என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது இன்று காலை வலுவடைந்து புயலாக வலுவடைந்தது.

    மேலும், நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை பிற்பகலில் கரையை கடக்க உள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26-ந்தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

    புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களை கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 200 மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை. காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவ கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    காரைக்கால்:

    வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இதையொட்டி கடலோர பகுதி முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    அதன்படி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து மீனவ கிராமங்களுக்கும் சென்று தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 11 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்கு 480 விசைப்படகுகளும், 1000 பைபர் படகுகளும் உள்ளன.

    இந்த தொழிலை நம்பி 12 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். ஆழ்கடலில் விசைப்படகு மூலம் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் அங்கு ஒரு வாரம் தங்கி மீன் பிடித்து கரை திரும்புவதுண்டு.

    தற்போது புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களை கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    ஆனால், 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 200 மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை. காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவ கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து மீனவ பஞ்சாயத்தாருக்கும், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகள் மூலம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

    நிவர் புயலை எதிர்கொள்ள புதுவையில் தொழிற்சாலைகள், கடைகள் இன்று மாலை முதல் மூடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    நிவர் புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக மாநில பேரிடர் மாநில அவசரகால மையத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து அரசுதுறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிவர் புயல் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி புதுவையில் ஒவ்வொரு துறைகளிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    மின்கம்பம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யவும், மரங்களில் உள்ள கிளைகளை அகற்றவும், மரங்கள் கீழே விழாமல் பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.

    மின்சாரம் தடைபட்டாலும் தடையில்லாமல் குடிநீர் வழங்கவும், மின்சாரம் தடைபட்டால் 12 மணி நேரத்தில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். 99 சதவீத மீனவர்கள் புதுவைக்கு திரும்பி வந்துவிட்டனர். புதுவையில் ஒரு படகில் மட்டும் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப வில்லை.

    காரைக்காலில் 90 படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை, கடலோர காவல்படை மூலம் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் காலக்கெடு இருக்கிறது. மீனவர்களின் படகு மற்றும் வலைகளை பத்திரமாக வைக்க உத்தரவிட்டுள்ளோம்.

    தேவையான மருந்துகள் இருப்பு வைக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளோம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருமணம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து போதுமான உணவு வழங்கப்படும்.

    தாழ்வான பகுதிகளில் என்ஜின் மோட்டார் மூலம் நீரை அகற்றவும் தயாராக ஏற்பாடுகள் செய்துள்ளோம். புதுவையில் 84 மையங்கள் அமைத்துள்ளோம்.

    வியாபார நிறுவனங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை வரை மூட உத்தரவிட்டுள்ளோம்.

    தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண் டாம் என்று தொழிற்சாலைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். வியாபார நிறுவனங்களை மூட வலியுறுத்தி உள்ளோம். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.

    உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் 24மணி நேரமும் செயல்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    புதுவையில் நானும், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி ஆகியோரும் காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணனும் களப்பணியில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பற்றி திறக்கப்பட்ட நிலையில் நிவர் புயல் காரணமாக மழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நிவர் புயல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


    வில்லியனூர் அருகே ஆற்று மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே சேந்தநத்தம், ஆரியப்பாளையம் பகுதியில் சங்கராபரணி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்து பதுக்கி வைத்து, மினிவேன் மூலம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சேந்தநத்தம் சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை வழிமறித்து சோதனை செய்ததில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்த ஆரியப்பாளையம் நந்தகோபால், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேந்தநத்தத்தை சேர்ந்த அருள், சிவா ஆகியோர் மணலை கடத்தி, பதுக்கி வைத்து தங்களிடம் விற்றதும், அவர்களிடம் இருந்து மணல் வாங்கிச்செல்லும் செல்லும்போது போலீசில் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அருள், சிவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள்ஒதுக்கீடு பெறுவதில் நாராயணசாமி அலட்சியம் காட்டி விட்டார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையை ஆளும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசின் சட்டரீதியான 50 சதவீத இடங்களை பெறாமல் திட்டமிட்டு சதிசெய்து தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார். படித்த இளைஞர்கள் இதை நம்பமாட்டார்கள்.

    கடந்த ஆட்சியில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசின் இடஒதுக்கீடாக 125 இடங்கள் பெற்று வந்த நிலையில் இந்த ஆட்சியில் ஒரு சீட் கூட ஏன் பெறவில்லை? தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை உடனடியாக பெற்றுத்தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் தற்போது வரை அதை ஏன் பெற்றுத்தரவில்லை? இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக சட்டவரைவு தயார் செய்து சட்டமன்றத்தில் ஏன் தாக்கல் செய்யவில்லை.

