என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும்.
    • இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இதன் புராணப்பெயர்கள் திருவிரிஞ்சிபுரம், கரபுரம்.

    தல சிறப்பு :

    மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கோவில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ வடக்கில் அமைந்துள்ளது. அருகிலேயே பாலாறு அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது.

    இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.

    இறைவி : மரகதாம்பிகை.

    தல மரம் : பனை மரம்

    தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்

    இத்தலம் மிக்க பழமையான ஒன்று. அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யப்பட்டவுடன் அவர் இறைவியை வேண்ட, இறைவி இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். பிரம்மனும் இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனின் சாபம் போக்க பிரம்மனை மனிதனாய் பிறக்க வைக்கிறார் இறைவன். பிரம்மன், சிவசர்மன் என்ற பெயரில் மனிதனாய் பிறக்க தக்க தருணத்தில் வந்து இறைவனே பிரம்மனுக்கு உபதேசம் செய்து ஆட்கொண்டார்.

    பிரம்ம உபதேச தலம் :

    சிவசர்மன் சிறுவனாக இருந்ததால் லிங்கத்திற்கு (லிங்கம் உயரமாக இருந்ததால்) நீருற்ற முடியவில்லை. சிவசர்மனாக பிறந்த பிரம்மன் தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, இறைவனிடம் முடியை காண இயலவில்லை என்று வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார். அண்ணாமலையில் இறைவனின் முடியை காணாத பிரம்மா இத்தலத்தில் தான் இறைவனின் முடியை கண்டார். லிங்கம் சுயம்பு லிங்கமாக சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது. பிரம்மா உபதேசம் பெற்ற தலம்.

    தல பெருமைகள் :

    இத்தலத்து இறைவனை வணங்கிடில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவன் சிவசர்மனாகிய பிரம்மனுக்கு உபநயனம் செய்வித்து ஒரு முகூர்த்த காலத்தில் 4 வேதங்கள், 6 சாஸ்த்திரங்கள், 18 புராணங்கள் மற்றும் 64 கலைகளையும் போதித்து ஆட்கொண்டவர். பிரம்மனுக்கு சிவபெருமானே சிவ தீட்சை அளித்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். நாமும் இத்தலத்தில் சிவ தீட்சை பெற்றால் அதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை.

    இத்தலத்து இறைவன் அறிவின் சிகரம். இத்தலத்து இறைவன் பிரம்மனுக்கு போதித்து வழிகாட்டியதால் மார்க்க சகாயர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவன் மிளகு வணிகருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணை வந்த நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    மைசூர் நகர வணிகர் ஒருவர் காஞ்சி மாநகர் சென்று மிளகு விற்பது வழக்கம். அவ்வாறு விற்க செல்லும் வேளையில் இத்தலத்தில் அந்த வணிகர் இரவு தங்க நேரிட்டது. இத்தலத்து இறைவனை வழித்துணையாக வரும் படி வேண்ட, இறைவனும் வேடன் வடிவில் வணிகரை பின் தொடர்ந்து சென்று திருடர்களிடமிருந்து காத்தார்.

    அதற்கு காணிக்கையாக மூன்று மிளகு பொதிகளை விற்ற பணத்தை காணிக்கையாக செலுத்தினார் அந்த வணிகர். வணிகரின் கனவில் இறைவன் தனது திருவிளையாட்டை எடுத்துரைக்க இறைவனின் அருளில் நெகிழ்ந்தார் வணிகர். இப்போதும் அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் "பார் வேட்டை" என்ற பெயரில் கோவிலில் இச்சம்பவத்தை நடித்துக் காட்டுவர். எனவே தான் இத்தலத்து இறைவனுக்கு மார்க்கபந்தீஸ்வரர் என்ற பெயரும், வழித்துணை வந்த நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

    அழகிய தோற்றம் :

    இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் சுவர்கள் உயரமானவை, அழகானவை. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்து பைரவர்கள் பற்றி தனியே ஒரு பதிவு வெளியிடப்படும். இத்தலத்து கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தல மரம் :

    இக்கோவிலில் 108 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும், 1008 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை வழிபடின் ஒரே நேரத்தில் 108 மற்றும் 1008 லிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தின் மரம் பனை மரம். இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பு. தொண்டை மண்டத்தில் பனை மரம் தல விருட்சமாக இருக்கும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று விரிஞ்சிபுரம்.

    மற்றொன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் செய்யாறு என்றழைக்கப்படும் திருவத்திபுரம். பண்டைக் காலத்தில் இத்தலமானது 'நைமி சாரண்யம்' என்றழைக்கப்பட்ட முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. இறைவன் இறைவியிடம், அம்பிகை கறுப்பு நிறமாய் இருப்பதால் 'ஹே சங்கரீ' என விளையாட்டாக அழைக்க இதனால் கோபமுற்ற இறைவி பாலாற்றின் வடகரையில் பொற்பனங்காட்டினுள் ஐந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தாள்.

    அத்தவத்தின் முடிவில் சிம்மகுளத்தில் நீராடி தனது கருமை நிறம் நீங்கி பொன்னிறம் கொண்ட மரகதவல்லியாக இறைவனின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள். இதனால் தான் இத்தலத்து மரம் பனை மரமாக உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற்ற நாள் கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு ஆண்டும் அதே நன்னாள் இரவில் பெண்கள் அம்பிகை, பிரம்மன் ஆகியோர் நீராடிய சிம்ம குளத்தில் நீராடி ஈர ஆடையுடன் கோவில் மண்டபத்தில் படுத்து உறங்குவர்.

