என் மலர்tooltip icon

    வழிபாடு

    • முதல் கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும்.
    • இரண்டாம் கால பூஜை வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர்.

    மகாசிவராத்திரி வழிபாடு பல்வேறு பலன்களை வழங்குவதாக ஆன்மிக சான்றோர்கள் கூறுகின்றனர். புராணங்களிலும், இந்த சிவராத்திரி தினத்தில் நான்கு காலங்களிலும் பூஜிக்கும் முறை, அதனால் கிடைக்கும் பலன் சொல்லப்பட்டுள்ளது. அதை பார்க்கலாம்.

    முதல் கால பூஜை (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)

    ஜோதி வடிவாக நின்ற ஈசனின் முடியைத் தேடி, அன்னப்பறவையாக சென்ற பிரம்மதேவனால் ஈசனுக்கு செய்யப்படும் பூஜை இதுவாகும். இதனை 'முதல் ஜாமம்' என்பார்கள். இந்த காலகட்டத்தில் இறைவனுக்கு பஞ்ச கவ்யம் கொண்டு அபிஷேகம் செய்வர். சந்தனம் பூசுவர். மஞ்சள் நிற பொன்னாடை அணிவிப்பர். வில்வத்தால் அலங்காரம் செய்வர்.

    தாமரைப் பூவால் அர்ச்சிப்பார்கள். நைவேத்தியமாக பாசிப் பருப்பு பொங்கல் படைப்பார்கள். ரிக்வேதம், சிவபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்வார்கள். பின்னர் நெய் தீபத்துடன் வழிபடப்படும் இந்த முதல் கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும்.

    இரண்டாம் கால பூஜை (இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

    சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணுவால், ஈசனுக்கு செய்யப்படும் பூஜையாக இது கருதப்படுகிறது. அப்போது இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும். பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்து சாத்தப்படும். வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர். வில்வம், தாமரைப் பூவால் அலங்காரம் செய்யப்படும். துளசி கொண்டு அர்ச்சிக்கப்படும்.

    நைவேத்தியமாக பாயசம் படைக்கப்படும். யஜூர் வேதம், 8-ம் திருமுறையில் கீர்த்தி திருவகவல் ஆகியவை பாராயணம் செய்யப்படும்.

    நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும். இந்த கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால், செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருளும் கிடைக்கும்.

    மூன்றாம் கால பூஜை (நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை)

    பார்வதி தேவியான அம்பாளால், சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜை இதுவாகும். இந்த காலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வர். பச்சைக்கற்பூரம் சாத்துவர். மல்லிகை, வில்வ இலை கொண்டு அலங்காரம் செய்வர். சிவப்பு வஸ்திரம் அணிவிப்பவர்.

    வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வர். எள் அன்னம் நைவேத்தியமாக படைத்து, சாமவேதம், 8-ம் திருமுறையில் திருவண்டகப்பகுதி பாராயணம் செய்வர்.

    நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும். இந்த மூன்றாம் ஜாம பூஜையை, 'லிங்கோத்பவ காலம்' என்றும் சொல்வார்கள். இந்த காலத்தில்தான் சிவபெருமானின் அடி முடியை காண்பதற்காக பிரம்மனும், விஷ்ணுவும் சென்றனர். இந்நேரத்தில் சிவனை பூஜிப்பதால், எந்த தீய சக்தியும் நம்மை அண்டாது. சக்தியின் அருளும் கிடைக்கும்.

    நான்காம் கால பூஜை (அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை)

    முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிக்கும் நேரமாக இதைக் கருதுகின்றனர். இந்த நேரத்தில் இறைவனுக்கு குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்வர். பச்சை அல்லது நீல வண்ண ஆடை அணிவிப்பர்.

    நந்தியாவட்டை பூவால் அலங்காரம் செய்வர். அல்லி, நீலோற்பவம் மலர்களால் அர்ச்சிப்பர். நைவேத்தியமாக சுத்தன்னம் படைப்பர். அதர்வண வேதம், 8-ம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்வர். தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும். இந்த காலகட்டத்தில் சிவபெருமானை பூஜிப்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.

    • 26-ந்தேதி மகா சிவராத்திரி.
    • 27-ந்தேதி அமாவாசை.

    25-ந்தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்.

    * ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் மின்விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி.

    |* கோயம்புத்தூர் கோணியம்மன் விழா தொடக்கம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    26-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மகா சிவராத்திரி.

    * திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் தரிசனம்,

    * மேல்நோக்கு நாள்.

    27-ந்தேதி (வியாழன்)

    * அமாவாசை.

    * கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகன சேவை.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் தலங்களில் தெப்ப உற்சவம்.

    * சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    28-ந்தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (சனி)

    * கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

    * வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் தலங் களில் அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    2-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை கூடலழகர் விழா தொடக்கம்.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சதுர்த்தி விரதம்.

