search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandya constituency"

    மண்டியா தொகுதியில் கர்நாடக முதல்வரின் மகனை வீழ்த்தி வெற்றிபெற்ற நடிகை சுமலதா இன்று பாஜக தலைவர்களை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா அவரது கணவர் வெற்றிபெற்ற மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் கட்சியிடம் மனு செய்தார். ஆனால், கூட்டணி உடன்பாட்டின்படி அந்த தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மேலிடம் கைவிரித்து விட்டது.

    பின்னர், இந்த தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை சுமார் 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுமலதா தோற்கடித்தார்.

    இதையடுத்து, சுமலதா பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் உள்ள தனது கணவரின் சமாதிக்கு வந்தார். அங்கு தான் எம்.பி.யாக வெற்றி பெற்ற சான்றிதழை சமாதியில் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு சுமலதா நிருபர்களிடம் கூறுகையில், “நான் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை மண்டியாவில் கூட்ட முடிவு செய்துள்ளேன். மண்டியா மக்கள் என் மீது அன்பு செலுத்தியுள்ளனர். அவர்கள் சுயமரியாதை உள்ள மக்கள். எனது வெற்றிக்கு பாடுபட்டவர்களை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனது கணவரின் பிறந்தநாளான வரும் 29-ம் தேதி என் தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளேன்.



    எனக்கு காங்கிரஸ் கட்சி முன்னர் வாய்ப்பு அளித்திருந்தால் நான் இந்நேரம் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்திருப்பேன். அந்த கட்சிக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்திருக்கும். பா.ஜனதாவில் சேருவது குறித்து மண்டியா மக்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்வேன்” என்றார்.

    இந்நிலையில், இன்று கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும்  கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா ஆகியோரை சுமலதா சந்தித்தார்.

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாம் மதித்து நடக்க வேண்டும். சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல்  சுயேட்சை வேட்பாளரான என்னை வெற்றிப்பெற வைத்த மண்டியா மக்களின் விருப்பப்படி எனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

    இதனால், விரைவில் அவர் பாஜகவில் இணையலாம் என்ற எண்ணம் கர்நாடக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஊடகங்கள், இந்த கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று செய்திகளை வெளியிடுகிறீர்கள். உண்மை நிலையை அறிந்து செய்தி வெளியிடுங்கள்.

    இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். மண்டியாவில் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

    இவ்வாறு அனிதா குமாரசாமி கூறினார்.
    எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்வதாக நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார். #ActressSumalatha #Mandya
    மண்டியா :

    கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் மண்டியாவில் பிரசாரம் செய்த நடிகை சுமலதா பேசியதாவது:-

    எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் குமாரசாமி பேசி வருகிறார். எங்கள் மீது ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் எத்தகைய தாக்குதலும் நடத்த தயாராக உள்ளனர்.

    மேலும் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினருக்கும், நடிகர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இறுதி பிரசார நாளான 16-ந் தேதி என் மீது கல்வீசி தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தனது மகன் நிகில் தேர்தலில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறார். எனவே எனது உயிருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ActressSumalatha #Mandya 
    மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி மகனின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என்று வீடியோ மூலம் காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். #Siddaramaiah #MandyaConstituency #NikhilKumaraswamy
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், அவரை எதிர்த்து நடிகை சுமலதா சுயேச்சையாகவும் போட்டியிடுகிறார்கள். சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு வழங்கியுள்ளது. அந்த தொகுதியில் அவர்கள் இருவர் இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக தோதல் பணியாற்ற முடியாது என்று காங்கிரசார் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து சித்தராமையா பேசினார். ஆயினும் அவர்கள் குமாரசாமி மகனின் வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற முடியாது என்று கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் சித்த ராமையா வீடியோ மூலம் மண்டியா காங்கிரசாருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    அதில், “காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது வெற்றிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பாடுபட வேண்டும். அவருக்கு ஆசி வழங்க வேண்டும்.

    நானும், தேவேகவுடாவும் வருகிற 12-ந் தேதி கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளோம்” என்று பேசியுள்ளார்.

