என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் இரட்டை சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 377 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 218 ரன்கள் குவித்தார்.

    ஜோரூட் இதன்மூலம் பல சாதனைகள் புரிந்தார். அதன் விவரம் வருமாறு:-

    * 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோரூட் ஆவார். இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த இன்சமாம் 2005-ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் 184 ரன் குவித்ததே 100-வது டெஸ்டில் அதிக ரன்னாக இருந்தது.

    * 218 ரன் குவித்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றார். 8,467 ரன்களை குவித்து அவர் ஸ்டூவர்டை முந்தினார். இலங்கை தொடரில் அவர் பாய்காட், பீட்டர்சன், டேவிட் கோவர் ஆகியோரை முந்தி இருந்தார்.

    * ஜோரூட்டின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த குக்குடன் இணைந்தார். ஹேமண்ட் 7 இரட்டை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.

    * கேப்டன் பதவியில் ஜோரூட்டின் 3-வது இரட்டை சதம் ஆகும். வேறு எந்த இங்கிலாந்து கேப்டனும் ஒன்றுக்கு மேல் இரட்டை சதம் அடித்ததில்லை.

    * கடந்த 3 டெஸ்டையும் சேர்த்து ஜோரூட் 644 ரன்களை குவித்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 229 ரன்னும் (228+1), 2-வது டெஸ்டில் 197 ரன்னும் (186+11) எடுத்தார். இதன் மூலம் 3 டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். கிரகாம் கூச் (779 ரன்), ஹேமண்ட் (763) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    * சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீன் ஜோன்ஸ் 210 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த டெஸ்ட் டையில் முடிந்தது. ஒட்டு மொத்தத்தில் சேப்பாக்கத்தில் 5 வெளிநாட்டு வீரர்கள் இரட்டை சதம் பதிவு செய்துள்ளனர்.

    * 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டு வீரர் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் 302 ரன்கள் (ஐதராபாத்) குவித்திருந்தார்.

    3 டெஸ்டிலும் 150 ரன்னுக்கு மேல் எடுத்த 7-வது பேட்ஸ்மேன் ஜோரூட் ஆவார். 

    சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்துள்ளது.
    சென்னை:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்திருந்தது.
     
    கேப்டன் ஜோரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 100-வது டெஸ்டில் ஆடிய அவர் தனது 20-வது சதத்தை பதிவு செய்தார். 2ம் நாளான நேற்று தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் கடந்து அசத்தினார்.  பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். ஓலி போப் 34 ரன், ஜோஸ் பட்லர் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் இருந்த டாம் பெஸ் 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து அணி 578 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்திய அணி தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இஷாந்த் சர்மா, ஷாபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
    ஹசன் அலி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் எடுத்து அசத்த தென் ஆப்பிரிக்கா ராவல்பிண்டி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 201 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியுள்ளது.
    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 77 ரன்னில் அவுட்டானார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஃபவாத் அலாம் 45 ரன்னில் ரன்அவுட் ஆனார்.
     
    கடைசி கட்டத்தில் பஹீம் அஷ்ரப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பஹீம் அஷ்ரப் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட்டும், கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென்ஆப்பிரிக்காவில் பவுமா 44 ரன்னும், முல்டர் 33 ரன்னும், மாக்ரம் 32 ரன்னும், டி காக் 29 ரன்னும் எடுத்தனர்.
    இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில்  ஹசன் அலி 5 விக்கெட்டுகள் வீசி அசத்தினார்.

    71 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அசார் அலி 33 ரன்னும், பஹிம் அஷ்ரப் 29 ரன்னும் எடுத்தனர்.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. மொகமது ரிஸ்வான் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
     
    தென்ஆப்பிரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கைவசம் 7 விக்கெட் வைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 285 ரன்கள் தேவைப்படுகிறது.
    சட்டோகிராம்:

    வங்காளதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சதம் (103) விளாசினார். ஷத்மான் இஸ்லாம் 59 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 68 ரன்களும் எடுத்தனர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வைட் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். ஜெர்மைன் பிளாக்வுட் 68 ரன்களும், கைல் மேயர்ஸ் 40 ரன்களும், ஜோஷுவா டி சில்வா 42 ரன்களும் எடுத்தனர்.
     
