என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட், உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கென ஒரு கேப்டனையும், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கென ஒரு கேப்டனையும் நியமித்துள்ளது. ஓரளவிற்கு இரண்டும் வெவ்வேறு அணிகள் என்றே சொல்லலாம். ஒயிட்-பால் அணிகளுக்கு மோர்கன் கேப்டனாகவும், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜோ ரூட் கேப்டனாகவும் உள்ளனர்.

    ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் போன்றவர்கள் மட்டுமே மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.

    கொரோனா காலத்திற்குப்பின் டெஸ்ட் அணி கேப்டனும், இங்கிலாந்தின் தலைசிறந்த வீரருமான ஜோ ரூட்டிற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் கிடைக்கவில்லை.

    இதனால் அவருடைய டி20 கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘என்னை பொறுத்தவரைக்கும் முக்கியமான விசயம் என்னவெனில், இங்கிலாந்து அணி உலகக்கோப்பைக்கு வலுவான வீரர்களை கொண்ட அணியாக செல்ல வேண்டும் என்பதுதான். நானும் அணியில் இடம் பிடிப்பேன் என நம்புகிறேன்.

    உண்மையிலேயே உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன். எல்லாமே வித்தியாசமான சவால்கள்.

    எனக்கு கடந்த சில வருடங்களாக அதிக அளவில் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், விளையாடும் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் அற்புதமான வீரர்கள். வாய்ப்பு கிடைக்க தகுதியானவர்கள். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதிகமான ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன்’’ என்றார்.
    முன்னணி வீரர்கள் காயத்தால் விளையாடாத நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. முதல் போட்டிக்குப்பின் விராட் கோலி, முகமது ஷமி விளையாடவில்லை.

    2-வது போட்டிக்குப் பிறகு உமேஷ் யாதவ் விளையாடவில்லை. 3-வது போட்டிக்குப்பின் ஜடேஜா, அஷ்வின், பும்ரா, விஹாரி விளையாடவில்லை.

    ரோகித் சர்மா முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை. இஷாந்த் சர்மா தொடர் முழுவதும் விளையாடவில்லை.

    முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்தியாவின் வெற்றி உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘எப்பொழுதுமே, ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களை எதிர்த்து விளையாடுவது மிகவும் சவாலானதாக இருக்கும். இந்திய அங்கு சென்று, பல வீரர்கள் காயம் அடைந்த நிலையிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவையாகும்.’’ என்றார்.
    மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அசோக் திண்டா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    மேற்கு வங்காளத்தின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா. இவர் கடந்த 2005-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2020 வரை பெங்கால் அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி டி20-யில் கோவா அணிக்காக விளையாடினார்.

    இதுவரை 116 முதல்தர போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டும், 98 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், 147 டி20 போட்டிகளில் 151 விக்கெட்டும் வீழ்த்திய அசோக் திண்டா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இவர் இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், ரைசிங் புனு சூப்பர்ஜெயன்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்காக 78 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒடிசா எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பேக்ஸ்டரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியின் போது ஒடிசா அணி வீரர் டிகோ மவுரிசியோவை, கோல் எல்லை பகுதிக்குள் ஜாம்ஷெட்பூர் அணியின் கோல்கீப்பர் ரிஹேனேஷ் விதிமுறைக்கு புறம்பாக தடுத்து நிறுத்தினார். இதற்கு பெனால்டி வாய்ப்பு வழங்காததற்கு ஒடிசா அணியின் பயிற்சியாளர் 67 வயதான ஸ்டூவர்ட் பேக்ஸ்டர் (இங்கிலாந்து) போட்டி முடிந்த பிறகு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பெனால்டி வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்களுக்கு பெனால்டி வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. எங்கள் வீரர்களில் ஒருவர் யாரையாவது ஒருவரை கற்பழித்தாலோ? அல்லது எங்கள் வீரர் கற்பழிப்புக்கு ஆளானாலோ தான் பெனால்டி கிடைக்கும் போலும்’ என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். பயிற்சியாளரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்த ஒடிசா அணி நிர்வாகம் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பேக்ஸ்டரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

    14 ஆட்டங்களில் ஆடி இருக்கும் ஒடிசா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 8 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ‘எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க விரும்புகிறார்கள். ஆனால் தற்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியினருடன் வலைப்பயிற்சி பவுலராக சென்ற இடக்கை வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் அந்த தொடரில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டதுடன், பந்து வீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த 29 வயதான நடராஜன் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடந்த 6 மாதம் ஓய்வு இல்லாமல் விளையாடி இருக்கிறேன். தற்போது எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சில நாட்கள் ஓய்வு கொடுத்தார்கள். ஓய்வு முடிந்து இன்று (நேற்று) முதல் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்டேன். எனது உடல் வலிமையில் ஏற்றம் காண என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது. அடுத்த 3 வாரம் என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனை செய்ய இருக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரில் வலைப்பயிற்சி பவுலராக செயல்படுகையில் எனக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது. ஆனால் அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் நல்ல முறையில் கையாண்டது.

