search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector raman"

    வேலூர் மாவட்டத்தில் 26 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    பேரணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பிரகாசம், வாணியம்பாடி நகர வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த ராஜ்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், சிப்காட்-பனப்பாக்கம் திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த தியாகராஜன், வாணியம்பாடி அம்பலூருக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் கவுரிசங்கர், ஜோலார்பேட்டைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் அரிதாஸ், நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு நகர வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இந்துமதி, கலவைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் காந்தி, ஆற்காடு நகர வருவாய் ஆய்வாளராகவும், குடியாத்தம் (கிழக்கு) வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த சிவசங்கரன், கணியம்பாடி வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த ரேவதி, வேலூர் கலெக்டர் அலுவலக ‘ஜி’ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த இந்துமதி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் உள்பட மாவட்டம் முழுவதும் 26 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் ராமன் பிறப்பித்துள்ளார்.
    மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 359 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ராமன் வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி வைத்து, தொடங்கி வைத்தார். முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 1,065 பேர் தேர்வு செய்யப்பட்டு, 359 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ராமன் வழங்கினார். 32 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது

    அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும், வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலெக்டருக்கு அளிக்கப்படும் தன்விருப்ப நிதியினை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் பெறுவதற்காக பயன்படுத்தி வருகிறோம். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலை வாய்ப்பு வழங்கக்கோரி அதிகளவில் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மென்மேலும் முன்னேறி வெற்றிகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து ‘பைக் டாக்ஸி’ திட்டத்தில் முன்பதிவு செய்து மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்திட ‘மா உலா’ என்ற செல்போன் செயலியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். இத்திட்டம் வேலூர் மாநகரில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனர் பாஷித், தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
    கழிவறை கேட்டு தந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார். #Toilet
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் அவதியடைந்த மாணவி ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்ட வேண்டும் என்று கேட்டு வந்தார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரை பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டி தரவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


    மேலும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரிக்கை வைத்தார். மாணவியின் செயலை எண்ணி கலெக்டர் ராமன், நெகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு மாணவியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து மாணவியின் வீட்டில் கழிவறை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.

    மேலும் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக நியமித்து நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.

    தற்போது மாணவி ஹனீபாஜாரா விவரங்களை மத்திய அரசின் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தூய்மை இந்தியா திட்ட இயக்குனரகம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளது.

    சிறுமி ஹனீபாஜாராவின் முழு விவரங்களையும் அவரது புகைப்படத்துடன் மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை ஆம்பூரில் உள்ள ஹனீபாஜாரா வீட்டிற்கு கலெக்டர் ராமன் நேடியாக சென்றார். அவர் மாணவி ஹனீபாஜாராவை சந்தித்து அவரது செயலையும், துணிச்சலான முடிவையும் பாராட்டினார்.

    ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து மாணவிக்கு பரிசு வழங்கினார்.

    மாணவியின் வீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை பணிகளை பார்வையிட்டார்.

    ஆம்பூர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், தாசில்தார் சுஜாதா மற்றும் வருவாய் துறையினர் உடன் சென்றனர்.  #Toilet
    சிறுமி ஹனீபாஜாரா புகார் குறித்து தகவலறிந்த கலெக்டர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனரை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார். #Toilet #CollectorRaman
    ஆம்பூர்:

    சிறுமி ஹனீபாஜாரா புகார் குறித்து தகவலறிந்த கலெக்டர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனரை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார்.

    இதற்கான பணிகளை நகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். ஒரு சில நாட்களில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 2014 அக்டோபர் 2 முதல் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை இல்லை என்ற மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

    கழிப்பறை வசதி இல்லாத சிறுமியின் வீடு.

    பொதுமக்கள் கழிவறைகளை கட்டாயம் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வீடு வீடாக சென்று கழிப்பறையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து கிராம புறங்களில் மகளிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் அதிகளவில் செய்தனர். இதுவரை சுமார் 3 லட்சம் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சிறுமிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை கண்டு கலெக்டர் ராமன் பாராட்டியுள்ளார்.

