என் மலர்
நீங்கள் தேடியது "father scold"
புதுச்சேரி:
புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரியமார்க்கெட்டில் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார். இவர் ரெட்டியார்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணன், சதீஷ்குமாரிடம் சரியாகபடி, உனது அக்காவை போல் குறைவான மார்க் எடுக்க கூடாது என கண்டித்தார். பின்னர் கிருஷ்ணன் தூங்கி விட்டார். தந்தை கண்டித்ததால் விரக்தி அடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நள்ளிரவில் வீட்டின் அருகில் உள்ள ஆஸ்பெட்டால் கூரையில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று அதிகாலை வியாபாரத்துக்கு செல்ல கிருஷ்ணன் தூங்கி எழுந்த போது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், ஏட்டு இரிசப்பன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்:
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சந்திரன். இவரது மகன் பாலாஜி (வயது 24). இவர் கோவை வெள்ளகிணர் பிரிவு வன்னி நகரில் தங்கி தண்ணீர் லாரி ஓட்டி வந்தார்.
சமீபத்தில் வாங்கிய சம்பளம் அனைத்துக்கும் புதுத்துணி வாங்கினார். இதை அறிந்த அவரது தந்தை உனது தாய் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். அவருக்கு மருந்து, மாத்திரைக்கு கூட பணம் அனுப்பாமல் சம்பளம் முழுவதும் துணியே வாங்கினால் எப்படி என்று சத்தம்போட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலாஜி மனவேதனையில் இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜி.என். மில்ஸ் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு லாரியிலேயே விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட பாலாஜிக்கு திருமணமாகவில்லை.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கு மேனகா, ரேவதி, கலைமகள் ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் மேனகாவுக்கு கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மணமகன் வீட்டார் அழகேசன் வீட்டிற்கு வந்தனர். அப்போது அழகேசன் வீட்டில் இல்லை. அவரது மகள்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்கள், மணமகன் வீட்டாரை சரியாக உபசரிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மணமகன் குடும்பத்தினர் அழகேசனிடம் புகார் கூறினர்.
அழகேசன் வீட்டிற்கு வந்து மேனகா, ரேவதி, கலைமகள் ஆகியோரை அழைத்து சத்தம் போட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த 3 பேரும் கடந்த மாதம் 28-ந் தேதி ஓரே நேரத்தில் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். அவர்கள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மேனகா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவர் என்.எல்.சி.யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நிதின் வர்மா (வயது 19). இவர் பிளஸ்-2 படித்துள்ளார். நிதின் வர்மா தற்போது பெங்களூரில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நீட் தேர்வு பள்ளியில் விடுமுறை எடுத்து கொண்டு நிதின்வர்மா பெங்களூருவில் இருந்து நெய்வேலிக்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் நிதின் வர்மா சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ஜெஸ்டின் தனது மகன் நிதின் வர்மாவை எதற்காக அடிக்கடி விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வருகிறாய். இங்கு வருவதுக்கு பதில் அங்கிருந்து நன்றாக படி என கூறி கண்டித்தார்.
இதில் மனம் உடைந்த நிதின் வர்மா வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தூக்குபோட்டு நிதின் வர்மா தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற நிதின் வர்மாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது நிதின்வர்மா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய நிதின் வர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை கண்டித்ததால் நீட் தேர்வு பயிற்சி பள்ளி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகூர்:
பாகூர் அருகே சோரியாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் குணாளன். இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அருண்குமார் (வயது 20). இவர் தாகூர் கலைக்கல்லூரியில் தத்துவயியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வில் அருண்குமார் அரியர்ஸ் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை குணாளன் கண்டித்து இவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைத்து இப்படி செய்து விட்டாயே? என்று திட்டியதாக தெரிகிறது. இதனால் அருண்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மயங்கி கிடந்த அருண்குமாரிடம் விசாரித்த போது, எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அருண்குமாரை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதன் பின்னர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமார் உயிரை காப்பாற்ற முடியாது என்று கைவிரித்து விட்டதால் மீண்டும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு அருண்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.