என் மலர்
நீங்கள் தேடியது "இடதுசாரிகள்"
- நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு இந்த திட்டம் அடிப்படை காரணமாகும்.
- மன்மோகன் சிங் இத்திட்டத்திற்கு நிதி ஒரு பொருட்டாக இருக்காது என தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி அரசால் 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பா.ஜ.க. ஆட்சியில் இதற்கான நிதியை விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை விரிவுபடுத்தி பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடி அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இடதுசாரிகள், விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இருபது ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால், தி.மு.க, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் "தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005" செப்டம்பர் 5 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்று இருக்கும் ஊரகப் பகுதி தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, 2006 பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் விரிவுபடுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட தொடக்க விழாவில் பேசிய அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இத்திட்டத்திற்கு நிதி ஒரு பொருட்டாக இருக்காது என தெரிவித்தார்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த முன்னோடி திட்டமாக திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமூக சொத்துக்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளன; வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளன; தீவிரமாகி வந்த நகரமயமாகும் வேகம் தணிந்து வேலை தேடி கிராமங்களில் இருந்து புலம் பெயர்ந்து செல்வது குறைந்துள்ளது. பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் என சமூகத்தின் பலவீனமான பகுதியினர் வருமான வாய்ப்பு காரணமாக சுயமரியாதையுடன் கண்ணியமான வாழ்க்கைச் சூழலை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் அடிப்படை காரணமாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, உரிய காலத்தில் நிதி வழங்காமல் இழுத்தடிப்பது என அடியோடு அழித்தொழிக்கும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு, வளர்ந்த பாரதம் - வேலைக்கான உறுதியளிப்பு மற்றும் ஊரக வாழ்வாதாரம் திட்டம் 2025 (விக்ஷித் பாரத் - கேரண்டி பார் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் 2025) என்ற புதிய மசோதாவை 16.12.2025 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத மக்கள் ஒற்றுமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிராக, மதவெறியூட்டி செயல்பட்டு வரும் வகுப்புவாத சக்திகள் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியை 1948 ஜனவரி 30ல் ஆர்.எஸ்.எஸ். படுகொலை செய்தது. அவர் இறந்த பிறகும் மகாத்மா காந்தியின் பெயரையும் கூட சகிக்க முடியாமல் அவரின் பெயரிலான திட்டத்தையும் படுகொலை செய்துள்ளது.
புதிய விபி-ஜி ராம் ஜி திட்டம் சட்டப்பூர்வ வேலை பெறும் உரிமையை பறித்து விட்டது. இந்தத் திட்டத்திற்கான செலவில் 40 சதவீதம் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துகிறது. இதனால் மாநில அரசுகள் கூடுதல் நிதிச் சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.
முந்தைய சட்டத்தில் வேலை கேட்டு முறையிட்டால் 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வேலை வழங்க முடியாத நிலையில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதித்து வசூலிக்கவும் வகை செய்யப்பட்டிருந்தது. புதிய திட்டத்தில் ஒன்றிய அரசின் பொறுப்புகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டு, கிராம ஊராட்சிகளுக்கு வழங்கிய அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் மூலம் வேலை அட்டை பெற்றுள்ள சுமார் 14 கோடி குடும்பங்களையும், அதில் இணைந்துள்ள 26 கோடி தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய வி பி - ஜி ராம் ஜி என்ற வகுப்புவாத சார்பு கொண்ட வஞ்சகத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து வரும் 23.12.2025 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளன.
இந்த முடிவின் படி இடதுசாரி கட்சிகள் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்புகள், ஒருங்கிணைந்து, ஊரகப் பகுதி உழைக்கும் மக்களை பெருமளவில் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதிவாசிகளை வரம்பற்ற விரோதத்துடன் நடத்தும் ராணுவ அணுகுமுறையை கைவிட வேண்டும்
- சத்தீஸ்கரில் உள்ள காடுகள், கனிம வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பேரழிவு தரும் விளைவுகளுடன் பெருநிறுவன சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறது.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையான "ஆபரேஷன் காகர்" என்ற பெயரில் நடைபெற்று வரும் "சட்டவிரோத படுகொலைகளை" உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐந்து இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளன.
நடுநிலையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நக்சல்களின் அமைதி அழைப்பை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் மோடியை வலியுறுத்தியுள்ளன.
பிரதமர் மோடிக்கு எழுதிய கூட்டுக்கடிதத்தில், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ(எம்.எல்.எல்) தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. மனோஜ் பட்டாச்சார்யா, ஃபார்வர்ட் பிளாக் ஜி.தேவராஜன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், ஆபரேஷன் காகர் என்ற பெயரில் நடக்கும் சட்டவிரோத படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து நடுநிலையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நக்சல்களின் தன்னிச்சையான போர்நிறுத்த சலுகையை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஆதிவாசிகளை வரம்பற்ற விரோதத்துடன் நடத்தும் ராணுவ அணுகுமுறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் பொதிந்துள்ள பழங்குடியினர் உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். சத்தீஸ்கரில் உள்ள காடுகள், கனிம வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பேரழிவு தரும் விளைவுகளுடன் பெருநிறுவன சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்க மறுப்பது, கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளை செய்யும் உரிமையை மறுப்பதாகும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ள நக்சல் தலைவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவர மார்ச் 31, 2026 காலக்கெடுவை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதும், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு சாய் தியோ பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை என்று கூறுவதும், பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்பாத மனநிலையை பிரதிபலிப்பதாக இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்துள்ளன.
- குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
- வரும் அனைத்து தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா வியூகம் வகுத்து வருகிறது.
இதை தடுக்கவும், பாரதிய ஜனதா அரசை வீழ்த்தவும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்தன.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சி கள் இணைந்த இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.
இதில் பாராளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து சந்திப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் கூடி விவாதித்தன.
இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இதே போல ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது. இதிலும் சரியான உடன்பாடு ஏற்படவில்லை.
தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையிலும், குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு போதிய இடங்களை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் கூட்டணியில் மோதல் வெடித்தது. எனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள இடது சாரிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜஸ்தானில் 17 இடங்களிலும், சத்தீஸ்கரில் 3 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் 4 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
இதே போல இந்திய கம்யூனிஸ்டு கட்சி சத்தீஸ்கரில் 16 இடங்களிலும், ராஜஸ்தானில் 12 இடங்களி லும், மத்திய பிரதேசத்தில் சுமார் 9 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இடது சாரி மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.
இதற்கிடையே தெலுங்கானாவிலும் 2 கட்சிகளும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதில் 2 கட்சிகளுக்கும் அங்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.
இதில் வரும் அனைத்து தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதியன்று தாக்கல் செய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் விபரீத மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும் என்று சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்)லிபரேசன் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளை மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான சட்ட முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதியன்று தாக்கல் செய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ச்சி நிரவில் இந்த மசோதா இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. ஆனால், அதேசமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரையை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.
நடைமுறை சாத்தியமில்லாத இந்த ஜனநாயக விரோத சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு மூர்க்கம் காட்டுகிறது. இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் ஆறு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசியல் சட்டத்திருத்தங்களை செய்யவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு, அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இது நன்றாகத் தெரிந்தும் கொடுங்கோன்மையை கோலோச்சச் செய்யும் இந்த சட்டமுன்வரைவை கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. அனைத்திலும் ஒற்றைத் தன்மையை திணிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவின் அராஜகத்தின் ஒரு பகுதியே இந்த மசோதாவாகும்.
2029-ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கொக்கரிக்கிறது. அப்படியாளாய், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டியிருக்கும். மாநிலச் சட்டப்பேரவைகளில் எந்தக் ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஒன்றிய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுமானால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு சவால்கள் குறுக்கிடும் நிலை ஏற்படும்.
அவசரகோலத்தில் அள்ளித் தெளிப்பது போல இந்தச் சட்டமுன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டுமென நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்பி வரும் நிலையில், அதானியை பாதுகாக்கவும்.
இப்பிரச்சனையை திசை திருப்பும் நோக்கோடும் ஒன்றிய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மையையும் சிதைக்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளை சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்பாய்) லிபரசேன் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரே நாடு, ஒரே நேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






