என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணியில் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ் 21-வது நிமிடத்திலும், அமர்ஜித் சிங் 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணி தரப்பில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெடரிகோ காலேகோ 41-வது மற்றும் 83-வது நிமிடங்களில் பதில் கோல் திருப்பினார். 15-வது ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளுக்கும் இது 7-வது டிராவாகும்.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.
    தந்தை என்ற அந்தஸ்தை எட்டியது, எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான, மிகச்சிறப்பு வாய்ந்த தருணம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி காணொலி மூலம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய பயணத்தில் முதலாவது டெஸ்டுடன் நான் தாயகம் திரும்பினாலும், அணியுடனான எனது தொடர்பு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. எந்த சூழலிலும் அது விட்டுப்போனதில்லை. எல்லா டெஸ்ட் போட்டிகளையும் பார்த்தேன். எனது மனைவிக்கு குழந்தை பிறப்புக்காக ஆஸ்பத்திரிக்கு டாக்டர் அழைக்கும் முன்பு வரை, பிரிஸ்பேன் டெஸ்டில் ஷர்துல் தாகூர்- வாஷிங்டன் சுந்தரின் பார்ட்னர்ஷிப்பை போனில் பார்த்துக் கொண்டு இருந்தேன். தந்தை என்ற அந்தஸ்தை எட்டியது, எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான, மிகச்சிறப்பு வாய்ந்த தருணம். அதை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை தவறவிட்டதுடன் ஒப்பிட முடியாது. டெஸ்ட் போட்டியை தவறவிட்டதற்காக நான் கவலைப்படவில்லை.

    ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி இருக்கிறோம். அவர்களிடம் இருந்து சிறந்த தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். இந்த டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆடுவார். ஆஸ்திரேலியாவில் முத்திரைபதித்த அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.

    எனக்கும், ரஹானேவுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியினருடன் நம்பிக்கை அடிப்படையில் நட்புறவு இருக்கிறது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நாங்கள் அனைவரும் உழைக்கிறோம். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரஹானே தனது பொறுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அவர் அணிக்கு தலைமைதாங்கி வெற்றித் தேடித்தந்ததை பார்க்க வியப்பாக இருந்தது. நானும், ரஹானேவும் இணைந்து உற்சாகமாக பேட்டிங் செய்திருக்கிறோம். களத்தில் இருவரும் பரஸ்பர மரியாதையுடன் நடந்து கொள்வதை பார்த்து இருப்பீர்கள். களத்திற்கு வெளியேயும் இந்த உறவு நீடிக்கிறது.

    நாட்டில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அது பற்றி நாங்கள் பேசுவது உண்டு. இதே போல் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்தும் அணி வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் சிறிது நேரம் விவாதித்தோம். ஒவ்வொரு வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்தனர். அதன் பிறகு டெஸ்ட்டுக்கான திட்டங்கள் குறித்து பேசினோம்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘இந்திய வீரர் புஜாரா அற்புதமான வீரர். அவருடன் இணைந்து கவுண்டி கிரிக்கெட்டில் சில ஆட்டங்களில் விளையாடி நிறைய கற்று இருக்கிறேன். இந்திய அணியில் அங்கம் வகிக்கும் போது அவர் எவ்வளவு மதிப்புமிக்கவராக இருக்கிறார் என்பது தெரியும். அவரது விக்கெட் தான் எங்களுக்கு மிகப்பெரியது. நிச்சயம் கடும் சவாலாக இருக்கப்போகிறார்’ என்றார்.
    கன்னிபெராவில் நடந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட்டை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி.
    கன்னிபெரா:

    பிக் பாஷ் லீக் போட்டியின் சேலஞ்சர் சுற்று கன்னிபெராவில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பான்கிராப், லிவிங்ஸ்டோன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி அணிக்கு அரை சதமடித்து அசத்தினர்.

    லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரியாக விளாசினார். அவர் 39 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் மேலும்விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

    இறுதியில், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 18.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்த நிலையில்  மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பான்கிராப் 58, மிட்செல் மார்ஷ் 49 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 18 ஓவரில் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் களமிறங்கியது.

    பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் பிரிஸ்பேன் ஹீட் அணியினர் சிக்கித் திணறினர்.  

