என் மலர்
டென்னிஸ்
- சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.
விம்பிள்டன் பட்டத்தை 5 முறை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
சுவிட்டோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல 7-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப்பூம் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். சோபியா கெனின் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கவூப்பை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து), 4-வது வரிசையில் உள்ள பெகுலா (அமெரிக்கா), கரோலினோ கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த லவுரென்ட் லோகோலியை எதிர்கொண்டார். இதில் கேஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், சீனாவின் லின் ஜூவும் மோதினர்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் மழை குறுக்கிட்டடால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. அதன்பின் மைதானத்தின் மேற்கூரை மூடப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.
இறுதியில், இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று 2-வது சுற்றை எட்டினார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா, சீனாவின் யு யுவானைச் சந்தித்தார்.
இதில் அசரென்கா 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.
- செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அர்ஜெண்டினா வீரரை வென்றார்.
லண்டன்:
கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டி வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 67-ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் லாரண்ட் லொகோலியுடன் மோதினார். இதில் காஸ்பர் ரூட் 6-1, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
- நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.
லண்டன்:
டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாமாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. உலகின் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த இரண்டு போட்டியிலும் பட்டம் பெற்றார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய வரலாறு படைத்தார். ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட் சிலாமை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.
பெண்கள் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், இகா ஸ்வியா டெக் (போலந்து), பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெற்றனர்.
3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெட்வ தேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
புல் தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியான விம்பிள்டனில் ரோஜர் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.
நடப்பு சாம்பியனான அவர் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை விம்பிள்டனில் வெற்றி பெற்றார். கொரோனா காரணமாக 2020-ல் போட்டி நடைபெறவில்லை. ஜோகோவிச் 24-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.
அல்காரஸ் மெட்வதேவ் அவருக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
- 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்ப உள்ளதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார்.
- கடந்த மூன்று ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தேன்.
டென்னிஸ் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி. டென்மார்க்கை சேர்ந்த இவர் 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். கடந்த 2020-ம் ஆண்டு தனது 29-வது வயதில் வோஸ்னியாக்கி, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். இவர் முன்னாள் கூடைப்பந்து வீரர் டேவிட் லீயை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்ப உள்ளதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தேன். நான் இப்போது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளேன். ஆனால் நான் இன்னும் அடைய விரும்பும் இலக்குகள் உள்ளது.
நான் மீண்டும் விளையாட வருகிறேன். அமெரிக்க ஓபனில் விளையாட உள்ளேன். என்னால் கிராண்ட்சிலாம் பட்டங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறேன் என்றார்.
- ஜெர்மனி வீரர் முதல் மற்றும் 3-வது செட்டை கைப்பற்றினார்
- 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார் சிட்சிபாஸ்
ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேனை எதிர்கொண்டார். முதல் சுற்றை 4-6 என சிட்சிபாஸ் இழந்த போதிலும், 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.
வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் ஜெர்மனி வீரர் ஹான்ப்மேன் அபாரமாக விளையாடினார். அவருக்கு சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் 2-6 என எளிதில் 3-வது செட்டில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
யானிக் ஹான்ப்மேன் 6-4, 3-6, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- முதல் செட்டை 6-3 என பூப்ளிக் கைப்பற்றினார்.
- இரண்டாவது செட்டில் ரூப்லேவ் பதிலடி கொடுத்து 6-3 என கைப்பற்றினார்.
ஜெர்மனியில் ஆண்களுக்கான ஏடிபி ஹாலே டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 3-ம் நிலை வீரரான ரூப்லேவ்-ஐ கஜகஜஸ்தானின் அலெக்சாண்டர் பூப்ளிக் எதிர்கொண்டார்.
இவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ வீழ்த்தி இருந்ததால் இறுதிப் போட்டியில் கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தனது திறமையான சர்வீஸ் மூலம் ரூப்லேவ்-ஐ திணறடித்தார்.
முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். ஆனால் அனுபவம் வாய்ந்த ரூப்லேவ் இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்து 6-3 என கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தினர்.
ஆனால் மூன்றாவது செட்டிலும் பூப்ளிக் ஆதிக்கம் செலுத்த அந்த செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.
இதன் மூலம் ரூப்லேவ்-ஐ 6-3, 3-6, 6-3 என வீழ்த்தி பூப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- முதல் செட்டை 3-6 என ஸ்வெரேவ் இழந்தார்
- 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 5-7 என இழந்து தோல்வி
ஜெர்மனியின் ஹாலே நகரில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 9-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- தரநிலை பெறாத கஜகஜஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்-ஐ எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்வெரேவ் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
முதல் செட்டை கஜகஜஸ்தானின் 26 வயதான பப்லிக் 6-3 என எளிதில் வென்றார். 220 கி.மீட்டர் வேகத்தில் பப்லிக் சர்வீஸ் செய்ய ஸ்வெரேவ் மிரண்டு போனார். இதனால் தொடக்கத்தில் 4-1 என பின்தங்கினார். இது முதல் செட்டை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.
2-வது செட்டில் இருவரும் 5-5 என சமநிலையில் இருக்கும்போது, அடுத்த இரண்டு கேம்களையும் கைப்பற்றி 7-5 என வெற்றி பெற்றார்.
அலெக்சாண்டர் பப்லிக் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீரரான ருப்லேவ்-ஐ எதிர்கொள்கிறார்.
- அவரை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் குடெர்மெடோவா தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
- இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.
ஜெர்மன் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி பெர்லின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) அதிர்ச்சி அடைந்தார்
அவரை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் குடெர்மெடோவா தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. அலெக்சாண்ட்ரோவா (ரஷியா)-குடெர்மெடோவா (ரஷியா), கார்சியா (பிரான்ஸ்)-குவிட்டோவா (செக் குடியரசு), சக்காரி (கிரீஸ்)-வோண்ட்ரூசோவா (செக்குடியரசு), எலினா அவனேசியன் (ரஷியா)-டோனா வெக்கிச் (குரேஷியா) ஆகியோர் மோதுகிறார்கள்.
- 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
- கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
லண்டன்:
எஸ்தோனியா நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் தற்போது தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கிறார். அதிகபட்சமாக 2-வது இடம் வரை முன்னேறியுள்ள அவர் இதுவரை 6 பட்டங்களை வென்றுள்ளார். 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
இந்த நிலையில் 27 வயதான கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முதுகுதண்டுவட பாதிப்பால் அடிக்கடி அவதிப்படும் அவர் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குறுகிய காலத்திலேயே டென்னிசுக்கு முழுக்கு போடுகிறார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.
- 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்கள் ஒற்றையா் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) இந்த 2 பட்டத்தையும் கைப்பற்றினார்.
பெண்கள் ஒன்றையர் பிரிவில் ஷபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், ஸ்வியாடோக் (போலாந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றனர்.
3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது.
இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் போட்டியின் பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த முறை வழங்கப்பட்ட மொத்த பரிசுத் தொகையை விட 11 சதவீதம் அதிகமாகும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுவதற்கு தலா ரூ.24.41 கோடி கிடைக்கும். முதல் சுற்றுடன் வெளியேறுபவர்கள் தலா ரூ.57 லட்சம் பெறவார்கள். 2019-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
- 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச் தனது வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "23-வது சாம்பியன் பட்டத்தை வென்றது ஒரு நம்பமுடியாத உணர்வு. பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.
எனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல. ஏனென்றால், எனது வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது எனக்கு கடினமான ஒன்றாக இருந்தது. நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். எனது வெற்றி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.