    இதேபோல கழிவறை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். #Toilet #CollectorRaman
    வேலூரில் அறைக்கு பூட்டுப்போட்ட சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மக்கான் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சரஸ்வதி என்பவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர், சரியாக பணிக்கு வருவதில்லை, குழந்தைகளுக்கு சரியான முறையில் உணவு வழங்குவதில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்தனர்.

    அதன்பேரில், சரஸ்வதி பி.எம்.செட்டி தெருவில் உள்ள சத்துணவு மையத்துக்கு கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டார். சரஸ்வதிக்கு பதிலாக, பவானி என்பவர் மக்கான் பகுதியில் உள்ள மையத்திற்கு நியமிக்கப்பட்டார்.

    பணியிட மாற்றம் செய்யப்பட்ட சரஸ்வதி, தான் ஏற்கனவே வேலை பார்த்த அம்பேத்கர் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று பவானியை பணிசெய்யவிடாமல் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சத்துணவு மையத்தில் பொருட்கள் வைக்கும் அறையை பூட்டி விட்டு, அதன் சாவியை எடுத்து சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி மற்றும் அதிகாரிகள் மக்கான் பகுதியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்றனர்.

    அப்போது சத்துணவு மையத்தில் பொருட்கள் வைக்கும் அறை பூட்டப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பூட்டை உடைத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை எடுத்து சமையல் செய்யப்பட்டது.

    பணியிட மாற்றம் செய்யப்பட்ட சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதியின் செயல்பாடுகள் குறித்தும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

    அதன்பேரில் சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதியை கலெக்டர் ராமன் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    பெற்ற பிள்ளைகள் 9 பேர் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட 95 வயது மூதாட்டியை சமூக ஆர்வலர் மீட்டு, முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை கொழிஞ்சாறையை சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி அந்தோணியம்மாள். இவரது கணவர் தேவராஜ்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அந்தோணியம்மாள் தேவராஜை பார்த்து கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் காட்பாடியில் உள்ள தனது மகள் ஜெய்சிராணி வீட்டுக்கு அந்தோணியம்மாள் வந்தார். அவரை மருமகன் நந்தகுமார் நன்றாக கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நந்தகுமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதற்கு பிறகு மகள் ஜெய்சிராணி அந்தோணியம்மாளை கவனிக்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்த அந்தோணியம்மாள் கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அவரது மகள் வாங்கி சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் அந்தோணியம்மாள் கீழே விழுந்தததில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த அவரை அங்கிருந்த ஒரு பெண் பாதுகாத்து பணிவிடை செய்து வந்தார்.

    இது குறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் மணிமாறன் என்பவர் மூதாட்டியை அழைத்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

    அதில் அந்தோணியம்மாளுக்கு உணவு தங்க இடம் வழங்க வேண்டும். இவரை கைவிட்ட உறவுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து கலெக்டர் ராமன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்திக்கு தகவல் தெரிவித்து முதியோர் காப்பகத்தில் மூதாட்டியை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    எங்களுக்கு 13 குழந்தைகள் பிறந்தன. சிலர் இறந்து விட்டனர். தற்போது 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். 33 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு என்னையும், எனது கணவரையும் பார்த்துக் கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. எனது மூத்த மகளை வேலூர் காட்பாடியை சேர்ந்த நந்தகுமார் என்ற போலீஸ்காரருக்கு திருமணம் செய்து வைத்தேன். இதையடுத்து அவர் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி, வேலூர் அழைத்து வந்தார்.

    என்னையும் அவரது தாய் போல் அரவணைத்து பார்த்துக் கொண்டார். அவர் இறந்த பின்பு எனது மகளும், என்னை கைவிட்டு விட்டார். நான் அனாதையானேன். வேலூர் நகரில் பிச்சை எடுத்துத் தான் சாப்பிட்டு வந்தேன். இதுவரை எனது மகன்கள் என்னை பார்க்கவரவில்லை.

    நான் சிறிது, சிறிதாக சேர்த்து வைத்த பணத்தையும் எனது மகள் அவ்வப்போது வந்து வாங்கிச் சென்று விடுவாள். சில மாதங்களுக்கு முன்பு நான் கீழே விழுந்தேன். இதனால் எனது கால்கள் முறிந்து விட்டன. எழுந்து நடக்க முடியவில்லை. பிச்சை எடுக்கக்கூட என்னால் எங்கும் செல்ல முடியவில்லை.

