என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • விமானத்தில் 176 பயணிகள் பயணம் செய்தனர்.
    • ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    தற்போது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை முதல் துவங்கியது.

    இந்த விமானம் ஆனது நேரடியாக திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு இயக்கப்படும். இதன் முதல் சேவை துவக்கமானது நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த சேவையானது வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பேங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளது.


    இந்த விமான சேவை துவக்க நாளான நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த விமானமானது மேற்கண்ட மூன்று நாட்களில் இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடைந்து மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பேங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு பேங்காக்கில் இருந்து திருச்சி வந்து விமானத்தில் 46 பயணிகளும் மீண்டும் திருச்சியில் இருந்து பேங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் பயணம் செய்தனர்.

    • ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.
    • சஸ்பெண்டு நடவடிக்கை பாயும்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரத்னா ஓட்டலில் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முட்டைகளைக் கொண்டு ஆம்லெட், ஆப் பாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்டின் ஜோ தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஓட்டலின் சமையலறையில் தமிழக அரசின் சார்பில் விநியோகம் செய்யப்படும் 111 முட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் ஒஒட்டல் உரிமையாளரான தேவரப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (46) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ரத்தினம் மதுராபுரி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் வசந்தகுமாரி (58) என்பவரிடமிருந்து பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளரான வசந்த குமாரியையும் துறையூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதை தொடர்ந்து வசந்தகுமாரி திருச்சி மகளிர் சிறையிலும், ரத்தினம் துறையூர் கிளை சிறையிலும் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் ஓட்டலை ஆய்வு செய்ததில், சுகாதாரமற்ற முறையில் ஒட்டலை பராமரித்தது தெரியவந்தது.

    இதை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினர் வட்டாட்சியர் உதவியுடன் ஓட்டலை மூடி சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே அரசின் இலவச முட்டைகள் ஓட்டளுக்கு சப்ளை செய்யப்பட்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    இதனால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

    • தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
    • ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

    துறையூர்:

    தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளித்தல், முன்பருவ கல்வி, சுகாதாரம், தன் சுத்தம், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் மதிய உணவு உடன் இலவசமாக முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இந்த முட்டைகளை அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து முட்டைகளை தனியார் ஓட்டலுக்கு விற்பனை செய்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் ஆகியோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விவரம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த ஓட்டலில் சோதனை நடத்தினர். பின்னர் தாசில்தார் மோகன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் துறையூர் தனியார் ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து இந்த முட்டைகள் ஓட்டலுக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி(58) என்பவர் ஓட்டல் உரிமையாளர் ரத்தினம்(46) என்பவரிடம் முட்டைகளை விற்றுள்ளார்.

    இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்தீன் ஜோ துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி, ஓட்டல் உரிமையாளர் ரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்? யார் உள்ளனர்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில்' இதுபோன்ற முறைகேடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையிலான வருகையினை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஓட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. துறையூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் திருச்சி துறையூரில் அரசு முட்டைகளை பயன்படுத்தி வந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கன்வாடியில் இருந்து அரசு முட்டைகளை விற்றவர் யார், விற்பனை செய்தவர் இந்த ஓட்டலுக்கு மட்டும் தான் விற்றார்களா? இல்லை வேறு ஓட்டலுக்கும் விற்பனை செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஓட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஓட்டல் உரிமையாளரிடம் அரசு முட்டைகளை அவருக்கு விற்றது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கூறுகையில்,

    அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

    • தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
    • சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

    துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் முட்டை கள்ளச்சந்தையில் விற்பனையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நா.த.க நிர்வாகி அருணகிரி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
    • தாக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து ₹20,000 பணம் மற்றும் செல்போனை அருணகிரி பறித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி மதுரையில் தங்கியுளளார். இவர்கள் இருவரையும் பெண்ணின் உறவினர்கள் தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளரும் வழக்கறிஞருமான அருணகிரி என்பவர் தனது நண்பர்களுடன் மதுரைக்கு சென்றுள்ளார்.

    மதுரையில் இருந்த சந்தோஷை காரில் கடத்திய அருணகிரி அவரை கொடூரமாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.20,000 பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளார். பின்னர் சந்தோஷை வழியிலேயே இறக்கி விட்டு பெண்ணை அவர்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.

    காயமடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறை அருணகிரி, பிரவீன், கார்த்தி ஆகிய 3 பேரை இன்று கைது செய்தது. இவர்கள் மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரையும் செப்டம்பர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை.
    • பயணிகள் உயிர் தப்பினர்.

    திருச்சி:

    ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. அங்குள்ள நடைமேடை பகுதியில் எஞ்சின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

    அப்போது அந்த ரெயிலின் கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. இதைக்கண்டு, சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளும், ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் உயிர் தப்பினர்.

    உடனே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலைய பொறியாளர்கள் விரைந்து வந்து ரெயில் பெட்டிகளை இணைத்தனர்.

    அதன்பிறகு ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பெட்டிகள் இணைப்பு பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை சென்றடைந்தது. ரெயிலில் இருந்து பெட்டிகள் தனியாக கழன்று ஓடிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூட்டணி ஆட்சி என்பது விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான ஒரு குரல்.
    • தனி மெஜாரிட்டியாக பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மது ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு தான் பொறுப்பு உள்ளது என்பது போல ஒரு பார்வை இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47 அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி தருகிறது.

