என் மலர்
நீங்கள் தேடியது "தனிக்குடித்தனம்"
எடப்பாடி:
கரூர் மாவட்டம், தாலியாபட்டி, வெள்ளிஆணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). தனியார் மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா(29) இவர்களுக்கு யாழினி (4) என்ற பெண் குழந்தை உள்ளது.
தீபா சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
அவர் எடப்பாடியை அடுத்த மொரப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தார். வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் யாழினி எல்.கே.ஜி. படித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது கோடைவிடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற தீபா, அங்கு தனது கணவர் ராஜ்குமாரிடம், அடுத்த மாதம் குடும்பத்துடன் மொரப்பட்டி பகுதிக்கு சென்று குடித்தனம் நடத்துவோம் என வற்புறுத்தினார். ஆனால் அதற்கு ராஜ்குமார் சம்மதிக்கவில்லை. பெற்றோருடன் தான் இருப்பேன் என கூறினார். இதனால் தீபா மனவேதனை அடைந்தார். நேற்று அவர் மொரப்பட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி எடப்பாடிக்கு வந்தார்.
இந்த நிலையில் ராஜ்குமார் தனது மனைவியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் தீபா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் உடனடியாக தீபா குடியிருக்கும் மொரப்பட்டிக்கு வந்தார். அங்கு தீபா வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் தீபாவை மீட்ட ராஜ்குமார், அவரை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
தீபாவிற்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகவில்லை. இதனால் அவர் இறப்பு குறித்து கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இன்று காலை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த சங்ககிரி கோட்டாச்சியர் அமிர்தலிங்கம் தீபாவின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தீபா இறந்தது குறித்து அவரது மகள் யாழினிக்கு தெரியவில்லை. இதனால் அவள் என் அம்மா எங்கே என்று உறவினர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக கூறினர். அம்மா எப்ப வருவாங்க என அடிக்கடி அப்பாவித்தனமாக கேட்கும் குழந்தையின் பரிதாப நிலை, காண்போரை கண்ணீரில் மிதக்க செய்தது.
பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு இடையன் காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது40).இவரது மனைவி பூமதி (30). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கார்த்தி ஈரோட்டில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். கார்த்தி- பூமதி கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் பூமதி தனது கணவரிடம் தனிக்குடித்தனம் போகலாம் என்று வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலையும் இது சம்பந்தமாக பூமதி கார்த்திக்கிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






