என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்காவின் உள்ளூர் டி20 தொடர் அட்லாண்டா ஓபன் ஆகும்.
    • இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரஹீம் கார்ன்வெல் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அட்லாண்டா ஓபன் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய அட்லாண்டா ஃபயர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரக்கீம் கார்ன்வெல் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 77 பந்துகளில் 22 சிக்சர்கள், 17 பவுண்டரிகள் உள்பட 205 ரன்கள் குவித்து ஆட்டமிழ்க்காமல் உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 266.77. அடுத்து ஆடிய ஸ்கொயர் டிரைவ் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

    ரக்கீம் கார்ன்வெல் இதுவரை 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.

    சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர் பெங்களூரு அணியின் கிறிஸ் கெயில். இவர் 2013-ல் புனே வாரியர்சுக்கு எதிராக 175 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஐசிசியால் அங்கீகரிக்கப்படாத போட்டியில் கார்ன்வெல் இந்த ரன்களை எடுத்ததால் இது சாதனைப் பட்டியலில் இடம்பெறவில்லை.

    • தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
    • கைது செய்யப்பட்ட நபர் போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றுள்ளார்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36), இவரது மனைவி ஜஸ்லீன் கவுர், இவர்களின் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை மெர்சிட் கவுன்டியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடிவந்தனர்.

    இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது.

    இந்தக் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ (வயது 48) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் பதவியையும் வகிக்கிறார்.
    • டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார்.

    வாஷிங்டன்

    உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி (வயது 45) நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்துள்ளார்.

    டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கிறார். இந்த பதவியுடன் அவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் இருப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார். இவரது மனைவி ஆலிஸ் சென். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    டாக்டர் விவேக் மூர்த்தியின் பூர்வீகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 மாத பெண் குழந்தை உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டனர்.
    • இந்தச் சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • காயமடைந்த இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • இதுபோன்ற நடத்தையால் மக்கள் கலக்கம் அடையவில்லை என சமூக வலைத்தளத்தில் ஆதங்கம்

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலியன்ஸ் உடையணிந்த 6 இளம்பெண்கள் கொண்ட கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரெயிலுக்குள் ஏறிய அந்த பெண்கள் அங்கிருந்த இரண்டு பெண்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பர்ஸ், கிரெடிட் கார்டு, செல்போன் போன்றவற்றை பறித்து சென்றுள்ளனர். காயமடைந்த இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஏலியன்ஸ் போன்று இறுக்கமான உடை அணிந்த பெண்களின் அடாவடி செயலை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

    'நியூயார்க் அதன் பழைய தந்திரங்களுக்குத் திரும்பியுள்ளதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். நியூயார்க் எப்போதும் சிறப்பாக இருக்கிறதா? இதுபோன்ற நடத்தையால் மக்கள் கலக்கம்கூட அடையவில்லை. இது பைத்தியக்காரத்தனம், என ஒருவர் ஆதங்கத்துடன் கூறி உள்ளார்.

    • வடகொரியா நேற்று காலை ஜப்பான் மீது ஏவுகணையை வீசியது.
    • இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் ஆலோசித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. இதன்படி ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த 1-ம் தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே, வடகொரியா நேற்று காலை மீண்டும் ஜப்பான் மீது ஏவுகணையை வீசியது. இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் 20 நிமிடங்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் நாட்டின் வான்வெளியில் பறந்த வடகொரிய ஏவுகணையால் பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை கூறுகையில், இருநாட்டு தலைவர்களும் கூட்டாக ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்தனர். ஏவுகணை ஏவுதல் ஜப்பானிய மக்களுக்கு ஆபத்தானது, பிராந்தியத்தை சீர்குலைக்கும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை தெளிவாக வடகொரியா மீறியுள்ளது என தெரிவித்துள்ளது.

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் ஏழு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது.
    • போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, உக்ரைனுக்கு மேலும் 625 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என் உறுதியளித்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக, பிரதமர் மோடி உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன், ரஷியா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண உதவுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
    • எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது.

    வாஷிங்டன்:

    உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.

    இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2 மாதமாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார்.

    போலி கணக்குகள் தொடர்பாக கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக எலான் மஸ்க் முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இணையதள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    • அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்தது.
    • இந்தப் புயலால் அம்மாகாணத்தில் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.

    புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்.

    இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துள்ளது.

    தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம் பெறும். நாட்டைக் கட்டமைக்க சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகும். இது புளோரிடாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் புதன்கிழமை புளோரிடா செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • வடகொரியா ஒரு வாரத்தில் 4-வது முறையாக நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
    • இதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    வாஷிங்டன்:

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்று வரையில் 3 முறை மொத்தம் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

    வடகொரியா இப்படி தனது அடாவடி போக்கை தொடர்ந்தால் அந்த நாடு மிகவும் பயங்கரமான பதிலடியை எதிர்கொள்ளும் என தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் எச்சரித்துள்ளார்.

    இதேபோல் அமெரிக்கா மற்றும் ஜப்பானும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் சட்ட விரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் நிலையற்ற தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு முற்பட்டால் அமெரிக்காவிடம் இருந்து பெரிய அளவிலான பதிலடியை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.

    • ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் ரஷியாவை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.

    இந்த நிலையில் உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லுசன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபர் புதின் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும். ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்பட 4 நாடுகள் புறக்கணித்தது. ஐ.நா. சபை தீர்மானத்திற்கு ரஷியா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

    • உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவோம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
    • புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரது பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை.

    புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம்.

    நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக உள்ளது. எனவே மிஸ்டர் புதின், நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் எங்கள் நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இன்றும் புதிய தடைகளை அறிவிக்கிறோம் என தெரிவித்தார்.

    ×