search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil culture"

    • மிகவும் கெட்டுவிட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.
    • போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான்.

    தஞ்சாவூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திருவையாறில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் மாலையில் தஞ்சை கொடிமரத்து மூலையில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    அவருக்கு பா. ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அண்ணாமலையிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    இதையடுத்து அண்ணாமலை வடக்கு வீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே வந்தார். அவருடன் ஏராளமான பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது 113 ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கார்த்திகை தீப திருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்பு வாய்ந்தது. இந்த பாதயாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவடையும் போது அகில இந்திய அளவில் புரட்டி போட்டு இருக்கும்.

    தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட ஒரு பணியும் உருப்படியாக நடைபெறவில்லை. மிக மோசமான அளவுக்கு தமிழகத்தை தி.மு.க மாற்றி வைத்துள்ளது. மிகவும் கெட்டுவிட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.

    தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்பியவர் பிரதமர் மோடி. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் வைத்து பெருமை சேர்த்துள்ளார். டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் வைக்கப்பட்ட பெரிய நடராஜர் சிலை சுவாமி மலையில் இருந்து தான் சென்றது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்து பேசினார். அதன் பிறகு தலையாட்டி பொம்மை விற்பனை 240 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி தமிழின் புகழை உலகெங்கும் பரப்பியதில் முக்கிய பங்காற்றி வருகிறார். தமிழினத் தலைவர் பிரதமர் மோடி.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தூக்கி எறியப்பட வேண்டும். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

    வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களுடன் மீண்டும் 3-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்கவுள்ளார். அதில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச் செய்ய மக்கள் முன்வர வேண்டும்.

    உதான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு 20 இருக்கைகள் கொண்ட விமானச் சேவை தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை பா.ஜனதா அரசுதான் கொண்டு வந்துள்ளது .

    எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒன்று தமிழகத்தில் நடந்துள்ளது. அதாவது போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான்.

    கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தவரை தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தண்ணீர் வரவில்லை. இதனால் முப்போகம் விளையும் டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் தரிசாக கிடைக்கிறது. நெல் உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை எதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. தஞ்சை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும்.
    • ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும்.

    தமிழர்களின் பண்பாடுகள் எல்லாம் தலைசிறந்த விருந்தோம்பல் என்பதும் ஒன்று. உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும். விருந்தளிக்கும் பொழுது சிறப்பாக எல்லா சுவைகளும் கலந்த விதத்தில் தலை வாழை இலைபோட்டு புன்னகையோடு விருந்தளித்தால் அறுசுவை உணவோடு அற்புதமான சாப்பாடு என்று சொல்வார்கள்.

    அந்த ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும். இந்த ஆறு சுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது. ஆறுசுவையும் ஒரே காலத்தில் ஒரு சேரக்கிடைப்பது என்பது அரிது. எனவே அதற்கான காலங்கள் வரும் பொழுது அவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

    ஒவ்வொரு மனிதனும் உடல் நலத்தை பேணுவதற்கு அத்தியாவசியத்தேவை நல்ல சத்துள்ள உணவாகும். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவை. இவற்றை தேவைக்கேற்ப சாப்பிட்டால் தேகநலன் சீராகும்.

    வருடத்தின் முதல் நாள், மாதத்தின் முதல் நாட்களில் முக்கியமாக சதுர்த்தி, பொங்கல் விழா எனப்படும் முக்கிய நாட்களில் பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கம். அதில் வெல்லத்தை சேர்த்து இனிப்பு சுவையை கூட்டிக் கொள்கின்றோம். அதேபோல மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு அன்று நமது இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காக உப்பு வாங்குவது வழக்கம். அதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகின்றோம்.

    நமது உடம்பில் உள்ள எலும்பு, நரம்புகளுக்கு கால்சியம் சத்து தேவை. அதை சோடியம் குளோரைடு என்னும் உப்பின் மூலமாகப் பெறுகின்றோம்.

    வருடப்பிறப்பு அன்று எல்லா சுவைகளும் கலந்த உணவை நம் முன்னோர்கள் வைப்பது வழக்கம். இனிப்பு, உப்பு, கசப்பு. கார்ப்பு. துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைக்கும் ஏற்ப சாம்பார். கூட்டு. பொரியல். அப்பளம், பாயசம், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் இனிப்பு பச்சடி, வாழைப்பூ வடை என்றெல்லாம் வைத்து உணவு பரிமாறிய பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்து விருந்தினரை கவனிப்பது வழக்கம். பாக்கில் துவர்ப்பு சத்தும் வெற்றிலை ஜீரண சக்தியையும், சுண்ணாம்பு கால்சியம் சத்தையும் கொடுக்கின்றது.

