search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padmanabhapuram Palace"

    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலையில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையையும் பார்வையிட வருவார்கள்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்கும்போது இங்கும் பண்டிகை தொடங்கிவிடும். பண்டிகை நாட்களில் அரண்மனை முன்பு ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கும். அதில் ஆடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

    ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. மேலும் ஓணம் பண்டிகையான நேற்று அரண்மனை திறக்கப்படவில்லை. அரண்மனை வாசல் இழுத்து மூடப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கம் போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் அரண்மனை மூடப்பட்டிருந்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆண்டுதோறும் ஓணம் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொண்டாடப்படாதது பத்மநாபபுரம் பகுதி மக்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரண்மனை வாசல் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பத்மநாபபுரம் நகராட்சி துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், கவுன்சிலர்கள் வினோத், நாகராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் குமரி ரமேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போதிய நிதி இல்லாததால் இந்த ஆண்டு ஓணம் விழா கொண்டாடப்படவில்லை என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா வழக்கம் போல் கொண்டாட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், கேரள அரசு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மன்னர் குடும்பம்-தந்திரியுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. #Sabarimala #KeralaGovernment

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் அய்யப்ப பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    ஆனால் கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வர வேற்றது. தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் போராட்டத்தில் குதித்தனர். நாயர் சர்வீஸ் சொசைட்டியை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

    இவர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரிகள், சபரிமலை கோவிலுடன் தொடர்புடைய பந்தளம் ராஜகுடும்பத்தினர் கைகோர்த்தனர்.

    இவர்கள் தலைமையில் சபரிமலையை பாதுகாப்போம் என்ற போராட்டம் மாநிலம் முழுவதும் நடந்தது.

     


    போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பம்பை, நிலக்கல், பந்தளம், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, பாலக்காடு, பாறசாலை என மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த போராட்டம் தீயாய் பரவியது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரள அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலகம், தேவசம் போர்டு மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் ஆகியோர் வீடுகளையும் முற்றுகையிட்டனர்.

    அய்யப்ப பக்தர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அவர்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி மற்றும் சபரிமலையை பாதுகாப்போம் அமைப்பு ஆகியவை இணைந்து கடந்த 10-ந்தேதி பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கண்டன பேரணி தொடங்கினர்.

    இந்த பேரணியில் லட்சக் கணக்கான பெண்களும், அய்யப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் முக்கிய நகரங்கள் வழியாக நேற்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.

     


    திருவனந்தபுரத்தில் முதல்- மந்திரி பினராய் விஜயன் வீடு நோக்கி புறப்பட்ட பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பேரணியில் வந்தவர்கள் அங்கேயே தங்கினர்.

    இன்று பேரணியில் வந்தவர்கள் திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற சர்வதேச இந்து பரி‌ஷத் தலைவர் பிரவின் தொகாடியா கூறியதாவது:-

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக கேரளாவில் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெறுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். பக்தர்களின் மத உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த தீர்ப்பை முறியடிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 2 நாட்களில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 17-ந்தேதி நள்ளிரவு முதல் 18-ந்தேதி நள்ளிரவு வரை 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். அவசர சட்டம் கொண்டுவரா விட்டால் மத்திய அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக கருதுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை மறு நாள் (17-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. சுத்தி பூஜைக்கு பிறகு மறுநாள் 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்களும் கோவிலுக்குள் வர வாய்ப்பு உள்ளது. திருப்திதேசாய் போன்ற பெண் ஆர்வலர்கள் கோவிலுக்கு வருவதாக கூறியுள்ளனர். பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆச்சாரங்களுக்கு எதிராக கோவிலுக்கு வரும் பெண்களை தடுப்போம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக கேரளாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பிரச்சினைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர கேரள அரசு முடிவு செய்துள்ளது.

    இதையடுத்து கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் அய்யப்ப பக்தர்களை சமரச படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது.

    கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுத்தாக்கல் செய்வதாக அறிவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். இது பற்றி பேசி முடிவெடுப்போம் என்று கேரள அரசு மீண்டும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. நாளை இது தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கிறது.