    நீராடி ஈர ஆடையுடன் உறங்கும் பெண்களுக்கு எவ்வித குளிரும் தாக்குவது இல்லை என்பது கண்கூடு. இறைவன் இவ்வாறு நீராடிய பெண்களின் கனவில் வந்து பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது திண்ணம். இத்தலத்தின் தீர்த்தம் சிம்ம தீரத்தம் ஆகும். இதில் ஆதிசங்கரர் பீஜாட்சர யந்திரத்தினை அமைத்துள்ளார். இதில் நீராடினால் நீராடுபவர்களை பற்றிய தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை.

    மேலும் ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவனின் பெருமையை உணர்ந்த வட இந்திய மக்கள் இத்தலத்தை கண்டுபிடித்து வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் வணங்கி பயணம் இனிதாக அமைய வேண்ட இறைவன் கண்டிப்பாக வழித்துணையாக வருவான் என்பது திண்ணம்.

    போக்குவரத்து வசதி :

    தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

    பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

    பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இத்தலத்திற்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன.

    • இக்கோவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
    • இந்த ஆலயத்தில் பல அற்புத நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    சைவ சமய குரவர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கள் அடியார் திருக்கூட்டங்களோடு பல புண்ணிய தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி வழிபடலாயினர். இவ்வகையில் திருவீழிமிழலை என்னும் பதியில் அருள்மிகு அழகிய மாமுலை அம்மன் உடனுறை வீழிநாதசுவாமியை வழிபடும் காலத்தில் ஈசன் திருவிளையாடல் புரிந்த ஆவண வீதியே தற்பொழுது ஐயன்பேட்டை என்று வழங்கப்படுகிறது. ஐயனே வந்து வியாபாரம் செய்தமையால் ஐயன்பேட்டை என்பதாயிற்று. திருவீழிமிழலை தலவரலாற்றில் இதுபற்றி விரிவாகக் காணலாம்.

    அத்துணைப் புகழ் வாய்ந்த இத்தலத்தின் கீழ்த்திசையில் அருள்மிகு முத்துமாரியம்மன் தனிக்கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறாள். இக்கோவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பரம்பரையாக சைவ வேளாளர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இறைவனார் பரமேஸ்வரன், இறைவி பார்வதிக்கு திருவாய் மலர்ந்தருளிய உபதேசத்தில் பிரமாண்ட கேரள நூல் ஏட்டுச் சுவடியில் இவ்வாலயம்பற்றி நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பன்னெடுங்காலமாகவே இக்குடும்பதினரால் பரம்பரையாக இவ்வாலய வளாகத்தில் விஷக்கடி நிவாரணம், ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் அம்மனின் அருட்சக்தி கொண்டு அளிக்கப்படுகிறது. குறிப்பாக நாய்க்கடி, எலிக்கடி, பூனைக்கடி, மனிதக்கடி மற்றும் அனைத்துவித மிருகங்களின் கடிகளுக்கும், விஷ ஜந்துக்களின் கடிகளுக்கும், விஷக் கடியால் ஏற்படும் தோல் நோய்களுக்கும் எந்தவித பத்தியமும் இல்லாத வகையில் பூரண உடனடி நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை முடிந்தபின், விபூதி, குங்குமப் பிரசாதம், வழங்கிய பிறகு இந்நிவாரணம் செய்யப்படுகிறது. முதலாவதாக ஆன்மிக சத்விஷயங்கள் கூறிய பிறகு மாந்திரீகர் தனது தலை அசைவினாலும், மந்திரக்கோலின் அசைவு கொண்டும் விஷக்கடியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மணி, மந்திர ஔஷதம் என்ற சித்தாமுறையில் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    மனிதர்களுக்கு மட்டுமின்றி மனிதர்களின் வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, நாய், பூணை, குதிரை, கிளி, புறா, கோழி, வாத்து ஆகிய விஷக்கடியால் பாதிக்கப்பட்ட பிராணிகளுக்கும் நிவாரணம் அளிக்கப்படுகிறது. விஷக்கடியால் பாதிக்கபட்ட வெளிநாடு வாழ் அன்பர்களுக்கும் இந்நிவாரணம் தக்கபடி வழங்கப்படுகிறது. இதைத்தவிர திருமணத் தடைகள் அகலவும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கும் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் பூஜை செய்தும் பக்தர்கள் பயன் அடைகிறார்கள். சித்தப்பிரமை, மனநலம் குன்றியோர், நலம் பெறவும் பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து நிவாரணம் பெறவும் சிறந்த பூஜை பிரார்த்தனை செய்து நல்ல பலனை பெறலாம்.

    நித்திய பூஜையும் வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜையும் முறையாக நடைபெறுகின்றன. தை மாதம் மற்றும் ஆடி மாதங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, ஆராதனைகளும், மாலையில் முத்துமாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் செய்வித்து சிறப்பு அன்னதானமும் முறையாக செய்யப்படுகின்றன. அத்துடன் மேற்கூறிய விழாக் காலங்களில் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் குத்து விளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் பல அற்புத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எதிர்பாரத விபத்துகளில் இருந்து தப்புவதற்கான நிகழ்வுகள், இரவு நேரங்களில் வெவ்வேறு வித பூக்களின் மணங்கள் ஆலயத்தில் வீசுகின்றன. இடைவிடாமல் அடிக்கடி ஆலயத்தில் சர்ப்பங்கள் உலாவுவதை காணலாம்.