    ஐ.பி.எல். போட்டி முதல் ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி வரையில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினேன். ஆனால் டெஸ்டில் எனது பந்து வீச்சு வேகம் குறைந்து விட்டது. எனது உடல் வலிமை குறைந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தால் தமிழக அணிக்காக விளையாடுவேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் விளையாடவில்லை.

    ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு விராட்கோலி, டிவில்லியர்ஸ், டோனி போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர்களது விக்கெட்டை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அதனை நினைத்து பார்க்கையில் பல நாட்கள் தூக்கம் வந்ததில்லை. ஆஸ்திரேலிய தொடர் முடிந்து வந்த பிறகு இன்னும் கூட ரசிகர்கள் பலர் என்னை பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், வித்தியாசமான அனுபவமாக உள்ளது. தற்போது வெளியில் கூட போக முடியவில்லை. முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். பழனி கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு விட்டு திரும்பும் போது கூட பலரும் என்னை அடையாளம் கண்டு பாராட்டினார்கள். நான் எப்பொழுதும் சாதாரணமான மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் சந்திக்க வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தவே விரும்புகிறேன்.

    2015-ம் ஆண்டில் எனது பந்து வீச்சு சந்தேகத்துக்குள்ளாகி தடை விதிக்கப்பட்ட போது வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்தேன். மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டேன். அப்போது எனக்கு நண்பர்களும், பயிற்சியாளர்களும் உத்வேகம் அளித்தனர். தமிழக அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்பிரமணியம் எனது பந்து வீச்சை சரி செய்ய உதவிகரமாக இருந்தார். அவரது அறிவுரையை பின்பற்றி கடுமையாக உழைத்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. மூன்று வடிவிலான (20 ஓவர், ஒருநாள், டெஸ்ட்) போட்டியிலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியமாகும்.

    இவ்வாறு நடராஜன் கூறினார்.
    ஆறு நாள் கோரன்டைன் அவகாசத்தை முடித்த நிலையில், இந்திய அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டி வருகிறது 5-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்காக ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
    பயிற்சியில் புஜாரா

    நேற்றுடன் கோரன்டைன் காலம் முடிவடைந்த நிலையில், இன்று காலை இந்திய வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.
    பயிற்சியில் வீரர்கள்

    விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா போன்ற முன்னணி வீரர்கள் கேட்ச் பிடிப்பதற்கான பயிற்சி மேற்கொண்டனர்.
    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும் அணி எது என்பது இந்தியா - இங்கிலாந்து தொடரின் முடிவின் அடிப்படையில் அமைய இருக்கிறது.
    சர்வதேச கிரிக்கெட் கமிட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை கடந்த 2019-ம் அறிமுகம்படுத்தியது. 2019 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இறுதி போட்டி ஜுன் மாதம் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

    தற்போது முதல் இடத்தில் நியூசிலாந்து அணியும், இந்தியா 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளன.

    இந்தியா - இங்கிலாந்து (4 டெஸ்ட்), தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா (3 டெஸ்ட்) இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவைப் பொறுத்து முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி எவைகள் என்பது முடிவாகும் நிலை இருந்தது.

    இன்று தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி இதிதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து தொடரின் முடிவைப் பொறுத்து இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று நியூசிலாந்துடன் இறுதிப் போட்டியில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக 2-0, 2-1, 3-0, 3-1, 4-0 என தொடரை வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    இங்கிலாந்து 3-0, 3-1, 4-0 என தொடரை வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    1-0 என இந்தியா வெற்றி பெற்றாலும், 1-0, 2-0, 2-1 என இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், 0-0, 1-1, 2-2 என தொடர் டிரா ஆனாலும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    இதனால் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒவ்வொரு போட்டியும் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கும்.
    ஐசிசி அறிமுகம் செய்துள்ள ‘பிளேயர் ஆஃப் தி மந்த்’ விருதின் ஜனவரி மாதத்திற்கு ரிஷப் பண்ட் உள்பட 3 பேர் பெயரை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.
    ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்தது. அதன்படி ஜனவரி மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார். சிட்னியில் நடைபெற்ற டெஸ்டின்  2-வது இன்னிங்சில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 89 ரன்களும் விளாசினர். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை ருசித்தது. இதனால் ரிஷப் பண்ட் பெயரை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.

    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 228 ரன்களும், 2-வது டெஸ்டில் 186 ரன்களும் விளாசினார். இதனால் இங்கிலாந்து 2-0 என இலங்கையை வீழ்த்தியது. இலங்கை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததால் ஜோ ரூட் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.

    அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டியில் 3 சதம் விளாசினார். இதனால் அவரது பெயரையும் பரிந்துரை செய்துள்ளனர்.

