என் மலர்
கதம்பம்
- மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.
- மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும்.
திருவள்ளுவர் ஓரிடத்தில் மனிதனை மரத்துக்கு ஒப்பிடுகிறார். பண்பில்லாதவனை மரத்துக்குச் சமமானவன் என்கிறார்.
"அரம்போலும் கூர்மையரேனும், மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்"
அரம் இரும்பையும் அராவி அழிக்கும் கருவி. அதைப் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், பண்பில்லாததவர்களாக இருந்தாலும், அவர்கள் மரத்துக்குச் சமமானவர்கள் என்கிறார்.
அறிவில்லாதது என்பதற்காக மரத்தைக் கூறுகிறாரே ஒழிய, மற்ற எல்லாவகையிலும் மரம் மனிதனிலும் சிறந்தே விளங்குகிறது.
மரம் உயிரோடு இருக்கும்போது இலை, பூ, காய், கனி என்று பல வகைகளில் உதவுகிறது. நிழல் தருகிறது, தூய காற்று வழங்குகிறது, மழை தருகிறது.
மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.
ஆனால், மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும். அதனால்தான் வள்ளுவர்,
"அன்றறிவாம் என்னாது அறம்செய்க"
என்கிறார். எதையும் அன்றைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று ஒத்திவைக்காதே என்று அறிவுறுத்துகிறார்.
இறந்தபின் கண்தானம், உடல்தானம், அறக்கட்டளை அமைத்து உதவுதல் போன்று உதவமுடியுமே என நினைக்கலாம்.
நம் பின்னோர் அதனை நிறைவேற்றுவதைப் பொறுத்து அது நிகழலாம், நிகழாமலும் போகலாம். வீட்டில் உள்ளோர் அதனை வழங்க மறுத்தால் நிகழமுடியாது.
மரம் இருந்தும் கொடுக்கும், இறந்தும் கொடுக்கும்.
எனக்குத் தெரிந்த ஒருவர், எப்போதும் யாருக்காவது கெடுதல் செய்தல் கொண்டே இருப்பார்.
ஒருவர் வசதியாக வாழ்வதைப் பார்த்துவிட்டால் அவருக்குத் தாங்காது. காவல்துறைக்கு மொட்டைக் கடிதம் போடுவார். அவர் கள்ளநோட்டு வீட்டில் அடிக்கிறார் என்று, வீடு முழுவதையும் காவலர்கள் இடித்துப் போட்டுத் தேடிவிட்டு பொய்ப்புகார் என்று முடிவுகட்டுவார்கள். ஆனாலும் இடித்ததைக் கட்டுவது வீட்டுக்காரர் பொறுப்புதானே!
திருடுபோன சாமி சிலைகள் ஒருவர் வீட்டில் ஒளித்துவைத்திருப்பதாக எழுதி அவருக்குத் தொல்லை தருவார்.
'மொட்டை பெட்டிஷன் மேதாவி' என்றே ஊரில் அவருக்குப் பெயர். அந்த மேதாவியின் இறுதிக்காலம் உடல் நலம் குன்றிப் படுக்கையில் கிடந்தார். ஊர்ப் பெரியவர்கள் வந்து சுற்றிலும் அமர்ந்து உடல் நலம் விசாரிக்கிறார்கள்.
அந்த மேதாவி, எல்லோரிடமும் தான் செய்த தவறுகளைக்கூறிவிட்டு "என்னைப் போன்று இனி ஒருவன் இப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், நாளை நான் இறந்ததும் என் உடலை காலில் கயிறுகட்டித் தெருவில் போட்டுச் சுடுகாட்டுக்கு இழுத்துப் போகவேண்டும். இழுத்துப் போகும்போதே எல்லோரும் இறந்த உடம்பைச் செருப்பால் அடித்தபடியே போகவேண்டும்.
இதனைச் செய்வதாக உறுதிமொழி கொடுத்தால்தான் நான் நிம்மதியாகச் சாவேன்" என்று பாவ மன்னிப்பு போலக் கேட்டார்.
எல்லோரும் சாவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே மறுநாள் மேதாவி இறந்துவிட்டார்.
சொன்னபடியே எல்லோரும் மேதாவியின் உடலைக் தெருவில் போட்டு இழுத்தனர். செருப்பால் அடித்தனர். ஆசை ஆசையாக அதனைச் செய்தார்கள்.
திடீரென்று போலீஸ் லாரி வந்து நின்றது, காவலர்கள் குதித்து ஓடிவந்தனர். இவர்களைப் பிடித்து உதைத்து லாரியில் ஏற்றிக் காவல் நிலையம் கொண்டுபோய் அங்கும் லத்திக் கம்பால் 'பூசை' போட்டனர்.
