search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன் தற்கொலை"

    • சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர்.
    • மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (வயது 21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிருதுளாவுக்கு திப்பம்பட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாகவும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மிருதுளா அப்துல் ரகுமானுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த பிப்ரவரி மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தானே காரணம் என நினைத்து கடந்த சில நாட்களாக மிருதுளா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். எனவே அவர் தன்னுடைய காதலன் சென்ற இடத்துக்கே அவரும் செல்ல திட்டமிட்டார்.

    சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் மாணவியின் பாட்டி மட்டுமே இருந்தார். அப்போது மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு மாணவி துப்பட்டாவில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பாட்டி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோலார்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மிருதுளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அனன்யாவை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தற்கொலை செய்து கொண்ட அனன்யா மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரப்பட்டு மூர்த்தி (42), வெங்கனூர் மோகன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருந்த போதும் ராஜா தற்கொலைக்கு இழப்பீடு கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராஜாவின் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரை சேர்ந்த கனகராஜ் மகன் பிரதீப்ராஜ் என்கிற அனன்யா (வயது 19). திருநங்கையாக இவரை சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா (வயது 22) என்பவர் காதலித்து வந்ததாகவும் இதனை அறிந்த அவரை தந்தை மரியநாதன் மேற்படி ராஜாவை அசிங்கமாக திட்டி, அடித்ததால் மன உளைச்சலில் கடந்த 23-ந் தேதி மாலை 6 மணிக்கு அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மனமுடைந்த திருநங்கை அனன்யா என்பவர் நேற்று காலை 10:30 மணிக்கு மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விசாரணையில் அனன்யா ராஜாவை திருமணம் செய்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி உள்ளார். இறந்த ராஜாவின் பெற்றோர் இந்த திருமணத்தை மறுத்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராஜா வீட்டுக்கு வந்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டு வந்தவர்களை அசிங்கப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

    ராஜாவிற்கு சேலம் பகுதியில் உள்ள திருநங்கைகளுடன் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2 மாதத்திற்கு முன்னா் ராஜாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    அனன்யாவை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அனன்யா மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுய நினைவிற்கு வந்த பிறகு இவ்வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • காதலியின் பிணத்துடன் பிரசெஞ்சித் கோஷ் 2 நாட்கள் தனியாக இருந்துள்ளார்.
    • பெண்ணின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியதற்கான தடயம் காணப்பட்டது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதிக்கு கடந்த 3-ந்தேதி இரவு மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம் ஜோடியினர் அறை எடுத்து தங்கினார்கள். கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இந்த நிலையில் விடுதி ஊழியர்கள் நேற்று காலையில் அறை அருகே சென்றனர். அப்போது விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அறை கதவு உள்புறம் தாழிடப்பட்டு இருந்தது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை மீது இளம் ஜோடி இருவரும் பிணமாக கிடந்தனர்.

    விசாரணையில் அவர்கள் இருவரும் மேற்கு வங்காள மாநிலம் பங்குரா பகுதியை சேர்ந்த காதல் ஜோடி என்று தெரிய வந்தது. அவர்கள் பெயர் பிரசெஞ்சித் கோஷ், அர்பிதா பால். இருவரும் கணவன்-மனைவி என்று கூறி விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியதற்கான தடயம் காணப்பட்டது. எனவே அந்த பெண்ணை காதலன் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    பின்னர் காதலியின் பிணத்துடன் பிரசெஞ்சித் கோஷ் 2 நாட்கள் தனியாக இருந்துள்ளார். அதன்பிறகு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். காதலியை கொலை செய்த விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இளம்பெண் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதாலேயே அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. பிரசெஞ்சித் கோஷ் இறந்து 2 நாட்களே இருக்கலாம் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் இல்லை.

    அவர்கள் இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் ஜோடி இருவரும் மேற்கு வங்காளத்தில் இருந்து எதற்காக சென்னை வந்தனர். காதலியை கொன்று பிரசெஞ்சித் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    அவர்களின் மேற்கு வங்காள முகவரியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சந்தேக மரணம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×