என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கீரமங்கலம் பகுதியில் எலுமிச்சம்பழம் ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், பேற்பனைக்காடு, நெய்வத்தளி, பெரியாளூர், பாண்டிக்குடி உள்பட கீரமங்கலத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 10 வருடங்களாக தென்னை, பலா உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 5 டன் முதல் 10 டன் வரை உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுரை, கோயம்புத்தூர், கேரளா உள்பட பல பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கைகாட்டி, மாங்காடு பூச்சிகடை, மறமடக்கி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகள் மூலமாகவும், தனியாகவும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அங்கு குளிர்பான கடைகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.20-க்கும் ரூ.10-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. சில நாட்களாக ரூ.10-க்கும் கீழே குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ ரூ.7-க்கும் ரூ.5-க்கும் கொள்முதல் செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது குளிர் பானங்களின் விற்பனை குறைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக படிப்படியாக விலை குறைந்து கிலோ ரூ.10-க்கும் கீழே விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

    இதனால் தோட்டங்களில் பழங்கள் சேகரிக்கும் கூலிக்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை என்றனர். எலுமிச்சம்பழம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கூறுகையில், கீரமங்கலம் சுற்றியுள்ள விவசாயிகள் கொண்டு வரும் எலுமிச்சம்பழங்களை அன்றாடம் வெளிச்சந்தை விலையை வைத்தே கொள்முதல் செய்கிறோம். கடந்த சில நாட்களாக கொள்முதல் விலையைவிட வெளியூர்களில் விற்பனை விலை குறைவதால் பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனாலும் விவசாயிகளிடம் கொள்முதலை நிறுத்தாமல் வாங்கி வருகிறோம் என்றனர்.

    • வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார்.
    • போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). என்ஜினீயரான இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரது ஓழுங்கினத்தால் அந்நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் ஊருக்கு வந்து விட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். 2 பேரும் கருத்து வேறுபாட்டால் விஜயராகவனை பிரிந்து சென்றனர்.

    பின்னர் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் அவரது வீட்டின் அருேக கழுத்து மற்றும் வயிற்று பகுதி அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதில் கொலை குறித்து உடனடியாக துப்பு துலங்கியது.

    விஜயராகவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சோமசுந்தரம் (60) என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், விஜயராகவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    அதில் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். அடிக்கடி இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம் போல் நேற்று மதியம் என் வீட்டின் அருகில் அமர்ந்து இருவரும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார். நான் அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் ஆபாச அர்ச்சனையை அவர் விட வில்லை. இதில் பொறுமை இழந்த நான்

    கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பிச் சென்றேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார். போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • புதுக்கோட்டையில் காய்கறி வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சேங்கைதோப்பு பகுதியை சோ்ந்தவர் சுகுமாறன் (வயது 50). இவர் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தற்கொலை செய்த சுகுமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது
    • எம்.பி. திருநாவுக்கரசர் தலைமையில் ஆலோசனை

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தலைமையில் , மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் எம்.பி. கூறும்போது,புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் 45 திட்டப் பணிகள் விபரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரம், செலவு செய்ய ப்பட்ட நிதி விபரம், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்றப் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. என்று அவர் கூறினார்.இக்கூட்டத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

    • புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்கள்.வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் 16 பயனாளிகளுக்கு பெட்டிக்கடை, மளிகை கடை, உணவகம், தையற்கடை, ஜெராக்ஸ்கடை, பாலகம் உள்ளிட்டவைகளை அமைக்க ரூ.8.40 லட்சம் மதிப்பில்நுண்நிறுவன நிதிக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட செயல் அலுவலர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்உலகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர் பாஷா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அறந்தாங்கி அருகே புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • 10 கிலோ மீட்டர் தூரம் மேளதாள முழக்கத்துடன் மண் குதிரைகளை சுமந்து வந்த பொதுமக்கள்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேங்கூர் பெரியாண்டவர் அய்யனார் ஆலயத்தில் ஆண்டுதோறும் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். நல்ல மழை பெய்து உலக மக்கள் செழிப்பாக வாழ வேண்டி பக்தர்கள் 10 நாட்கள் விரதமிருந்து வழிபாட்டில் ஈடுபடுவர். இந்தாண்டு நடைபெற்ற விழாவில் 284 மண்குதிரைகள் 600 மதளைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அறந்தாங்கி சோதனைச் சாவடி அருகே உள்ள வேளார் தெருவில் மண்குதிரைகள் மற்றும் மதளைகள் செய்யப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் ஊர்வலமாக தோளில் சுமந்து சென்றனர். அறந்தாங்கியிலிருந்து வேங்கூர் பெரியாண்டவர் அய்யனார் ஆலயம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் மேளதாள முழக்கத்துடன் புரவி எடுப்பு ஊர்வலம் நடைபெற்றது. புரவி எடுப்பு விழாவில் பக்தர்கள் களைப்படையாமல் இருக்க வழி நெடுகிலும் தண்ணீர் , குளிர்பானங்கள் போன்றவற்றை பொதுமக்கள் வழங்கினர்.