    ஆலயத்தில் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் விருப்பங்கள் அம்மனின் அருட்சக்தியால் நிறைவேறுகின்றன என்பது கண்கூடு.ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் ஆண்டு திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது ஹோமங்கள், பால்காவடி, பால்குடம், அலகுகாவடியுடன் திருவீதியுலா வந்து முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகமும் 108 சங்காபிஷேகமும், அலங்காரம், பூஜை ஆராதனைகள் நடைபெறும்.

    ஆலயத் தொடர்பு ; 8526739981.

    கும்பகோணம்- பூந்தோட்டம் - காரைக்கால் வழிதடத்திலும், மயிலாடுதுறை - பூந்தோட்டம் - கும்பகோணம் வழித் தடத்திலும் (மருதவஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்கவும்). மயிலாடுதுறை - பூந்தோட்டம் - திருவாரூர் வழித் தடத்தில் பூந்தோடத்திற்கு மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

    • கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி.
    • கோவிலின் தல விருட்சம் வில்வம் மரம்.

    காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் பக்தி பெருக்கோடு பல சிவாலயங்களை பண்டைய மன்னர்கள் கட்டி அதன் வழிபாட்டு முறைகளையும் அதற்கான மானியங்களையும் அளித்துள்ளதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. அவ்வாறான பல கோவில்களில் பழமை வாய்ந்த திருக்கோவில் ஒன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மாறனேரி கிராமத்தில் அமைந்துள்ளது.

    சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் பல்வேறு தடைகளையும் கடந்து புதுப்பொலிவுடன் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழாவை நோக்கி காத்திருக்கிறது.

    பல்லவ மன்னர்கள்

    சங்க காலத்துக்கு பிறகு சோழ நாட்டை களப்பிரர்களும் அவர்களுக்கு பிறகு பல்லவர்களும் தங்களுக்குரிய நாடாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளதாக கூறுகின்றனர். நிருபதுங்க பல்லவ மன்னன் ஆட்சி செய்த போது மாறனேரி கோவில் கட்டப்பட்டது.

    சுவரன் மாறன் காலத்தில் ஏற்பட்ட ஊரே தற்போதைய மாறனேரி என்னும் ஊராகும். மாமன்னன் கரிகால் சோழன் போன்ற சங்க கால சோழப்பேரரசு வாழ்ந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோழ நாடு பல நாடுகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி நடந்து வந்தது.

    வடகவீர நாடு

    ராஜராஜ சோழன் சோழநாட்டை விரிவுபடுத்தி சோழமண்டலமாக மாற்றி அமைத்து நாடுகளுக்குள் பிரிவு அல்லது உட்பிரிவுகள் அமையுமாறு செய்தார். அவ்வாறு செய்த போது 21 உட்பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவுகளில் ஒன்றான வடகவீர நாடு என்பது வெண்ணாறு மற்றும் காவிரி படுகையில் அமைந்த மாறனேரி பகுதிகளை கொண்ட ஒரு நாட்டுப் பகுதியாகும்.

    இந்த நாடு ஏரிமங்கலநாடு என்று வழங்கப்படுகிறது. மாறனேரி என்னும் ஊரினை குறிப்பிடும் சோழ மன்னர்கள் கல்வெட்டு சான்றுகள் சோழமண்டலத்து பாண்டிய குலசினி வளநாட்டு வடகவீர நாட்டு மாறனே என்று குறிப்பிடுகின்றன.

    சிவகாமசுந்தரி

    மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மாறனேரிக்கு தீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்ற மற்றொரு பெயரும் வழக்கில் இருந்தது. நேரி வாயில் என்றும் மாறனேரி என்றும் நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல்வேறு பெயர்கள் இந்த ஊருக்கு பல்வேறு காலகட்டத்தில் இருந்தன. இருப்பினும் மாறனேரி என்ற பெயர் இன்றும் நிலைத்த பெயராக விளங்குகிறது.

    நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவன் தன் பெயரால் நிருபகேஸ்வரி ஈஸ்வரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட சிவாலயம் தற்போது பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி. இக்கோவிலில் விநாயக பெருமான், துர்க்கை, முருகன் ஆகிய சாமிகளும் உள்ளனர்.

    அம்மனை நோக்கி நந்தி

    இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் உள்ள அம்மன் சிவகாம சுந்தரியை வணங்கினால் குடும்பத்தில் நன்மை கிடைக்கும் என்று வழி, வழியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

    இக்கோவிலில் உள்ள நந்தி நேர்முகமாக சிவனை பார்க்காமல், தன்னுடைய தலையை லேசாக திருப்பி அம்மனை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

    பிரதோஷ நாட்களில் நந்தியெம்பெருமானையும் சிவகாமசுந்தரியையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கூறுகின்றனர். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    குடமுழுக்கு

    மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவுக்காக கடந்த 2009-ம் ஆண்டு பாலாலயம் நடந்து திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் கோவிலின் மூலவர் உள்ளிட்ட அனைத்து விக்கிரகங்களும் கோவிலின் அருகில் வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.

    2 துர்க்கை சிலைகள்

    கோவிலின் தல விருட்சம் வில்வம் மரம். கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாக நான்கு கால பூஜைகளுடன் நடைபெறும். பிரதோஷ நாளில் நந்தியெம்பெருமானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது..

