என் மலர்
செய்திகள்

பாகூர் அருகே தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
பாகூர்:
பாகூர் அருகே சோரியாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் குணாளன். இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அருண்குமார் (வயது 20). இவர் தாகூர் கலைக்கல்லூரியில் தத்துவயியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வில் அருண்குமார் அரியர்ஸ் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை குணாளன் கண்டித்து இவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைத்து இப்படி செய்து விட்டாயே? என்று திட்டியதாக தெரிகிறது. இதனால் அருண்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மயங்கி கிடந்த அருண்குமாரிடம் விசாரித்த போது, எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அருண்குமாரை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதன் பின்னர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமார் உயிரை காப்பாற்ற முடியாது என்று கைவிரித்து விட்டதால் மீண்டும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு அருண்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.