    தற்போது நான் தங்கியிருக்கும் இடத்தில், ஒரு பெண் தான் என்னை தாய் போல் பார்த்துக் கொள்கிறாள். நான் இயற்கை உபாதைகளை கழித்தால், முகம் சுழிக்காமல், என்னை சுத்தப்படுத்துவாள். சாகும் வரை நான் அவளுடன் இருந்து கொள்கிறேன். நான் இறந்தால் பெற்ற பிள்ளைகளோ, பேரன்களோ யாரும் வரவேண்டாம் என்றார். அப்போது அவர் அவரையும் அறியாமல் கதறி அழுதார்.

    சமூக சேவகர் மணிமாறன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தோணியம்மாள் இறந்து விட்டதாக பொய்யான தகவல் கொடுத்தோம். அப்போது நேரில் வந்த உறவினர்கள் இவர் உயிரோடு இருப்பதை பார்த்து எங்களை திட்டினர். இறந்தால் சொல்லி அனுப்புங்கள். அவரை எங்களுடன் அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர் என்றார். 
    கல்வி, சுகாதாரம் கிடைக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்று கலெக்டர் ராமன் பேசினார்.
    வேலூர்:

    உலக மக்கள்தொகை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. வேலூரில் குடும்பநலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. பழைய பஸ்நிலையம் அருகே நடந்த கருத்தரங்குக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    1951-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 36 கோடி. இன்று 130 கோடியாக உள்ளது. இதனால் சராசரி வயது 28 ஆக உள்ளது. இதன்காரணமாக இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம்.

    தமிழ்நாட்டில் 8 கோடி மக்கள் உள்ளனர். ஆண்டுக்கு 11 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பெண்களின் பங்கு பிரதானமாக இருக்கிறது. ஆண்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் 3-வது, 4-வது குழந்தை பிறப்பதை குறைக்கவேண்டும். அதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகை பெருகினால் தண்ணீர், காற்று குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். 2022-ம் ஆண்டில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 2050-ம் ஆண்டுக்கு பிறகு உணவுகூட கிடைக்காத நிலை ஏற்படும். எனவே நமக்கு தேவையான கல்வி, சுகாதாரம் தேவையான அளவு கிடைக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக காந்திசிலையில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    கருத்தரங்கில் குடும்பநலத்துறை துணை இயக்குனர் சாந்தி வரவேற்றார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்திமலர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட மக்கள் கல்வி தகவல் அலுவலர் லோகநாதன் நன்றி கூறினார். 
    வேலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆய்வு செய்ய சென்ற கலெக்டர் ராமன் பள்ளி வகுப்பறையில் மாணவரை போன்று அமர்ந்து, ஆசிரியை பாடம் நடத்துவதை கவனித்தார். #vellorecollector #collectorraman
    வேலூர்:

    எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் பின்தங்கியே உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனவே நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவ, மாணவிகளின் கற்றலில் கூடுதல் கவனம் செலுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் 36 ஆண்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் அருகில் உள்ள தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் இருந்ததை தற்போது அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி என கூடுதலாக 3 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ராமன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பிளஸ்-2 வகுப்பறைக்கு சென்ற அவர்கள் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து, ஆசிரியை ஒருவர் வேதியியல் பாடம் கற்பித்ததை மாணவர்கள் போன்று கவனித்தனர். சுமார் 45 நிமிடம் மாணவரை போலவே கலெக்டர் பாடத்தை கவனித்தார்.

    பிறகு மற்ற வகுப்புகளுக்கு சென்று மாணவ, மாணவிகளை படிக்க சொல்லியும், கற்றதை எழுத சொல்லியும் அவர்களின் கல்வித்திறனை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, வாசிப்புத்திறன் குறைவாக உள்ள மாணவ, மாணவிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். அதில் ஒரு ஆசிரியை விடுமுறை எடுத்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் காலை 10 மணிக்குள் வருகை பதிவேட்டை முடிக்காததும் தெரியவந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் விடுமுறை எடுத்த ஆசிரியை ஆகிய 2 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் மார்சுக்கு, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

    மேலும் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னோடி மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். #vellorecollector #collectorraman

    ×