    மேலும் முதல்-மந்திரி குமாரசாமியும் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையா பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார். #Siddaramaiah #MandyaConstituency #NikhilKumaraswamy 
    மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பாரதிய ஜனதாவினர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். #sumalatha
    மாண்டியா:

    மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜே.டி.எஸ். சார்பில் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார்.

    சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மாண்டியா தொகுதியில் பா.ஜனதா, வேட்பாளரை நிறுத்தவில்லை.

    சுமலதாவுக்கு காங்கிரசார் சிலரும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் அவருக்கும் நிகிலுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

    இதற்கிடையே சுமலதாவுக்கு பா.ஜனதாவினர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேலும் அவருக்கு பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் உதவ வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் பா.ஜனதாவின் தேர்தல் வியூகம் குறித்து முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு தொகுதி பற்றியும் விவாதிக்கப்பட்டது. அப்போது மாண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு பா.ஜனதாவினர் ஆதரவு திரட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர் டி.ஆர். சித்தராமையா கூறும் போது சுமலதாவுக்கு மாண்டியா தொகுதியில் நிறைய ரசிகர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர்.

    ஆனால் அவருக்கு பூத் கமிட்டி அளவில் தொண்டர்கள் இல்லை. எனவே அதை பூர்த்தி செய்ய பா.ஜனதா முடிவு செய்துள்ளது. பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் சுமலதாவுக்கு உதவ முடுக்கிவிடப்படுவார்கள் என்றார்.#sumalatha
    மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
    பெங்களூரு:

    கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மாண்டியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் மாண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.



    இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுமலதா மனம் தளராமல் தொடர்ந்து மாண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அவரை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. இதனால் மாண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குவதா? அல்லது கட்சி சார்பில் போட்டியிடுவதா? என்பது பற்றி மார்ச் 18-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிப்பதாக சுமலதா கூறியிருந்தார்.

    அதன்படி சுமலதா, மாண்டியா தொகுதியில் தான் சுயேச்சையாக போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கவில்லை. எனது கணவர் எம்.பி., எம்,.எல்.ஏ. மற்றும் மந்திரியாக பணியாற்றியபோது, நாங்கள் அரசியலை பற்றி கவலைப்பட்டது இல்லை.

    தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாண்டியா தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.

    என்னிடம் ஆட்சி அதிகாரம், பணம் எதுவும் இல்லை. அம்பரீஷ், மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றார். அது தான் எங்கள் சொத்து. மாண்டியா மக்கள் சுயமரியாதைக்காரர்கள். பணத்திற்காக வாக்கை விற்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

    வருகிற 20-ந் தேதி (நாளை) மாண்டியா தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். வெற்றி, தோல்வி எனக்கு முக்கியம் அல்ல. மாண்டியா மக்களுக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு காங்கிரசில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதிகளை ஒதுக்குவதாக கூறினர். எம்.எல்.சி. பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் நான் எதற்கும் மதிப்பு கொடுக்காமல் அம்பரீஷ் மீது மாண்டியா மக்கள் வைத்திருந்த அன்பு, நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு எவ்வளவு பெரிய சவால்கள் இருக்கிறது என்பது தெரியும். மாண்டியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, சுமலதா எங்கே இருந்தார் என்று சிலர் கேட்கிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது, அம்பரீஷ் மத்திய மந்திரியாக இருந்தார். மாண்டியா மக்கள் மீது வைத்திருந்த அன்புக்காக, அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    கர்நாடக வரலாற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக அம்பரீசை தவிர வேறு யாராவது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது உண்டா?. எங்கள் குடும்பம் எப்போதும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு அம்பரீஷ் எவ்வளவோ உதவி செய்தார். அது யாருக்கும் தெரியாது.

    நான் இருக்கும் வரை குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்பரீஷ் கூறினார். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் குடும்ப அரசியல் செய்தது இல்லை. கடவுளின் விருப்பம், மக்களின் ஆசி மற்றும் அம்பரீசின் வழிகாட்டுதல்படி நான் நடந்து கொள்வேன். மாண்டியாவில் பல்வேறு சட்டசபை தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் கருத்தை சேகரித்தேன்.