    மாறனேரி பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் 2 துர்க்கை சிலைகள் உள்ளன. இதில் ஒன்று பல்லவர் காலத்து சிலை. மற்றொரு சிலை சோழர் காலத்துக்குரியது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    நவக்கிரக தோஷம்

    துர்க்கை அம்மனை முறைப்படி வழிபட்டால் நமது வாழ்வில் உள்ள தீமையான கால கட்டம் விரைவில் அகன்று புதிய நல்வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் இன்றும் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.

    துன்பங்களை போக்கும் துா்க்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் நீங்காத துயரால் அவதிப்படுபவர்களுக்கு விரைவில் நல்வாழ்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியை முறையாக வழிபடுவோருக்கு விரைவில் நவக்கிரக தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

    கோவிலின் மூலவர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பிரதோஷ நாளில் இந்த கோவிலில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் குடும்பத்தில் உள்ள தீமைகள் அகன்று கண்டிப்பாக நம் வாழ்வில் நன்மை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • இத்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை.
    • இத்திருக்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை.

    திருப்பதி சென்று திருமலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீவெங்கடாசலபதியை தரிசிக்கும் எவரும் திருச்சானூர் சென்று அங்கு வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை வணங்காமல் திரும்பக்கூடாது என்று கூறுவார்கள்.ஏனெனில் திருப்பதியை பாலாஜியை வணங்குவதால் கிடைக்கும் அருள், பத்மாவதி தாயாரை வணங்குவதன் மூலம் நிறைவேறும் என்பது தொன்றுதொட்டு இத்திருத்தலங்களுக்குச் சென்று வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    திருப்பதி திருமலையில் திருமால் வீற்றிருக்க, திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

    தன்னிடம் பிரார்த்திக்கும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தருபவர் பத்மாவதி தாயார் என்பதால் திருப்பதி திருமலையைப் போலவே இங்கும் பக்தர்களின் வருகை அன்றாடம் பல ஆயிரக்கணக்கில் இருந்து கொண்டே உள்ளது.

    தல புராணம் :திருச்சானூரில் வெங்கடாச்சலபதிக்கு ஒரு கோவில் இருந்தது. ஆனால் அந்த கோவில் மிகச் சிறியதாக இருந்ததால் எல்லா பூஜைகளையும் செய்ய முடியவில்லை என்பதற்காக சற்று தூரத்தில் மற்றொரு கோவில் கட்டப்பட்டது. அங்கு மிக முக்கியமான இரண்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்தக் கோவிலிலும் போதுமான இட வசதி இல்லை என்று கூறி மீண்டும் விக்ரகங்கள் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

    12-வது நூற்றாண்டில் அப்பொழுது இப்பகுதியை ஆண்டு யாதவ அரசர்கள் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோவிலைக் கட்டினர். அந்தக் கோவிலில் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 16வது, 17வது நூற்றாண்டுகளில் சுந்தரவரதராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அந்த நேரத்தில்தான் பத்மாவதி தாயாருக்கு தற்பொழுதுள்ள இந்தக் கோவில் கட்டப்பட்டது.புராணத்தின்படி அலமேல் மங்காபுரத்தில் உள்ள இக்கோவிலின் திருக்குளத்தில் உள்ள தாமரையில்தான் பத்மாவதி தாயார் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

    இத்திருக்கோவிலில் பல கடவுள்களின் சன்னதிகள் உள்ளன. பத்மாவதி தாயார், திருமலை வெங்கடாச்சலபதியின் துணைவியார் என்றே வழங்கப்படுகிறார்.

    பத்மாசனத்தில் தனது கைகளில் தாமரை ஏந்தி இருக்கும் பத்மாவதி தாயாரின் திருவுருவம் வணங்குவோரிடையே பக்திப் பெருக்கை ஏற்படுத்துவதாகவும் இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், சுந்தரராஜ சுவாமி, சூரிய நாராயண சுவாமி ஆகியோரின் விக்ரகங்களும் மிக ஆழகானவை.

    இத்திருக்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை. இந்த யானைதான் பத்மாவதித் தாயாரின் வாகனம். இத்திருக்கோவில் விழாக்களின் போது யானை உருவம் பொறிக்கப்பட்ட கொடியே ஏற்றப்படுகிறது.

    • 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    திருச்சானூரில் அருள் பாலிக்கும் பத்மாவதி தாயார் கோவிலை போன்று இந்தியாவில் 2-வதாக சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கும் கோவிலுக்கு மன்னர் கால முறையில் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

    இக்கோவில் மொத்தம் உள்ள 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலத்தில் மண்டபம், மடப்பள்ளி புஷ்கரணி வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளது.

    வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சின்ன புஷ்கரணி குளம் உள்ளது. அந்த குளத்தை பார்த்து மகிழ்ந்து பின்னர் அருகில் உள்ள துவார பாலகேஷி அம்மனை வழிபடலாம்.

    இங்கு 2 அம்மன் சிலைகள் உள்ளன. அங்கு வழிபட்ட பின்னர் கோபுர தரிசனத்தை காணலாம். மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், பாஞ்சராத்தர ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இதில் கலை நலயமிக்க சிற்பங்களும் உள்ளன.

    கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்றதும் கருவறையில் வடக்கு திசை நோக்கி பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் அழகை காணலாம்.