    பொதுவாக வாழ்க்கை என்பது இன்பமும். துன்பமும், நன்மையும். தீமையும் கலந்து வருவதுதான். எந்த விழாவிற்கு சென்றாலும் முதலில் இனிப்புத் தான் கொடுப்பர். பிறந்தநாள் என்றாலும் திருமண நாள் என்றாலும், திருமணத்தில் தாலிகட்டும் நேரத்திலும் இனிப்பு வழங்குவதுதான் வழக்கம். இவ்வாறு விழா நாட்களில் இனிப்பை உட்கொண்டாலும் மற்ற நாட்களில் பிறகவைகளும் நமக்குத் தேவை. எப்படித்தான் இனிப்பு சுவை இருந்தாலும் கசப்பு சுவையும் நம் உடலுக்கு அவசியம் தேவை.

    இன்பத்தை பார்க்கும் நாம் துன்பத் தையும் சமமாகப் பார்க்க வேண்டும். உதாரணமாக கரும்பு இனிப்பின் இருப்பிடம். வேம்பு கசப்பின் இருப்பிட மாகும். இதனால் தான் வருடப் பிறப்பன்று கசப்பாக இருந்தாலும் வேப்பம்பூ பச்சடியை சேர்க்கின்றோம்.

    தை மாதம் இனிப்புச்சுவை தரும் கரும்பினையும் உண்கின்றோம். ஆடி மாதத்தில் அம்பிக்கையைக் கொண்டாட வேப்பிலை எடுத்துச்செல்வர். கூழ் காய்ச்சிக் கொடுப்பதில் வேப்பிலை தூவுவர். வேம்பு என்பது ஒரு கிருமி நாசினி. சர்வரோக நிவாரணி என்று கூடச் சொல்ல லாம். இதைத்தவிர நீரழிவு, புற்றுநோய் தடுப்பு. அம்மை நோய் தடுப்பு, மற்றும் நம் உடலில் உருவாகும் நச்சுக் களை அழிப்பதற்கும் பயன்படுகின்றது.

    வீடுகளில் விருட்சங்களாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு தெய்வீக மூலிகை வேம்பாகும். கரும்பிற்கும், வேம்பிற்கும் உள்ள சுவை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இரண்டும் சமநிலை வகிக்கின்றது.

    உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் கூறியுள்ளார். எனவே ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்தினால் தான் சீரோடும். சிறப்போடும் ஒவ்வொருவரும் வாழமுடியும். எனவே அன்றாட வாழ்வில் அறுசுவை உணவால் ஆரோக்கிய வாழ்வை நாம் பெறவாம்.

    இன்றைய நாகரிக மாற்றத்தால் முன்பிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மிகுதியும் தளர்ந்து சமுதாயத்தில் எல்லா நிலையிலும் சீர்கேடு நிகழ்வதைக் காணமுடிகிறது.
    இன்றைய சமுதாயத்தில் மனிதர்கள் பல வாழ்வியல் நெறிமுறைகளை இழந்துவிட்டனர். வாழ்க்கை என்பது ஒரு சிறந்த கலையாகும். அதனை நல்லமுறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். மனித சமுதாயம் தன் வாழ்க்கைமுறை, நாகரிகம் ஆகியன சீர்குலையாமல் இருக்கவே நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் வகுத்தது. அது முதல் அந்நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றிய வாழ்க்கை முறையானது நிலைகொள்ளத் தொடங்கின. தமிழர்கள் கண்ட வாழ்வு நெறிகளும், நாகரிகமும் உலகத்தாருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்வன ஆகும்.

    வாழ்வை நல்லமுறையில் அமைத்துக்கொள்ள வேண்டு மெனில் நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். நம் தமிழ் மக்கள் கொண்ட உயரிய கொள்கையே “வாழ்; வாழவை” என்பதாகும். இக்கொள்கைகளைப் பின்பற்றுவதால் சமூகத்தில் குற்றங்கள் பல தானாகவே குறையும் என்பது உறுதி.

    கட்டுப்பாடுகள் மனிதனை நெறிப்படுத்தும் ஒரு வழிமுறையேயாகும். கட்டுப்பாடுகளை மனத்துள் கொண்டவர்கள் பண்புடையவர்களாகின்றனர். சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் மனித சமுதாயத்தைப் பண்படுத்தவே வகுக்கப்பட்டுள்ளன. நம் தமிழர்கள் மிகச் சிறப்பான வாழ்வு வாழ்ந்தவர்கள். தமிழர்களின் வாழ்வியலை ஆராய்ந்தால் கட்டுப்பாடுகளை அவர்கள் ஒருபோதும் சுமையாகக் கருதியதில்லை. சமுதாயத்தில் ஏமாற்றங்களும், வஞ்சங்களும் நிகழாது தடுக்க அக்கட்டுப்பாடுகளே மிகச்சிறந்த ஆயுதமாகத் திகழ்ந்தன. இன்றைய நாகரிக மாற்றத்தால் முன்பிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மிகுதியும் தளர்ந்து சமுதாயத்தில் எல்லா நிலையிலும் சீர்கேடு நிகழ்வதைக் காணமுடிகிறது.

