என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியா தொடரில் நெட் பவுலர்கள் அபாரமாக பந்து வீசியது, மாற்றத்திற்கான வேலை சீராக நடைபெறும் என்பதை காட்டுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ் இல்லாமலேயே இளம் வீரர்கள் அசத்தினார்கள்.

    டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் நெட் பவுலர்களான அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் டெஸ்ட் போட்டியில் அசத்தினார்கள்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘இளம் வீரர்கள் எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். நாங்கள் ஓய்வு பெறும்போது இது நடக்கும். அதிகமாக விளையாடும்போது, சிறந்த திறனை பெறுவார்கள். நாங்கள் போட்டியை முடிக்கும்போது மாற்றம் சீராக நடைபெறும்.

    ஒரு மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்றாலும், இந்திய அணி தடுமாற்றம் அடையாது. வெளியில் இருக்கும் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அனுபவம் எப்போதும் தேவைப்படுகிறது. இளைஞர்கள் அதை சரியான நேரத்தில் பெறுவார்கள்.

    பாதுகாப்பு வளையம் காரணமாக அதிகமான பந்து நெட் பவுலர்களை கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அது அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களை வெளிப்படுத்தவும் உதவியது. ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை. சீனியர் பவுலர்கள் இல்லாமல் இதை நம்மால் செய்ய முடிந்தது என்றால், இளைஞர்களை பயன்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது’’ என்றார்.
    நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ். இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த சீசனில் விளையாடும்போது கணுக்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஒன்றிரண்டு போட்டியுடன் தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டார். அவர் சிறப்பாக பந்து வீசியதுடன், பேட்டிங்கும் செய்தார்.

    இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 8 அணி வீரர்களும் தங்களுடைய அணியுடன் இணைந்து வருகிறார்கள். ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அவருக்குப் பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பேட்ஸ்மேனை ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
    ஷ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒன்று. இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்றாலும், இளம் வீரர்கள் அதிக அளவில் இடம்பிடித்துள்ள அணி. ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராகவும், ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாகவும் நியமித்த பின், அந்த அணி முன்னேற்றம் கண்டது.

    அரையிறுதியை தாண்டியதில்லை என்ற பெயர் இருந்த நிலையில், கடந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்று சாம்பியன் வாய்ப்பை இழந்தது.

    இந்த வருடமும் அதே உத்வேகத்துடன் விளையாட இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஷ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு இளம் வீரராக ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில் ‘‘என் மீது நம்பிக்கை வைத்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு நன்றி. ஒவ்வொரு நாளும் என்னுடைய 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். இந்த முறை நாம் தடையை தாண்டுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. டெல்லி ரசிகர்கள், தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    கடந்த சில வருடங்களாக டெல்லி அணியில் விளையாடி வரும் எனக்கு, கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ரிக்கி பாண்டிங், கோச்சிங் ஸ்டாஃப், நிர்வாகம், அணியின் சக வீரர்கள் மற்றும் என்மீது நம்பிக்கை வைத்துள்ள ரசிகர்களுக்க நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசினார். கடைசி போட்டியில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    மொத்தமாக 3 போட்டியிலும் 6 விக்கெட் வீழ்த்தினார். 29 ஓவரில் 174 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சராசரி 22.50 ஆகும். காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களத்திற்கு திரும்பிய புவனேஷ்வர் குமார் முதல் தொடரிலேயே அசத்தினார்.

    இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். 

    2-வது போட்டியில் 99 ரன்கள் விளாசி பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளார். பேர்ஸ்டோவ் 7-வது இடத்தை தக்கவைத்துள்ளார். இவர் 2-வது போட்டியில் 124 ரன்கள் விளாசினார்.
    சர்ச்சைக்குரிய வகையிலான சாஃப்ட் சிக்னல் முறை ஐபிஎல் தொடரில் நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
    ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. மாலை 8 மணிக்கு போட்டி தொடங்கி சுமார் 11 அல்லது 11.30 மணியளவில் முடிவடையும்.