    இந்த பத்மாவதி தாயார் சிலை, திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தாயாரின் காவல் தெய்வங்களான வனமாலி, பலாக்கினி உள்ளனர்.

    ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும். சிலை வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜலவாசம், தானிய வாசம், நம்மூலிகை மற்றும் பாலிபிஷேகம் செய்து கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை, மதியம், மாலை மூன்று காலை பூஜைகள் நடத்தப்படும். தாயார் கருவறைக்கு பின்புறம், மடப்பள்ளியும், தாயார் அணியக்கூடிய அணிகலன்கள் வைப்பதற்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் கோவில் பஞ்சரத்தின ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளது

    கருவறை எதிரே பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அருளும் அம்மனை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் இடது புறம் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் தங்கள் காணிக்கையை செலுத்தலாம்.

    கோவில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன. கோவில் கருவறையின் கோபுரம் தங்க நிறத்தில் பிரகாசிக்கிறது. கோவிலின் பின் பகுதியில் மடப்பள்ளி வழியாக வந்து கொடி மரத்தையும் சுற்றி வந்து வழிபடலாம்.

    கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக மூன்று வேளையும் மூன்று விதமான அன்ன பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் தனது மன நிம்மதிக்காக கோவில் வளாகத்தில் அமர்ந்து இறைவனை நினைத்து அமர்ந்து செல்வது வழக்கம். இதற்காகவே அம்மனை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் வாளகத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கும் இட வசதி உள்ளது.

    முன்புறம் கோவிலை பற்றி தகவல்கள் மற்றும் வசதிகள் பற்றி அறிய தகவல் ைமயம் நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளன.

    பக்தர்களுக்கு கண்காணிப்பு காமிராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

    • மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
    • இது குழந்தை வரம் அருளும் பிரார்த்தனை தலமாகும்.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தொன்மையான வழக்கு. ஆனால், நதிக்கரையிலும் முருகன் கோயில் அமைந்திருக்கிறது. வேலூர் அருகே வேகவதி என்றழைக்கப்படும் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்தான் அது. இக்கோயில் 500 ஆண்டு பழமையானது. திருத்தணியில் வள்ளி-தெய்வானையுடன் காட்சி தரும் முருகனின் அதே தோற்றத்தை ரத்தினகிரியிலும், காங்கேயநல்லூரிலும் காணலாம். மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது. விஜயநகர பேரரசு காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை அடுத்து அழகிய கொடி மரம். அதையடுத்து அர்த்த மண்டபம். கருவறையில் மூலவர் வள்ளிதெய்வானையுடன் அருளாட்சி செய்ய, சுற்றுப் பிரகாரங்களில் விநாயகர், சிவன், அருணகிரிநாதர், தண்டபாணி மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் கொலு வீற்றிருக்கின்றனர்.

    1929ம் ஆண்டு கற்காரத்தின் மீது ராஜகோபுரத்தை நிர்மாணிக்கும் திருப்பணியை மேற்கொள்ள, திருமுருக கிருபானந்தவாரியாரின் தந்தை மல்லையதாஸ் பாகவதர் முன்வந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 23ம்நாள் மாலை 4 மணியளவில் ராஜகோபுரத்தின் 5வது நிலையில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மல்லையதாஸ் பாகவதரின் மற்றொரு மகனான சிறுவன் ஸ்ரீசைலவாசன் உணவு எடுத்து சென்றான்.

    பின்னர் அங்கிருந்து இறங்க முயற்சித்தபோது தவறி 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். மூர்ச்சையின்றி கிடந்த மகனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லையதாஸ், கோயிலின் கருவறை நோக்கி 'முருகா' என்று மனமுருகி வேண்டியபடி ஓடினார். பின்னர் மகன் அருகில் சென்று தனது குருநாதர் உபதேசித்த சடக்கர மந்திரத்தை ஓதினார். அங்கு கூடிய பொதுமக்களும் மூர்ச்சையின்றி கிடந்த ஸ்ரீசைலவாசனின் நெற்றியில் விபூதியை பூசி சிறுவனை காக்கும்படி முருகனை நெஞ்சுருக வேண்டினர். சிறிது நேரத்தில் குழந்தை எந்தச் சிறு கீறலுமின்றி பெற்றோரை பார்த்து சிரித்தபடி எழுந்தான். முருகப்பெருமானின் இந்த மகிமையை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அந்த சிறுவன் திருமுருக கிருபானந்தவாரியாரின் சகோதரர் ஆவார்.

    இக்கோயிலின் எதிரிலேயே முருகனின் புகழை திக்கெட்டும் பரப்பிய திருமுருக கிருபானந்தவாரியாரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு 'ஞானத்திருவளாகமாக காட்சியளிக்கிறது. பிரார்த்தனை தலமான இந்தக் கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டி ஆண்டுதோறும் ஆடி மாத பரணி, கிருத்திகை மற்றும் தை கிருத்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு குழந்தை செல்வம் கிடைத்தபிறகு மீண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் வேலூர்காட்பாடி செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.

    • இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது
    • இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது.

    இறைவன் - அருள்மிகு நின்ற நம்பி (எ) குறுங்குடிநம்பி(எ) வடுக நம்பி (எ) வைஷ்ணவ நம்பி

    இறைவி - அருள்தரும் குறுங்குடிவல்லி

    தீர்த்தம் -திருப்பாற்கடல்

    விமானம் - பஞ்சகேதக விமானம்

    புராணச் சிறப்பு

    வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.

    'நம்பாடுவான்' என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோவிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,.

    நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.

    இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு " தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்" என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

    தனிச்சிறப்பு

    இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..

    திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).

    ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்

    ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது "கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்" என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அ;நத இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோவிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு 'மகேந்திரகிரி நாதர்' என்றும் ' பக்கம் நின்ற பிரான்' என்றும் பெயர்..

    "வெள்ளிறா" என்னும் சாதிமீனை தாய்கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது. எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற சீலகுணமுடையவரான பெருமாளுடைய திவ்விய தேசமமாம்).

    மேலும், இக்கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.

    அமைவிடம் :

    திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    • சவேரியாருக்கென்று முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம்.
    • பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது.

    கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களை ஒவ்வொரு நாளும் அற்புதங்களால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது.

    கோடி அற்புதங்கள் விளையும் பூமி

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு மன்றாடும் பலர் அன்றாடம் பல நன்மைகளைப் பெற்று மனநிறைவுடன் செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் சாதி, சமய வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சியளிக்கின்றது.

    ஒருவர் உலகமெல்லாம் தமதாக்கி கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன(லூக்கா 9:25) என்ற வாக்கியம் புனித சவேரியாரின் வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் இருந்தது.

    மேலும், ஆழ்ந்த ஆன்மிக அனுபவம் நற்செய்தி பணியாற்றும் ஆர்வமும், அவரை சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு நற்செய்தி பணியாற்ற தூண்டியது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி பறைசாற்றுங்கள்(மாற்கு 16:15) என்ற இறைவார்த்தையின் படி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து அனைவரையும் இறையரசில் உட்படுத்த வேண்டும் என்ற ஆவல் இயேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியாரின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

    சவேரியாரின் இந்திய வருகை

    இஞ்ஞாசியார் தன்னுடன் சில குருக்களையும் அழைத்துக் கொண்டு ரோமுக்கு சென்று திருத்தந்தை 3-ம் சின்னப்பரை சந்தித்து ஆன்மிக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.

    போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே, போர்த்துக்கீசிய மன்னர் 3-ம் ஜாண் உதவியோடு சவேரியார் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலே இறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார்.

    கோட்டாரில் இறைப்பணி

    அதைதொடர்ந்து குமரிமாவட்டம் கோட்டார் வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து மக்களை சந்தித்து மக்களுடைய அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

    மேலும், நம்பிக்கையோடு முன் வந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார். கோட்டார் பேராலயத்திற்கு இன்னுமொரு சிறப்பு, இங்குதான் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறைமாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது. இங்குதான் நமது புனித சவேரியார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார்.

    -பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன்

    • மயிலாடுதுறையின் மிகப்பெரிய கோவிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது.
    • ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். சில சிவன் கோவில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோவில்களைப் பற்றி இங்கே காண்போம்.

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். பெரிய கோவில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோவிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.

    திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இது.

    திருவொற்றியூர் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

    மயிலாடுதுறையின் மிகபெரிய கோவிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோவில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோவில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது.

    திருவானைக்காவல் கோவிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

    தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோவில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோவில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோவிலை உருவாக்கியிருக்கி உள்ளார்.

    தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம் மனிதனின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

    திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோவில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.

    எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோவில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார்.

    சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோவில் வீற்றுள்ளது. இந்த கோவில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோவிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோவில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோவில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும்.

    சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்தில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது.

    ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோவில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர்.

    • இந்தக் கோவிலை ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
    • இந்த கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியூரில் அமைந்துள்ளது, ஆதிவீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பவுர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு. காரணம் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இந்தக் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். பவுர்ணமி அன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அன்று பால், மஞ்சள், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

    இந்த ஆதி வீரமாகாளியம்மன் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டுவந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்து விட்டு சென்ற பின்னர், அந்தப் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் ஒரு புற்று ஒன்றும் இருந்துள்ளது. இதனை அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு நாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல்பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது, அந்தப் புற்றில் இருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை. இதையடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே பள்ளியூர் மக்களின் முழு ஒத்துழைப்போடு கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை 1½ அடி உயர கருங்கல் சிலை ஆகும். இந்த சிலை 1996-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதற்கு கோவில் கட்டி 2005-ம் ஆண்டு குட முழுக்கு நடத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டது.

    இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும்.

    3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது. அதன்படி இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும்.

    அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமியில் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    தஞ்சையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ்சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் இருந்து 1½ கி.மீ. தூரம் கிழக்கு நோக்கிச் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    பஞ்சபூத தலம்

    பவுர்ணமி அம்மன் என்று அழைக்கப்படும் ஆதிவீரமாகாளியம்மன் கோவில் பஞ்சபூத தலத்தை உள்ளடக்கியது. இந்தக் கோவிலின் முன்புறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இந்த அம்மன் கோவிலுக்கும், விநாயகர் சன்னிதிக்கும் இடையில் குளம் (நீர்) உள்ளது. கோவில் இயற்கை சூழ வயல்வெளிக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதில் 'புற்று' நிலம் என்றும், அம்மன் 'நெருப்பு' என்று அழைக்கப்படுகிறது. கோவில் பகுதியில் (காற்று) எப்போதும் சிலு, சிலுவென்று காற்று வீசிக்கொண்டே இருக்கும். கோவில் திறந்த வெளியில் (ஆகாயம்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கன்றுடன் கூடிய பசு சிலை

    பாபவிமோசனம், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் வகையில் கன்றுடன் கூடிய பசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அமைந்துள்ள பீடம் 3 அடி உயரமும், சிலை அமைப்பு 3½ அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள இடத்தின் அருகே புற்று உள்ளது. இதனையும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த புற்றுக்கு தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. விநாயகருக்கு தல விருட்சமாக அரசமரம் மற்றும் வேப்பமரம் உள்ளது. இந்த இரண்டு மரங்களுக்கும், திருக்கல்யாணமும் நடத்தப்பட்டுள்ளது. வீரமாகாளியம்மனுக்கு தலவிருட்சமாக புளியமரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    -வெண்ணிலா, பள்ளியூர்.

    • இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.
    • அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை, புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் அணைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் மலை அடிவாரத்தின் வைகை ஆற்றுப்படுகையில், வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.

    வலது கையில் சஞ்சீவி மலையையும், இடது கையை தொடையில் ஊன்றியவாறும் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி இக்கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரின் இடது கண் அயோத்தியையும், வலதுகண் தன்னை நாடி வரும் பக்தர்களை பார்ப்பது போன்றும் உள்ளது.

    மனக்கஷ்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து 'அணைப்பட்டி ஆஞ்சநேயர்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உருவான விதம் வியப்பானது.

    கி.பி.16-ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில், அம்மையநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் வைகை ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம்.

    அதன்படி ஒரு பவுர்ணமி தினத்தில் வைகை ஆற்றின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, 'வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே, நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபடு' என்று கூறி மறைந்தார்.

    ஆஞ்சநேயருக்கு கோவில்

    கனவு கலைந்ததும் திடுக்கிட்டு கண்விழித்த ஜமீன்தார், கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தை தேடினார். அப்போது கனவில் கண்டபடி, ஒரு இடத்தில் தாழம்செடி புதர் போன்று இருப்பதை கண்டார். அந்த தாழம்செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கே ஒரு பாறை தென்பட்டது.

    அந்த பாறையை தோண்டி பார்க்க முயன்றார். என்ன அதிசயம்...! எவ்வளவு ஆழம் தோண்டியும் பாறையின் அடிப்பகுதியை காண முடியவில்லை. அந்த பாறையை வெளியே எடுக்கவும் முடியவில்லை. எனவே, அந்த இடமே ஆஞ்சநேயர் கூறிய இடம் என ஜமீன்தார் அறிந்து கொண்டார். அதன்படி அந்த இடத்திலேயே ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    திருவிழாக்கள்

    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோவிலில் அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

    செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கவும், பணி மாற்றம் விரும்புபவர்களும், பிற வேண்டுதல்களுக்காகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து வேண்டிச்செல்கின்றனர்.

    தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தியும் செல்கின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    பீமன் வழிபட்ட ஆஞ்சநேயர்

    ஆஞ்சநேயர் கோவில் தோன்றிய விதம் குறித்து புராதனகால செவிவழி செய்தி ஒன்றும் கூறப்படுகிறது. அதாவது, மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது அவர்கள் அணைப்பட்டியில் உள்ள சித்தர்கள் மலையில் சிறிது காலம் தங்கி இருந்தனர். ஒருநாள் பாஞ்சாலி சிவபூஜை செய்வதற்கு தயாரானாள். அந்த பூஜைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே மலை அடிவாரத்தில் உள்ள வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) தண்ணீர் எடுத்து வரும்படி பீமனிடம் தர்மர் கூறினார். உடனே பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து கீழே இறங்கி ஆற்றுக்கு வந்தார்.

    அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்தது. இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர்கள் மலைக்கு திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மர் தனது ஞானத்தால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். பின்னர் தம்பியிடம் உன்னை ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல.. ஆஞ்ச நேயர் தான் என்றார்.

    பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மர், தம் தம்பியான பீமனிடம், 'ஆஞ்சநேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா' என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டார். உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார். பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாக அந்த செவி வழி செய்தி விளக்குகிறது.

    • இந்த கோவில் கேதுவின் அம்சமாக விளங்குகிறது.
    • நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.

    நவக்கிரக நாயகர்களின் பெயர் வரிசையில் ஒன்பதாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலைவில்லிமங்கலம்" வடக்கு கோவில். இது கேதுவின் அம்சமாக விளங்குகிறது.

    தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.

    முற்காலத்தில் சுப்பரர் என்னும் முனிவர் இப்பகுதியில் வேள்விச் சாலை அமைத்து அதில் சிறப்பு யாகங்கள் செய்து தேவர்பிரானாக மகா விஷ்ணுவின் காட்சி பெற்ற முந்தைய வரலாறு நாம் அறிந்ததே. அந்த தேவர்பிரானை அம் முனிவர் தினமும் யாரும் முகர்ந்து பார்க்காத அழகிய பெரிய செம்மை நிறம் கொண்ட தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வருகிறார்.