அப்போது அங்கிருந்த ஆய்வாளர், 'அந்த ஆளு சரியாத்தான் தந்தி குடுத்திருக்காரு' என் உடம்பை அவமானப்படுத்தனும்னு பேசிக்கிறாங்க, போலீஸ்காரங்கதான் உடம்புக்கு அவமானம் உண்டாகாமே காப்பத்தனும்னு, அவர் நினைத்தபடியேதான் இவனுங்களும் செய்றாங்க. நல்லா அடிங்கப்பா' என்று ஆவேசமாகக் கூறினார்.
அடிவாங்கியபடியே எல்லோரும் சொன்னார்கள். 'அவன் இருந்தும் கெடுத்தான்' செத்தும் கெடுத்தான்' என்று.
மரம் இருக்கும்போதும் கொடுக்கிறது!
உயிர்போன பிறகும் கொடுத்து உதவுகிறது.
சில மனிதர்கள், இருந்தும் கெடுக்கிறார்கள், இறந்தும் கெடுக்கிறார்கள்.
-புலவர் சண்முகவடிவேல்
- ஒன்றை நாம் தொடர்ந்து நினைத்தால், இயல்பாக அதனோடு நாம் உயிர் கலப்பு பெறுவோம். இது பிரபஞ்ச நியதி.
- கவனிப்பதால் மனஅலை நீளமும் குறையும். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவை சற்று தனிமை.
கோவில்களில் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு கோள்களின் காந்த அலைக்கதிர் நிறத்திற்கு ஒத்த துணியை நவகிரகங்களுக்கு கட்டி இருப்பார்கள். சனிபகவானுக்கு சாம்பல் நிற அங்கவஸ்திரம் கட்டி இருப்பார்கள். சனியின் காந்த அலைக்கதிர்கள் சாம்பல் நிறம் என்பதை உணர்த்தவே முன்னோர்கள் அதை செய்து இருக்கிறார்கள்.
பொதுவாக நவகோள்களின் காந்த அலை கதிர்கள், நமது உயிருக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உடையவை.
சனி நம் நரம்புகளோடு தொடர்பு உடையது. சனியின் சாம்பல் நிற காந்த அலைக்கதிர்கள் ஆயுள், செல்வ வளம், உடல் நலம் அளிக்க வல்லது. தவத்தால் அதனோடு நட்பு பாராட்டி, அதனோடு உயிர் கலப்பு பெற்று, நமக்கு ஒத்ததாக மாற்றி கொள்ளலாம் என்று அருட்தந்தை பஞ்ச பூத நவக்கிரக தவத்தில் குறிப்பிடுவார்.
ஒன்றை நாம் தொடர்ந்து நினைத்தால், இயல்பாக அதனோடு நாம் உயிர் கலப்பு பெறுவோம். இது பிரபஞ்ச நியதி. கவனிப்பதால் மனஅலை நீளமும் குறையும். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவை சற்று தனிமை.
சனி என்ற கோளின் மீது மனம் செலுத்தி, அதன் சிறப்புகளை நினைவு கூர்தல், அவ்வளவுதான். உங்கள் எண்ணம் பிரபஞ்சமெல்லாம் விரிந்து, சனியோடு உறவாடி, உயிர் கலப்பு பெறும்.
தேவையற்ற எண்ணங்களை புறந்தள்ளி விட்டு, நேரம் கிடைக்கும் போது நினைவு கூறலாம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும். உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.
இது போல வார நாட்களில் அந்தந்த கோள்களை நினைவு கூர்தல், சற்று நேரம் அந்த கோள்களின் நினைவாக இருந்து, உயிர் கலப்பு பெறுதல் என்று பழக்கப்படுத்தி கொண்டால் வாழ்வு சிறக்கும்.
- இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க.
- ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்.
பூமி இருக்கும் காலக்ஸியின் பெயர் பால்வீதி. பால்வீதியில் சுமாரா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வீதியின் நடுவே ஒரு கருந்துளை இருக்கு. ஒட்டுமொத்தமா இந்த லட்சம் கோடி நட்சத்திரங்களும் இந்த கருந்துளையை தான் சுத்தி வந்துகிட்டு இருக்கு.
நமக்கு அருகாமையில் அன்ட்ரோமிடான்னு இன்னொரு காலக்ஸி இருக்கு. அது பால்வீதியை விட பெரியதுன்னு சொல்றாங்க. இந்த காலஸிக்கள் எல்லாமே விண்வெளியில் எங்கோ போய்கிட்டே இருக்கு. எங்கே போகுதுன்னு யாருக்கும் தெரியாது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 21 லட்சம் கிமி வேகத்தில் காலக்ஸிகள் எங்கோ பயணம் பண்ணிகிட்டு இருக்கு.
இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க. ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஆக இன்னும் 500 கோடியாவது ஆண்டில் மனிதர்கள் இருக்காங்களோ இல்லையோ, ஏதோ உயிரினம் பூமியில் இருக்கும்.
