search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganapati"

    • கும்பகோணத்தில் உள்ள விநாயகருக்கு 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று பெயர்.
    • திருநெல்வேலி நகரில் 'எண்ணாயிரம் பிள்ளையார்' எனும் பெயரில் அருள்பாலிக்கிறார்

    மூலமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், விநாயகர். இவரை வணங்கிவிட்டு தான் எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து. முன்னுரிமை அளித்து வணங்கப்படும் விநாயகர், பலவித பெயர்களில் அருள்புரிகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    ஓங்கார கணபதி

    காஞ்சிபுரத்தில் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்களுள் ஒன்று, ஓணேஸ்வரர் கோவில். இது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓணகாந்தன் தளி என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தல இறைவனிடம் பதிகம் பாடி, பொன் பொருளை பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இங்கு 'வயிறு தாரி பிள்ளையார்' என்ற பெயரில் விநாயகர் வீற்றிருக்கிறார். இது தவிர 'ஓங்கார கணபதி' என்ற பெயரிலும் விநாயகர் அருள்கிறார். இந்த விநாயகரின் மீது காதை வைத்துக் கேட்டால், 'ஓம்' என்ற ஒலி கேட்பதாக சொல்கிறார்கள்.

    ஞானசம்பந்த விநாயகர்

    சமயக்குரவர்களில் ஒருவராகவும், தேவாரப் பாடல் பாடியவர்களில் முக்கியமானவராகவும் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். இவர் தேரெழுந்தூர் திருத்தலம் சென்றபோது, அங்கு சிவன் கோவில் எது?, திருமால் கோவில் எது? என்று தெரியாமல் திகைத்து நின்றார். அப்போது அங்கே சாலையில் அருகில் இருந்த விநாயகர், 'அதோ ஈஸ்வரன் கோவில்' என்று கிழக்கு திசையை காட்டியருளினார். அன்று முதல் அந்த சாலை விநாயகர், 'ஞான சம்பந்த விநாயகர்' என்று பெயர் பெற்றார்.

    நாலாயிரத்து ஒரு விநாயகர்

    ஒரு முறை 4 ஆயிரம் முனிவர்கள், அஸ்வமேத யாகம் செய்தனர். அவர்கள் விநாயகரை வழிபட மறந்ததால், யாகம் நடத்துவதற்கான மந்திரம் மறந்து யாகம் தடைபட்டது. பின்னர் நாரதர் வாக்குப்படி, முனிவர்கள் விநாயகரை வழிபட்ட பிறகு யாகம் பூர்த்தியானது. அதில் விநாயகரும் கலந்துகொண்டார். இவர் நாலாயிரத்து ஒரு விநாயகர் என்ற பெயரில், சீர்காழிக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூர் செல்லும் வழியில் திருமணிக்கூடம் வைணவ திருப்பதியில் உள்ள சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்கிறார். இவருக்கு செய்யப்படும் அபிஷேக நீர், முழுமையாக விநாயகர் சிலைக்குள் உறிஞ்சப்படுகிறது.

    ஆயிரமும் விநாயகரும்

    கும்பகோணத்தில் உள்ள விநாயகருக்கு 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று பெயர். அதே போல் திருவண்ணாமலை ஆலயச் சுவரில் வீற்றிருக்கும் ஒரு ஜான் உயரமே கொண்ட விநாயகருக்கு 'ஆயிரம் யானை திரை கொண்ட விநாயகர்' என்றும், திருநெல்வேலி நகரில் 'எண்ணாயிரம் பிள்ளையார்' என்றும், ஆறுமுகமங்கலம், கினாக்குளம் ஆகிய ஊர்களில் 'ஆயிரத்தெண் விநாயகர்' எனும் பெயர்களிலும் அருள்பாலிக்கிறார்.

    பொருளாதாரம், வியாபாரத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மாற்றத்தை காணலாம்.
    "ஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக''

    - என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.

    அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.

    ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
    தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி
    - என்றோ அல்லது அழகு தமிழில்

    ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா!
    ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
    அழகன் அண்ணா கணேஸ்வரா!
    ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
    பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
    என்றும் மங்களம் கணேஸ்வரா!

    பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம்.

    விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார்.
    விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.

    இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.

