search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. இங்கு கள்ளிமந்தையம், விருப்பாட்சி, புதுசத்திரம், கேதையறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    இப்பகுதி நாட்டு தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் வெளி மாவட்ட வியாபாரிகள் ஆர்வமுடன் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்பனையானது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்து வருகின்றனர்.

    பறிப்பு கூலிக்கு கூட விலை கிடைக்காததால் விரக்தியடைந்த அவர்கள் தக்காளிகளை செடிகளிலேயே விட்டு விட்டனர்.

    தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்து காணப்படுகிறது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைந்து தக்காளிகளை கொண்டு வர தொடங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளுக்கும் விலை கூடினாலும் குறைந்தாலும் எங்களுக்கு லாபம் சரியாக கிடைப்பதில்லை. பெரிய வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    எனவே அரசே எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். பெங்களூரு, மைசூருவில் இருந்து தக்காளிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ஒட்டன்சத்திரம் பகுதி நாட்டு தக்காளிகளை போல் சுவை கிடையாது. மேலும் உடம்புக்கும் நல்லது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு காலத்துக்கு ஏற்ப பயிரிடுவது குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×