    அப்போது அவர்கள், தேர்தலில் நிற்குமாறு என்னிடம் கூறினர். அதன்படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது, கன்னட திரைத் துறையினர் எனக்கு உதவி செய்தனர். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், எனது பெரிய மகனை போன்றவருமான நடிகர் தர்ஷன், சிறிய மகனை போன்றவரான நடிகர் யஷ் ஆகியோர் தாமாக முன்வந்து முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

    அரசியலில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறுவது சகஜமானது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நான் விரும்பவில்லை. எங்களின் எதிரிகளை கூட உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளேன். எனக்கு எதிராக முதல்-மந்திரியின் மகன் போட்டியிடுகிறார். ஆனால் மாண்டியா மக்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    எத்தகைய அழுத்தம் வந்தாலும், நான் போட்டியில் இருந்து விலக மாட்டேன். இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

    இவ்வாறு சுமலதா கூறினார்.

    இந்த பேட்டியின்போது நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், யஷ், திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தொட்டண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Sumalatha #MandyaConstituency
    மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவை ஆதரித்து பிரசாரம் செய்வதாக எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்தார். SumalathaAmbareesh #MandyaConstituency #SNKrishna
    பெங்களூரு :

    நடிகர் அம்பரீஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவர் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மந்திரியாக இருந்தவர். மத்திய மந்திரியாகவும் பணியாற்றியவர். அவரது மனைவி நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டார்.

    ஆனால் கூட்டணியில் மாண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் சுமலதாவுக்கு டிக்கெட் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இதையடுத்து மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    சுமலதாவுக்கு காங்கிரஸ் அதிருப்தி ஓட்டுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு பா.ஜனதாவில் சேர்ந்து போட்டியிட அழைப்பு வந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் நடிகை சுமலதா நேரில் சந்தித்து பேசினார். சுமார் அரைமணி நேரம் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பேசிய சுமலதா, “நான் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். மாண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது பலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன். அம்பரீசின் ரசிகர்கள் தான் எனக்கு ஆதரவு. நீங்கள் மாண்டியா தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும்” என்றார்.

    அதற்கு பதிலளித்து பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, “நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக என்னால் இயன்ற பங்கை அளிக்க முயற்சி செய்கிறேன். மாண்டியாவுக்கு வந்து உங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். எனது ஆதரவாளர்களும் உங்களுக்கு ஆதரவு திரட்டுவார்கள். மாண்டியா மாவட்டம், ஜனதா தளம்(எஸ்) மயமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அங்கு களம் காண்கிறீர்கள். வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். அம்பரீஷ் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மனது வைத்தால், தேர்தல் முடிவை மாற்ற முடியும்” என்றார். SumalathaAmbareesh #MandyaConstituency #SNKrishna
    மாண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நிகில் குமாரசாமி போட்டியிடுவார் என்று தேவேகவுடா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இருகட்சிகள் இடையே நீண்ட நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) 8 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே, ஹாசன் மற்றும் மாண்டியா ஆகிய தொகுதிகளில் தேவேகவுடா பேரன்கள் போட்டியிடுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதாவது ஹாசனில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும், மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இதனால் அவர்களும் தங்களின் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்கள்.

    இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மாண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் தேவேகவுடா கலந்துகொண்டு, மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி தான் வேட்பாளர் என்று அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசியதாவது:-

    கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவர் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு என்னை அழைத்துள்ளனர். நான் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன். நான் பிரதமராக இருந்தபோது தான், ராணுவத்தில் முஸ்லிம்களை சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தேன்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.



    இதைதொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

    மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியின் வெற்றியை கட்சி நிர்வாகிகள் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறேன், பணம் சம்பாதிப்பதற்காக அல்ல.

