என் மலர்
விளையாட்டு


சென்னை:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
இதற்கிடையே சென்னையில் வருகிற 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி 2-வது டெஸ்ட் போட்டிக்கான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 15 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக டிக்கெட் விற்பனை வருகிற 9-ந்தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியதாவது:-
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வருகிற 9-ந்தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2-வது டெஸ்டுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதால் ஐ.ஜே. மற்றும் கே ஆகிய 3 ஸ்டாண்டுகளின் இருக்கைகள் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
9 ஆண்டுக்கு பிறகு அந்த 3 ஸ்டாண்டுகளிலும் ரசிகர்கள் அமர வைக்கப்படுகிறார்கள். கடைசியாக 2012-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது அந்த 3 ஸ்டாண்டிலும் ரசிகர்கள் இருந்தனர். பின்னர் விதிமுறை மீறல் காரணமாக அந்த 3 ஸ்டாண்டுகள் ‘சீல்’ வைக்கப்பட்டது. தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் 3 கேலரிகளும் திறக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 377 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 218 ரன்கள் குவித்தார்.
ஜோரூட் இதன்மூலம் பல சாதனைகள் புரிந்தார். அதன் விவரம் வருமாறு:-
* 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோரூட் ஆவார். இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த இன்சமாம் 2005-ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் 184 ரன் குவித்ததே 100-வது டெஸ்டில் அதிக ரன்னாக இருந்தது.
* 218 ரன் குவித்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றார். 8,467 ரன்களை குவித்து அவர் ஸ்டூவர்டை முந்தினார். இலங்கை தொடரில் அவர் பாய்காட், பீட்டர்சன், டேவிட் கோவர் ஆகியோரை முந்தி இருந்தார்.
* ஜோரூட்டின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த குக்குடன் இணைந்தார். ஹேமண்ட் 7 இரட்டை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.
* கேப்டன் பதவியில் ஜோரூட்டின் 3-வது இரட்டை சதம் ஆகும். வேறு எந்த இங்கிலாந்து கேப்டனும் ஒன்றுக்கு மேல் இரட்டை சதம் அடித்ததில்லை.
* கடந்த 3 டெஸ்டையும் சேர்த்து ஜோரூட் 644 ரன்களை குவித்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 229 ரன்னும் (228+1), 2-வது டெஸ்டில் 197 ரன்னும் (186+11) எடுத்தார். இதன் மூலம் 3 டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். கிரகாம் கூச் (779 ரன்), ஹேமண்ட் (763) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
* சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீன் ஜோன்ஸ் 210 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த டெஸ்ட் டையில் முடிந்தது. ஒட்டு மொத்தத்தில் சேப்பாக்கத்தில் 5 வெளிநாட்டு வீரர்கள் இரட்டை சதம் பதிவு செய்துள்ளனர்.
* 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டு வீரர் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் 302 ரன்கள் (ஐதராபாத்) குவித்திருந்தார்.
3 டெஸ்டிலும் 150 ரன்னுக்கு மேல் எடுத்த 7-வது பேட்ஸ்மேன் ஜோரூட் ஆவார்.






