என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் உலக கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அறிவித்துள்ளார்.

    அபுதாபி:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ. தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.

    அவர் இதுவரை நடந்த ஏழு 20 உலக கோப்பை தொடரிலும் விளையாடி உள்ளார். இதில் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

    38 வயதான பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டி, 164 ஒருநாள் போட்டி, 90 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    ஓய்வு முடிவு குறித்து பிராவோ கூறியதாவது:-

    ஓய்வு பெற நேரம் வந்து விட்டது என நான் நினைக்கிறேன். நான் கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை பெற்றுள்ளேன். 18 ஆண்டுகளாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடி இருக்கிறேன்.

    இதில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் கரீபியன் மக்களையும், அந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தியதில் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஒயிட்பால் வடிவ கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்காட்லாந்துடனான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.

    இதனால் இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எஞ்சிஉள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். சில ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமைந்தால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு இருக்கும்.

    நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது. இதன் மூலம் ரன்-ரேட் ஓரளவுக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.

    இந்திய அணி இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் (குரூப்-2) மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களம் இறங்குகிறது.

    பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் பார்முக்கு திரும்பியுள்ளது பலமாகும். அதேபோல் விராட் கோலி, ரி‌ஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் முகமது ‌ஷமி, அஸ்வின், பும்ரா, ஜடேஜா உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் ரன்-ரேட்டை உயர்த்தும் நோக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற இந்தியா முயற்சிக்கும். ஸ்காட்லாந்து அணி தான் மோதிய மூன்று ஆட்டத்திலும் தோற்றது. அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது.

    அந்த அணி பேட்டிங்கில் ஜார்ஜ் முன்சே, மேத்யூ கிராஸ், பெர்ரிங்டன், மைக்கேல் சீசக், ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் ஷெரீப், வீல், மெக்வாட், கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோர் உள்ளனர். இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    முன்னதாக ஆப்கானிஸ்தான் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, ரன்-ரேட் பற்றி எங்கள் மனதில் இருந்தது. அணி கூட்டத்தில் விவாதித்த போது, அரை இறுதிக்கு தகுதி வாய்ப்பை பற்றி பேசினோம். அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசித்தோம் என்றார்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்கள் கிரிக்கெட் அணியை தடை செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் மோதியதில்லை. முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே ஹோபர்ட் நகரில் இந்த மாதம் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.

    இப்பேட்டியைக் காண ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இந்த போட்டியை ஆஸ்திரேலியா ஒத்தி வைத்துள்ளது. தலிபான்களே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

    ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் வசம் போய் விட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கு உதவி செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே தலிபான்கள் கூறி விட்டார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியை தடை செய்யப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டுகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என தலிபான் மூத்த தலைவர் கூறினர்.

    இதையடுத்தே ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா ஒத்தி வைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய உயர் அதிகாரிகள் சிலர் கூறுகையில், பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் தடை விதித்தால் அந்த நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தம் இல்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஹோபர்ட் டெஸ்ட் போட்டியை தள்ளி வைத்துள்ளோம் என்றனர். ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தடை விதித்தால், அந்த நாட்டு அணியுடனான டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

    ஆப்கானிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டை வளர்ப்பதற்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாலியம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஐசிசி டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.
    துபாய்:

    சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது  இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

    இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது  இடத்திலும் , மற்றொரு இந்திய வீரர் லோகேஷ்  ராகுல் 8-வது இடத்திலும் உள்ளனர். 

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அடில்  ரஷித் நீடிக்கின்றனர்.

    ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

    இலங்கைக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹெட்மயர் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 54 பந்தில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 81 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
    அபுதாபி:

    டி20 உலக கோப்பை தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அசலங்கா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. நிகோலஸ் பூரன் 46 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஹெட்மயர் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் இறுதிவரை போராடி 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இரண்டாவது வெற்றியை பெற்றது.
    ஆடம் ஜம்பா பந்து வீச்சில் மாயாஜாலம் காட்ட, ஆரோன் பிஞ்ச் 20 பந்தில் 40 ரன்கள் விளாச, வங்காளதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
    டி20 உலக கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘குரூப் 12’ முதல் பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதின.

    துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வழக்கம்போல் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்வதுபோல், ஆஸ்திரேலிய அணியும் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங்  செய்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் அணி 15 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 73 ரன்னில் சுருண்டது.

    தொடக்க வீரர் நைம் 16 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மஹமதுல்லா 18 பந்தில் 16 ரன்களும், ஷமிம் ஹொசைன் 18 பந்தில் 19 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினர். நான்கு பேர் ரன் கணக்கை தொடங்க முடியாமல் டக்அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் ஜம்பா 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆரோன் பிஞ்ச்
    ஆரோன் பிஞ்ச்

    பின்னர் 73 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் களம் இறங்கினார். ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி 20 பந்தில் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசினார். மிட்செல் மார்ஷ் 5 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 16 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா 6.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 78 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    தொடக்க வீரர் ஷேசாத் ரன் ஏதும் எடுக்காமல் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜஸாய் 15 பந்தில் 13 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார்.

    டி20 உலக கோப்பையில் இன்று அபு தாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், அஷ்வின் சேர்க்கப்பட்டனர்.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 47 பந்தில் 74 ரன்களும், கே.எல். ராகுல் 48 பந்தில் 69 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் வந்த ரிஷாப் பண்ட் 13 பந்தில் 27 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 13 பந்தில் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஷேசாத் ரன் ஏதும் எடுக்காமல் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜஸாய் 15 பந்தில் 13 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார்.

    3-வது வீரராக களம் இறங்கிய ரஹ்மதுல்லா குர்பாஸ் 10 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். குல்பதின் நைப் (18), நஜிபுல்லா ஜர்தான் (11) ஆகியோரை அஷ்வின் வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்த அணியின் தோல்வி உறுதியானது.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் அடிக்க இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடையும் நிலையில், ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையுடன் ரவி சாஸ்திரியின் பதவிக்கலாம் முடிவடைகிறது. இதனால் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தை வெளியிட்டு, விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்து அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

    ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். அவரைத் தவிர யாரும் விண்ணப்பம் செய்தாத நிலையில், தற்போது ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியமனம் குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம். அந்த பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரவி சாஸ்திரியின் தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அணியுடன் பணிபுரிந்து முன்னோக்கி எடுத்துக் செல்வேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அரைசதம் அடிக்க அதன்பின் வந்த ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது, டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வை செய்தது.

    முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில், எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க வீரரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் சராசரியாக ஓவருக்கு 10 என்ற அளவில் வந்து கொண்டிருந்தது.

    பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு இந்தியா 53 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 37 பந்தில் அரைசதம் அடித்தார். கே.எல். ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 11.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது.

    இந்தியாவின் ஸ்கோர் 14.4 ஓவரில் 140 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 47 பந்தில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரி 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் விளையாடிய கே.எல். ராகுல் 48 பந்தில் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    ரன்கள் குவிக்க வேண்டும் என்பதால் 3-வது வீரராக ரிஷாப் பண்டும், 4-வது வீரராக ஹர்திக் பாண்ட்யாவும் களம் இறக்கப்பட்டனர். இந்தியா 17 ஓவர்கள் முடிந்த நிலையில் 160 ரன்கள் எடுத்திருந்தது.

    கே.எல். ராகுல்

    18-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 3 பவுண்டரிகள் அடிக்க 15 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 2 சிக்ஸ் விளாச 19 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 19 ஓவர் முடிவில் 194 ரன்கள் அடித்தது.

    கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 13 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்களும், ரிஷாப் பண்ட் 13 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    நியூசிலாந்து அணி 172 ரன்கள் விளாசியதால், ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 16 ரன்னில் வெற்றி பெற்று தோல்வியில் இருந்து தப்பியது.
    டி20 உலக கோப்பையில் இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால், இந்தியாவின் அரையிறுதிக்கான வாய்ப்பு சற்று பிரகாசமாகும் என்ற நிலை இருந்தது.