    கர்நாடக மக்களாகிய நீங்கள் தான் எனது சொத்து. பணம் சம்பாதிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அம்பரீஷ் இறந்தபோது, அவரது உடலை மாண்டியாவுக்கு எடுத்து வந்து இறுதி அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்தேன். இதை அம்பரீசின் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    ராணுவத்துறை மந்திரியிடம் பேசி, ஹெலிகாப்டரை பெற்று அம்பரீசின் உடலை இங்கு கொண்டு வந்தேன். ஆனால் என்னையும், எனது மகனையும் பற்றி அம்பரீசின் ரசிகர்கள் தவறான முறையில் கருத்து தெரிவித்தனர். இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy

    மாண்டியா தொகுதியில் குமாரசாமி மகனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி என்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். #ParliamentElection #MandyaConstituency #Sumalatha
    பெங்களூர்:

    கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மறைந்த அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.

    ஆனால் மாண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவிடம் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும் அதை சுமலதா ஏற்கவில்லை.

    நேற்று மாண்டியா தொகுதியில் சுமலதா தனது மகனுடன் சென்று தொகுதி முழுக்க ஆதரவு திரட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மாண்டியா மாவட்டத்தின் அனைத்து காங்கிரஸ் பிரமுகர்களும், அம்பரீஷ் ரசிகர்களும் எனக்கு ஆதரவு தந்து பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

    எனவே நான் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த நிலையில் அவரை கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சந்தித்து பேச இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுமலதாவுக்கு ஆதரவு கொடுக்க பா.ஜனதா முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியதாவது:-

    பா.ஜனதாவில் சேருவது தொடர்பாக நடிகை சுமலதா தனது நிலைப்பாட்டை அறிவித்த பிறகு கட்சி மேலிடத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். அம்பரீஷ் உயிரோடு இருந்தபோது அவரை பாராட்டி வந்த முதல்-மந்திரி குமாரசாமி தற்போது அவரது குடும்பத்தை விமர்சித்து வருகிறார். மாண்டியா தொகுதி மக்கள் குமாரசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே இன்று மாண்டியா தொகுதியில் ஜே.டி.எஸ். தேர்தல் பிரசாரமும், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடக்கிறது. இதில் தனது மகனை அறிமுகப்படுத்தி குமாரசாமி பேச உள்ளார்.

    கடந்த வாரம் நிகிலின் தாயாரும், எம்.எல்.ஏ.வுமான அனிதா மாண்டியா தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து தனது மகனை நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்தார். கோவில்களுக்கும் அழைத்து சென்று பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #MandyaConstituency #Sumalatha

    பாராளுமன்ற தேர்தலில் நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா அம்பரீஷ் கூறினார். #ParliamentElection #Sumalatha
    மாண்டியா:

    மாண்டியாவில் நேற்று இரவு நடிகையும், மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியுமான சுமலதா அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இருப்பினும் மாண்டியா மக்களும், அம்பரீசின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து என்னை மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்பேரில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா?, வேண்டாமா? என்று ஆலோசித்து வந்தேன். இதுபற்றி நான் காங்கிரஸ் தலைவர்களிடமும் பேசினேன். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கிடையே என்னைப்பற்றி பல வதந்திகளும், பொய்யான செய்திகளும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. மேலும் நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்றும் சிலர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.



    நான் இந்த தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி. ஆனால் நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறேனா? அல்லது சுயேச்சையாக போட்டியிடுகிறேனா? என்பது தான் இங்கு கேள்விக்குறி?. மற்றபடி நான் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவே இன்னும் 5 நாட்கள் முழுமையாக உள்ளது. அதற்குள் எப்படியும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும்.

    அதில் எனக்கு தகுந்தாற்போல் சில சாதகமான விஷயங்களும் நடக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு சுமலதா அம்பரீஷ் கூறினார். #ParliamentElection #Sumalatha

    மண்டியா மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்துள்ளதாக நடிகர் அம்பரீஷ் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது சுமலதா அம்பரீஷ் கூறினார். #SumalathaAmbarish #MandyaConstituency
    பெங்களூரு:

    நடிகர் அம்பரீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவர் காங்கிரசில் இருந்தார். சித்தராமையா மந்திரிசபையில் இடம் பெற்று பணியாற்றினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சுமலதாவை அம்பரீசின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசிய சுமலதா, பாராளுமன்ற தேர்தலில் தான் மண்டியா தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாகவும், காங்கிரஸ் சார்பில் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

    கூட்டணியில் மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. காங்கிரசில் டிக்கெட் கிடைக்காவிட்டால், மண்டியாவில் சுமலதா சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.