    இந்த சீசனில் ஒரு அணி 90 நிமிடங்களிலும் பந்து வீசி முடிக்க வேண்டும். அப்படி முடிக்காவிடில் அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்படும். முதல்முறை தவறு செய்யும் அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    அதே தவறை 2-வது முறையாக செய்தால் 24 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும். அந்த அணியில் உள்ள அனைவரும் 6 லட்சம் ரூபாய் அல்லது போட்டிக்கான கட்டணத்தில் 25 சதவீதம். இரண்டில் எது குறைவோ அது வசூலிக்கப்படும்.

    3-வது முறையாக தவறு நடந்தால் கேப்டனுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அணியில் உள்ள வீரர்களுக்கு 12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

    அதேபோல் களத்தில் உள்ள நடுவர்கள் அவுட் கொடுக்கும்போது சாஃப்ட் சிக்னல் என தெரிவித்தால், அது செல்லாது. 3-வது நடுவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முடிவுகளை மாற்றிக் கொள்ளலாம்.

    அதேபோல் பேட்டிங் அணி நேரத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும். அதை 4-வது நடுவர் கண்காணிக்க வேண்டும் என பிசிசிஐ விதிமுறைகளை மாற்றியுள்ளது.
    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடக்கிறது.

    சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் இந்த போட்டி நடக்கிறது.

    இந்த போட்டியில் விளையாடும் 8 அணிகளும் உள்ளூர் மைதானத்தில் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டம் மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    ஐ.பி.எல். போட்டிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னையில் நேற்று பயிற்சியை தொடங்கியது. ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள மைதானத்தில் அடுத்த 9 நாட்களுக்கு அவர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    யசுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல், தேஷ் பாண்டே, முகமது அசாருதீன், சச்சின் பேபி உள்பட 11 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அணியின் இயக்குனர் மைக்கெசன், தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச், பேட்டிங் ஆலோசகர் சஞ்சய் பாங்கர் ஆகியோரது மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்

    இந்திய அணிக்கு 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணிக்கு கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

    அவர் பயிற்சிக்காக நாளை சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிமை காலம் முடிந்தபிறகு வீராட் கோலி அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்.

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. தற்போது வீரர்கள் மும்பையில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    சி.எஸ்.கே. தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை ஏப்ரல் 10-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பையில் நடக்கிறது.

    இந்த ஐ.பி.எல். போட்டியில் பல்வேறு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. சாப்ட் சிக்னல் அவுட் நீக்கப்பட்டுள்ளது. இது தவிர விதிகளில் பல்வேறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு ரி‌ஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பரான இளம் வீரர் ரி‌ஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரி‌ஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கி உள்ளது.

    இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு ரி‌ஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார்.

    ரி‌ஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரி‌ஷப்பண்ட் சிறந்தவர். கேப்டன் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.

    ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்த சீசனுக்கு டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.

    இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றி உள்ளது.
    ஆண்டிகுவா:

    இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெயிட், கேம்ப்பெல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கேம்ப்பெல் 5 ரன்னிலும், போனர் டக் அவுட்டாகினர்.

    பிளாக்வுட் 18 ரன்னிலும், ஹோல்டர் 30 ரன்னிலும், ஜோஷ்வா சில்வா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். கைல் மேயர்ஸ் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். 

