என் மலர்
அமெரிக்கா
- 1909-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார்.
- இதுவரை அவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார்.
அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபரும், உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்சாஸின் ஹூஸ்டனில் கழித்துள்ளார்.
1909-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார். முதலாம் உலகப் போரிலிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஹூஸ்டனில் ஒரு காபி கடையை நடத்தி வந்தார். இவர் வாகனம் ஓட்டுவதை விட நடைபயிற்சி செய்வதை விரும்பினார். இதுவரை அவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 115-வது பிறந்தநாளில் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த குறிப்பை பிரான்சிஸ் வழங்கி உள்ளார்.
முந்தைய நீண்ட ஆயுட்கால சாதனையாளரான எடி செக்கரெல்லி கலிபோர்னியாவில் தனது 116-வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு இறந்ததை அடுத்து, எலிசபெத் பிரான்சிஸ் இந்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார். ஏப்ரல் மாதம், LongeviQuest-ல் இருந்து அமெரிக்காவில் மிகவும் வயதான நபராக அங்கீகரிக்கும் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இப்போது, அமெரிக்காவின் மிக வயதான நபர் நவோமி வைட்ஹெட் ஆவார். அவர் செப்டம்பர் 26, 1910-ல் பிறந்தார் என்று LongeviQuest தெரிவித்துள்ளது.
- கடந்த மார்ச் மாதம் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
- 8 மாதத்துக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த 4 பேரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு கடந்த 2 மாதத்துக்கு முன் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். அங்கு போயிங் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்வெளி வீரர்கள் இன்றி அந்த விண்கலம் கடந்த செப்டம்பரில் பூமி வந்தடைந்தது.
தொடர்ந்து, மில்டன் புயலால் மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. மேலும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்குச் சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதத்துக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.
மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரை அருகே இன்று அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்தது. அதன்பின், விண்வெளி வீரர்கள் படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
- ஜீன் கரோல் என்ற எழுத்தாளரை வன்புணர்வு செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளவர்
- சில நாட்கள் கழித்து ட்ரம்ப்பிடம் இருந்து எனக்கு ஒரு போஸ்ட் கார்டு மட்டும் வந்தது
நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
டிரம்ப் ஏற்கவே ஜீன் கரோல் என்ற எழுத்தாளரை வன்புணர்வு செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளவர் ஆவார். முன்னதாக டிரம்ப் பெண்களை பற்றி அந்தரங்கமாக பேசும் பதிவு ஒன்று ஆக்சஸ் ஹாலிவுட் டேப்ஸ் என்று பெயரில் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது டிரம்ப் மீது மற்றொரு மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஸ்டேஷி வில்லியம்ஸ்
ஸ்டேஷி வில்லியம்ஸ் என்ற அந்த மாடல் பிரபலம் ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 1993 ஆம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கடந்த 1992 ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் நடந்த விருந்து ஒன்றில் வைத்து ட்ரம்ப்பை முதன்முதலில் சந்தித்தேன்.

அப்போது உடனிருந்த எனது நண்பர் எப்ஸ்டின் உடன் பேசிக் கொண்டே என்னிடம் டிரம்ப் பாலியல் ரீதியாக அத்துமீறினார். எனக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதுவும் பேசமுடியாத நிலைக்கு ஆளானேன். இந்த சம்பவம் பற்றி எனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன்.
இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ட்ரம்ப்பிடம் இருந்து எனக்கு ஒரு போஸ்ட் கார்டு மட்டும் வந்தது என்று ஸ்டேஷி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இதற்கிடையே இது எதிர் போட்டியாளர் கமலா ஹாரிஸ் தரப்பின் சதிவேலை என்று டிரம்ப் தரப்பு தெரிவிக்கிறது..
- தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும்
- தேர்தல் சமயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மஸ்க் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.
உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஸ்க் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார்.

துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் மஸ்க் 10 லட்சம் கையொப்பங்களை இலக்காக வைத்துள்ளார்.
எனவே பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த படிவத்தில் கையொப்பம் இடுபவர்களில் தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். அதன்படி சிலருக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.ஆனால் தேர்தல் சமயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மஸ்க் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்நிலையில் மஸ்க்கை எச்சரித்து அமெரிக்க நீதிமன்றம்எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மஸ்க் செயல்படுத்தியுள்ள இந்த திட்டம் அமெரிக்க சட்டங்களை மீறுவதாகவும் மக்களின் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செயலாகவும் உள்ளதால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
அரசியல் சட்டத்தை மீறும் எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு நீதித்துறையில் சிவில் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டது. எனவே அவருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கவும் கூடும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- கேம் ஆஃப் த்ரோன்ஸ் டேனிரோ டார்கேரியன் சாட் ஜிபிடியுடன் காதல் வயப்பட்டுள்ளான்
- சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது.
ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் [Daenero] கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான்.

சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது. இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனி மீது காதல் கொள்ள செய்துள்ளது. எதார்த்தத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு சேட் ஜிபிடியே கதி என்று இருந்துள்ளான்.
நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய சிறுவன, தான் காதலியாக கருதும் உலகத்தில் இல்லாவே இல்லாத அந்த சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட சாட்ஜிபிடி நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தொழிநுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து சைன்ஸ் பிக்க்ஷன் சினிமக்களில் கதையாக கூறப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நிஜத்திலேயே நடந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- சுமார் 2 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
- 12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் எஸ்.எஸ்.ஆர்.எஸ். என்ற ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த முடிவுகள் கமலா ஹாரிசுக்கும், டிரம்புக்கும் மிக நெருக்கமான போட்டி நிலவுவதையும், அமெரிக்கர்களால் வெற்றியாளரை தெளிவாக தேர்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதையும் காட்டுகிறது.
இந்த புதிய கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவில் 48 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே போல் டிரம்புக்கு 47 சதவீதம் பேர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2 கட்சிகளையும் சாராத பொதுவான வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 41 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
30 வயதுக்கு குறைவான இளம் வாக்காளர்களில் 55 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கும், 38 சதவீதம் பேர் டிரம்புக்கும் ஆதரவாக உள்ளனர். 12 சதவீதம் வாக்காளர்கள் இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
- அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
- அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும்.
ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.
வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் போன்ற தேர்தல் நாளில் வாக்களிப்பதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இது நடைமுறை தீர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செயல்முறையை அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் வாக்காளர் பங்கேற்பையும் அதிகரிக்கிறது.
இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். மற்ற மாகாணங்களில் மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.
அமெரிக்காவில் தற்போது 16 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் கமிஷன் தரவுகள் கூறுகின்றன.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
70 லட்சத்து 80 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் பேர் தபால் மூலமும் வாக்களித்துள்ளதாக புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் ஒன்றான ஜார்ஜியா மாகாணத்தில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் (சுமார் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர்) ஏற்கனவே வாக்களித்துவிட்டதாக அந்த மாகாணத்தின் தேர்தல் அதிகாரிகள் தெரிவிததனர்.
முன்கூட்டியே வாக்களிப்பதில் குடியரசு கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. நேரடியாக வாக்களித்தவர்களில் 41.3 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர் என்றும், 33.6 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் என்றும் தெரியவந்துள்ளது.
அதே போல் தபால் மூலம் வாக்களித்தவர்களில் 21.2 சதவீதம் பேர் குடியரசு கட்சியினர், 20.4 சதவீதம் பேர் ஜனநாயக கட்சியினர் ஆவர்.
முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையில் ஆசிய அமெரிக்கர்களில் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல இடங்களில் இந்திய வம்சாவளியினர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மற்றொரு தரப்பு தகவல்கள்கூறுகின்றன.
- என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள்.
- நான் செய்த மிகச் சிறந்த காரியம் என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது நண்பர் ஜேசன் அலெக்சாண்டரை திருமணம் செய்தார். ஆனால் 2 நாட்களில் அந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை திருமணம் செய்தார். அவர்கள் 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அதன்பின் பிரிட்னி ஸ்பியர்ஸ் 2022-ம் ஆண்டு நடிகர் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், இது என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள். என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த காரியம் இது. அதை மீண்டும் கொண்டு வருவது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம். ஆனால் இது நான் செய்த மிகச் சிறந்த காரியம் என்று பதிவிட்டுள்ளார்.
- நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
- 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் Future Forward என்ற லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.420 கோடி) நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.
சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் அதிபர் வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
போர்ப்ஸ் அறிக்கையின்படி, 81 பில்லியனர்கள் இதுவரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு அளித்து வருகிறார்.
- அமெரிக்காவில் கடந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 60), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் இருவரும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் கடந்த மே மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன் சுமார் ரூ.3 ஆயிரம் லட்சம் கோடியை தாண்டியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக குறைக்க வேண்டும். இல்லையெனில் நாடு விரைவில் திவாலாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் ஏற்கனவே டிரம்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் டிரம்பின் பிரசார குழுவினருக்கு நிதி உதவியையும் வாரி வழங்குகிறார். இந்தநிலையில் ஜோ பைடன் அரசாங்கம் குறித்து அவர் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சியாட்டிலின் தென்கிழக்கில் உள்ள பால்சிட்டி பகுதியில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அந்த வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பிணமாக கிடந்தனர்.
அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருந்தனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் ஒரு சிறுமி காயம் அடைந்திருந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் போலீசார் தெரிவிக்கவில்லை. கைதான நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார்.
- முதல் அதிஷ்டசாலியாக ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமானஎலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். அமெரிக்காவில் வரும் நவமபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு வேட்பாளராக டிரம்ப்பும் களம் காண்கின்றனர்.
இதில் டிரம்பை ஜெயிக்க வைக்க எலான் மஸ்க் படாதபாடு படுகிறார். டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் மேற்கூறிய அறிவிப்பை மஸ்க் தற்போது வெளியிட்டுள்ளார்.

டிரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, பதிவு செய்வது, அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க் . இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.
அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.