தலா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ள இரு காலக்ஸிகள் மோதிக்கொண்டால் என்ன ஆகும்?
"பெருசா ஒன்றும் ஆகாது" என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஏனெனில் காலக்ஸிக்களின் நட்சத்திரங்களுக்கு இடையே இருப்பது பெரும்பாலும் வெற்றுவெளிதான். அதாவது ஒரு காலக்ஸியில் 99.2% வெறும் வெளிதான். மீதம் உள்ள 0.8% தான் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள்.
ஆக இந்த மோதல் நிகழ்கையில் விண்ணை பார்த்தால் திடீர் என வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். புதுசா ஏராளமான நட்சத்திரங்கள் விண்ணில் தோன்றும். சில நட்சத்திரங்கள் மோதி கிலோனோவா (Kilonova) எனும் வானவேடிக்கை நிகழலாம். பார்த்தால் ஒரே ஜாலியா இருக்கும்.
அப்ப நாம மனித வடிவில் இருக்கமாட்டோம். ஆனால் ஏதோ ஒரு வடிவில் இருந்து விண்ணை உற்றுபார்த்துக்கொண்டிருப்போம்.
ரோபாட் வடிவில் உட்கார்ந்து விண்ணைபார்த்துவிட்டு நோட்ஸ் எழுதிகிட்டு கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்?
- நியாண்டர் செல்வன்
- இனிமையான வார்த்தைகளால் பிற மக்களை நம்மால் நேசிக்க முடியும்.
- சக மனிதர்கள் நம்முடன் உறவாட நாம் பிரயோகிக்கும் நல்ல வார்த்தைகள்தான் என்றான்.
அரசனுக்கு ஒரு சந்தேகம்!
உலகத்திலேயே இனிமையானது எது?
கசப்பானது எது? என்று தண்டோரா போட்டு ஊர் மக்களுக்கு அறிவிப்பு செய்தான்.
உலகத்திலேயே மிக மிக இனிமையான பொருள் ஒன்றையும், மிகவும் கசப்பான பொருள் ஒன்றையும் எடுத்து வர வேண்டும். அரசனின் மனதிற்கு திருப்தி அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்.
ஆளாளுக்கு ஒவ்வொன்றை எடுத்து வந்தார்கள்..
இனிப்பிற்கு லட்டு, ஜாங்கிரி, குலாப் ஜாமூன், மைசூர்பா உள்ளிட்ட ஏராளமான இனிப்பு வகைகள்.
கசப்பிற்கு பாகற்காய் முதல் தங்களுக்கு தெரிந்த அத்துனை கசப்பானதையும் எடுத்து வந்தார்கள்.
அரசன் மனம் திருப்தி அடையவில்லை!
கடைசியாக கோமாளி தோற்றத்தில் இருந்த ஒருவன் ஆட்டினுடைய "நாக்கை மட்டும்" எடுத்து வந்திருந்தான்.
அங்கிருந்தவர்கள் பரிகாசமாக சிரித்தார்கள். பார்ப்பதற்கு அருவருப்பாய் இருந்த ஆட்டு நாக்கை பார்த்து முகம் சுளித்தார்கள்.
இவன் ஏதோ சொல்ல வருகிறான் என்று கருதி, அரசன் அவனை அருகில் அழைத்து என்ன இது என்று கேட்க,
கோமாளி, நாக்குதான் உலகத்திலேயே மிகவும் இனிமையானது. கடவுள் புண்ணியத்தால் நாம் பேசுகிறோம் என்றால் அதற்கு இந்த நாக்குதான் காரணம். இனிமையான வார்த்தைகளால் பிற மக்களை நம்மால் நேசிக்க முடியும். சக மனிதர்கள் நம்முடன் உறவாட நாம் பிரயோகிக்கும் நல்ல வார்த்தைகள்தான் என்றான்.
பேஷ்! ஃபேஷ்!
சரி, கசப்பான பொருளை காட்டு என்று அரசன் கேட்கிறான்.
மன்னா! உலகத்திலேயே மிகவும் கசப்பான பொருளும் இதே நாக்குதான்! நாம் கோபத்தில் பேசுவதால் எத்தனை மனிதர்களின் மனங்களை காயப்படுத்துகிறோம்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் பேசும் பேச்சுக்களால் பகைமையை வளர்த்துக் கொள்கிறோம். எதிரிகளை சம்பாதிக்கிறோம்.
இந்த நாக்கு மிக கெட்டது மன்னா! மிக மோசமானது! மிக கசப்பானது!
-பாலு சுப்பிரமணியன்
- பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் தோல் பாங்காக வெளியேற்ற...
- பதினாறாம் நிமிடத்தில் பேராறாய்ப் பெருகும் வியர்வை...பரிசுத்தமாக்குகிறது உடலை!
