search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aswini Vaishnaw"

    • 520 மீட்டர் நீளத்திற்கு ஹூக்ளி நதியின் கீழே இந்த சுரங்கப் பாதை அமைகிறது
    • செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா நகரை 27 நிமிடத்தில் அடைந்து விடலாம்

    மெட்ரோ ரெயில் சேவை திட்டங்களில் ஒன்றாக இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ பாதையை, கொல்கத்தாவில், பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 6 அன்று தொடங்கி வைக்கிறார் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    நதிக்கு அடியில் ரெயில்களில் பயணிக்கும் புதிய அனுபவத்தை நாட்டிலேயே முதல் முறையாக, கொல்கத்தா நகர மக்கள் பெற உள்ளனர்.

    520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழே இந்த சுரங்க பாதை அமைகிறது.

    இந்த சுரங்கப்பாதையின் உள்-விட்டம் 5.55 மீட்டராகும்; வெளிப்புற விட்டம் 6.1 மீட்டராகும். ஹூக்ளி நதியில் 32 மீட்டருக்கு கீழே இதை உருவாக்கி உள்ளனர்.

    பயணிக்கும் போது சுமார் 1 நிமிடத்திற்கும் குறைவாகவே பயண நேரம் அமையும்.


    கொல்கத்தா மக்களுக்கு இது கணிசமாக பயண நேரத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, கிழக்கு கொல்கத்தாவில் இருந்து செக்டார் வி (Sector V) எனும் இடத்திலிருந்து ஃபூல்பகன் (Phoolbagan) எனும் இடத்திற்கு இடைப்பட்ட 6.97 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ள பசுமை தட (Green Line) மெட்ரோ சேவை, இப்புதிய நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ சேவை தொடங்கப்பட்டதும், ஹூக்ளி நதியின் கீழே, செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா (Howrah) நகரை 27 நிமிடத்தில் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஹூக்ளி நதிக்கு 35 மீட்டருக்கு கீழே தடையில்லாத இணைய சேவை வழங்கப்படும் என இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் (Airtel) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சேவை நடைமுறைக்கு வந்ததும் இந்தியாவிலேயே ஆழமான மெட்ரோ சேவை தரும் ரெயில் நிலையமாக ஹவுரா ரெயில் நிலையம் உருப்பெறும். அத்துடன் ஒரு நதியின் கீழ் செயல்படும் முதல் மெட்ரோ சேவையாகவும் இது விளங்கும்.

    • சுவிஸ் ரெயில்வே 5,200 கி.மீ. தட நீளத்துடன் சேவை செய்கிறது
    • இந்தியாவில் ஒரே ரெயில் நீண்ட தூர சேவை வழங்கும் கட்டமைப்பு உள்ளது

    உலகளவில் சிறப்பான ரெயில்வே சேவைக்கு சுவிட்சர்லாந்து புகழ் பெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டு ரெயில் சேவையின் காலந்தவறாமை மிகவும் பிரபலமானது.

    ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து கட்டமைப்புகளில், சுவிட்சர்லாந்தின் ரெயில் பாதை கட்டமைப்பு 5,200 கிலோமீட்டர் ஆகும்.

    சுவிட்சர்லாந்தின் ரெயில் கட்டமைப்பு "ஹப் அண்ட் ஸ்போக் மாடல்" (hub and spoke model) எனப்படும்.

    இந்த அமைப்பில் ஒரு நகர் "ஹப்" என இயங்கும். அந்த நகருக்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு ஊர்களில் இருந்து பல ரெயில்கள் பல தடங்களில் (spokes) வந்து சில மணி நேரங்கள் நிற்கும்.

    இதன் மூலம் ஒரே ரெயில் நிலையத்தில், ஒரே நேரத்தில், பயணிகள் வேண்டிய ரெயில்களில் ஏறவும், மாறி கொள்ளவும் முடியும்.

    பிறகு அனைத்து ரெயில்களும் ஒரே நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு செல்லும். இந்த வடிவத்தின் மூலம் பல பயணிகள் மிக சுலபமாக வெவ்வேறு இடங்களுக்கு மாறி செல்கின்றனர்.

    அந்நாட்டில் 6 ஹப்கள் மட்டுமே உள்ளன. இதனால் அனைத்து ரெயில்களும் நேரந்தவறாமல் சிறப்பாக இயங்குகின்றன.

    இதை தவிர, ஒவ்வொரு ஹப்-பில் இருந்தும் வேறொரு ஹப்-பிற்கு செல்ல சிறப்பான உள்ளூர் போக்குவரத்தும் உள்ளது.

    ஆனால், இதற்கு நேர்மாறாக இந்தியாவில் ஒரு ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள வேறொரு ஊருக்கு ஒரு ரெயில் எனும் வகையில் ரெயில்வே கட்டமைப்பு உள்ளது.

    இந்திய ரெயில்வே சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து ரெயில்வே துறையிடம் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற இந்தியா திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


    உதாரணத்திற்கு, சுவிஸ் மாடலில் திருச்சி ரெயில் நிலையம் "ஹப்" போன்று இயங்கும்.

    சென்னை உட்பட பல ஊர்களில் இருந்து ரெயில்கள் ஒரே நேரம் திருச்சியில் வந்து நிற்கும். சில மணி நேரம் கழித்து, அங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு ஒரே நேரம் ரெயில்கள் புறப்பட்டு செல்லும்.

    இத்திட்டத்தின்படி குறைந்த தூரத்திற்கு பல ரெயில்கள் இயக்க முடிவதால், ரெயில்களில் இடம் கிடைப்பதும் பயணிகளுக்கு சுலபமாக இருக்கும்.

    • தற்போது இயங்கும் ரெயில்களில் அமரும் வசதி மட்டுமே உள்ளது
    • தமிழக நகரங்களுக்கு இடையே 2 ரெயில்கள் இயங்குகின்றன

    இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்கவும், மாநிலங்களிக்கு உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் இந்தியன் ரெயில்வேயால் துவங்கப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை.

    தற்போது பகல் நேர ரெயில் சேவையாக இருப்பதால், அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    எந்த அயல்நாட்டு தொழில்நுட்பத்தையும் நாடாமல், இந்த ரெயில்களின் கட்டமைப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தாலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

    தற்போது வரை இந்தியா முழுவதும் 34 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை-சென்னை வழித்தடத்திலும், திருநெல்வேலி-சென்னை வழித்தடத்திலும் என 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரெயில்களின் 'மாதிரி' வடிவங்களின் படங்களை இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும் பயணிகளுக்கு 823 படுக்கைகளும் என மொத்தம் 857 படுக்கைகள் இடம்பெறும். அதிர்வுகளை தாங்க கூடிய மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், போதிய அளவு வெளிச்சத்திற்கான மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி, மேலே உள்ள படுக்கைகளுக்கு சுலபமாக ஏறும் வகையில் படிக்கட்டு வசதி என பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வசதிகள் இதில் உள்ளது.

    உயர் கட்டண பிரிவு ரெயில் சேவையான ராஜ்தானி விரைவுவண்டியில் உள்ள வசதிகளை விட இது சிறப்பாக இருக்கும் வகையில், இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதவாக்கில் சோதனை ஓட்டத்திற்கு இது விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×