    வங்காளதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டும் தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    171 ரன்கள் முன்னிலைப் பெற்ற வங்காளதேசம் 2-வது இன்னிங்ஸ் ஆடியது. 3-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கேப்டன் மொமினுல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ் அரை சதமடித்து 69 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கார்ன்வால், வாரிகன் தலா3 விக்கெட்டும், கேப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

    நான்காம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு110 ரன்கள் எடுத்துள்ளது. பானர் 15 ரன்னுடனும்,  கைல் மேயர்ஸ் 37 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கடைசி நாளான இன்று கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு தேவையான 285 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    சிட்னியில் நடந்த பிக் பாஷ் லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிக் பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 95 ரன் எடுத்து அவுட்டானார். கிறிஸ்டியன் 20 ரன், ஹென்ரிக் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பான்கிராப் 30 ரன்னும், லிவிங்ஸ்டோன் 45 ரன்னும் எடுத்து வெளியேறினர். ஆரோன் ஹார்டி 26 ரன்னும், இங்லிஸ் 22 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஜேம்ஸ் வின்ஸ் ஆட்ட நாயகனாகவும், ஜோஷ் பிலிப் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    பிக் பாஷ் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை சிட்னி சிக்சர்ஸ் அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் உள்ளூர் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தை இஷாந்த சர்மா பிடித்துள்ளார்.
    சென்னை:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்திருந்தது.

    இதனையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கேட் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இஷாந்த் சர்மா உள்ளூர் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விவரம்:-

    கபில் தேவ் - 219

    ஜவகல் ஸ்ரீநாத் - 108

    ஜாஹீர் கான் - 104

    இஷாந்த் சர்மா - 100

    உமேஷ் யாதவ் - 96
    இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 555 குவித்துள்ளது.
    சென்னை:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்திருந்தது.

    கேப்டன் ஜோரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 100-வது டெஸ்டில் ஆடிய அவர் தனது 20-வது செஞ்சுரியை பதிவு செய்தார். அவர் 128 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார். தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி 87 ரன்கள் எடுத்தார்.

    ரோரி பர்ன்ஸ் 33 ரன்னிலும், டேன் லாரன்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.

    ஜோரூட்டுடன், பென் ஸ்டோக் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். அவர் நிதானமாக ஆடினார். மறுமுனையில் இருந்த ஜோரூட் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.

    இங்கிலாந்து அணி 103.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்னை குவித்தார். 260 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் 150 ரன்னை எடுத்தார்.

    மறுமுனையில் இருந்து பென்ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை எடுத்தார். 68-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 23-வது அரை சதமாகும்.

    இருவரது சிறப்பான ஆட்டத்தால் 117.4-வது ஓவரில் அந்த அணி 350 ரன்னை எடுத்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.

    மதிய உணவு இடை வேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 355 ரன் குவித்து இருந்தது. ஜோரூட் 156 ரன்னுடனும், பென்ஸ்டோக்ஸ் 63 ரன்னுடனும், ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

    இதனையடுத்து மீண்டும் களமிறங்கியது இந்த ஜோடியை ஷாபாஸ் நதீம் பிரித்தார். இவர் பந்து வீச்சில் சிக்சர் அடிக்க முயன்ற பென் ஸ்டோக்ஸ் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜோரூட்டுடன் போப் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையடினர். 

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோரூட் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் இருந்த போப் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேற அடுத்த சிறுது நேரத்தில் ஜோரூட் 218 ரன்கள் எடுத்த போது ஷாபாஸ் நதீம் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு 6 விக்கெடை இழந்திருந்தது.

    இந்நிலையில் பட்லர் 26, ஆர்ச்சர் 0 என அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, ஷாபாஸ் நதீம், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
    சேப்பாக்கத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பல்வேறு உலக சாதனைகள் படைத்துள்ளார்.
    சென்னை:

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 

    100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்திருந்தது.

    இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் கடந்தார். இதன்மூலம் பல்வேறு உலக சாதனைகளை முறியடித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிக்சர் விளாசி இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    அத்துடன் 100வது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இன்சமான் உல் ஹக்கின் உலக சாதனையையும் ஜோ ரூட் முறியடித்தார். 
    இன்சமாம் உல் ஹக் 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 

    இதேபோல் 100 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். சச்சின் 100 போட்டிகளில் 8,405 ரன்கள் எடுத்திருந்தார். ஜோ ரூட் 8,458 ரன்கள் எடுத்துள்ளார்.

