என் மலர்
புதுச்சேரி
பாகூர்:
புதுவை தெற்கு போலீஸ் சூப்பிரண்டு கண்காணிப்பில் முதலியார்பேட்டை, அரியாங் குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ளது.
இதில் அதிக குற்ற சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகள் அதிகமுள்ள பகுதியாக அரியாங்குப்பம் முதலிடத்திலும், முதலியார்பேட்டை 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வெடிகுண்டு கலாச்சாரம், கஞ்சா விற்பனை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
இதனைத் தடுக்க போதிய போலீஸ் இல்லாததால் இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அரியாங்குப்பம் பகுதியில் அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் அதிகம் உள்ள பகுதியில் குற்ற சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக 10 குற்றவாளிகள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஜெயிலில் இருந்து உள்ளூரில் உள்ள ரவுடிகளை கொண்டு இயக்கி வருவதும் தெரியவந்துள்ளது. ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. இது சம்பந்தமாக அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்கும் வகையில் புதுவை காவல்துறை விடியல் ஆபரேஷன் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இதன்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவது, மேலும் ஆயுதங்கள் பறிமுதல் செய்வது என ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபிகா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள். மற்றும் போலீசார் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென ரவுடிகள் வீடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் இரு பிரிவாக அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். மேலும் பழுதடைந்த கட்டிடங்கள், ஒதுக்குப்புற இடங்களிலும் சோதனை செய்தனர். ஆனால் குற்றவாளிகள் உஷாரானதால் போலீசார் அவர்கள் யாரையும் பிடிக்க முடியவில்லை. மேலும் ரவுடிகளின் வீடுகளில் எந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்படவில்லை.
அதிகாலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை செய்த சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷியா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரின் தாக்கம் பல்வேறு விதங்களில் பொதுமக்களை பாதித்து வருகிறது. குறிப்பாக தங்கத்தின் விலை கடந்த 2 வாரத்தில் நிலையற்றதாக இருந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சூரியகாந்தி மற்றும் பாமாயில் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் பங்குச்சந்தை நிலவரத்துக்கேற்ப அவ்வப்போது இரும்பு விலை (முதல் தரம்) ஏற்றத்தாழ்வை சந்திப்பது வழக்கம். ஆனால் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து இரும்பு விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக உயர்ந்தது.
அதாவது, புதுச்சேரியில் கடந்த 15 நாட்களில் மட்டும் (முதல், 2-ம் தரம்) ஒரு டன் ரூ.20 ஆயிரம் வரை இரும்பு விலை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் இரும்பு (முதல் தரம்) ரூ.75 ஆயிரமாக இருந்தது. ஆனால் டன்னுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து தற்போது ரூ.95 ஆயிரமாக விற்கப்படுகிறது. 2-ம் தரம் ரூ.62 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் உயர்ந்து ரூ.82 ஆயிரமாக உள்ளது.
இந்தநிலையில் முதல் தரம் கம்பிகள் ஓரிரு வாரங்களில் மேலும் ரூ.15 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் சிமெண்டு ஒரு மூட்டை (50 கிலோ) ரூ.350-ல் இருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி கட்டுமான தளவாடங்களான எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பொருட்களும் சற்று விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இரும்பு வியாபாரிகள் மதி, மோகன், யுவராஜ் ஆகியோர் கூறியதாவது:-
இரும்பு விலையில் தேவைக்கேற்ப ஏற்றத்தாழ்வு இருக்கும். கோடை காலங்களில் அதிகரித்தும் மழைக்காலங்களில் குறைந்தும் விற்கும். ஆனால் இந்தியாவில் இரும்பு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது ரஷியா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக மூலப்பொருட்கள் இறக்குமதி குறைவு மற்றும் பங்கு சந்தை சரிவால் இரும்பு விலை கடந்த 15 நாட்களில் மட்டும் டன்னுக்கு முதல், 2-வது தரம் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இது வியாபாரிகளை மட்டுமின்றி காண்டிராக்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வியாபாரிகள், காண்டிராக்டர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகள் முழுவதும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே இரும்பு கம்பி உள்பட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சிறப்பு கூறு நிதியை செலவிடாததை கண்டித்து புதுவை தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக இன்று காலை அண்ணா சிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சட்டசபை நோக்கி வந்தனர்.
ஊர்வலம் மற்றும் போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் நீலகங்காதரன் தலைமை வகித்தார். தலித் உரிமை இயக்க தேசிய தலைவர் ராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
ஊர்வலமாக வந்த போராட்ட குழுவினரை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போலீசார் தடுப்புகளை மீறி சட்டசபை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்ட குழுவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரிகார்டுகளின் மீது ஏறி சட்டமன்றம் நோக்கி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.
இருப்பினும் சிலர் சட்டமன்ற நுழைவு வாயிலுக்கு சென்றனர். சட்டமன்ற காவலர்கள் நுழைவு வாயில் கதவை மூடினர். அங்கு தரையில் அமர்ந்த போராட்ட குழுவினர் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.சி., எஸ்.டி. சிறப்புக்கூறு துணைத்திட்ட நிதியை புதுவை அரசு முழுமையாக செலவிட வேண்டும்.
சென்டாக்கில் தேர்வான மாணவர்களுக்கு மட்டும் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என பாரபட்சம் காட்டக்கூடாது. சிறப்புக் கூறு நிதியை முழுமையாக செலவிடாத அதிகாரி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதை செயல்படுத்தாத புதுவை அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரகாஷ், ராஜா, புண்ணியக் கோடி, எழிலன், சேகர், ராமன், ஏகாம்பரம், அரிகிருஷ்ணன், கண்ணதாசன், லெனின், கங்காதரன், சரவணன், நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் 433 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொற்று எண்ணிக்கை பூஜ்யமானது. மாநிலத்தில் யாரும் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. புதுவையில் 4, காரைக்காலில் 2 பேர் என 6 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 774 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 7, காரைக்காலில் 10, மாகியில் 4 பேர் என 21 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 21 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 16 லட்சத்து 2 ஆயிரத்து 392 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