    அவரை தங்கள் கட்சிக்கு இழுத்து போட்டியிட வைக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் மண்டியா மக்களுக்கு சேவையாற்ற தான் தயார் என்று சுமலதா அறிவித்துள்ளார்.

    நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்து 3 மாதங்கள் ஆவதையொட்டி, அவரது மனைவி சுமலதா உள்பட குடும்பத்தினர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மக்களுக்கு சேவையாற்ற நான் முடிவு செய்துள்ளேன். ஆனால் அதற்காக அரசியல் தந்திரத்தில் ஈடுபட மாட்டேன். அம்பரீஷ் காங்கிரசில் இருந்தார். அதனால் மக்கள் பணியாற்ற காங்கிரசில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    மண்டியா மக்கள் வலியுறுத்தியதால், மக்கள் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளேன். அம்பரீசின் அன்பு, என்னை இதுவரை அழைத்து வந்துள்ளது. மண்டியா மக்களுடன் நான் எப்போதும் இருப்பேன்.

    இவ்வாறு சுமலதா கூறினார். #SumalathaAmbarish #MandyaConstituency
    மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கும் நடிகை சுமலதாவை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் களத்தில் குதிக்கிறார். #SumalathaAmbareesh #MandyaConstituency
    மாண்டியா:

    பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பரீஷ் சமீபத்தில் மரணம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவருக்கு மாண்டியா தொகுதியில் நல்ல செல்வாக்கு, ரசிகர்கள் ஆதரவு உள்ளது.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் அம்பரீஷ் மனைவியும், நடிகையுமான சுமலதா போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினார்கள்.

    இதுதொடர்பாக சுமலதாவை ரசிகர்கள் சந்தித்து பேசினர். இதையடுத்து மாண்டியா தொகுதியில் போட்டியிட சுமலதா முடிவு செய்து உள்ளார். காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட விரும்பினார்.



    ஆனால் முதல்வரும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமியின் மகன் நிகிலை மாண்டியா தொகுதியில் போட்டியிட வைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

    இதனால் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க சுமலதா முடிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் களத்தில் குதிக்கிறார். மாண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் இப்போதே ரசிகர்கள் இறங்கி விட்டனர்.

    மாண்டியா மாவட்டத்தில் 1030 கிராமங்களில் 916 கிராமத்தில் அம்பரீஷ் ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் 45 ஆயிரம் ரசிகர்கள் சுமலதாவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

    இதுகுறித்து அம்பரீஷ் ரசிகர் மன்ற தலைவர் சோமசேகர் கூறியதாவது:-

    சுமலதாவுக்கு ஆதரவு அளிக்க மக்களிடம் வலியுறுத்துவோம். அவர் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி, பா.ஜனதா சார்பிலும் அல்லது சுயேட்சையாகவும் என எப்படி போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில் அவருக்கு ஆதரவாக பணியாற்றுவோம்.

    மாண்டியா தொகுதி மக்கள் அம்பரீஷ் குடும்பத்துடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றி உள்ளனர். அது வரும் நாட்களில் மீண்டும் நிரூபிக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே நடிகை சுமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் மாண்டியாவை தவிர வேறு தொகுதியில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த தொகுதியில் எனது கணவர் அம்பரீஷ் 3 முறை வெற்றி பெற்று உள்ளார். மாண்டியா அவரது தாய் வீடு என்பதை எல்லா கட்சியினரும் அறிவார்கள்.

    அம்பரீஷின் மறைவுக்கு பின்னர் அரசியல், சினிமாவைத் தாண்டி மாண்டியா மக்கள் தான் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    எனக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அம்பரீஷின் ஆதரவாளர்கள் தான் என்னை தினமும் சந்தித்து மாண்டியாவில் போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றனர்.

    அவர்களின் அன்புக்கட்டளைக்கு இணங்கியே, அங்கு போட்டியிட முடிவெடுத்து உள்ளேன். ஒருவேளை காங்கிரசில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SumalathaAmbareesh #MandyaConstituency


    ×