    ஸ்காட்லாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் கடினமான இருந்து வரும் நிலையில் நியூசிலாந்து அணி சரிவை சந்தித்தது. அந்த அணி 6.1 ஓவரில் 52 ரன்கள் அடித்தாலும், 3 விக்கெட்டை இழந்தது.

    ஆனால், தொடக்க வீரர் மார்ட்டின் கப்பதில் அதிரடியாக விளையாடி 56 பந்தில் 93 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 7 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். அவருக்கு துணையாக கிளென் பிலிப்ஸ்  37 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. கப்தில்- பிலிப்ஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் விளாசியது.

    பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து களம் இறங்கியது. மிகப்பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு வீரர்களும் குறைந்த பந்தில் அதிக ரன்கள் விளாசினர். இதனால் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்தது.

    மார்ட்டின் கப்தில்

    அதன்பிறகும் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடியது ஸ்காட்லாந்து. 18 ஓவர் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவரில் 39 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் 13 ரன்கள் அடிக்க, ஸ்காட்லாந்து அணிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது.

    ஸ்காட்லாந்து கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ஸ்காட்லாந்து அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் 16 ரன்னில் தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து ஒருவேளை 150 ரன்கள் எடுத்திருந்தால் ஸ்காட்லாந்த வெற்றி பெற்றிருக்கும்.
    டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    அபுதாபி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. இந்த 2 தோல்வியால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்காக வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் கேப்டன் நபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1. லோகேஷ் ராகுல் 2. ரோகித் சர்மா 3. சூர்யகுமார் யாதவ் 4. விராட் கோலி 5. முகமது சமி 6. ரி‌ஷப் பண்ட் 7. ஹர்த்திக் பாண்ட்யா, 8. ஜடேஜா 9. சர்துல் தாகுர் 10. அஸ்வின் 11. பும்ரா. 

    ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விவரம்:-

    1. ஹஸ்ரத்துல்லா ஜசாய் 2. முகமது ஷசாத் 3. ரமனுல்லா குர்பாஸ் 4. நஜிபுல்லா ஜட்ரன் 5. முகமது நபி (கேப்டன்) 6. குல்படின் நைப் 7. ஷரபுதீன் அஷ்ரப் 8. ரஷித்கான் 9. கரீம் ஜனத் 10. நவீன்-உல்-ஹக் 11. ஹமீத் ஹாசன்

    இந்திய அணியில் ஒரு குழு விராட் கோலிக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு விராட் கோலிக்கு எதிராகவும் செயல்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் பிளவு இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். அணிக்குள் இரு பிரிவுகள் செயல்படுகின்றன. ஒரு குழு விராட் கோலிக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு விராட் கோலிக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் என கருதுகிறேன். இது தெளிவாக தெரிகிறது.

    எதற்காக இந்த பிளவு ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது. 20 ஓவர் உலக கோப்பையோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததால் இந்த பிளவு இருக்கலாம். அல்லது கடந்த 2 போட்டிகளில் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டார் என்பதற்காக இருக்கலாம்.

    எது உண்மை என தெரியவில்லை. கோலி மிகச்சிறந்த வீரர். ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறோம்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாசில் தோற்றவுடனே வீரர்கள் அனைவரும் மனரீதியாக நம்பிக்கை இழந்துவிட்டனர். தோல்வி அடைந்தபின் விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

    விமர்சனங்கள் முக்கியமானது. ஏனென்றால் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியினர் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினர். தவறான மன நிலையுடன் இருந்தார்கள்.

    டாசில் தோல்வி அடைந்தபோது இந்திய அணி போட்டியில் தோல்வி அடையவில்லை என்பதை நினைக்க மறந்துவிட்டார்கள். இதை மனதில் வைத்து நம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்பட்டு இருந்தால் ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் எந்தவித திட்டமிடலும் இந்திய அணியிடம் இல்லை.

    இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

    ×