என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது
    • புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்க்கு சுற்றுச்சுவர், அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது.

    இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழையமனை பகுதிக்கு நடைப்பயிற்சி பூங்காவும், செயல்படாத அங்கன்வாடி மையத் தினையும் செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் அப்பகு தியில் பழுதடைந்து இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட உத்தரவிட்டார்.

    கீழ்கன்றாம்பல்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாண வர்களுக்கு கழிப்பறை வசதி மற்றும் அதே பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தினையும் பார்வையிட்டார். 

    • வீடுகளில் கழிவுநீருடன் மழை நீர் புகுந்தது
    • மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 102.60 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூ, ர் ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மழை பெய்தது.

    திருப்பத்தூர் பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியது திருப்பத்தூரில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் நிரம்பி தெருக்களில் ஓடியது. திருப்பத்தூர் பெரியார் நகர், கலைஞர் நகர் டி எம் சி காலனி பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.

    அந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் குளம் போல் கழிவுநீர் தேங்கியது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் கழிவுநீர் புகுந்து துர்நாற்றமும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    பெரியார் நகரில் உள்ள சாலைகள் கழிவு நீர் கால்வாய் போல் காட்சி அளிக்கின்றன.

    மழைக்காலங்களில் பெரியார் நகர் பகுதியில் குடும்பத்துடன் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது நகராட்சி அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாய் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று காரணமாக மாங்காய் தோப்புகள் மாங்காய்கள் உதிர்ந்தன. இதேபோன்று கரும்பு நிலங்களில் சாய்ந்தது இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சந்தைகோடியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சந்தைக்கோடியூர் பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜோலார்பேட்டை பகுதி இருளில் மூழ்கியது.

    மேலும் தாமலேரிமுத்தூர் மற்றும் மூக்கனூர் பகுதியில் கோவில் திருவிழாவில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது பலத்த மழை பெய்தது காரணமாக மேற்கண்ட இரண்டு இடங்களில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டறம்பள்ளி பகுதியில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஏலகிரி மலையில் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆம்பூர் 5, ஆம்பூர் சர்க்கரை ஆலை 6, ஆலங்காயம் 20, வாணியம்பாடி 28, நாட்றம்பள்ளி 25, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதி 23, திருப்பத்தூர் 102.6, திருப்பத்தூர் மாவட்டத்தில் சராசரியாக 209 அளவு பதிவாகியுள்ளது.

    • 6 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் ரெயில் நிலையத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர்

    இந்த நிலையில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது போலீசார் சோதனை செய்தனர்.

    கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது ெதரிந்தது.

    பின்னர் ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி பஜனை கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊர் கவுண்டர் கே.ஜி. சரவணன், ஊர் தர்மகர்த்தா டி. சிவாஜி கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஊர் கவுண்டர்கள் முனிசாமி, சாமிக்கண்ணு, முன்னாள் தர்மகர்த்தா நடராஜன், வார்டு உறுப்பினர் கீதா ராஜசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இந்த விழாவில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புனித தீர்த்தம் பெற்று ராதா -ருக்மணி சமேத வேணுகோபால சுவாமியின் அருளைப் பெற்றனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் சேதம்
    • ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா சின்னவரிகம் ஊராட்சி ரங்காபுரம் பகுதி 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் உள்ளது.

    50 ஏக்கர் பரப்பளவில் வாழை, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவை நன்கு வளர்ந்துள்ளது. இதில் விவசாய நிலங்களில் திடீரென புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்துள்ளது.

    இதில் வாழை, கேழ்வரகு உள்ளிட்டவைகளை நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் உம்ராபாத் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கே பந்தர பள்ளி சம்பல் கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சசிகலா (வயது 40). இவர்களது குடிசை வீட்டில் குளவி ஒன்று கூண்டு கட்டி இருந்தது.

    இதனை கண்ட திருப்பதி அதை கலைப்பதற்காக பந்தத்தில் தீ பற்ற வைத்தார். குளவி கூண்டை கலைக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீ பிடித்தது. மளமளவென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் வீட்டின் உள்ளே இருந்த அனைவரும் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    தீ பற்றி எரிந்த குடிசை வீட்டை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். தீ அணைக்க முடியாததால் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் பகுதியில் இருந்து ஆலங்காயம் ஒன்றியம் பெத்த வேப்பம்பட்டு அருகே வரை உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் பல வருடங்களாக சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு குண்டும் குழியுமாக மாறி சாலையில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த சாலையில் உள்ள 600 மீட்டர் தொலைவானது 2 ஒன்றியங்களுக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் எந்த ஒன்றியம் அதை பணி மேற்கொள்வது என்ற இழுபறி இருந்து வந்தது. அப்பகுதியில் ரேசன் கடை திறப்பு விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ. க. தேவராஜ் ஆகியோரிடம் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனால் பழுதடைந்துள்ள சாலையை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இடத்தில் தகவல் அளித்து சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் என்பவருக்கு அறிவுறுத்தினர்.

    • ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சங்கீதாபாரி தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களின் மீது, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாபாரி பதிலளித்தார்.

    உறுப்பினர்கள் கூறும்போது ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் உரிய மரியாதை வழங்குவதில்லை, ஊராட்சி செயலாளர்கள் தன்னிச்சையாக செயல்படுவது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது, எனவே ஊராட்சி மன்றத் செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.

    அனைத்து ஊராட்சிகளிலும் இதே நிலை தொடர்வதாகவும், பல ஆண்டுகள் ஓரே ஊராட்சியில் ஊராட்சி செயலாளர்கள் பணிப்புரிவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் அவர்களை மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

    ஒரே ஊராட்சியில் பல ஆண்டு காலமாக பணி புரியும் ஊராட்சி மன்ற செயலாளர் பட்டியல் திரட்டப்பட்டு மற்ற ஊராட்சிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது
    • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் ராஜாபாளையம் என்ற இடத்தின் அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனை அகற்றி நெடுஞ்சாலையில் ஒப்படைக்க கோரியும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் அவர்கள் அகற்றாததால் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டனர்.

    அப்போது அப்பகுதிக்கு வந்த பள்ளியின் நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றுவதாக கூறிவிட்டு, பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அகற்றுவதற்கு தயங்குவதால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இடங்களை அகற்றும்படி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • நாளை சித்ரா பவுர்ணமி உற்சவப் பெருவிழா நடைபெற உள்ளது
    • பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சோதனை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள சரஸ்வதி ஆற்றங்கரையில் ஸ்ரீ சக்தி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    நாளை வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமி உற்சவப் பெருவிழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று மாலை கோவிலில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரிய குமார், வாணியம்பாடி போலீசார் ஆகியோர் இருந்தனர்.

    • பிரம்மோற்சவம் பெருவிழா முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூரில் அலர்மேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    பிரம்மோற்சவம் பெருவிழா முன்னிட்டு நேற்று மாலை சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    திருக்கல்யாணத்தை ஆம்பூர் சுற்று பகுதியை ேசர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 54 சதவீதம் குறைத்துள்ளது
    • போலீஸ் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

    குறிப்பாக, சாலையை கடப்பவர்கள், அதிகப்படியான வேகத்தில் செல்லும் வாகனங்கள், எதிர் திசையில் வாகனங்களில் செல்வது போன்ற காரணங்களால் 80 சதவீதம் விபத்துகள் ஏற்படுவதும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அதிக விபத்துகள் ஏற்படுவதும் தெரியவந்தன.

    இதன் தொடர்ச்சியாக, விபத்துகளை குறைக்கும் பணியாக நடத்தப்பட்ட ஆய்வில் 51 இடங்களில் அதிக விபத்துகள் நடைபெறுவது கண்டறியப்பட்டன.

    இதில், பச்சூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பச்சூரில் சாலையை கடக்கும் வாகனங்களால் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    அங்கு, சாலை தடுப்புகள் அமைத்து வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதற்கு கைமேல் பலனாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரே ஒரு சிறு விபத்து கூட பச்சூர் பகுதியில் நடைபெறவில்லை.

    அதேபோல், விபத்துகளை குறைப்பதில் திருப்பத்தூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    இதுகுறித்து, திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள் குறித்து விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் நடத்திய ஆய்வில் 37 இடங்கள் முதலில் அடையாளம் காணப்பட்டது.

    அதன் பிறகு ஆய்வில் மேலும் 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டு மொத்தம் 51 இடங்கள் கண்டறியப்பட்டன.

    இந்த பகுதிகளில் வேகத்தடை அமைப்பது, எச்சரிக்கை பலகை வைப்பது, பிரதிபலிப்பான்கள், சாலைகளில் தடுப்புகள் வைப்பது, சாலைகளை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ள கலெக்டருக்கு கருத்துரு வழங்கியுள்ளோம்.

    அனைத்துத்து றைகளின் பங்களிப்புடன் இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். மாலை 4 மணிக்கு பிறகு விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களில் வாகன சோதனை, போலீஸ் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    விபத்துகளை குறைப்பதில் காவல் துறையினர் மட்டுமில்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் கட்டாயம் ெஹல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். எதிர் திசையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துடன் நடப்பாண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விபத்துகளில் உயிரிழப்பு 54 சதவீதம் குறைத்து மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளோம் என்றார்.

    ×