    • 11.15 கோடி ரூபாய் அளவிலான சாலை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆலங்குடியில் நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம், வெள்ளாகுளம், சிக்கப்பட்டி, மணவாளன் நகர் போன்ற பகுதிகளில் சாலையை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் புதிய சாலை பணிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் அடிக்கல் நாட்டினார். சுமார் 11.15 கோடி மதிப்பீட்டில் செப்பனிடப்பட உள்ள பணிகளை தரமானதாகவும் விரைவாகவும் முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் கொத்தமங்கலத்தில் அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை சுற்றுச்சூழல் அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பள்ளத்திவிடுதி ஊராட்சி தலைவர் நாராயணன், கொத்தமங்கலம் ஊராட்சி தலைவர் சுஜாதா வளர்மதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செங்கோடன், செங்கோல், சையது இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாங்காட்டில் 15 மாட்டு வண்டிகளில் தாய் மாமன் சீர் வரிசை வந்தது
    • பாரம்பரியம் மாறாத பாசம் என பொதுமக்கள் வியப்பு

    ஆலங்குடி,

    தமிழக கிராமங்களில் குழந்தைகள் காது குத்து, பூப்பெய்தல் என்றாலே பரிசு பொருட்கள், மொய் வைப்பது வழக்கம். குறிப்பாக தாய்மாமன் சீர் வரிசை எவ்வளவு என்று ஆர்வமாக பார்ப்பார்கள். தாய்மாமன் சீர் வரிசை என்பது முக்கிய கௌரவம் என்பதால், சீர் வரிசை தட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சீர்வரிசை தட்டுகளை உறவின, ஊர்கார பெண்கள் சுமந்து ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம். ஆனால் மாட்டுவண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தது அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.

    ஆலங்குடி அருகே மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரின் மனைவி நவநீதா. என்ஜினீயரான இளையராஜா குழந்தைகளுக்கு மாங்காடு மாரியம்மன் கோயில் மண்டபத்தில் காதணி விழா நடைபெற்றது. இவர்களது உறவினர்களான ஆண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாயழகு குடும்பத்தினர் மாமன் சீர்வரிசை கொண்டு வந்தனர். பாரம்பரிய முறைப்படி தாம்பூல தட்டுகளில் சீர் வரிசையை, 21 மாட்டு வண்டிகளில் எடுத்துக்கொண்டு, உறவினர்கள் புடைசூழ மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இவ்வாறு 3 கிமீ தூரம் மாமன் சீர் வரிசை ஊர்வலம் நடைபெற்றது. 21 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் வியப்பாக பார்த்து பாரம்பரியம் மாறாத பாசம் என்று பொதுமக்கள் வியப்படைந்தனர்.

    • 15 ஆண்டுகளாக வீட்டில் மின் இணைப்புக்காக கூலித் தொழிலாளி போராடுகிறார்
    • 15 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராமானுஜம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
    ஆலங்குடி,


    புதுக்கோட்ட மாவட்டம் ஆலங்குடி தேரோடும் கீழவீதியை சேர்ந்தவர் ராமானு ஜம் (வயது 44) கூலித் தொழிலாளி. இவருக்கு உமா ராணி (35) என்ற மனைவி , கலையரசன் (13) தீனதயாளன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் அரசு பள்ளியில் 8 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் தீனதயாளனுக்கு மூளைக்கு செல்லும் நரம்பில ரத்தக் கசிவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில லட்சங்களை செலவழித்து விட்டு இப்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மாதந்தோறும் மகனின் சிகிச்சைக்கு மட்டும் ரூ. 6 ஆயிரம் செலவாகிறது. கூலித் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும் மருத்துவமனை செலவுக்கு சென்று விடுகிறது. இதற்கிடையே 15 ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ராமானுஜம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் மின் இணைப்பு கோரி மின்வாரிய அலுவ லகத்தை ராமானுஜம் நாடி யுள்ளார். தாசில்தாரிடம் தடையின்மை சான்று பெற்று விண்ணப்பிக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தாலுகா அலுவலகத்தில் மனு செய்த ராமானுஜத்துக்கு விடிவு பிறக்கவில்லை. ராமானுஜம் குடியிருக்கும் பகுதி குளத்துவாரி புறம்போக்கு என்பதால் புதிய மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் மறுத்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே ராமானுஜம் கடந்த மார்ச் மாதம் அந்த பகுதியில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் மெய்யநாதனிடம் தனது கஷ்டநிலையை விவரித்துள்ளார். ஆனால் இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை.