    அந்த அணியில் ஜோ பர்ன்ஸ் 38 ரன்னும், கிறிஸ் லின் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் 18 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 49 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

    பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி சார்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டும், பெஹ்ரண்டாப், ஆண்ட்ரூ டை, பவாத் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் பிப்ரவரி 6-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி.

    ராவல்பிண்டியில் இன்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் இம்ரான் பட், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இம்ரான் பட் 15 ரன்னிலும், அபித் அலி 6 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த அசார் அலி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    இதனால் பாகிஸ்தான் 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் அசாம் உடன் ஃபவாத் அலாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அலாம் அரைசதத்தை நெருங்கினார். மதிய தேனீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பாபர் அசாம் 77 ரன்களுடனும், ஃபவாத் அலாம் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    விளையாடும் நேரத்தில் நாட்டில் நடைபெறும் எந்தவொரு பிரச்சனை குறித்து நாங்கள் விவாதித்து, கருத்துக்களை கூறுவோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    நாளை போட்டி குறித்து, விவசாயிகள் போராட்டம் குறித்தும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார். ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருடன் நாங்கள் போட்டியை தொடங்க விரும்புகிறோம். ஐபிஎல் போட்டிக்குப்பின் கடுமையான பயிற்சி மூலம் சிறப்பாக வந்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தை பார்க்கும்போது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது நாட்டில் நடைபெறும் எந்தவொரு பிரச்சனை குறித்தும் பேசுவோம். இந்த பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்த அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுதியுள்ளனர். அணிகளுடனான ஆலோசனையில் இதுகுறித்து பேசினோம். அதன்பின் அணியின் திட்டம் குறித்து ஆலோசித்தோம்’’ என்றார்.

    வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ‘‘அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சனையை தீர்த்து, முன்னோக்கி செல்வார்கள் என நம்புகிறேன். விவசாயிகள் நாட்டின் ஒரு அங்கத்தினர்’’ என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் நாளை தொடங்க இருக்கும் நிலையில், புஜாராதான் எங்களுக்கு மிகப்பெரிய விக்கெட் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்தத் தொடரில் வெற்றி பெற்றால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக களம் இறங்க இருக்கிறது. இதனால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்தான் பேட்டிங்கில் முதுகெலும்பு. இந்திய அணியில் ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரஹானே உள்ளனர். ஆனால் புஜாராதான் எங்களுக்கு மிகப்பெரிய விக்கெட் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற பிறகு, நாங்கள் மிகப்பெரிய நம்பிக்கை பெற்றுள்ளோம். புஜாரா தலைசிறந்த வீரர். யார்க்‌ஷைர் அணிக்காக அவருடன் ஒன்றிரண்டு போட்டிகளில் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியானத. அவரிடம் இருந்து பேட்டிங் குறித்து கேட்டறிந்தது உண்மையிலேயே சுவாரஸ்யமானது.

    இந்திய அணிக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை பார்த்து இருக்கலாம். இதனால் அவர் எங்களுக்கு மிகப்பெரிய விக்கெட்டாக இருப்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சதம் விளாச, வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்துள்ளது.
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்திருந்தது ஷாகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், லித்தோன் தாஸ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லித்தோஸ் தாஸ் 38 ரன்னில் வெளியேறினார். ஷாகிப் 68 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 168 பந்தில் சதம் 103 ரன்கள் விளாசி வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜோமெல் வாரிகன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளின் சிகரமாக திகழும் சென்னை மைதானத்தில் அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளது.
    சென்னை:

    இந்தியாவுக்கு வந்துள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் (பிப்.5-9, பிப்.13-17) நடக்கிறது. சென்னையில் ஒரே மாதத்தில் இரு டெஸ்டுகள் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். கொரோனா தடுப்பு நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சென்னைக்கு ஒரே சமயத்தில் 2 டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலாவது டெஸ்ட் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்த இடம் உண்டு. அது பற்றிய ஒரு சுவாரஸ்யமான அலசல்:-

    *1934-ம் ஆண்டு முதல் சென்னையில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 32 டெஸ்ட் நடந்துள்ளது. இதில் இந்திய அணி 14-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், ஒன்றில் டையும், 11-ல் டிராவும் கண்டுள்ளது.