    வெள்ளைக்காரர்களால் கடலில் வீசப்பட்ட இந்த ஆலயத்தின் விநாயகர் சிலை, மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்ததால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கிழக்குப் பார்த்த சன்னிதியில் கடற்கரையோரம் உள்ள சிறிய ஆலயத்தில், நான்கு கரங்களுடன் இந்த விநாயகர் அருள்புரிகிறார். ஆலயத்தின் உட்புறச் சுவர்களில், விநாயகரின் புராணங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இவரை வழிபட்டால் காரியத்தடை விலகும். அன்பும், அமைதியும் பெருகும்.
    இந்து சமயத்தில் பல தெய்வ வழிபாட்டு முறை இருந்தாலும், அவற்றில் விநாயகர் மூல முதற்கடவுளாக வணங்கப்படுகிறார். பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் உள்ளது, பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயம் வடக்கு பார்த்த சன்னிதியில் குடவரைக் கோவிலாக விளங்குகிறது.

    ஆறு அடி உயரம் கொண்ட விநாயகர், சிறு குன்று போன்ற பாறையில் குடைந்த புடைப்புச் சிற்பமாக அர்த்த பத்மாசனத்தில் பிரமாண்ட உருவமாக காட்சி தருகிறார். விநாயகரின் தும்பிக்கை, வலதுபுறம் திரும்பி ‘வலம்புரி விநாயகராக’ அருள்புரிகிறார். இங்கு அம்பாள் ‘வாடாமலர்’ என்ற பெயருடனும், ஈசன் ‘அர்ச்சுனவனேஸ்வரர்’ என்ற பெயருடனும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

    இங்கு புதுக் கணக்கு பூஜை போடவும், புதிய செயல் தொடங்கவும் வரும் பக்தர்கள் ஏராளம். ஆயுள் விருத்தி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்துகொள்வதும் சிறப்பு என்பதால், இந்த ஆலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
    விநாயகர் மாம்பழ விநாயகராகக் காட்சியளிக்கும் திருக்கோலம், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கிவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது.
    ஞானப் பழத்தைப் பெறுவதில் விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் போட்டி நிலவியது. அவர்கள் இருவருக்கும் பிரச்சினையின்றி அந்தப் பழத்தை வழங்க சிவபெருமான் முடிவு செய்தார். அதனால் இந்த உலகத்தை முதலில் யார் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் பழம் என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.

    அந்த முடிவைக் கேட்ட முருகப் பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். ஆனால் அவர் வருவதற்குள் பெற்றோரை வலம் வந்து, பெற்றோரைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதற்கு சமம் என்று கூறி விநாயகப் பெருமான் ஞானப்பழத்தைப் பெற்று விட்டார்.

    அங்ஙனம் மாம்பழ விநாயகராகக் காட்சியளிக்கும் திருக்கோலம், புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கிவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும்.
    வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒருநாள்… நர்மதையில் நீராடிக்கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்திவந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார்.

    இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி அரவணைத்து வளர்த்தாள். குழந்தையின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு ‘அங்காரகன்’ என்று பெயர் சூட்டினாள்.

    அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒருநாள், ‘`அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!’’ என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ‘`குழந்தாய்… உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!’’ என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.

    அங்கு முனிவரைச் சந்தித்தவள், ‘’முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’ என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக்கொண்டார்.

    அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்துவைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

    இதன் பிறகு… தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். ‘தவமே சிறந்த வழி’ என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார். அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது.

    மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாதக் கமலங்களை பணிந்த அங்காரகன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றியதுடன், சில வரங்களையும் வேண்டினான்.

    ‘`விக்னராஜனே… நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வமங்கலமான திருவுருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், ‘மங்களன்’ என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!’’ என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.

    அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ‘’அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், ‘அங்காரக சதுர்த்தி’யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்னங்களை அடியோடு விலக்குவேன்!’’ என்று அருளி மறைந்தார்.

    விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் அந்த விநாயகருக்கு, ‘மங்கள விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

    இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்… விரைவிலேயே, நவகிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.

    எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது. 
    விநாயகரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார்.
    உலகத்திலேயே பிள்ளையாருக்காக முதன் முதலில் தனியாக அமைக்கப்பட்ட குடவரைக் கோவில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கோவில்தான். பிள்ளையாரின் பெயரைக் கொண்ட ஊராகவே அது அமைந்திருப்பது இன்னும் விசேஷம்.