நடந்து பாருங்கள் நண்பர்களே...
நடக்க நடக்க நமக்குள் நடக்கும் அற்புதங்களை உணராலாம். அனைத்தும் ஆதாரபூர்வ அறிவியல் உண்மைகள்!
நாள் ஒவ்வொன்றையும் நலமாய்த் தொடங்கலாம்.
நடக்கத் தொடங்கிய ஒன்றாம் நிமிடத்திலேயே ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது!
அடுத்த நிமிடத்தில் அங்கம் எங்கும் ஊக்கத்துடன் அருவி போல் குருதி பரவுகிறது!
மூன்றாம் நிமிடத்திலேயே மூட்டுக்களின் இறுக்கம் முற்றிலுமாகத் தளர்கிறது!
நான்காம் நிமிடத்தில் நடை மிக எளிதாகிறது... நாடி சீராகிறது!
ஐந்தாம் நிமிடத்தில் இருபத்து ஐந்து கலோரி ஆவியாகிறது... யாரும் அறியாமலே!
ஆறாம் நிமிடத்திலேயே அவசியமற்ற கொழுப்பு நீக்கம் ஆரம்பம் ஆகிறது!
ஏழாம் நிமிடத்தில் இதயத் துடிப்பு சீராகி... இன்னிசை ஆகிறது!
நிமிடம் எட்டில் நாளங்கள் அனைத்தும் நெகிழ்ந்து விரிகின்றன!
ஒன்பதாம் நிமிடத்தில் உயிர்வளி எனும் ஆக்ஸிஜன்... உடலெங்கும் நிறைகிறது!
பத்தாம் நிமிடத்தில் மொத்த உடலும் மனமும்... சுத்தமாகித் தெளிகிறது!
பனிரெண்டாம் நிமிடத்தில் பரவுகிறது உடலெங்கும் ஓர் பதமான சூடும் சுகமும்!
பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் தோல் பாங்காக வெளியேற்ற...
பதினாறாம் நிமிடத்தில் பேராறாய்ப் பெருகும் வியர்வை...பரிசுத்தமாக்குகிறது உடலை!
நிமிடம் பதினெட்டில் நிரம்பி வழிகிறது மேலும் மேலும்...நிகரில்லா உயிர்வளி!
இருபதாம் நிமிடத்தில் இதுவரை கரையா இறுகிய கொழுப்பும்... இளகத் தொடங்குகிறது!
இருபத்தைந்தாம் நிமிடத்தில் இவ்வளவு புத்துணர்ச்சியா எனக்குள்? என்று மனம் வியக்கிறது!
முப்பதாம் நிமிடத்தில் முழு உடலும் மனமும் முற்றிலுமாகத் தளர்கின்றன!
முப்பந்தைந்தாம் நிமிடத்தில் மூளையின் மூலை முடுக்கெங்கும் முகிழ்க்கின்றன மகிழ் சுரப்புகள்!
நாற்பதாம் நிமிடத்தில் நம்மைக் கவ்வியிருந்த மன அழுத்தம் நமக்கே தெரியாமல் விலகுகிறது.
நாற்பத்தைந்தாம் நிமிடத்தில் நம் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து நம்மை ஆட்கொள்கிறது.
ஐம்பதாம் நிமிடத்தில் ஆழ்கடல் போல் பேரமைதி அடைகின்றன உடலும் மனமும்.
நிமிடம் ஐம்பத்தைந்தில் நினைத்துப் பார்க்க முடியாத நிம்மதி நெஞ்சில் நிறைகிறது.
அறுபதாம் நிமிடத்தில் அன்றைய நாளுக்கான ஆற்றல் அனைத்தும் உங்களுக்குள்.
உங்களுக்காக நீங்கள் ஒதுக்கும் இந்த உன்னத ஒரு மணி நேரத்தால் ஆனந்தமாகும் உடலும் மனமும்.
-செல்வகுமார்
- குருவிகள் அழிந்ததும், உடனே பூச்சிகள் எண்ணிக்கை பெருகியது.
- இத்தனை நாளாக குருவிகளால் கட்டுப்பாட்டில் இருந்த பூச்சிகள் எண்ணிக்கை பெருகி அவை பல லட்சம் ஏக்கர் பயிர்களை அழித்தன.
1958 சீன அரசு கடும் கோபத்தில் இருந்தது. காரணம் குருவிகள் நாட்டின் ஒட்டுமொத்த தானிய உற்பத்தியில் 1% அளவை உண்பதாக அறிக்கைகள் கூறின.
1% என்பது பெரிய தொகை இல்லைதான். ஆனால் அதுவும் இழப்புதானே? ஏன் அதை இழக்கவேண்டும்? இந்த குருவிகளை அப்புறப்படுத்தினால் 1% உணவு உற்பத்தி பெருகும் அல்லவா?
