search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oddanchatram market"

    • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

    ஒட்டன்சத்திரம்:

    கேரளாவில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    கேரளாவிற்கு அதிகளவு காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படுவது வழக்கம். மார்க்கெட்டில் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இன்று ஓணம் பண்டிகைக்காக மார்க்கெட் செயல்பட்டது.

    இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகள் அதிகளவு கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

    இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன. வழக்கமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 70 லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும். இன்று 300 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டது.

    சேம்பைகிழங்கு கிலோ ரூ.25, பீட்ரூட் ரூ.10, கத்தரிக்காய் ரூ.15 முதல் ரூ.20, புடலங்காய் ரூ.12, வெண்டை ரூ.20, பாகற்காய் ரூ.18, சுரக்காய் ரூ.7 முதல் ரூ.15, பூசணிக்காய் ரூ.7, அவரை ரூ.35 முதல் ரூ.55, கொத்தவரை ரூ.18, மரமுருங்கை ரூ.9, கரும்பு முருங்கை ரூ.10, பச்சை மிளகாய் ரூ.32, பல்லாரி ரூ.18, சின்னவெங்காயம் ரூ.35 முதல் ரூ.50, தக்காளி ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.500 என கொள்முதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தக்காளி ஒரு பெட்டி ரூ.300 வரையிலேயே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இன்று தேவை அதிகரிப்பின் காரணமாக ரூ.500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் விடுமுறை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் அதிகளவு காய்கறிகளை கொண்டு வந்தனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்ததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கோவை மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கிராமப்பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வரத்து குறைந்துள்ளது. வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணனூர், பெரியூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து மட்டும் தக்காளி வரத்து உள்ளது.

    இதன் காரணமாக ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு 700 பெட்டிகள் மட்டுமே வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    குறைந்த அளவே தக்காளிகள் வந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகளே வாங்கி சென்று வருகின்றனர். இதனால் வெளியூர்களுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்புத்தாண்டு வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மேலும் திருவிழாக்களும் உள்ளதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்துள்ளதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்னவெங்காயம் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், இடையகோட்டை, மூலச் சத்திரம் கேதையெறும்பு, விருப்பாச்சி, சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். இந்த வெங்காயங்கள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அதிக அளவு கேரள பகுதிக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் கோவை, மதுரை, திருச்சி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே சின்ன வெங்காயம் விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பலர் வெங்காயங்களை விற்பனைக்கு கொண்டு வராமல் விரக்தி அடைந்தனர்.

    தினசரி 4 ஆயிரம் 60 கிலோ பைகளில் வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் தற்போது மழையின்மையால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது 2 ஆயிரம் 60 கிலோ பைகளே வருகிறது. இதனால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் தொடங்குவதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மூலச்சத்திரம், கேதையெறும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்னவெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.

    மேலும் தாராபுரம் பகுதியில் அதிக அளவு சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெங்காயங்கள் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரள மாநிலத்திற்கு அதிகம் அனுப்பி வந்தனர். ஆனால் தற்போது கேரள வியாபாரிகள் கர்நாடக மாநிலம் மைசூர் வெங்காயத்தை அதிகம் விரும்புவதால் ஒட்டன்சத்திரத்தில் ஏற்றுமதி குறைந்துள்ளது.

    மேலும் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. தினசரி 3 ஆயிரம் பைகளுக்கு மேல் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் அதற்கான ஏற்றுமதி இல்லை. மேலும் வியாபாரிகளும் விலை குறைத்தே கேட்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரு கிலோ ரூ.5-க்கு மட்டுமே விலை கேட்கின்றனர். சாகுபடி செலவு மற்றும் அதனை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது என விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    ஆனால் பறிப்பு கூலிக்குகூட விலை கிடைப்பதில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் வெங்காயங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல ஆர்வமின்றி காணப்படுகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை, மூலச்சத்திரம், அம்பிளிக்கை, விருப்பாச்சி, கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை, மதுரை, பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஏப்ரல், மே காலங்களில் பாச்சலூர், வடகாடு, பெத்தேல்புரம், பால்கடை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து நாட்டுத்தக்காளி அதிகளவில் வரத்து இருக்கும். இந்த தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50க்கே விற்பனையானது. விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வழக்கமாக ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு 10ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக 1000 பெட்டிகள் மட்டுமே வருகின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஜூன் மாதத்தில் பெங்களூர் பகுதியில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த தக்காளிகள் நாட்டுத்தக்காளி போல் சுவை இருப்பதில்லை. இருந்தபோதும் விலை 14 கிலோ பெட்டிக்கு ரூ.400 வரை விற்பனையானது.