    அந்த வகையில் எல்லோருக்குமே பலன் தரும், மூல முதற்கடவுள் பிள்ளையார். அவரை ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் கண்டு வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்தாலும் கைகூப்பித் தொழுபவரை கணபதி காப்பாற்றுவார்.

    திருச்சியில் உச்சிப் பிள்ளையார், மலையின் உச்சியில் இருக்கிறார். காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகராக காட்சி தரு கிறார். செல்வ விநாயகர் என்றும், சித்தி விநாயகர் என்றும், வல்வினைகள் போக்கும் வல்லபகணபதி என்றும், லட்சுமியோடு இணைந்து லட்சுமி கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். இப்படி ஊர் தோறும் உன்னதமாகக் காட்சி தரும் பிள்ளையார் மஞ்சளிலே பிடித்து வைத்தாலும், மண்ணிலே செய்தாலும், சாணத்தில் செய்தாலும், சந்தனத்தில் செய்து வைத்து வணங்கினாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்.

    ஆலயங்களில் உள்ள பிள்ளையார்கள் பெரும்பாலும் மரங்களின் கீழே வீற்றிருப்பதை நாம் காண முடியும். அந்தப் பிள்ளையாரை எல்லாம், அரச மரத்தடிப் பிள்ளையார், வேப்ப மரத்தடி பிள்ளையார், வன்னி மரத்தடிப் பிள்ளையார் என்றெல்லாம் சொல்லி அழைத்து வழிபாடு செய்வார்கள். தாவரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையாரிடம், “தா! வரம்” என்று கேட்டால், உடனடியாக தந்து விடுவார். நாவால் பாடி துதித்தால் நற்பலன்களை அள்ளி வழங்குவார். மரத்தடி விநாயகருக்குப் பொங்கல் வைத்து (சர்க்கரைப் பொங்கல்), அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால், இல்லத்தில் அன்பு பொங்கும், ஆற்றல் பொங்கும், இன்பம் பொங்கும்.

    எந்த மரத்தடியில் பிள்ளையார் இருக்கின்றாரோ, அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அன்றைய தினம் யோகபலம் பெற்ற நேரத்தில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு வஸ்திரமும், மாலையும் அணிவித்து, அவல், பொரி, கடலை, அப்பம், மோதகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறும்.

    அரச மரத்தடிப் பிள்ளையாரை எப்பொழுது வணங்கினாலும் உடனடியாக நற்பலன் கிடைக்கும். மேலும் மூல நட்சத்திரமன்று மோதகம் படைத்து, குறிப்பிட்ட அளவில் வலம் வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். சந்தோஷங்கள் வந்துசேரும்.

    வேப்ப மரத்தடிப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் கன்னிப் பெண்ளுக்கு கவலை தீரும். வணிகர் களுக்கு வளர்ச்சி கூடும். தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து, பக்தர் களுக்கு வழங்கினால் கடன் தொல்லை அகலும்.

    வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்வு அமையும். பரணி நட்சத்திரம் அன்று நெல்லி மரத்தடிப் பிள்ளையாரை வழிபட்டால் நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும்.

    நாவல் மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும். மகிழ மரத்தடிப் பிள்ளையார் வெளிநாட்டுத் தொடர்புக்கு வித்திட்டவர். அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்குச் சாத்தி வழிபட்டால் பொன், பொருள் பெருகும் என்பதை அனுபவித்தில் அறிந்து கொள்ளலாம். மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை மனமுருகி வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும். மன அமைதி கூடும்.

    “அருகம் புல்லையள்ளி ஆனைமுகன் உனக்களிக்கப்

    பெருகும் பொன்னையள்ளிப் பெருமையுடன் தருபவன் நீ!

    உருகி மனமுருகி உனைத்தொழுது போற்றுகின்றேன்!

    அருகில் வந்தெம்மை ஆதரிப்பாய் கற்பகமே!”

    என்ற பாடலை பாராயணம் செய்து, விநாயகரை வழி படுங்கள். அவர் உங்களுக்கு உன்னதமான வாழ்வைத் தருவார்.
    பல்வேறு ஊர்களில் ஆனைமுகன் வித்தியாசமான உருவில் காட்சி தருகிறார். எந்த ஊரில் எந்த வடிவில் காட்சி தருகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
    விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் ஆலயம் இருக்கிறது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள விநாயகரை ‘நெற்குத்தி விநாயகர்’ என்றும் அழைப்பார்கள். பொய் சொல்பவர்களை தண்டிப்பவர் என்பதால் ‘பொய்யாமொழி விநாயகர்’ என்று பெயர் பெற்றார். இங்குள்ள லிங்கம் போன்ற பாணத்தில் கணபதியின் உருவம் கொண்டிருப்பது விசேஷமான அமைப்பாகும்.

    திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக்கரையில், தன் அன்னையாரான கங்காதேவி மற்றும் பார்வதி தேவி ஆகியோருடன் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமானை தரிசிக்கலாம்.

    கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயத்தில் உள்ள விநாயகருக்கு ‘கணக்கு விநாயகர்’ என்று பெயர். இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்றபோது, திருப்பணியை மேற்பார்வை செய்து வந்த கணக்குப் பிள்ளையிடம் மன்னன், சந்தேகத்தோடு கணக்கு கேட்டு கெடு விதித்தான். அதுவரையிலும் கணக்கு எழுதி வைக்காத கணக்கர், விநாயகரிடம் வேண்டிக்கொள்ள, துல்லியமான கணக்கை அவருக்கு அளித்தாராம் இந்த விநாயகர். இதனால் இந்த பெயர் வந்திருக்கிறது.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நவக்கிரக சன்னிதியில் நெல்லிக்காய் பிள்ளையார் அருள்புரிகிறார். தன்னுடைய கழுத்தில் நெல்லிக்காய் மாலை அணிந்திருப்பதால் இவருக்கு இந்த திருநாமம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு நெல்லிக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் உள்ள நவக்கிரக விநாயகரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.
    திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊர் உள்ளது. இங்கு 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.

    ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

    திருவாரூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூர் இருக்கிறது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் மரத்துறை என்ற கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    நமது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல், விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

    பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர், தன் ஒரு கரத்தில் சிவலிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.

    திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால், விநாயகர் சிலை போலவே தெரியும்.

    விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை, தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள், எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

    திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று, 16 கன்னிப் பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

    நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    பிற தெய்வங்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முதன்மைக் கடவுளாக வழிபடுகிறார்கள்.

    திண்டுக்கல் கோபால சமுத்திர குளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

    ‘ஓம் வக்ரதுண்டாய ஹீம்’ என்பது தான் சட்டாட்சர மந்திரம். இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.

    ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகரைத் தான் அவர் வணங்கியதாக கூறப்படுகிறது.

    புண்ணியத்தைத்தேடி காசி மாநகருக்கு செல்பவர்கள், அங்குள்ள அனைத்து விதமான ஆலயங்களிலும் வழிபட்டு விட்டு, சடங்குகளை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் முன்பாக, சிறிய ஆலயத்தில் வீற்றிருக்கும் டுண்டி ராஜ கணபதியை வணங்கினால்தான் யாத்திரை முழுமை பெறும்.
    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார். எந்த பிள்ளையார் எந்த பிரச்சனையை தீர்க்கும் என்று பார்க்கலாம்.
    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார்.

    குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

    புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும், வியாபாரத்தைப் பெருகச் செய்வார்.

    வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். எல்லா வளங்களையும் தருவார்.

    உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகளின் தொல்லையில் இருந்து காப்பாற்றுவார்.

    வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வ நிலையைஉயரச் செய்வார்.

    விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால், உஷ்ண நோய்கள் நீங்கும்.

    சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

    சாணத்தால் பிள்ளையார் செய்து வணங்கினால், சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

    வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால், வம்ச விருத்தி உண்டாகும்.

    வெண்ணெயில் பிள்ளையார் செய்து வணங்கினால், கடன் தொல்லை நீங்கும்.

    சர்க்கரையில் விநாயகர் உருவம் செய்து வழிபட்டு வந்தால், சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

    பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட தீராத நோய்கள் கூட தீரும்.

    கல் விநாயகரை வணங்கி வந்தால் வெற்றிகளைத் தருவார்.

    மண் விநாயகரை வழிபாடு செய்து வந்தால், உயர் பதவிகள் கொடுப்பார். 
    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்களையும், வழிபாடு செய்ய வேண்டிய முறையை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
    பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.
    கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.
    ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

    மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
    திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
    புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

    ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
    மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
    பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.
    உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
    சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.

    அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
    கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
    மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.
    பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

    உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
    திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.
    அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்யலாம்.
    சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

    பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.
    ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணி விக்கவும்.
    ×