நாட்டில் உள்ள குருவிகளை எல்லாம் சுட்டுக்கொல்ல உத்தரவு வந்தது. குருவிகளை கொல்லும் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மக்கள் குருவிகளை உண்டிவில், அம்புகள், துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி குருவி நூடில்ஸ் எல்லாம் செய்து சாப்பிட்டார்கள்.
அதன்பின் உணவு உற்பத்தி என்ன ஆனது?
குருவிகள் அழிந்ததும், உடனே பூச்சிகள் எண்ணிக்கை பெருகியது. இத்தனை நாளாக குருவிகளால் கட்டுப்பாட்டில் இருந்த பூச்சிகள் எண்ணிக்கை பெருகி அவை பல லட்சம் ஏக்கர் பயிர்களை அழித்தன. நாட்டில் கடுமையான உனவுப்பஞ்சம் வந்து 4.5 கோடி பேர் உயிரிழந்தார்கள். 20ம் நூற்றாண்டின் மிகக்கொடிய பஞ்சமாக அது அறியப்படுகிறது.
ஆக உயிரினங்கள் ஒன்றை ஒன்று எப்படி சார்ந்து உள்ளன என்பதை மனித இனம் இப்படி பெருத்த விலை கொடுத்துதான் தெரிந்துகொள்கிறது.
-நியாண்டர் செல்வன்
- இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
- எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள்.
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக ஷிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.
அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இதுதான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இதுதான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்றுவிட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.
அவ்வளவுதான். அதன்பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.
-ஓஷோ
- அசுத்தங்களின் காரணமாக நோய்க்கிருமிகள் முதலில் உடலினுள் செல்லாமல் உடலைச் சுற்றியுள்ள ஆராப் பகுதியில்தான் தங்கி இருக்கும்.
- இந்து மதத்தின் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் இப்படி ஒரு விஞ்ஞானப்பூர்வமான பொருள் பொதிந்து இருக்கின்றது.
ஆரத்தி என்பது விஞ்ஞானப்பூர்வமானது. ஒவ்வொரு மனிதனின் உடலைச் சுற்றிலும் ஆரா என்ற ஒரு வட்டப் பகுதி இருக்கின்றது.
தொலைதூரப் பயணங்கள் சென்று வருபவர்கள், பிரசவித்து வீடு திரும்புபவர்கள், போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மீது கூட்டம் மற்றும் அசுத்தங்களின் காரணமாக நோய்க்கிருமிகள் முதலில் அவர்களின் உடலினுள் செல்லாமல் உடலைச் சுற்றியுள்ள ஆராப் பகுதியில்தான் தங்கி இருக்கும்.
இவ்வாறு உடலின் ஆராப் பகுதியில் நோய்க்கிருமிகளை சுமந்துவரும் தொலைதூரப் பயணங்கள் சென்று வருபவர்கள், பிரசவித்தவர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் வீட்டிற்குள் நுழையும்முன் கிருமி நாசினிகளான மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த காவிக் கரைசல், வெற்றிலை, கற்பூர தீபம் ஆகியவை அடங்கிய தாம்பாளத்தால் அவர்களை மூன்றுமுறை சுற்றி கிருமி நீக்கம் செய்து தூய்மைப்படுத்துவதே ஆரத்தி ஆகும்.
இந்து மதத்தின் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் இப்படி ஒரு விஞ்ஞானப்பூர்வமான பொருள் பொதிந்து இருக்கின்றது.
-அருண் நாகலிங்கம்
- மனுஷன் பொறக்கறத்துக்கு முன்னாலேயே பொறந்து...
- மனுஷன் இருக்கற எண்ணிக்கைக்கு அதிகமாவே ... கொசு இருக்குதுங்க!
உங்க வூட்டிலே நாலு பேரு இருக்கீங்க. ஆனா ஒங்களை மட்டும் கொசு, உடாம தொரத்தித் தொரத்திக் கடிச்சுது'னா .... பிரச்சனைக் கொசுகிட்டே இல்லேங்க! உங்க கிட்டேதான் !
நல்ல ரத்தம் ஓடுறவங்களை கொசு அதிகம் கடிக்காது.
என்னமோ நான் புளுகற மாதிரி அப்படி ன்'னு பாக்கறீங்க ?
உண்மைத்தானுங்க.
ரத்தத்தை சுத்தமாக வச்சிக்க தேவையான காய்கறிகள் பழங்கள் சாப்பிடணும்.
அதிகமான, சுத்தமில்லாத ரத்தத்தை சுத்திகரிக்கறத்துக்கு ... நம் உடல் அதிக ஆக்ஸிஜனை எடுத்துக்கும்.
அதனால, வெளியே அனுப்பும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவும் அதிகமாக போய்த் தொலைக்கும்.
