என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் நேருவீதி, காந்தி வீதி சந்திப்பில் குபேர் மீன் அங்காடி பாரம்பரியமாக பிரெஞ்சு காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
நகரப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க புதுவை அரசு நவீன மீன் அங்காடியை கிழக்கு கடற்கரையில் கட்டியுள்ளது. 5 ஆண்டுகளாகியும் மீனவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை.
இதனால் நகர பகுதியில் மீன்களை இறக்க அரசு 2 ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. இருப்பினும் மீனவர்கள் நேருவீதியில் அதிகாலையில் வாகனங்களை நிறுத்தி மீன்களை இறக்கிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீன்களை இறக்க வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மீன்களை இறக்க அனுமதிக்க வலியுறுத்தி டிரைவர்கள், மீன் விற்கும் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நேருவீதி, காந்திவீதி சந்திப்பில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காலை நேரத்தில் பெரிய மார்க்கெட்டுக்கு பொருட்களை வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்களால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அரசின் உத்தரவையே செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.தொடர்ந்து இன்று மீன்களை இறக்க அனுமதிப்பதாகவும் அரசுடன் பேசி முடிவு காணுமாறும் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தை மீன் விற்கும் பெண்கள் கைவிட்டனர்.
நகர பகுதியில் மீன்களை விற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்- அமைச்சரை சட்டசபையில் சந்திப்பது என முடிவு செய்துள்ளனர். இதனால் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
சேதராப்பட்டு:
புதுவையில் சமீப காலமாக வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. எதிரிகளை வெடிகுண்டுகள் வீசி கொலை செய்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. வெடி குண்டு கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் துத்திப்பட்டு வழுதாவூர் சாலையில் பத்மாவதி நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை மறித்து விசாரணை மேற் கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அவரது உடைமைகளை சோதனை செய்தார்.
மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் உருண்டையாக மர்ம பொருள் இருந்தது. இது குறித்து கேட்டபோது, கிரிக்கெட் விளையாட பந்து எடுத்துச் செல்வதாக அந்த வாலிபர் போலீசாரிடம் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் டேங்க் கவரில் இருந்த பொருளை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசிடம் வசமாக சிக்கியதை உணர்ந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பெரியசாமி மகன் சுமன் என்ற பிரதீப் (வயது 29) என்பது தெரிய வந்தது.
இவர் மீது 5 கொலை வழக்கு 5-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், ஆள் கடத்தல், திருட்டு, கூட்டு கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 30 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் சுமனை கைது செய்து அவரிடமிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சுமனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்து அதன் மூலம் கொலை சதி திட்டத்தை முறியடித்த சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேசை, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் உலாவந்த பிரபல ரவுடி போலீசில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.
அதிகரித்து வரும் பண வீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து 2020-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
ஓராண்டுக்கு பிறகு 2021 ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. 11 சதவீத அகவிலைப்படி உயர்வானது.
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலானது. பின்னர் ஜூலையில் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
இதனால் 28 சதவீத அகவிலைப்படியானது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டு கடந்த அக்டோபரில் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2022 முதல் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அகவிலைப்படி 31-ல் இருந்து 34 சதவீதமானது. இது புதுவையிலும் ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு அமலுக்கு வந்துள்ளது. இதை நிதித்துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் அனைத்து துறை செயலர்கள், பிராந்திய தலைமைக்கும், துறைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்... சோனியா காந்தியுடன் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு
புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் சிறந்த சுற்றுலா தலமாக புதுவையை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழக பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்து வருகின்றனர்.
வார வேலை நாட்களிலும் சுற்றுலா பயணிகளை வரவழைக்க பல்வேறு திட்டங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது. வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்னவீராம் பட்டினம் ஈடன் கடற்கரை என கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் புதுவையில் செலவிடும் நாட்களை அதிகப்படுத்தி உள்ளோம்.
கொரோனாவால் சுற்றுலா வருவாய் குறைந்தாலும், தீவிர முயற்சியால் அதை மீட்டெடுத்துள்ளோம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கடற்கரை திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் வழக்கமாக காந்தி திடலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை புதுவையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கடற்கரைக்கும் வரவழைக்க முடியும். வருகிற 13-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கடற்கரை சாலை லேகபேவில் படகு பாடல், இசையுடன் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்று விழாவை தொடங்கி வைக்கின்றனர். அன்றைய தினம் காந்தி திடல் கைவினை பொருள் கண்காட்சியில் கடல் உணவுத்திருவிழா தொடங்குகிறது. விழா நடைபெறும் 16-ந்தேதி வரை காலை 10.30 முதல் இரவு 9.30 மணி வரை கடல் உணவு திருவிழா நடைபெறும்.
13-ந்தேதி லேகபேவில் நாட்டுப்புற இசை, நடன நிகழ்ச்சியும், பாண்டி மெரினாவில் கர்நாடக இசை, தப்பாட்டம், சிலம்பம் ஆகியவையும் நடைபெறும்.
14-ந்தேதி காலாப்பட்டு முதல் புதுவைக்கு அதிகாலை 6 மணிக்கு சைக்கிள் மராத்தான் நடைபெறும். பாரடைஸ் கடற்கரையில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை மணல்சிற்ப கண்காட்சியும், மாலையில் நடனம், இசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரையில் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை புதுவை கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, பாண்டி மெரினாவில் காலை 10 மணி முதல் பட்டம் விடுதல், மதியம் 4 மணிக்கு கடற்கரை வாலிபால் போட்டிகள் நடக்கிறது. மேலும் லேகபேவில் மாலை 5.30 முதல் கடல் பொருட்கள் ஆபரண கண்காட்சி, மூங்கில் இசை விழாவும், பாண்டி மெரினாவில் சினிமா இசை நிகழ்ச்சியும், பாரடைஸ் பேச்சில் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
15-ந்தேதி பாண்டி மெரினாவில் பட்டம் பறக்க விடுதல், பொம்மலாட்டம், புதுக்குப்பம் கடற்கரையில் மலிவுவிலை பொருட்கள் அங்காடி, உறியடி நிகழ்ச்சி, பாண்டி மெரினாவில் வாலிபால் போட்டிகள், வயலின் இசை நிகழ்ச்சி, ஜிம்னாஸ்டிக், லேகபேவில் இசை, நடன நிகழ்ச்சி, சீகல்சில் பேஷன்ஷோ நடக்கிறது.
16-ந்தேதி காந்தி திடலில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு சூரிய உதய மீன் சுற்றுலா நிகழ்ச்சியும், லேகபேவில் மாலை 5.30 முதல் 9 மணிவரை இந்தோ ஆப்ரிக்கன் இசை நிகழ்ச்சியும், பாண்டி மெரினாவில் ஜூகல்பந்தி, துடுப்பாட்டம், மால்கம்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்றை தினம் இரவு 7 மணிக்கு நிறைவு விழா, பரிசளிப்பு விழா நடக்கிறது.
நாள்தோறும் கடற்கரைக்கும், மனிதருக்கும் உள்ள உறவை மையப்படுத்தி கருத்தரங்கும் நடக்கிறது. ஆண்டுதோறும் கடல் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு முதல் யுகாதி பண்டிகை, விசு விழாவையும் கலை நிகழ்ச்சிகளோடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.