    இந்த மூன்று பேரில் ஒருவரை வோட்டிங் அகாடமி தேர்வு செய்யும். வோட்டிங் அகாடமியில் மூத்த பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், ஒளிப்பரப்பாளர்கள், ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் உறுப்பினர்களில் சிலர் இடம் பிடிப்பார்கள். இவர்கள் மூன்றில் ஒருவரை தேர்வு செய்வார்கள்.
    தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.

    இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகின்றன. அதேவேளையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தத் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில் ஒத்திவைப்பு அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் உறுப்பினர்கள் 360 பேர் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடு கிறது.

    இதற்காக அந்த அணி இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையும் நடக்கிறது.

    சென்னையில் நடைபெறும் முதல் 2 போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதே நேரத்தில் அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி 2 டெஸ்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்தநிலையில் பிப்ரவரி மாதத்திற்கான கொரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து சென்னையில் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று பி.சி.சி.ஐ.யும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் முடிவெடுத்துள்ளன.

    சேப்பாக்கம் மைதானத்தில் 38 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். தற்போது 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், 15 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பேர் வரை 2-வது டெஸ்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை விவரங்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணக ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று கருதப்படுகிறது.

    போதிய கால அவகாசம் இல்லாததால் முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் 180 கிளப் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒரு கிளப்புக்கு 2 டிக்கெட் வீதம் 360 டிக்கெட் வழங்கப்படுகிறது.

    இதன் காரணமாக 360 பார்வையாளர்கள் மட்டுமே முதல் டெஸ்ட் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் மீடியாவுக்கு முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வீரர்களின் தனிமைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கினர். கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் 2 மணி நேரம் பயிற்சி பெற்றனர்.

    இன்று 2-வது நாளாக வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். பிற்பகலில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். இலங்கை தொடரில் இடம் பெறாத பென்ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தனது 100-வது டெஸ்ட் போட்டியை சென்னையில் விளையாடுவது சிறப்பானது என தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட். 30 வயதான இவர் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் வருகிற 5-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் புதிய மைல்கல்லை எட்டுகிறார்.

    ஜோ ரூட் 99 டெஸ்டில் விளையாடி உள்ளார். சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டி அவருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். இந்த மைல்கல்லை எட்டும் 15-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெறுகிறார்.

    அலஸ்டர் குக் (161 டெஸ்ட்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (157), ஸ்டூவர்ட் பிராட் (144), அலெக்ஸ் ஸ்டூவர்ட் (133), இயன் பெல் (118), கிரகாம் கூச் (118), டேவிட் கோவர் (117), மைக் ஆதர்டன் (115), காலின் கவுத்திரி (114), பாய்காட் (108), பீட்டர்சன் (104), இயன் போத்தம் (102), ஸ்டராஸ் (100), துரோப் (100) ஆகியோர் வரிசையில் அவர் இணைகிறார்.

    100-வது டெஸ்டில் விளையாடுவது குறித்து ஜோ ரூட் கூறியதாவது:-

    2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் அறிமுகமானேன். தற்போது 100- வது போட்டியில் இந்திய மண்ணில் விளையாடுவது பெருமையானது. சென்னையில் 100-வது டெஸ்டில் ஆடுவது மிகவும் சிறப்பானது.

    இந்திய அணி வலுவானது. மிக சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    கடந்த 12 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்களில் 7 முதல் 8 தடவை 400 ரன்னுக்கு மேல் குவித்து இருக்கிறோம். இது சிறந்த சாதனையாகும். இந்திய ஆடுகளங்களில் எங்கள் அணி வீரர்களால் நேர்த்தியாக விளையாட முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஜோ ரூட் 99 டெஸ்டில் விளையாடி 8249 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.39 ஆகும். 19 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன் குவித்துள்ளார்.

    அவர் தனது அறிமுக நாக்பூர் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்னும், 2-வது இன்னிங்சில் 20 ரன்னும் எடுத்தார். அவர் இந்திய மண்ணில் 6 டெஸ்டில் விளையாடி 584 ரன் எடுத்துள்ளார். சராசரி 53.09 ஆக இருக்கிறது.

    இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் நடந்த 2 டெஸ்டிலும் வெற்றி பெற்று சாதித்தது. இதில் ஜோரூட் ஆட்டம் முத்திரை பதிக்கும் வகையில் இருந்தது. அவர் முதல் டெஸ்டில் இரட்டை சதமும் (228 ரன்), 2-வது டெஸ்டில் சதமும் (186 ரன்) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரில் விராட் கோலியை எப்படி சமாளிப்பதென தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்குகிறது.

    தற்போது சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி காணொலி மூலம் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    விராட் கோலி இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். குழந்தை பிறந்த மகிழ்ச்சி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது ஆகிய காரணங்களால் கோலி உற்சாகமாக இருப்பார். கோலிக்கு இந்திய ஆடுகளத்தில் எந்த பலவீனமும்  இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    இதையெல்லாம் நினைக்கும் போது கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம், எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் என தெரியவில்லை என்று தெரிவித்தார்.
    ×