அதுமட்டுமல்ல, இரத்தத்தை சுத்திகரிக்கறதுக்கோசரம் உடல் கூடுதல் வேலை செய்ய வேண்டி இருப்பதால், உடல் வெப்பமும் அதிகமா ஆயிடும்.
இது எல்லாத்துக்கும் மூலக்காரணம் எது?
அதிக அளவு அசுத்தமான ரத்தம் நம்ம உடலில் இருப்பதுதான்.
ரத்தத்தை சுத்தம் பண்ணுற உறுப்பு சிறுநீரகம்.
அதுல பிரச்சினை இருக்கவங்களை கொசு அதிகம் கடிக்கும்.
"கெட்ட ரத்தம், கார்பன்-டை-ஆக்ஸைடு, அதிக வெப்பம் ... இப்பிடி நமக்கு பிடிச்சமான பதார்த்தங்களை ... தேடித் தேடி சேர்த்து வச்சிருக்கானே? இவேன் ரொம்ப நல்லவன்'டா" அப்பிடி நெனைச்சிக்கிட்ட கொசுவுக்கு நீங்கள் ஒரு favourite flavour ஆகி ... அதன் மனதுக்கு இனியவன் ஆகி விடுவீர்கள்.
பிறகென்ன ...
கொசுக்களுக்கெல்லாம் ...
sweet எடு, கொண்டாடு.
நாலு பேரு இருக்குற வீட்டுல உங்களை கொசு அதிகம் கடிச்சா உங்க சிறுநீரகத்தில் ஏதோ பிரச்சினை இருக்கு'னு தெரிஞ்சிக்கங்க.
"கொசுக்களால் நோய் உருவாகிறது. டெங்கு'வும் அதனாலேயே உருவாகிறது. எனவே கொசுக்களை ஒழியுங்கள். டெங்கு அவதியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். "
கொசு என்னா முந்தா நேத்திக்கி மொதோ நாள் ஊரில் இருந்து வந்திச்சா?
மனுஷன் பொறக்கறத்துக்கு முன்னாலேயே பொறந்து... மனுஷன் இருக்கற எண்ணிக்கைக்கு அதிகமாவே ... கொசு இருக்குதுங்க!
பருப்பு டப்பாவை மறந்து போயி பரண்'ல வச்சிட்டாக்க வண்டு வந்து மொச்சிடுது.
செடியில இருக்கற வெண்டைக்காய் ... கொஞ்சம் ஏமாந்துச்சினா ... பூச்சி புடிச்சி போயிடுது.
ஊறுகாயைக் கொஞ்சம் லேசு, பாசா ... கவனிக்காம உட்டோமுன்னா ... பூசனம் புடிச்சி போயிடுது.
இதெல்லாம் இயற்கையின் நியதி.
புடிச்ச உணவு, பக்குவமான எடத்துல, சுமூகமான சூழல்ல, தன்னை பாதிக்காத வகையில் இருந்தாக்க ... வாழும் உயிர் அந்த பொருளைத் தேடிப் போயி தின்று, தன் உயிரை வளர்த்துக் கொள்ளும் - என்பது நியதி.
நம்ம உடம்புல கழிவு உருவாகுவது நியதி.
அது பல நுண் உயிரிகளுக்கு உணவாக மாறுவது நியதி.
புடிச்ச உணவு, பக்குவமான எடத்துல, சுமூகமான சூழல்ல, தன்னை பாதிக்காத வகையில் இருந்தாக்க ... வாழும் உயிர் அந்த பொருளைத் தேடிப் போயி தின்று, தன் உயிரை வளர்த்துக் கொள்ளும் - என்பது நியதி. இது மொதல்லேயே பார்த்தோமில்ல?
நம்ம உடம்புல தேங்கற அழுக்கு ... கொசுவுல இருக்கற சிக்கன் குனியா வைரஸ்க்கு புடிச்சிது'னா ... கொஞ்சம் வைரஸ்ஸை ... உடம்புல உட்டுட்டு போயி அந்த உயிரியை வாழ வைக்குது; டெங்கு உயிரிக்கு புடிச்ச பக்குவத்துல அந்த கழிவு நம்ம உடம்புல இருந்தாக்க ... டெங்கு உயிரி பல்கி பெருகும்.
ஈ'க்களுக்கு புடிச்ச வகையில் நம்ம கழிவுகள் இருந்திச்சி'னா ... அந்த கழிவு அல்வா'வை ஈக்களில் உள்ள ஃபுளூ உயிரிகள் வந்து ஒக்காந்து தின்னுட்டு அந்த ஜூரத்தைக் குடுத்துட்டு போயிடும்.
