search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தேங்கியுள்ள காய்கறிகளை படத்தில் காணலாம்.
    X
    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தேங்கியுள்ள காய்கறிகளை படத்தில் காணலாம்.

    கேரளாவில் பந்த் - ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கம்

    கேரளாவில் முழு அடைப்பு போராட்ட அறிவிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. #KeralaShutdown #OddanchatramMarket
    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தன் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர். மதுரை, திருச்சி, கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக கேரள மாநிலத்துக்கு 60 சதவீத காய்கறிகள் அனுப்பப்படுகிறது. தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் பாலக்காடு, திருவனந்தபுரம், செப்பல்சேரி, எடவேலி, மஞ்சரக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து போராட்டம் வெடித்தது. இன்று கேரளாவில் இந்து அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

    பஸ்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று மதியம் சபரிமலை கோவிலுக்கு 2 பெண்கள் சென்று வந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து வியாபாரிகள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்தனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    கேரளாவுக்கு லாரிகள் மூலம் ஏற்றப்பட்ட காய்கறிகள் அனைத்தும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேங்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காமலும் அவதிக்குள்ளானார்கள்.

    மிளகாய் ஒரு கிலோவுக்கு ரூ.15, முருங்கை ரூ.55, வெண்டைக்காய் ரூ.15, பீன்ஸ் ரூ.8, வெங்காயம் ரூ.15, பீட்ரூட் ரூ. 8, கொத்தவரை ரூ.8, பூசணி ரூ.7, சுரைக்காய் ரூ.2, பல்லாரி வெங்காயம் ரூ.15, நெல்லிக்காய் ரூ.20, வாழைத்தார் ரூ.18 என்ற விலையில் விற்பனையானது.

    காய்கறிகள் தேக்கமடைந்ததால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கேரளாவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் இன்றும் காய்கறிகள் அனுப்பப்படுமா? என்று தெரிய வில்லை. எனவே விவசாயிகள் பெரும்பாலும் காய்கறிகள் கொண்டு வருவதை தவிர்த்து வருகின்றனர்.  #KeralaShutdown #OddanchatramMarket


    Next Story
    ×