search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police lathi charge"

    வாக்குபதிவையொட்டி சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளநிலையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். #KoyambeduBusStand
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். தேர்தல் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    அதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் நேற்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனிடையே வாக்குபதிவையொட்டி சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை முதல் குவிய தொடங்கினர். மேலும் நேற்று இரவு 7 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சரியான முறையில் பஸ்கள் இயக்கப்படவில்லை என பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு கூடியிருந்தவர்களை களைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.   ஆனால் மக்கள் செல்ல மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.  இதனால் சற்று நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அங்கு இருந்த பொது மக்கள் ஓட்டு போட சொந்த ஊர் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியவிலலை எனவும், இரவு 7 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை என காவல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.  

    தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    #Loksabhaelections2019 #TNBuses #SpecialBuses #KoyambeduBusStand 
    அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதை தடுக்க சென்ற போலீசார் மீது சரமாரியாக கல்வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெறுவதாக கிராமமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல் துறையிடம் முன்அனுமதி பெறவில்லை. இந்த நிலையில் எருது விடும் விழாவிற்காக சுமார் 300 காளைகள் அழைத்து வரப்பட்டன. மேலும் விழாவை காண்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களிடம் இங்கு எருது விடும் விழா நடத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே விழா நடத்த கூடாது என்று கூறினர். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.

    ஆனால் இளைஞர்களோ செல்ல மறுத்து போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தாங்கள் கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

    இதனால் இளைஞர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த சிலரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றார்கள். கடந்த ஆண்டும் இதே போல எருது விடும் விழாவின் போது மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது 74 சதவீத வருகை பதிவுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத கட்டண தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வேன்களில் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.

    ஆனால் மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். காலையில் 3 வேன்களில் வந்த மாணவ-மாணவிகளை போலீசார் அவ்வப்போது கைது செய்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதற்கிடையே மேலும் ஏராளமான மாணவர்கள் அங்கு வந்து குவிந்தனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகம் முன்பு முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாணவ-மாணவிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஏற்கனவே கைது செய்த மாணவ- மாணவிகளை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மண்டபத்தில் இருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அவர்களும் இந்த போராட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.

    அந்த சமயத்தில் பேட்டை கல்லூரியில் இருந்து மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களும் போராட்ட களத்துக்கு வந்து குவிந்தனர்.

    பின்னர் அதிகாரிகள், மாணவ பிரதிநிதிகளை பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் மட்டும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் வெளியே வந்தனர். அங்கு தங்களது கோரிக்கை ஏற்கப்படாதது குறித்து மாணவர்கள் மத்தியில் தெரிவித்தனர்.

    இதனால் மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே நுழைய விடாமல் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



    இதையடுத்து மாணவ- மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போது போலீசாரிடம் எதிர்த்து பேசிய ஒரு சில மாணவ-மாணவிகள் தாக்கப்பட்டனர். மேலும் ஒரு சிலரை போலீசார் தாக்கியவாறு இழுத்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

    இந்த தடியடி சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    இந்த சம்பவத்தால் பல்கலைக் கழக வளாகம் முன்பு உள்ள நெல்லை-தென்காசி ரோட்டில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது  என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest #KamalHassan
    அரக்கோணத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். #ArakkonamRailBlockade
    அரக்கோணம்:

    அரக்கோணம்- சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தவண்ணம் உள்ளனர். சரிசெய்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தபிறகும், ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர்.

    அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு மின்சார ரெயில் நீண்ட நேரமாக வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ரெயில் சரியான நேரத்தில் வந்து செல்லும் ரெயில்வே அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். 

    இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து வரும் மின்சார ரெயில் தாமதமானதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள், திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.

    அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அரக்கோணம் ரெயில் நிலைய வளாகத்தில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #ArakkonamRailBlockade

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தியதால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். #SterliteProtest #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.



    ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின்னர் அரசு மருத்துவமனை பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.  #SterliteProtest #ThoothukudiFiring
    தூத்துக்குடியில் இன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசாரின் தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் எழுந்தது.



    ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.

    போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது. மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.  #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர்.



    விவிடி சிக்னல் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பேரிகார்டுகள் அமைத்தும் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். போலீஸ் வாகனத்தையும் கவிழ்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    இதேபோல் போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை.  #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite 
    ×