    எனவே வரும் காலங்களில் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்தால் நல்ல விளைச்சல் பார்க்கலாம் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. இங்கு கள்ளிமந்தையம், விருப்பாட்சி, புதுசத்திரம், கேதையறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    இப்பகுதி நாட்டு தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் வெளி மாவட்ட வியாபாரிகள் ஆர்வமுடன் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்பனையானது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்து வருகின்றனர்.

    பறிப்பு கூலிக்கு கூட விலை கிடைக்காததால் விரக்தியடைந்த அவர்கள் தக்காளிகளை செடிகளிலேயே விட்டு விட்டனர்.

    தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்து காணப்படுகிறது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைந்து தக்காளிகளை கொண்டு வர தொடங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளுக்கும் விலை கூடினாலும் குறைந்தாலும் எங்களுக்கு லாபம் சரியாக கிடைப்பதில்லை. பெரிய வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    எனவே அரசே எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். பெங்களூரு, மைசூருவில் இருந்து தக்காளிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ஒட்டன்சத்திரம் பகுதி நாட்டு தக்காளிகளை போல் சுவை கிடையாது. மேலும் உடம்புக்கும் நல்லது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு காலத்துக்கு ஏற்ப பயிரிடுவது குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.

    கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் ஒட்டன்சத்திரம் சந்தையில் ரூ.4 கோடி அளவில் காய்கறிகள் தேக்கமடைந்தன. #Vegetables

    ஒட்டன்சத்திரம்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் நாளை பல்வேறு தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளதால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினசரி 100-க்கும மேற்பட்ட லாரிகளில் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து மட்டும் 50 முதல் 60 சதவீதம் காய்கறிகள் கேரளாவுக்கு மட்டுமே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக நேற்றே விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் தினசரி சுமார் ரூ.4 கோடி அளவுக்கு கேரளாவுக்கு அனுப்ப உள்ள காய்கறிகள் தேக்கமடைந்துள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்கள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் ரூ.8 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நேற்று முதலே காய்கறிகளை கொண்டு வராததாலும், லாரிகளும் வராததாலும் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    வெளியூர்களுக்கு அனுப்ப காய்கறிகள் தயாராக இருந்த போதும் தொழிலாளர்கள் வரவில்லை. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது. #Vegetables

    கேரளாவில் முழு அடைப்பு போராட்ட அறிவிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. #KeralaShutdown #OddanchatramMarket
    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தன் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர். மதுரை, திருச்சி, கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக கேரள மாநிலத்துக்கு 60 சதவீத காய்கறிகள் அனுப்பப்படுகிறது. தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் பாலக்காடு, திருவனந்தபுரம், செப்பல்சேரி, எடவேலி, மஞ்சரக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து போராட்டம் வெடித்தது. இன்று கேரளாவில் இந்து அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

    பஸ்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று மதியம் சபரிமலை கோவிலுக்கு 2 பெண்கள் சென்று வந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து வியாபாரிகள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்தனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    கேரளாவுக்கு லாரிகள் மூலம் ஏற்றப்பட்ட காய்கறிகள் அனைத்தும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேங்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காமலும் அவதிக்குள்ளானார்கள்.

    மிளகாய் ஒரு கிலோவுக்கு ரூ.15, முருங்கை ரூ.55, வெண்டைக்காய் ரூ.15, பீன்ஸ் ரூ.8, வெங்காயம் ரூ.15, பீட்ரூட் ரூ. 8, கொத்தவரை ரூ.8, பூசணி ரூ.7, சுரைக்காய் ரூ.2, பல்லாரி வெங்காயம் ரூ.15, நெல்லிக்காய் ரூ.20, வாழைத்தார் ரூ.18 என்ற விலையில் விற்பனையானது.

    காய்கறிகள் தேக்கமடைந்ததால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கேரளாவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் இன்றும் காய்கறிகள் அனுப்பப்படுமா? என்று தெரிய வில்லை. எனவே விவசாயிகள் பெரும்பாலும் காய்கறிகள் கொண்டு வருவதை தவிர்த்து வருகின்றனர்.  #KeralaShutdown #OddanchatramMarket


    கேரளாவில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்று வட்டார பகுதிகளான அத்திக்கோம்பை, மார்க்கம் பட்டி, அம்பிளிக்கை, தாராபுரம், கீரனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து கோவை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது.