    இப்போது அமைச்சரவையில் முடிவு செய்து சட்ட வரையறை தயாரித்ததாக கூறும் முதல்-அமைச்சர் நாராயணசாமி யாருடைய நன்மைக்காக காலம் தாழ்த்தி தனது கடமையில் இருந்து தவறினார்? எதையுமே காலத்தோடு செய்யாமல் திட்டமிட்டு நேரத்தை வீணடித்துவிட்டு மாற்றிமாற்றி பேசுவதில் என்ன இருக்கிறது?

    மருத்துவ கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் கூட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு பெறுவதில் காலத்தோடு எதையும் செய்யாமல் அலட்சியமாக இருந்துவிட்டு தற்போது இதையே விவாதப்பொருளாக கவர்னருக்கு எதிராக கொண்டு செல்வதற்கு பயன்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரிய தவறை செய்து வருகிறார்.

    ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரே முன்னுக்குப்பின் முரணாக பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். உண்மைநிலை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சிகள் விவரம் தெரியாமல் பேசுவதாக முதல்-அமைச்சர் கூறுவது சரியானதல்ல.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    இளையான்குடி அருகே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 50 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
    இளையான்குடி:

    உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசன் தலைமையில் 50 பேர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 50 பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    காரைக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    சாக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் சரளமாக பேச இயலாத 10 வயது சிறுமி பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்றாள். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான அழகர் (வயது 38) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் நிலைய போலீசார் அழகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அழகர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    இளையான்குடி அருகே கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள உச்சந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 47). இவரது மகன் முத்துப்பாண்டி(19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் சி.ஏ. படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது மனைவி ராஜேஸ்வரியிடம் சாப்பாடு கேட்டு இருக்கிறார். அவர் சாப்பாடு தாமதமாக கிடைக்கும் என கூறி இருக்கிறார். இதில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் தனது மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது.

    இதை பார்த்த முத்துப்பாண்டி, தனது தந்தையிடம் எதற்காக அம்மாவை அடிக்கிறீர்கள் என கேட்டு உள்ளார். பின்னர் தன்னையே மகன் எதிர்த்து பேசுகிறான் என ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டினார்.

    திடீரென்று தந்தை அரிவாளால் வெட்டியதால் நிலைக்குலைந்து போன முத்துப்பாண்டி அலறி துடித்தார். ராஜேஸ்வரியும் அய்யோ! என் பிள்ளை...! என அலறியபடியே கணவரை தடுக்க சென்றார். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அரிவாள் வெட்டில் முத்துப்பாண்டியின் இடது கழுத்து, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் இது தொடர்பாக பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வில்லியனூர்:

    புதுவையில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெயிண்டர் அஜித், பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகத்தை ஒரு கும்பல் வழிமறித்து காரில் கல்வீசியும், அரிவாளால் வெட்டியும் அவரை கொலை செய்ய முயன்றது. வில்லியனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 10 ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடிகளின் செல்பாடுகளை ரகசியமாக கண்காணித்து, தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் அய்யனார் என்கிற தடி அய்யனார் (28). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் குமார் புதுச்சேரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அய்யனாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அய்யனாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அய்யனார், புதுநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பின்னர் அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    காரைக்காலில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 84 விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.
    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளைமறுதினம் (25-ந்தேதி) புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மற்றும் புயலால் நாளையில் இருந்து 26-ந்தேதி வரை மூன்று நாட்கள மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புயல் கரையை கடக்கும்போது 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பதற்காக காரைக்காலைச் சேர்ந்த 84 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலோர காவல்படை மூலமாக இந்தத் தகவலை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திரா உள்ள இடங்களில் கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் கார்களை மாத வாடகைக்கு வாங்கி அடமானம் வைத்து நூதன மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜீவானந்தம். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவரது காரை மாத வாடகைக்கு வாங்கி உபயோகப்படுத்தி வந்தார். இதே போல் மேலும் சிலரது கார்களை விக்னேஷ் உதவியுடன் அவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை ஜீவா கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் ஜீவா மாத வாடகை பணம் சரியாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவரை விக்னேஷ் சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஜீவா, அவரது கார் உள்பட மேலும் சிலரது கார்களை மற்றவர்களிடம் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் விக்னேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஜீவாவின் மோசடிக்கு பண்ருட்டியை சேர்ந்த செல்லமணி, பாலமுருகன் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. தற்போது தலைமறைவாக உள்ள அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×