    * வென்னிமலை சுப்பிரமணியர் கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை கூடலழகர் காலை தங்கச் சிவிகையில் மச்ச அவதாரம். இரவு சிம்ம வாகனத் தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    • இன்று திருவோண விரதம். பிரதோஷம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-13 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி காலை 11.09 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.11 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று திருவோண விரதம். பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. கோவை கோனியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம். வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் பவனி. திருக்கோகர்ணம், ஸ்ரீ காளஹஸ்தி, திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் பவனி. ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு கண்டருளல். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஓய்வு

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-நலம்

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-நட்பு

    கன்னி-சுகம்

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- முயற்சி

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-பயிற்சி

    மீனம்-திடம்

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
    • வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-10 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி காலை 10.46 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: கேட்டை பிற்பகல் 3.22 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ சைலம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவில்களில் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-கட்டுப்பாடு

    கடகம்-உவகை

    சிம்மம்-உண்மை

    கன்னி-ஆதரவு

    துலாம்- பயணம்

    விருச்சிகம்-செலவு

    தனுசு- வரவு

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-கீர்த்தி

    மீனம்-வெற்றி

    • திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
    • சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

    2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

    3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

    4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

    5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

    6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

    7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரி யன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.


    11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

    12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் "சங்கர மற்றும் நாராயண" வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் "பாண லிங்கம்" இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

    13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

    14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப் பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

    15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

    17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


    18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

    19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா குளியல் செய்த பலனும் தரவல்லது.

    20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    • அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.

    கோவில் தோற்றம்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய தாமிரபரணி கரை கிராமம், கொங்கராயகுறிச்சி. இவ்வூரில் உள்ள சட்டநாதர் ஆலயம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு வாழ்ந்த கொங்குராயர் என்னும் மன்னரால், பழமையான இவ்வாலயம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இவ்வூர் 'கொங்கராயகுறிச்சி' என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் பற்றி, புராணங்களிலும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.


    தூத்துக்குடி மாவட்டத்தில் 'நவ லிங்க புரம்' என்பது மிகவும் விசேஷமானது. வல்லநாடு திருமூலர், கொங்கராயகுறிச்சி சட்ட நாதர், தெற்குகாரசேரி குலசேகரநாதர், புதுக்குடி வடநக்கர், வெள்ளூர் நடுநக்கர், மளவராயநத்தம் தென் நக்கர், ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர், புறையூர் அயனீஸ்வரர், காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் ஆகிய ஆலயங்கள் நவ லிங்க புரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரே நாளில் ஒன்பது கோவிலையும் சுற்றி வரும் வாய்ப்பு கொண்டதாக 'நவ லிங்கபுரம்' உள்ளது.

    நவ லிங்கபுரத்தில் இரண்டாவது தலம்தான் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவர் 64 பைரவர்களுக்கு சமமானவர். சீர்காழியைப் போலவே இவ்வூரில் பைரவர் இருக்கும் காரணத்தினால், இது 'தென் சீர்காழி' என்று அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானின் முக்கியமான அவதாரங்களில் ஒன்று பைரவர். உக்கிரம் நிறைந்த இந்த பைரவர், நம்முடைய பயத்தை போக்குபவராக போற்றப்படுகிறார். பக்தர்களுக்கு இடையூறு அளிக்க நினைப்பவர்களின் எண்ணங்களை முறியடிப்பார்.


    பாவம், குரோதம், காமம் போன்றவற்றில் இருந்து பக்தர்களை விடுபடச் செய்வார். 'பை' என்றால் 'படைப்பு'. 'ர' என்றால் 'வாழ்க்கை'. 'வா' என்றால் 'அழித்தல்'. இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்யக்கூடிய தன்மை கொண்டவர் என்பதால் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார்.

    கொங்கராயகுறிச்சியில் அஷ்டமி தேய்பிறை அன்று, அஷ்ட பைரவருக்குப் பூஜை நடத்தி வருகிறார்கள். இதனால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    வியாபாரம் செழிக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், திருமணத்தடை அகலும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இதனால் இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

    இந்த ஆலயம் 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி, ஆற்று மணலில் புதைந்து விட்டது. அதன் பிறகு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் ஒன்று கூடி ஆற்று மணலில் புதைந்து கிடந்த இந்த அற்புதக் கோவிலை தோண்டி வெளிக்கொண்டு வந்தனர்.


    அந்த சட்டநாதர் ஆலயத்தை, பக்தர்கள் பெரும் முயற்சியால் தற்போதும், மேலும் மேலும் தோண்டும் பணியைச் செய்து வருகிறார்கள்.

    நாம் நுழையும் போது சாலையில் இருந்து பூமிக்குள் இறங்கிதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். அதற்கும் தற்போது படிக்கட்டுகள் பக்தர்கள் வசதியாக இறங்க வழிவகை செய்திருக்கிறார்கள்.

    முதலில் கொடிமரம் மற்றும் நந்தியை தாண்டி, கோவிலுக்குள் நுழைகிறோம். வலதுபுறம் பைரவர், சட்டநாதராக தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். கோவிலைச் சுற்றி வருகிறோம்.