    குறிப்பாக 60 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. பாலக்காடு, செம்பல்சேரி, வடக்கஞ்சேரி, பெரியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் காய்கறி விற்பனை அதிகமாக இருக்கும். விஷேச நாட்கள் மற்றும் விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படும்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பாக அய்யப்ப பக்தர்களிடம் கேரள அரசு கெடுபிடியாக நடந்து கொள்வதை கண்டித்து திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது வேணு கோபாலன் நாயர் என்பவர் திடீரென உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சியினர் இன்று முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பெரும் அளவு பாதிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலும் ஆர்டர் செய்த காய்கறிகளை வியாபாரிகள் வாங்க வரவில்லை. இதனால் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.

    தமிழக பகுதிக்கு மட்டும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும் அளவு காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    மேலும் விலையும் குறைவாகவே கேட்கப்பட்டது. சின்ன வெங்காயம் ரூ.5 முதல் ரூ.12 வரை விலை கேட்கப்பட்டது. பூசணிக்காய் ரூ.1 என்ற விலையில் விற்பனையானது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காலிபிளவர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தமிழ்நாட்டில் மிகப்பெரியது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா மற்றும் சுற்று வட்ட மாநிலங்களுக்கு அதிகமான காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது காய்கறிகளை இச்சந்தையில் வந்துதான் விற்பார்கள்.

    தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பால் விளைச்சல் குறைந்து காய்கறி வரத்து குறைவானது.

    தற்போது காலிபிளவர் மூலசத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், அத்திக்கோம்பை போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்தது. இப்பகுதியில் இருந்து அதிகமான விளைச்சலால் காலிபிளவர்கள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது.

    ஆனால் விலை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 20 பூ கொண்ட ஒரு பை கடந்த மாதம் ரூ.250 முதல் 300 வரை விற்பனையானது. ஆனால் இப்போது ரூ.100க்கு மட்டுமே விலை கேட்கப்பட்டது.

    மலை பகுதிகளில் இருந்து வரக்கூடிய ஒட்டு ரக காலிபிளர் பூக்கள் வராததால் நாட்டு பூக்கள் விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை குறைவாகவே இருந்தது. தற்சமயம் பனி மற்றும் மழை காலம் என்பதால் இந்த காலிபிளவர் பூக்களில் அழுகல் நோய் ஏற்பட்டு அதிகம் சேதமடைந்த நிலையிலும் காலிபிளவர் பூக்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.

    எனினும் நாட்டு பூக்கள் விலை குறைவாக இருந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று காய்கறிகள் அனுப்பாததால் 60 சதவீத காய்கறிகள் தேக்கம் அடைந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மழை வெள்ளம் காரணமாக அரசு சார்பில் ஓணம் கொண்டாட்டங்கள் இருக்காது என அம்மாநில அரசு அறிவித்தது.

    வழக்கமாக ஓணம் திருநாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே நிகழ்ச்சி களை கட்டும். ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அதிக அளவு காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படும். ஓணம் பண்டிகை சமயங்களில் கூடுதலாக காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும்.

    கடந்த 3 நாட்களாக ஓணம் பண்டிகைக்காக ஏராளமான காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்தது. நாளை ஓணம் கொண்டாட உள்ள நிலையில் இன்று கேரள வியாபாரிகள் யாரும் வரவில்லை. காய்கறிகளும் ஆர்டர் கொடுக்க வில்லை.

    இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 60 சதவீத காய்கறிகள் தேக்கம் அடைந்தது. கோவை, பொள்ளாச்சி, அறந்தாங்கி, திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன.

    நாளை (25-ந் தேதி) மார்க்கெட்டுக்கு வார விடுமுறை என்பதால் 2 நாட்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கேரள மாநில நிவாரணத்திற்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 16 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
    ஒட்டன்சத்திரம்:

    கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்வர்கள் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரிநீர் திறக்கப்படுகிறது.

    இதன் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. அவர்களுக்கு உதவ நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கடை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சின்ன வெங்காயம், மிளகாய், பூசணிக்காய், வெண்டைக்காய், தக்காளி உள்பட 16 டன் காய்கறிகள் மாவட்ட கலெக்டர் வினயிடம் ஒப்படைக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ரூ.8 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை சந்தைக்கடை உரிமையாளர் நலச்சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் ராசியப்பன், பொருளாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தனர். இது கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×