    இது தொடர்பாக 2-வது 5 ஆண்டு காலத்திலும் 3-வது ஐந்தாண்டு காலத்திலும் விரிவாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலே பேசப்பட்டிருக்கிறது. ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டது. அந்த குழு ஏராளமான பரிந்துரைகளையும் தந்திருக்கிறது.

    அந்த குழு பரிந்துரையில் மிக முக்கியமானது மதுவிலக்கு தொடர்பான சட்டம் இயற்ற வேண்டும், 1958-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குள்ளாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பதை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க கூடாது. இதனை மக்கள் பிரச்சனையாக பார்க்க வேண்டும். மது என்பது சமூக பிரச்சனையாகவும், தேசிய பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பலியான 69 பேரும் தலித்துகள் கிடையாது. பல சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். எனவே மதுவினால் எல்லா சமூகத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் பாரமாக இருக்கிறார்கள். எனவே 100 சதவீத தூய நோக்கத்தோடு இந்த மது ஒழிப்பு மாநாட்டை நாங்கள் முன்னிறுத்துகிறோம். இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பதை மறுபடியும், மறுபடியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    1977ல் இருந்து டெல்லியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தனி மெஜாரிட்டியாக பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடப்பது ஒன்றும் தவறல்ல. அப்படி ஒரு கோரிக்கை எழுப்புவதும் தவறில்லை.

    2016ல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் ஒரு கருத்தரங்கை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக ஒரு புத்தகமும் வெளியிட்டு உள்ளோம். இந்த கருத்து யாருக்கும் எதிராகவும், யாரையும் மிரட்டுவதற்காகவும் சொல்லப்படுகிற கருத்தல்ல. ஜனநாயக ரீதியாக எழுப்ப வேண்டிய கோரிக்கைகள். அதிகாரமில்லாதவர்களின் குரல் இது. விளிம்பு நிலையில் கிடக்கும் மக்களின் குரல் இது.

    அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகமும் கூட. கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது இயல்பாக மக்களிடம் இருந்து எழும் குரலே தவிர, இது விடுதலை சிறுத்தைகள் ஏதோ திட்டமிட்டு காய்களை நகர்த்துகின்றன என்பது அல்ல. நாங்கள் எந்த காயையும் நகர்த்தவில்லை. ஓர் இடத்தில் அதிகாரத்தை குவிப்பது இல்லை ஜனநாயகம். அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதுதான் ஜனநாயகம். நான் அரசியலில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த போதே எழுப்பிய முழக்கம், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதுதான்.

    அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியிடம் மட்டும் இருக்க கூடாது. கூட்டணி ஆட்சி என்பது விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான ஒரு குரல். கூட்டணி ஆட்சி கோரிக்கை குறித்து 2026 தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணன்-தம்பிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • அண்ணன், தம்பி 2 பேரும் சவுந்தர் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினர்.

    திருச்சி:

    திருச்சி கீழதேவதானம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடை மகன்கள் ரமேஷ் (வயது 50), பிருத்விராஜ் (48). திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழுவில் துணை அமைப்பாளராக பிருத்விராஜ் பொறுப்பு வகித்து வந்தார். பிருத்விராஜூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு பிருத்விராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த தேர்தல் ரத்து ஆனதுடன், மீண்டும் நடந்த தேர்தலில் அந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் நேற்று காலை அண்ணன்-தம்பிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் பிற்பகலில் வீட்டின் 3-வது மாடியில் உள்ள தனி அறையில் அண்ணன், தம்பி 2 பேரும் சவுந்தர் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினர்.

    அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ரமேசும் அவருடைய நண்பர் சவுந்தரும் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். மாலையில் நீண்ட நேரமாகியும் பிருத்விராஜ் கீழே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாடிக்கு சென்று பாா்த்தனர்.

    அங்கு பிருத்விராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் உடற்பயிற்சி செய்யும் கர்லா கட்டை ரத்தக்கறையுடன் கிடந்தது. உடனே இதுபற்றி கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாடியில் அமர்ந்து 3 பேரும் மது அருந்திய போது, தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ரமேஷ் அங்கிருந்த கர்லா கட்டையால் தனது தம்பி பிருத்விராஜை அடித்து கொலை செய்ததும், பின்னர் ரமேசும், சவுந்தரும் அங்கிருந்து தப்பிச்சென்றதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பிருத்விராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்தநிலையில் பிருத்விராஜின் அண்ணனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    தேர்தல் தொடர்பான முன் விரோதத்தில் தம்பியை கொலை செய்ததாக கைதான பிருத்விராஜின் அண்ணன் ரமேஷ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவருடைய நண்பரை தேடி வருகிறார்கள்.

    • யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை மதியம் நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி - புரட்டாசி மாதம் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு யாகசாலை வந்தார். 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார். இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும், இதனால் இந்நிகழ்ச்சி பூ பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூழிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம் பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு மேற்கில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    இந்த பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

    பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும், எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

    • திடீர் நிபந்தனை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் சிறார்கள் தவித்தனர்.
    • பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளும் தளர்த்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    திருச்சி:

    திருச்சியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில், சிலம்ப போட்டியில் பங்கேற்க 40 கிலோ எடை கட்டாயம் என திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த திடீர் நிபந்தனை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் சிறார்கள் தவித்தனர்.

    திடீர் நிபந்தனையால் விளையாட முடியாத சிறார்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் சிறார்களின் பயிற்சியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளும் தளர்த்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளை தளர்த்தகோரி போராடிய நிலையில், நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது. இதையடுத்து சிறார்கள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

    ×