search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இளையான்குடி அருகே கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய தந்தை கைது

    இளையான்குடி அருகே கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள உச்சந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 47). இவரது மகன் முத்துப்பாண்டி(19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் சி.ஏ. படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது மனைவி ராஜேஸ்வரியிடம் சாப்பாடு கேட்டு இருக்கிறார். அவர் சாப்பாடு தாமதமாக கிடைக்கும் என கூறி இருக்கிறார். இதில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் தனது மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது.

    இதை பார்த்த முத்துப்பாண்டி, தனது தந்தையிடம் எதற்காக அம்மாவை அடிக்கிறீர்கள் என கேட்டு உள்ளார். பின்னர் தன்னையே மகன் எதிர்த்து பேசுகிறான் என ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டினார்.

    திடீரென்று தந்தை அரிவாளால் வெட்டியதால் நிலைக்குலைந்து போன முத்துப்பாண்டி அலறி துடித்தார். ராஜேஸ்வரியும் அய்யோ! என் பிள்ளை...! என அலறியபடியே கணவரை தடுக்க சென்றார். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அரிவாள் வெட்டில் முத்துப்பாண்டியின் இடது கழுத்து, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் இது தொடர்பாக பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×