ஆக, கொசுவோ, ஈயோ, எலியோ ... மெனக்கட்டு நோயைக் குடுத்துட்டு போறதில்லை. அதுங்களுக்கு சாதகமான சூழலை ... நம்ம உடம்புல உருவாக்கி குடுத்துட்டு ... என் வூட்டுல வந்து தங்கிக்கோ, தங்கிக்கோ'னு வருந்தி வருந்தி அழைத்து விட்டு... பின்னர் வாடுகிறோம்.
காட்டில் வாழும் கோடூர மிருகங்கள் யாவை'னு ஒரு முயல் கிட்டே கேட்டாக்க அது சொல்லும்.
சிங்கம், புலி, கரடி'னு.
"அடப்போங்க நீங்க ஒன்னு ... இந்த சிங்கம், புலி, கரடி மூனும் ரொம்ப சாது ... அதுங்க பாட்டுக்கும் வரும், போகும் ... நம்மளை ஒன்னுமே பண்ணாது. ஆனா ரொம்ப கொடூரமான மூனு கேட்டீங்கன்னா ... இது கொக்கு, காக்கா, வாத்து!"
இப்புடி சொல்றது யாருங்க?
அதே காட்டில் வாழற புழுக்கள்தான் !
ஆக நோய், உணவு, ஆபத்து ... போன்ற எதுவுமே எல்லோருக்கும் நிரந்தரமல்ல ... கால தேச வர்த்தமானங்களைப் பொருத்து, உயிரிகளைப் பொருத்து மாறுபடும்.
-மானெக்ஷா
- கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது.
- குன்றின் கீழ் இருந்து 250 மீட்டர் தொலைவு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது.
இந்த பிரபஞ்சமே ஒரு கோணத்தில் பார்க்கும்போது அனைத்துமே அதிர்வலைகளாக தான் உள்ளது. அதற்கு ஒரு எடுத்துகாட்டு பின்வரும் சம்பவம்..
1939 ஆம் ஆண்டு சுவிடன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஜர்ல் என்பவர் திபெத்தில் உள்ள துறவிகள் மடலாயத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற அவர் சில நாள்கள் அங்கேயே தங்கி இருந்தார். ஒருநாள் துறவிகள் புது மடத்தின் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு அவரையும் அழைத்து சென்றனர்.
உடன் வந்த துறவிகளோ கையில் பறை, நீள்குழல் போன்ற இசைகருவிகளை எடுத்து வந்தனர். டாக்டர் ஜர்ல்லோ, கட்டுமான பணிகளுக்கும் இசை கருவிகளுக்கும் என்ன சம்மந்தம் என குழம்பியிருந்தார்.
துறவிகளோ கொண்டுவந்த இசைகருவிகளை தாங்கள் தூக்க வேண்டிய பாறைகளில் இருந்தது 63 மீட்டர் தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலும் வரிசைபடுத்தினர். அதில் மொத்தம் 19 கருவிகள். அதில் 13 பறைகள் மற்றும் மற்ற பிறஇசைகருவிகளும் அடக்கம். பிறகு வாத்தியங்களை இசைக்க தொடங்கினர். அதில் இருந்து 6 விதமான எக்காளம் (ஒலி) எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து துறவிகள் ஒருவித ஒலி அமைப்புடன் கூடிய வழிபாடுகளையும் நடத்தினர்.
அப்போது கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது. குன்றின் கீழ் இருந்து 250 மீட்டர் தொலைவு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது. இது போன்று ஒருமணிநேரத்தில் 5-6 பாறைகளை அவர்கள் இடம்பெயர்த்தி கட்டுமான பணிகளை செய்தனர்.
இதை பார்த்த டாக்டர் ஜர்ல் அதிசயத்து போனார். அவரது கண்களை அவராலே நம்பமுடியவில்லை, பிறகு அவர் இதனை படமாக்கி கொண்டு கிளம்பினார்.
அப்படியென்றல் யோசித்து பாருங்கள்.. உலகில் இன்றும் காணப்படும் மிகப்பெரிய அளவிலான பழங்கால கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டது என புரியும்.
அறிவியலில் இப்போது சத்தத்தை கொண்டு சிறிய அளவிலான கற்களை மிதக்கவைக்க முடியும் என நிருபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்வலைகளை உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கமுடியும்.
-பாலா
- நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக்கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக்கல்லூரி மாணவனாக இருந்தார்.
- சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களை புலவரிடம் அளித்திருந்தனர்.
எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னசாமி ஐயரின் புதல்வன் சுப்பிரமணியனுக்கும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரத்திற்கும் நெஞ்சார்ந்த தோழமை உருவாகியிருந்தது. ஒருவருக்கொருவர் 'சோமு' என்றும் 'சுப்பையா' என்றும் அழைத்துக்கொள்வர்.
அரண்மனைக்கு வருகை தருகின்ற தமிழ்ப் புலவர்களின் பாட்டுக்களையும், உரையாடல்களையும் கேட்பதில், பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த இருவரும், தமிழ் மொழியின்பால் இளமையிலேயே தணியாத தாகம் கொண்டிருந்தனர். தனியாக அமர்ந்து, தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பேரார்வமும், பெரு விருப்பும் பெற்றிருந்தனர்.
நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக்கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக்கல்லூரி மாணவனாக இருந்தார். ஒரு சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் புலவர் ஒருவர் நெல்லைக்கு வருகை புரிந்திருந்தார். ஒரு கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக்கொடுத்து, பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு யாழ்ப்பாணத்துப் புலவர் வேண்டினார். கூடியிருந்தோர் தாமியற்றிய பாடல்களைப் புலவரிடம் வழங்கினர்.
கூட்டத்திற்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களை புலவரிடம் அளித்திருந்தனர். எல்லாப் பாடல்களிலும் இந்த இளைஞர் இருவரின் பாடல்களே மிகச் சிறப்புப் பெற்றவையாகக் கருதப் பெற்று, இருவருக்கும் 'பாரதி' என்று பட்டமளித்து மகிழ்ந்தார் யாழ்ப்பாணத்துப் புலவர்.
சுப்பிரமணியன் 'சுப்பிரமணிய பாரதி' என்றும், சோமசுந்தரம் 'சோமசுந்தர பாரதி' என்றும் அந்த நாள் முதல் அழைக்கப் பெற்றனர்.
-குன்றக்குடி பெரியபெருமாள்
- பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான மக்களவை இயற்றும் சட்டங்களை அவர்கள் தம் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க இயலும்.
- இப்ப அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு சட்ட மசோதாக்களை இரண்டு ஆண்டுகள் வரை தாமதிக்க மட்டுமே இயலும் என கூறப்பட்டுள்ளது.
"ஜனநாயகம் என்பது இரு ஓநாய்களும், ஒரு ஆடும் டின்னருக்கு என்ன சாப்பிடலாம் என ஓட்டு போட்டு முடிவெடுப்பது" என எழுதினார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
அதனால் அமெரிக்கா ஜனநாயக நாடாக இல்லாமல் குடியரசு நாடாக இருக்கும்படி அரசியல் சட்டம் எழுதப்பட்டது.
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது ஜனநாயகம் (Democracy). ஆனால் அமெரிக்க அரசியல் சட்டம் தனிமனிதனின் அடிப்படை உரிமைகளை பெரும்பான்மை மக்களிடம் இருந்தும், அவர்களின் பிரதிநிதியான அரசிடம் இருந்தும் காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனால் அது குடியரசு (Republic)
பிரிட்டன் ஜனநாயக நாடும் அல்ல, குடியரசும் அல்ல. அது முடியாட்சி நாடு. மக்களின் பிரதிநிதியாக பிரதமர் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை (House of commons) உள்ளது. ஆனால் பிரபுக்கள் சபை (House of Lords) என மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இன்னொரு சபையும் உள்ளது.
பிரபுக்கள் சபை கிபி 1215ம் ஆண்டில் உருவானது. அதன் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. அதில் 26 உறுப்பினர்கள் சர்ச் ஆஃப் இங்கிலாந்தால் நியமிக்கப்படுவார்கள். 1215ல் இருந்து தலைமுறை தலைமுறையாக பிரபுக்களும், அவர்களின் வாரிசுகளும் தான் பதவிக்கு வருவார்கள். அவர்கள் எந்த கட்சிக்கும், பிரதமருக்கும் கட்டுபட்டவர்கள் கிடையாது. மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பவர்களும் கிடையாது.
அதனால் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியான மக்களவை இயற்றும் சட்டங்களை அவர்கள் தம் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க இயலும். இப்ப அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு சட்ட மசோதாக்களை இரண்டு ஆண்டுகள் வரை தாமதிக்க மட்டுமே இயலும் என கூறபட்டுள்ளது.
முழுக்க பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்த சபை என்பதால் பெண்கள் அதில் உறுப்பினர் ஆக 1958 வரை அனுமதி இல்லை. மிக, மிக தன்மையாக நடக்கும் சபை. மக்களவை மாதிரி கூச்சல், குழப்பம், கலாட்டா எதுவும் இருக்காது. யாராவது பிரபு இறந்தால் அவருக்கு பதிலாக இன்னொரு பிரபுவை நியமிக்க தேர்தல் எதுவும் நடக்காது. "நான் ஏன் பிரபுக்கள் சபையில் சேர தகுதியானவன்?" என பிரபுக்கள் கவிதை, கட்டுரை என எழுதுவார்கள். அதை வைத்து ஒரு பிரபு தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆக ஜனநாயகம் என்பது மக்களின் சர்வாதிகாரமாக மாறாமல் தடுக்கும் மெக்கானிசம் உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது வியப்பான விசயம் தான்.
- நியாண்டர் செல்வன்






