரியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த சென்னை மேயர்

    • ஆய்வினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
    • மாநகராட்சி சார்பில் சாலை பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுடன் இணைந்து மக்களின் கோரிக்கைகளை அறிந்து, மக்களுடன் பயணிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் இன்றைக்கு சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 44 மாமன்ற உறுப்பினர் வார்டுகளிலும், 83 வட்ட வாரியான வார்டுகளிலும் ஆய்வினை தொடங்கி உள்ளோம். இந்த ஆய்வினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    ஆய்வின்போது அப்பகுதிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாநகராட்சி துறை சார்ந்த செயலாளர்கள், மெட்ரோ துறை சார்ந்த அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உடன் வருகிறார்கள். ஒவ்வொரு தெரு வாரியாக, வீடு வாரியாக இந்த ஆய்வினை மேற்கொண்டு உள்ளோம்.

    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கைகளை கண்டறிந்து, அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதியில் காணப்படும் சிறுசிறு குறைகளை உடனே தீர்க்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.

    வருகின்ற வழியில் அங்கன்வாடியை பார்த்தோம். அங்கு என்னென்ன தேவைகள், குறைபாடுகள் என்பதை கேட்டு கண்டறிந்தோம். அந்த குறைபாடுகள் வரும் நாட்களில் தீர்க்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சிறுசிறு குறைகளை பொதுமக்களிடம் நேரடியாக கேட்டு, கண்டறிந்து அந்த குறைகளை அந்த துறையினருடன் இணைந்து குறைகளை தீர்க்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.

    2022-ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்தப்பட்டது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய மாநிலத்தில் வரி வசூலிப்பது குறைவாகவே உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரசு சார்பில் அதிகமாக உள்ளது.

    மாநகராட்சி சார்பில் சாலை பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழை காரணமாக சில பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறக்கூடிய சூழல் உள்ளது.

    இப்போது வரை 5000 பகுதிகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. சீரமைக்க முடியாத பகுதிகளில் புதிதாகவே சாலைகள் போடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்போது தான் மழைக்காலம் முடிந்துள்ளது. இந்த மாதம் முதல் தொடர்ந்து சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×