    விக்கெட் வீழ்த்திய லக்மலை பாராட்டும் சக வீரர்கள்

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பிராத்வெயிட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 126 ரன்னில் ஆட்டமிழந்தார். 8வது விக்கெட்டுக்கு பிராத்வெயிட், கார்ன்வெல் ஜோடி 103 ரன்கள் சேர்த்தது. கார்ன்வெல் பொறுப்புடன் ஆடி 73 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 111.1 ஓவரில் 354 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் லக்மல் 4 விக்கெட்டும், சமீரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
    பஞ்சாப்பை சேர்ந்த 32 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு கடந்த 4 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
    பாட்டியாலா:

    இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் சமீபத்தில் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடினார். காயம் காரணமாக அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார். பஞ்சாப்பை சேர்ந்த 32 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு கடந்த 4 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் டாக்டர்களின் அறிவுரையின்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர் விரைவில் களம் திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இர்பான் பதான்


    இதேபோல் சமீபத்தில் ராய்ப்பூர் மற்றும் மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜாம்பவான் அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அந்த அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர்கள் யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்று இருந்த 36 வயது முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அவர் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் இர்பான் பதான் அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, எலிசி மெர்டென்சை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 23-வது வெற்றியை ருசித்தார்.
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், கடந்த ஆண்டு ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 39-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரியை சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ஹங்கேரியின் மார்டோன் புக்சோவிச்சை 52 நிமிடத்தில் விரட்டியடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆண்டில் ரூப்லெவ் சுவைத்த 18-வது வெற்றி இதுவாகும்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 17-ம் நிலை வீராங்கனையான எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) துவம்சம் செய்து தொடர்ச்சியாக 23-வது வெற்றியை ருசித்ததுடன், முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.

    இன்னொரு ஆட்டத்தில் 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இதேபோல் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சரிவை சமாளித்து 2-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் மரியா சக்காரி (கிரீஸ்), செவஸ்தோவா (லாத்வியா), சபலென்கா (பெலாரஸ்), சாரா சோரிப்ஸ் டோர்மோ (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
    9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
    புதுடெல்லி:

    9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்அயர்சில் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடக்கிறது. முன்னதாக இந்திய அணி வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் அர்ஜென்டினா அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. அத்துடன் 13, 14 ஆகிய தேதிகளிலும் அந்த அணியுடன் விளையாடுகிறது. ஜூலை 23-ந் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்த ஆட்டங்களில் இந்திய அணி களம் காணுகிறது.

    புரோ ஆக்கி லீக் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய ஆக்கி சங்கம் நேற்று அறிவித்தது. சமீபத்தில் நடந்த ஐரோப்பிய தொடரில் இருந்து தனிப்பட்ட காரணத்துக்காக விலகிய கேப்டன் மன்பிரீத் சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் அனுபவம் வாய்ந்த ரூபிந்தர் பால்சிங், வருண்குமார் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி பெங்களூருவில் இருந்து இன்று புறப்பட்டு செல்கிறது.

    இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:-

    ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், அமித் ரோஹிதாஸ், குரிந்தர் சிங், ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), சுரேந்தர் குமார், ரூபிந்தர் பால்சிங், வருண்குமார், பிரேந்திர லக்ரா, ஜஸ்கரண் சிங், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், ராஜ்குமார் பால், சுமித், நீலகண்ட ஷர்மா, ஷம்ஷெர் சிங், குர்ஜந்த் சிங், தில்பிரீத் சிங், மன்தீப் சிங், லலித்குமார் உபத்யாய், ஷிலானந்த் லக்ரா.
    சவுமியா சர்கார் 27 பந்தில் 51 ரன்கள் விளாசிய போதிலும், வங்காளதேசம் அணியால் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேப்பியரில் நடைபெற்றது. முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. மழை அடிக்கடி குறுக்கிட்டதால் 17.5 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தபோது நியூசிலாந்து இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கிளென் பிளிப்ஸ் ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 58 ரன்களும், டேரில் மிட்செல் 16 பந்தில் 34 ரன்களும் அடித்தனர்.

    பின்னர் வங்காளதேச அணிக்கு 16 ஓவரில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் முகமது நைம், 3-வது வீரர் சவுமியா சர்கார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவுமியா சர்கார் 27 பந்தில் 51 ரன்கள் குவித்தார். நைம் 35 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த வீரர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் வங்காளதேசம் அணியால் 16 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூசிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் நியூசுிலாந்து தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
    ×