    *இங்கிலாந்து அணி இங்கு 9 டெஸ்டில் ஆடி 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.

    *சென்னையில் முதல்முறையாக இந்திய அணியை எதிர்த்து மல்லுகட்டிய (1934-ம் ஆண்டு) அணி என்ற பெருமை இங்கிலாந்துக்கு உண்டு. கடைசியாக இங்கு விளையாடிய அணியும் (2016-ம் ஆண்டு) இங்கிலாந்து தான்.

    *டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்த இடம் சென்னை தான். 1952-ம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

    *2016-ம் ஆண்டு இறுதியில் இங்கு கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டெஸ்டில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    *இந்திய மண்ணில் இதுவரை இரண்டு முறை முச்சத சாதனை பதிவாகியுள்ளது. இவ்விரு சாதனைகளும் நிகழ்ந்த இடம் சென்னை சேப்பாக்கம் தான். 2008-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஷேவாக் 319 ரன்களும், 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கருண்நாயர் 303 ரன்களும் குவித்து ருத்ரதாண்டவமாடினர்.

    *இந்திய மண்ணில் அதிகபட்ச ‘சேசிங்’ சாதனையையும் இதே சேப்பாக்கம் தன்னகத்தே கொண்டுள்ளது. 2008-ம் ஆண்டு இங்கு கடந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 387 ரன்கள் இலக்கை இந்திய அணி சச்சின் தெண்டுல்கரின் சதம், ஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் உதவியுடன் விரட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

    *மொத்தம் 55 சதங்கள் அடிக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக சச்சின் தெண்டுல்கர் 5 சதம் அடித்ததும் அடங்கும்.

    *2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர் டோனி 224 ரன்கள் விளாசிய போது, இரட்டை சதம் நொறுக்கிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற மகிமையை பெற்றார்.

    *ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் 29 டெஸ்ட் சத சாதனையை இதே மைதானத்தில் வைத்துதான் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் 1983-ம் ஆண்டு முறியடித்தார்.

    *சென்னையில் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய அணி தோற்றதில்லை. கடைசியாக 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 12 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இதில் இந்திய நட்சத்திர வீரர் தெண்டுல்கர் கடுமையான முதுகுவலியையும் பொருட்படுத்தாமல் சதம் அடித்ததும், கடைசியில் வெற்றி பாகிஸ்தான் வசம் சென்றாலும் தமிழக ரசிகர்கள் உண்மையான விளையாட்டு உணர்வுடன் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தியதும் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாகும்.

    *டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் (டை) முடிவது அபூர்வமாக நடக்கக்கூடிய ஒன்றாகும். அப்படியொரு அதிசயம் 1986-ம் ஆண்டு சென்னையில் நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்டில் 348 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் விளையாடிய கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியை நெருங்கிய நிலையில் கோட்டை விட்டது. கடைசி 16 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 347 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால் போட்டி சமனில் முடிந்தது. டெஸ்ட் வரலாற்றில் டையில் முடிந்த இரண்டு போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.

    *1988-ம் ஆண்டு சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளராக இறங்கிய நரேந்திர ஹிர்வானி இரு இன்னிங்சையும் சேர்த்து 136 ரன்கள் விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த நாள் வரைக்கும் டெஸ்டில் ஒரு அறிமுக பவுலரின் சிறந்த பந்து வீச்சாக இது நீடிக்கிறது.

    *எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் சென்னையில் 10 டெஸ்டில் விளையாடி 5 சதம் உள்பட 970 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு மைதானத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இது தான் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா அணி பெற்றுள்ள வெற்றி விவரத்தை காணலாம்.

    சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 தடவை வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1952: இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    1973: 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    1993: இன்னிங்ஸ் மற்றும் 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

    2008: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    2016: இன்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

    சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றி விவரம்:

     1934: 203 ரன்னில் இந்தியாவை தோற்கடித்தது, 1977: 200 ரன்னில் வெற்றி,

    1985: 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி,

    1982-ம் ஆண்டு இரு அணிகளும் இங்கு மோதிய டெஸ்ட் டிரா ஆனது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    சென்னை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடுகிறது.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது.

    இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதுவும் முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவிய பிறகு தொடரை கைப்பற்றியது மிகவும் பாராட்டுக்குரியது.