    கோவிலுக்கு இடதுபுறம் கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி - தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

    கோவிலுக்குள் நுழைந்தால் தெற்குநோக்கி பொன்னுருதி அம்மாள், 'தேடி வருபவர்களுக்கு உறுதியாக பொன்னும் பொருளும் அள்ளித் தருவேன்' என கருணை முகத்தோடு காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கி வீரபாண்டீஸ்வரர் என்ற பெயருடன் சிவலிங்க வடிவில் ஈசன் காட்சி தருகிறார்.

    இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜையும், தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு பூஜையும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பிரதோஷம், மகாசிவராத்திரி, மாத சிவராத்திரி, சோமவாரம், திருக்கார்த்திகை, ஐப்பசி திருமணம், திருவாதிரை பூஜைகளும் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

    ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை, இந்த கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும். இவ்வாலயம் வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும். பில்லி சூனிய பிரச்சினை அகலும். தொழில் போட்டியில் வெற்றி பெறலாம்.

    நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும். இழந்த பொருட்களை மீட்கலாம். மறைமுக எதிரிகள் விலகுவர். தொழில் போட்டி அகலும். வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும் என்கிறார்கள்.


    இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில் மாதந்தோறும் உழவாரப்பணி நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


    அமைவிடம்

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மெயின்ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கருங்குளம். இங்கு இறங்கி ஆற்றுப்பாலத்தைத் தாண்டினால், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
    • திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-9 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அஷ்டமி காலை 9.40 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: அனுஷம் நண்பகல் 1.47 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம்: சித்த, மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருக்கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீமுத்தாலம்மன் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம் பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை, லால்குடி சப்தரிஷி ஈஸ்வரர் கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-பாசம்

    கடகம்-அன்பு

    சிம்மம்-ஆசை

    கன்னி-உறுதி

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- நற்செயல்

    மகரம்-தாமதம்

    கும்பம்-திடம்

    மீனம்- பயணம்

    • மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
    • இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூனுறு செய்து ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.

    முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும்.


    சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    அன்று இரவு பதினான்கு நாழிகையின் போது முறைப்படி விரதமிருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.

    சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க இருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்விதப்பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்த மான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.

    மூன்று முறை ஆகமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.


    சிவராத்திரியின் முதல்நாள் பிரதோஷ தினம் ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும்.

    சிவராத்திரி இரவில் நான்காம் கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.

    நான்கு காலங்களிலும் கருவறையில் உள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும்.

    மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்ப வரை முறைப்படி வழிபட வேண்டும்.

    அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ சகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்க புராண திருக்குறுந்தொகை யையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று பல இதிகாசம் உரைக்கிறது. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும்.


    சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

    நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.

    நிரம்பிய அன்புடன் நமசிவாய என்ற ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பலாகும். தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

    சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

    கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.

    வழிபடும் போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெற வேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது.


    சிவ லிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

    வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும்.

    கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணை ஊற்ற வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனு கிரகமும் உண்டாகும்.

    • சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு.
    • மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.

    சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.

    1. நித்திய சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.

    2. பட்ச சிவராத்திரி:

    தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.

    3. மாத சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமி யில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

    4. யோக சிவராத்திரி:

    சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

    5. மகா சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பவுர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை. அதே சுக்லபட்சமானால் மறுநாள் பவுர்ணமி.

    தொடக்கம், முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.

    எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருடம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருடம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.

    மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், சுந்தரபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

    • சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
    • நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

    சிவனை தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்து குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தினைப் பெறலாம்.


    சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    10 ஆயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.


    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபர சுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சொர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்க சொரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.


    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினை பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.


    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.

    மாதுளை- அரச பதவி கொடுக்கும்

    நெய்- மோட்சத்தைக் கொடுக்கும்

    அன்னம்- வயிற்று நோயை நீக்கும்

    நெல்லிக்கனி-பித்தம் நீக்கும்

    பழரசங்கள்- வறட்சியைப் போக்கும்

    நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல உண்டு.

    சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.

    வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.

    தேன், வியாதி களை நீக்கும்,

    கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.

    • புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும்.
    • சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

    சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

    விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

    அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.

    தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்த குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.


    இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.

    சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை.

    சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணைபோல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

    • அபிஷேக பொருட்களை 26-ந்தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.
    • இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாசிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை 26-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணி வரையிலும் நடைபெறும்.

    இதேபோல் சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கும், 4-ம் கால பூஜை 2 மணிக்கும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளன.

    இதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் உள்ளிட்ட உபகோவில்களிலும் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அன்று இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 26-ந்தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.

    மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் அரசு உத்தரவின்படி வடக்கு ஆடி வீதிகளில் 26-ந்தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விடிய, விடிய ஆன்மிக இசை மற்றும் நடனம் நடைபெறுகிறது. சிவராத்திரியையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    ×