    இப்போட்டியில் ஜோ ரூட் 218 ரன்கள் குவித்த நிலையில், நதீம் பந்தில் எல்பிடபுள்யூ ஆனார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர், 6 விக்கெட் இழப்பிற்கு 477 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது. 
    முதல் டெஸ்டில் குல்தீவ் யாதவை சேர்க்காதது தவறான முடிவாகும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் குல்தீப் யாதவ். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அனுபவம் குறைந்த சபாஷ் நதீம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் முதல் டெஸ்டில் குல்தீவ் யாதவை சேர்க்காதது தவறான முடிவாகும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    குல்தீப் யாதவை அணியில் சேர்க்காமல் எடுத்த முடிவு தவறானது. இது ஒரு அபத்தமான முடிவாகும். இப்போது அவர் விளையாடாவிட்டால் எப்போதுதான் ஆடப்போகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பந்தில் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் ரிவர்ஸ் சுவிங் செய்வது பாதிக்கப்பட்டது என்று இந்திய அணி வேகப்பந்து வீரர் பும்ரா கூறுகிறார்.

    சென்னை:

    சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

    இங்கிலாந்து அணி 3 விக்கெட்டை மட்டுமே இழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறினார்கள். 89.3 ஓவர் வரை வீசி 3 விக்கெட்தான் எடுக்க முடிந்தது.

    சேப்பாக்கம் ஆடுகளம் தொடக்கத்தில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றுவது மிகவும் கடினமானது.

    கொரோனா பாதிப்பு காலம் என்பதால் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பந்தை பளபளக்க செய்வதற்காக வீரர்கள் எச்சிலை பயன்படுத்துவார்கள்.

    பந்து நன்றாக பளபளப்பாக மாறினால் மட்டுமே வேகப்பந்து வீரர்களால் பந்தை சுவிங் செய்ய முடியும். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பந்தில் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பந்தில் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் ரிவர்ஸ் சுவிங் செய்வது பாதிக்கப்பட்டது என்று இந்திய அணி வேகப்பந்து வீரர் பும்ரா கூறுகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆடுகளம் சமநிலையாக இருந்தது. புதிய விதிமுறையால் பந்தை பளபளக்க செய்ய முடியவில்லை. இதனால் பந்தை ரிவர்ஸ் சுவிங் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டோம். கொரோனா காலம் என்பதால் இந்த விதிமுறை சரியானது.

    ஜோரூட் சிறப்பாக ஆடினார். சுழற்பந்தை அபாரமாக எதிர்கொண்டார். இலங்கையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கும் அதே திறமையுடன் ஆடினார்.

    பாராட்டு எல்லாம் ஜோரூட்டை சாரும். அவர் சிறந்த இன்னிங்சை ஆடினார்.

    இவ்வாறு பும்ரா கூறியுள்ளார்.

    பும்ரா நேற்றுதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாடினார். அவரது 17 டெஸ்டும், வெளிநாட்டு மைதானத்தில் தான் நடந்தது. 18-வது டெஸ்டில்தான் சொந்த மண்ணில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

    அவர் நேற்று 18.3 ஓவர்கள் வீசி 40 ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.


    கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-பெங்களூரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

    பெங்களூரு அணி தான் ஆடியுள்ள 16-வது ஆட்டத்தில் 4 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணி 3 வெற்றி, 8 டிரா, 5 தோல்வியுடன் 8-வது இடத்திலும் உள்ளது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.
    சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.
    சென்னை:

    கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

    14-வது ஐ.பி.எல். சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

    ஐபிஎல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள்  பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன்  முடிவுற்றது. பதிவு செய்துள்ள 283 வெளிநாட்டு வீரர்கள் விவரம்  பின்வருமாறு:

    மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள், ஆஸ்திரேலியா - 42 வீரர்கள், தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், இங்கிலாந்து - 21 வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள், நேபாளம் - 8 வீரர்கள், ஸ்காட்லாந்து- 7 வீரர்கள், வங்காளதேசம் - 5 வீரர்கள், அயர்லாந்து - 2 வீரர்கள், அமெரிக்கா -  2 வீரர்கள், ஜிம்பாப்வே- 2 வீரர்கள், நெதர்லாந்து - 1 வீரர்.
    ×