    இது குறித்து ராமானுஜம் கூறுகையில் :- நான் குடியிருக்கும் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. என் வீடு தவிர்த்து அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. என் அண்ணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து நடையாய் நடக்கின்றேன். ஆனால் இந்த ஏழையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரவு நேரங்களில் உடல்நிலை சரியில்லாத மகனை வைத்துக் கொண்டு தூக்கமின்றி தவிக்கிறோம்.

    என்னை மட்டும் புறக்கணிப்பது ஏன் என்று தெரிய வில்லை. கடந்த வாரம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்று கலெக்டரிடமும் மனு அளித்து விட்டு வந்தேன். எங்கள் வாழ்வில் எப்போது இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.

    • புதுக்கோட்டையில் கம்பன் விழா முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • கம்பன் பெருவிழா வருகின்ற 14-ந் தேதி தொடங்கி 23 -ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் 48-ம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகினற 14-ந் தேதி தொடங்கி 23 -ந் தேதி வரை 10 நாட்கள் கம்பன் கழகத் தலைவரும் , தொழிலதிபர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழவதிலிருந்தும் சிறப்பு பேச்சாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளாகள் என பலர் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். தினசரி மாலை நடைப்பெறும் நிகழ்ச்சியில் பல்வேறு இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெறவுள்ளது. இப்பெருவிழாவுக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி  நகர் மன்றத்தில் நடைபெற்றது.

    கம்பன் கழகத் துணைத் தலைவர்கள் எம் ஆர் எம் முருகப்பன், பேக்கரி மகராஜ் அருண் சின்னப்பா, பொருளாளர் சி.கோவிந்தராஜன்,  துணைப் பொருளாளர் கரு. ராமசாமி, செயலாளர் ரா. சம்பத் குமார், கூடுதல் செயலாளர் புதுகை ச.பாரதி, இணைச் செயலாளர்கள் காடுவெட்டி குமார், பேராசிரியர் முருகையன், ரா.கருணாகரன், விழா குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ரவிச்சந்திரன் , நிலவை பழனியப்பன் , காந்திநாதன், ஒப்பந்தக்காரர் கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முத்துக்குமார் குருக்கள் நடத்தி வைத்தார்.



    • கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் தலைமை தாங்கினார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வெட்டன் விடுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான தவ பாஞ்சாலன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்எ.ஸ். பாரதி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆர் எஸ் பாரதி பேசும்போது, கலைஞரின் 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அவர் ஆற்றிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், தமிழகத்திற்கு மத்திய அரசிடம் பெற்றுத் தந்த உரிமைகளையும் எடுத்துக் கூறினார். மேலும் முன்னால் அண்ணா திமுக அமைச்சர்களின் ஊழல்களையும் அதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனையையும் எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி துணை தலைவர் கவிச்சுடர் கவிதை பித்தன், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, எஸ்.எஸ்.கருப்பையா சந்திரசேகரன், கரம்பக்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மணமடை முத்துகிருஷ்ணன் மாவட்ட மகளிர் அணி தலைவியும் கரம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவரும்மான மாலா ராஜேந்திர துரை அரசு ஒப்பந்தக்காரர் கருக்கா குறிச்சி பரிமளம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தியாக இளஞ்செழியன் நன்றி உரையாற்றினார்.

    • பணியின்போது மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு 9.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
    • காவலர் நவநீதகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்தார்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்தவர் காவலர் நவநீதகிருஷ்ணன், இவர் கடந்த மே மாதம் கல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நவநீதகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில், 2013-ம் ஆண்டு அவரது பேட்ஜை சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சகக் காவலர்கள் வாட்ஸ்ஆப் குழு மூலம் 9 லட்சத்து 75 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். திரட்டிய நிதியை நவநீதகிருஷ்ணனின் மகன்கள் மிதுன்சக்கரவர்த்தி,கீர்த்திவாசன் ஆகிய இருவர் பெயரிலும் தலா நான்கு லட்சத்து 75 ஆயிரம் தொகையை தபால் நிலையத்தில் செலுத்தி அதற்கான வங்கி புத்தகத்தையும், மீதமுள்ள ரொக்கப் பணத்தையும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சகக்காவலர்கள் 9 லட்சத்து 75 ஆயிரம் நிதியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




    ×