    இதனால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும். அதே நேரத்தில் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்டிலும் வீழ்த்தி இருந்தது. இதனால் மிகவும் கவனமுடன் ஆடவேண்டும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    11 வீரர்களை தேர்வு செய்வது கேப்டனுக்கு சவாலான பணியாகும். ஆஸ்திரேலிய பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு விராட்கோலி நாடு திரும்பினார். எஞ்சிய 3 டெஸ்டில் ஆடவில்லை. அவர் தற்போது அணியில் இணைந்து இருக்கிறார். இதேபோல காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விலகிய இஷாந்த் சர்மாவும் அணியோடு இருக்கிறார்.

    6 பேட்ஸ்மேன்கள், 5 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கலாம். பந்து வீச்சாளர்களில் பும்ரா, அஸ்வின், இஷாந்த் சர்மா இடம் பெறுவது உறுதி. மற்ற 2 இடத்திற்கு முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

    ஆடுகள தன்மையை பொறுத்து 3 வேகப்பந்து வீரர்களா? 3 சுழற்பந்து வீரர்களா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதற்கு ஏற்ற உடல் தகுதியுடன் இல்லை. இதனால் ஆல்ரவுண்டரான அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    ஆஸ்திரேலியாவில் ஆடியது போல ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். புஜாரா, விராட் கோலி, ரகானே, ரி‌ஷப் பண்ட் ஆகியோர் அதற்கு அடுத்த வரிசையில் ஆடுவார்கள்.இந்தியா வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டது. சொந்த மண்ணில் விளையாடுவதால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள்.

    ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுத்து விளையாடும்.

    கேப்டன் ஜோரூட் பேட்டிங்கில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். அவர் இலங்கை தொடரில் இரட்டை சதமும், சதமும் அடித்தார். அவர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம்.

    இது தவிர பென் ஸ்டோக்ஸ், பட்லர், டாம் சிப்லி, மொய்ன்அலி, பர்ன்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    பந்துவீச்சில் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார். அவர் 606 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீரர் ஆவார்.

    இது தவிர ஸ்டூவர்ட் பிராட் (517 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள்.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்துள்ளது.
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சிட்டோகிராமில் உள்ள ஜகுர் அகமது சவுத்ரி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஷத்மான் இஸ்லாம், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தமிம் இக்பால் 9 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஷத்மன் இஸ்லாம் அரைசதம் அடித்தார். இருந்தாலும் அவர் 59 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த மொமினுல் ஹக் (26), முஷ்பிகுர் ரஹிம் (38), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (25) சீரான இடைவெளியில் வெளியேறினர்.

    வாரிகன்

    6-வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் லித்தோன் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இதனால் வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. ஷாகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், லித்தோன் தாஸ் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜோமெல் வாரிகன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    முதலில் விராட் கோலிதான் இந்திய அணி கேப்டன், நான் துணைக்கேப்டன், அவர் அணியில் எங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 5-ந்தேதி) நடக்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் நடைபெறும் முதல் டெஸ்டில் இதுவாகும்.

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. அதன்பின் விராட் கோலி, அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருந்ததால் சொந்த நாடு திரும்பினார்.

    விராட் கோலி இல்லை, வீரர்கள் காயம், நெருக்கடி ஆகியற்றிற்கிடையில் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பொறுப்பு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று, ஒன்றை டிரா செய்து தொடரை 2-1 எனக் கைப்பற்றினார்.

    இதனால் ரஹானேவை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் விராட் கோலி அணிக்கு திரும்பி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

    இதுகுறித்து ரஹானே கூறுகையில் ‘‘முதலில் விராட் கோலிதான் கேப்டன். நான் துணைக் கேப்டன். நேர்மறையாக பார்வையோடு அவர் அணியில் எங்களுடன் இணைந்ததால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு அணியாக நாங்கள் இணைந்து விளையாடுவதில் கவனம் செலுத்துவோம்.

    தற்போதைய நிலையில் நான் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறேன். என்னைப் பொறுத்த வரைக்கும், அணிக்கு எது தேவையோ, அதை நான் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை விட அணிக்கு ஏற்றவகையில் விளையாட வேண்டும்’’ என்றார்.
    ×