    இதற்காக இக்கோவிலின் வடக்கு புறம் உள்ள ஓரு பொய்கையில் தினமும் சென்று அந்த செந்தாமரை மலர்களை பறித்து வருகிறார். இந்த வழிபாட்டினால் பேரானந்தம் அடைந்த மகா விஷ்ணு ஒரு நாள் அந்த செந்தாமரை மலர்களை பறிக்க சென்ற முனிவரை பின் தொடர்ந்து செல்கிறார். அவர் பொய்கையில் செந்தாமரை மலர்களை பறித்து திரும்பும் போது தனக்கு பின் ஒருவர் நிற்பதை கண்டு அதிசயித்த முனிவருக்கு பெருமாள் தன் சுய உருவில் காட்சியளித்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த முனிவர் தனக்கு காட்சியளித்த கோலத்திலேயே அங்கு நித்ய வாசம் புரிய வேண்டிக் கொண்டார். அதற்கு இசைந்த பெருமாளும் நான் செந்தாமரை மலர்களை விரும்பி இங்கு வந்ததால் அரவிந்தலோசனன் என்னும் திருநாமத்தில் அங்கேயே நிரந்தரமாக காட்சியளிப்பதாக கூறி முனிவருக்கு அருள்புரிந்தார்.

    அசுவினி குமாரர்களுக்கு அருள் செய்த வரலாறு:

    முற்காலத்தில் அசுவினி குமாரர்கள் என்னும் இரண்டு தேவ சகோதரர்கள் வைத்திய சாத்திரங்களுக்கு அதிபதியாக விளங்கி வந்தார்கள். அவர்கள் பூ உலகில் நடைபெறும் யாகங்களில் இருந்து அவர்களின் பங்கிற்குரிய அவிர்ப்பாகம் பெற்று வந்தார்கள். காலப்போக்கில் அவர்களுக்கு வர வேண்டிய அவிர்ப்பாகம் தடைபட்டது. அதற்குரிய காரணத்தை பிரம்மனிடம் கேட்க, பிரம்மதேவனோ பூ உலகில் வைத்திய சாத்திரம் கற்ற வைத்தியர்கள் செய்த பாவத்தினால் உங்களுக்கு வர வேண்டிய அவிர் பாகம் தடைபட்டுள்ளது, அதனை சரி செய்ய நீங்கள் பூ உலகம் சென்று தாமிரபரணி நதிக்கரையில் உறையும் அரவிந்த லோசனனை நினைத்து தவமியற்றினால் பயன் பெறலாம் எனக் கூறினார்.

    அதன்படி அந்த அசுவினி குமாரர்கள் இருவரும் பூ உலகம் வந்து இத்தல அரவிந்தலோசனரை வழிபட்டு வந்ததன் பலனாக, பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து வேண்டும் வரம் தருவதாய் வாக்களிக்க, அசுவினி குமாரர்களோ யாகங்களில் இருந்து தங்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் முறைப்படி கிடைக்க வேண்டும் என வேண்டிட, பெருமாளும் அவ்வாறே அருள் புரிந்தார். அந்த அசுவினி குமாரர்கள் இங்கு நீராடிய தீர்த்தமே அசுவினி தீர்த்தம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

    விபிதனின் குஷ்ட நோய் தீர்த்த வரலாறு:

    முற்காலத்தில் அங்கமங்கலம் என்னும் ஊரில் சத்தியசீலன் என்னும் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரிய விஷ்ணு பக்தர் ஆவார். அவருக்கு வன்னிசாரன், விபிதகன், சொர்ணகேது என மூன்று மகன்கள் இருந்தனர். இதில் விபிதகன் என்பவன் முற்பிறவி வினைப் பயனால் குஷ்ட நோயால் பாதிக்கப்பட, அது கண்டு வருந்திய சத்தியசீலரிடம், நாரதர் மகிரிஷி வந்து உன் மகன் முற்பிறவியில் தன் குருவுக்கு நிந்தனை செய்த காரணத்தினால் தான் இப்பிறவியில் குஷ்ட நோய் பீடித்துள்ளது என்றும் அதனை போக்க தாமிரபரணி கரையில் உள்ள அசுவினி தீர்த்தத்தில் நீராடி, அரவிந்தலோசனருக்கு செந்தாமரை மலர்களால் அர்சித்து வழிபட்டு வர நோய் நீங்கும் என கூறுகிறார்.

    அதன்படி விபிதகனும் இங்கு வந்து அசுவினி தீர்த்தத்தில் நீராடி, செந்தாமரை மலர்களால் பெருமாளை அர்சித்து வழிபட அவனை பீடித்திருந்த குஷ்ட நோய் நீங்கியதாகவும் கூறப்படுகிறது.

    மூலவர் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள்:

    கருவறையில் மூலவராக அமர்ந்த திருக்கோலத்தில், தன் இரு தேவியர்களோடு காட்சியளிக்கிறார் ஸ்ரீ அரவிந்த லோசன பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபயம் வரதம் காட்டியும், அருள்பாலிக்கிறார். இங்குள்ள உபய நாச்சியாரான தாயார் கருத்தடங்கண்ணி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறாள். அதாவது கரிய நிறமுடைய கண்களை கொண்டவள் என்பது அந்த திருநாமத்தின் பொருள் ஆகும்.

    உற்சவர் செந்தாமரைக்கண்ணன் சிறப்பு:

    இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு செந்தாமரை கண்ணனாக ஸ்ரீ தேவி, பூதேவி உடன் அருள்பாலிக்கிறார். இவர் செம்மை நிறமுடைய தாமரை மலர்களை ஏற்று அருள்புரிவதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள அரவிந்த லோசன பெருமாளை 1008 செந்தாமரை மலர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்து நீராஞ்சனம் சமர்பித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு எழுந்தருளி உள்ள துலைவில்லி தாயார் இத்தலத்தின் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்று விளங்குகிறாள்.

    நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    ×