    ஒழுக்கக்கேடு ஒரு கொடியநோய். சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் அந்நோயின் அறிகுறிகளே ஆகும். சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்குப் பொருளாதார வறுமையும் அறியாமை நிறைந்த மனமும் பெரும் காரணிகளாக அமைகின்றன. இவற்றில் பொருளாதாரத்தில் மாற்றம் செய்வது எளிது. ஆனால் உள்ளத்தில் படிந்துள்ள இருளை அகற்றுதல் அவ்வளவு எளிதன்று. எனவே, சமூகம் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் மதித்து வாழும் போது தான் மீண்டும் உயரிய சமுதாயம் துளிர்விடும். மன இருளும் நீங்கும்.

    ஒழுக்கமே நன்மைகளுக்கெல்லாம் அடிப்படை. இன்றைய சமுதாயம் ஒழுக்கநெறி தவறிவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. மக்களுள் பலர் பணந்தேடும் நோக்கையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, எவ்வழியிலும் பணம் தேட எண்ணுகிறார்கள். ஆனால் வாழ்க்கை என்பது எப்படியும் வாழலாம் என்பதில் அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் தான் உள்ளது. நம் முன்னோர்கள் உயரிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்ததால்தான் தமிழ்ச் சமூக நாகரிகம் உலகத்திற்கே எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது. சமூகச் சீரழிவுகள் மாறவேண்டுமெனில் குழந்தைகளிடத்திலிருந்தே மாற்றங்களை விதைக்க வேண்டும்.



    இன்றைய சூழலில் சமுதாயத்தை மாற்ற மேடைப்பேச்சோ பல வகையான அறிவுரைக் கட்டுரைகளோ அவசியமில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்குதலே இன்றியமையாததாகும். அதுவே நாம் நாட்டிற்குச் செய்யும் முதற்கடமையுமாகும். நல்ல கல்வியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களிடத்து மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அறிவைப் பெருக்கி, இளம் உள்ளங்களில் நற்பண்புகள் என்னும் விதைகளைத் தூவி, அவர்களை வளர்த்தால் உறுதியாக நம் சமுதாயம் சீர்பெறும்.

    உணவு, உடை, பழக்க வழக்கங்கள், திருமணம் போன்ற விழாக்களின் நிகழ்முறைகள் போன்றவை அனைத்தும் தமிழர்களின் மரபுப்படி அர்த்தமுள்ளவை. நம் நாடு பல்வேறு தட்பவெப்ப நிலைக்கு உட்பட்டது. அந்நிலையில் உணவு, உடை போன்றவற்றையும் அந்நிலைக்கு ஏற்றவகையிலேயே அமைத்துள்ளனர். ஆனால் அதைத் தவிர்த்து உணவுப் பழக்க வழக்கத்தை நாம் மாற்றிக்கொள்ளும்போது அவை நம் தட்பவெப்பத்திற்கு ஏற்றதாக அமையாமல் பல நோய்களை ஏற்படுத்துகிறது.

    நாகரிகம் என்னும் பெயரில் இன்று உடையமைப்பில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடியும். உடுத்தும் உடையில் மருத்துவம் நிறைந்துள்ளது என அறிஞர்கள் கூறுவர். நம் தட்பவெட்பத்திற்குப் பருத்தியாடையே மிகச் சிறந்தது என்கின்றனர். ஆனால் இன்று அதை விடுத்து ஆணும், பெண்ணும் உடல் நலத்தைப் பாதிக்கும் வகையில் உடை உடுத்துவது நாகரிகச் சிதைவையே உணர்த்துகிறது.

    தமிழர்கள் தங்களின் தலை சிறந்த நாகரிகங்களை முற்றிலுமாக மறந்துவிடும் காலம் மிக அருகில் வந்துவிட்டது என்பதைத் தற்காலச் சூழலில் உணரமுடிகிறது. மொழியும், பண்பாடும் ஒவ்வொரு மனிதருக்கும் முகவரியாக அமைவன ஆகும். இவை இரண்டும் இல்லையெனில் மனிதன் அடையாளமின்றி முகவரி இல்லாத அனாதையாகிவிடுவான். தமிழர்களுக்கு அந்தநிலை வெகுதூரமில்லை.

    முனைவர் இரா.கீதா, பேராசிரியர், தனியார்கல்லூரி, காரைக்குடி.
    ×