    இது பற்றி பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகளுக்கு கேரள அதிகாரிகள், தேவசம் போர்டு நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டக்குழுவினருடன் ஆலோசித்து இன்று மாலை முடிவு தெரிவிப்பதாக பந்தளம் மன்னர் குடும்பம் அறிவித்துள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகள் கூறும் போது, சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கேரள அரசு உடனடியாக நிறை வேற்ற ஆர்வம் காட்டுவது ஏன்? இதனை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய தயங்குவதன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இவற்றிற்கு கேரள அரசு தெரிவிக்கும் பதிலை பொறுத்தே இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி நாயர் சர்வீஸ் சொசைட்டியின் அய்யப்ப பெண் பக்தர்கள் சங்கம், தந்திரி குடும்பத்தினர், பந்தளம் ராஜகுடும்பம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. #Sabarimala #KeralaGovernment

    நவரத்திரி விழாவுக்காக கன்னியாகுமரி கோவில் சிலைகள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்தது. #Navratri
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி நேற்று இரவில் பத்மநாபபுரம் வந்தடைந்தது. இதேபோல குமார கோவில் முருகன் சிலையும் பத்மநாபபுரம் வந்து சேர்ந்தது.

    இன்று காலை சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தது.

    முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் முருகன் பூப்பல்லக்கிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் எழுந்தருளினர். தொடர்ந்து சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் வாணவேடிக்கைகள், செண்டை மேளம் முழங்க 3 சிலைகளும் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டன.

    சாமி சிலைகளுக்கு தமிழக மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர். முன்னதாக பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது.

    அரண்மனை கண்காணிப்பாளர் அஜிதகுமார், தொல்பொருள் இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் உடைவாளை எடுத்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன், ஆகியோரிடம் கொடுத்தனர்.

    அவர்கள் உடை வாளை குமரி மாவட்ட தேவசம்போர்டு ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் பணியாளர் மோகனகுமாரிடம் கொடுத்தார்.

    மோகனகுமார் உடைவாளை சாமி சிலைகள் ஊர்வலத்தின் முன்பு ஏந்தியபடி புறப்பட்டுச் சென்றார். சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பெண்கள் திருக்கண் சாத்தி வழிபட்டனர்.

    தக்கலையில் புறப்பட்ட ஊர்வலம் கேரளபுரம், அழகியமண்டபம் வழியாக செல்லும் சாமி சிலைகள் இன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்குகின்றன. நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு செல்கின்றன.

    பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்த விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கேரள மாநிலம் பாறசாலை எம்.எல்.ஏ. ஹரீந்திரன், கோவளம் எம்.எல்.ஏ. சுரேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை. #KeralaFloods #Onamfestival
    தக்கலை:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் வெள்ளத்தில் மிதந்தது.



    மழை வெள்ளம் காரணமாக கேரள மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து வந்தாலும், கேரளாவில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.

    வழக்கமாக ஆகஸ்டு மாதம் தொடங்கிவிட்டாலே கேரளாவில் ஓணக் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த மாதம் மழை வெளுத்து வாங்கியதால் அங்கு ஓணக் கொண்டாட்டத்திற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

    கேரள அரசும் இந்த ஆண்டு ஓண விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதற்காக நடக்கும் ஊர்வலம், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும் கூறியுள்ளது.

    இதுபோல ஏராளமான மக்கள் ஓணக் கொண்டாட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்களுக்குள் ஓண வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்து கொண்டனர். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் பகிர்ந்து உண்டனர்.

    கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணக்கொண்டாட்டம் களை கட்டும். தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணத்தையொட்டி அத்தப்பூக்கோலம், ஓண ஊஞ்சல் ஆட்டம் போன்றவை நடைபெறும்.

    புலியாட்டம், செண்டை மேளங்களும், புத்தாடை அணிந்து வலம் வரும் பெண்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும்.

    இதனை பார்த்து ரசிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் ஓணப்பண்டிகை நாளில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை.

    இதனால் இன்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகளும், பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #KeralaFloods #Onamfestival
    ×