search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்கி யானை"

    • புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
    • புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி பிரஜீஷ் (வயது36) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல் அறுக்க வனத்துறையொட்டி உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்து கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமின்றி, பீதியையும் ஏற்படுத்தியது. விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டு கொல்ல அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் களம் இறங்கினர்.

    புலி நடமாட்டத்தை கண்டறிய வனப்பகுதியில் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. மேலும் புலியை சிக்க வைக்க கூண்டுகளும் அமைக்கப்பட்டன. புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இருந்த போதிலும் இதுவரை அந்த புலி சிக்கவில்லை. வனத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயியை பிரஜீசை கொன்ற புலி 13 வயதுடைய ஆண் புலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த புலியைப்பற்றிய தகவல்களின் அடிப்படையில் அதனை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.

    விவசாயியை கொன்ற ஆள்கொல்லி புலியை கண்டுபிடிக்கும் பணிக்காக திணைக்களம் முத்தங்கா பகுதியில் இருந்து விக்ரம் மற்றும் பரத் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை கொண்டு புலியை தேடும் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது.
    • யானை ஊருக்குள் வராதவாறு, ஊரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி:

    கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள பந்தலூா் இரும்புப்பாலம் மற்றும் இன்கோ நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடந்த சில நாட்களாக கட்டக்கொம்பன் என்ற யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்து வரும் யானையானது, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதோடு, விவசாயப் பயிா்களையும் சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது. எனவே இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமிலிருந்து வசீம், விஜய், பொம்மன், சீனிவாஸ் ஆகிய 4 கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டன.

    கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கட்டக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    யானை ஊருக்குள் வராதவாறு, ஊரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் கட்டக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் டிரோனும் பயன்படுத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று வனத்துறையினர் டிரோன் பறக்க விட்டு அதன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கினர்.

    டிரோன் மூலம் யானை வருகிறதா என்பதை கண்டறிந்து, அதனை ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானை எங்கு இருக்கிறது என்பதை அறிந்ததும் வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டம், சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட சப்பந்தோடு பகுதியில் அண்மைக் காலங்களாக கட்டபொம்மன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது.

    இந்த காட்டு யானை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. அவ்வாறு வரும் யானை விளைநிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

    தொடர்ந்து குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து வனத்துறையினர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த யானைகள் ஊருக்குள் நுழையும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியைச் செய்து வருகின்றன.

    சேரம்பாடி மண்டாசாமி கோவில் பகுதி மற்றும் செவியோடு பகுதியில் இந்த கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

    • பாகுபலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
    • மற்றொரு கும்கி யானை விஜய் இன்று மாலை அல்லது நாளை முதுமலைக்கு அனுப்பி வைக்கப்படும்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் பாகுபலி யானை, வாய்ப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்தது. இதனால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சையளிப்பது என்று வனத்துறை முடிவுசெய்தது.

    இதற்காக வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்களுக்கு உதவியாக கோவை சாடிவயல் முகாமில் இருந்து வளவன், பைரவா என்ற 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன.

    இதற்கிடையே பாகுபலியை பிடிக்கும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து விஜய், வசீம் ஆகிய 2 கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டன. அந்த யானைகள் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை மரக்கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் பாகுபலியை தீவிரமாக கண்காணித்த வனத்துறை மருத்துவ குழுவினர், அந்த யானை முழு உடல் நலத்துடன் உள்ளது, எனவே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. எனவே கோவை சாடிவயல் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.

    இந்த நிலையில் கும்கி யானைகளையும் திருப்பி அனுப்புவது என்று வனத்துறை முடிவு செய்தது.

    அதன்படி கும்கி யானை வசீம் இன்று அதிகாலை மீண்டும் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

    மற்றொரு கும்கி யானை விஜய் இன்று மாலை அல்லது நாளை வாகனத்தில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
    • பொள்ளாச்சி வன பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    தர்மபுரி அருகே உள்ள கிராமங்களில், மக்னா என்ற காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனத்தில் விடப்பட்டது.

    அங்கு விடப்பட்ட சில நாட்களிலேயே மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை நகருக்குள் வந்தது.

    வனத்துறையினர், மீண்டும் அந்த யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் பகுதியில் விட்டனர்.

    இதற்கிடையே அந்த மக்னா யானை, சுமார் ஒரு வாரத்துக்கு இடம் பெயர்ந்து சுமார் 36 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள டாப்சிலிப் வனத்திற்குள் புகுந்தது.

    அந்த யானை, டாப்சிலிப் வனத்தையொட்டிய பொள்ளாச்சி வனச்சரகத்திற்குள் வந்து, அங்குள்ள கிராமத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அறிந்த வனத்துறையினர், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மூலம் கண்காணித்தனர்.

    இந்நிலையில், மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று முன்தினம் முதல், வனச்சரகர் புகழேந்தி தலைமையில், சுமார் 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சரளபதி பகுதியில் தனித்தனி குழுவாக கண்காணிப்பு பணியில் ஈடுபட துவங்கினர்.

    இதற்கிடையே, வனத்திலிருந்து யானை வெளியேறி அங்குள்ள கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க, கோழிக்கமுகத்தி முகாமிலிருந்து சின்னதம்பி, முத்து, ராஜவர்த்தனா ஆகிய 3 கும்கி யானைகள் சரளபதி பகுதிக்கு நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டது.

    இந்த கும்கிகள் மூலம், மக்னா யானை கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வால்பாறையில் இருந்து டாப்சிலிப் வழியாக பொள்ளாச்சி வன பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

    ஆனால், அந்த ரேடியோ காலர் பழுதானதால் யானை எங்கெங்கு செல்கிறது என கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஆங்காங்கே அமைக்கப்பட்ட வனத்துறை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணியை தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சரள பகுதி அருகே உள்ள ஒரு மாந்தோப்பில் மக்னா யானை புகுந்ததாக வந்த தகவலின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திடீர் என ஆவேசமடைந்த மக்னா யானை, வனத்துறையினர் வந்த ஜீப்பை தாக்கி சேதப்படுத்தியது. இதில் டிரைவர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    • கடந்த நான்கு மாத காலமாக இரண்டு காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தன.
    • கும்கி யானை மற்றும் யானையை விரட்டும் சிறப்பு படையினர் பாப்பாரப்பட்டி பகுதிக்கு இன்று வந்துள்ளனர்.

    பாப்பாரப்பட்டி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் கடந்த நான்கு மாத காலமாக இரண்டு காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தன.

    காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் மெத்தனமாக உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவருக்கும், வனத்துறையினருக்கும் தகராறு ஏற்பட்டு ஏற்கனவே வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உரிய உத்தரவு பெறப்பட்டு பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானை மற்றும் யானையை விரட்டும் சிறப்பு படையினர் பாப்பாரப்பட்டி பகுதிக்கு இன்று வந்துள்ளனர்.

    அவர்கள் அப்பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானைகளின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர். யானை பிடிபட்டவுடன் உயிரியல் பூங்காவில் கொண்டு சேர்க்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×