என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுத்திட, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இதுவரை 75 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

    ஒமைக்ரான் என்ற கொரோனா புதிய வகை தொற்றினால் 3-வது அலை வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை தடுத்திட தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 71, உட்பிரிவு 1ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இப்பொதுசுகாதார சட்டப்பிரிவின்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மற்றவர்களுக்கு கொரோனா நோயினை பரப்பும் வகையில் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். எனவே இம்மாதம் 11-ந் தேதிக்குள் முதல் தவணை போடாத அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    பொது இடங்களுக்கு செல்பவர்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை கையிலோ அல்லது கைபேசியிலோ வைத்திருக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விசாரணைகள் மற்றும் விவரங்களுக்கு 9498746781, 9345333899 என்ற செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சேக்முகமது ( வயது 35). இவர் சம்பவத்தன்று இரவு புதுக்கோட்டையில் இருந்த ஆலங்குடி வழியாக கறம்பக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மரவம்பட்டி என்ற இடத்தில் வரும்போது திடீரென நாய் சாலையின் குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறிய சேக்முகமது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பகுடிபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேக் முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே கண்மாயில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பத்தரசர் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (வயது 51). விவசாயியான இவர், தனது வீட்டருகே உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தனது 11 வயது மகன் சோமையாவையும் அழைத்து சென்று, அவனை குளிக்க வைத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.

    பிறகு அவர் கண்மாயில் இறங்கி குளித்துள்ளார். அப்போது திடீரென கைலாசம், நடு கண்மாயின் ஆழப்பகுதியில் மூழ்கிய நிலையில் கையை மட்டும் அசைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், கைலாசத்தை காப்பாற்ற முயற்சி செய்தும், முடியாததால், போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை கைலாசம் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். உடலை பெற்ற போலீசார், அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
    விராலிமலை அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    விராலிமலை தாலுகா, பூதகுடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி தலைமையிலான போலீசார் அங்குள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பூதகுடி கல்லுப்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி (வயது 40) மற்றும் சேட்டு (55) ஆகிய இருவரும் அவர்களது பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை கத்தியால் தாக்கி, கத்தி முனையில் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது59). பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி சாந்தி.இந்த தம்பதியருக்கு கற்பகம் (31) என்ற மகளும், விக்னேஷ் (28) என்ற மகனும் உள்ளனர்.

    இதில் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. விக்னேஷ் சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நாளை மறுதினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சுந்தரலிங்கம் தனது மனைவியுடன், சென்று வல்லம்பக்காட்டில் உள்ள மகள் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

    பின்னர் அவர் மட்டும் தனியாக மூக்குடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அப்போது இரவு 8 மணி அளவில் தனியாக இருந்த சுந்தரலிங்கத்திடம் 3 இளைஞர்கள் வந்து முகவரி கேட்டு விசாரித்துள்ளனர்.

    இதையடுத்து அவர் பதில் கூறிக் கொண்டிருக்கையில், திடீரென ஒருவன் கையில் இருந்து மயக்கப் பொடியை சுந்தரலிங்கம் முகத்தில் தூவினான். இதில் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

    பின்னர் கொள்ளையர்கள் வேகவேகமாகபடுக்கை அறைக்கு சென்றனர். மேலும் கொள்ளையன் ஒருவன் சுந்தரலிங்கத்தின் கையில் கத்தியால் கீறிவிட்டு பீரோ சாவியை கேட்டான். அவர் கொடுக்க மறுக்கவே அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளான்.

    இதனால் பயந்துபோன அவர் பீரோ சாவியை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பீரோவில் இருந்த ரூ. 9 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடம் பிரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சுந்தரலிங்கத்தை மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்தீபன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை கத்தியால் தாக்கி, கத்தி முனையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் செங்கப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து செங்கப்பட்டியை சேர்ந்த பெட்டிக்கடைகாரர் சொக்கலிங்கம் (வயது 59), பெரியசெங்கப்பட்டியை சேர்ந்த சின்னக்கண்ணு (75) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் நடத்திய சோதனையில் இலுப்பூர் மேலப்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (42), மலைக்குடிப்பட்டியை சேர்ந்த மதார் (65) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    கந்தர்வகோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே உள்ள மல்லிகை நத்தம் கிராமத்தை சேர்ந்த பழனியாண்டி மனைவி இந்திரா (வயது 40). இவர் கடன் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த இந்திரா நேற்று முன்தினம் இரவு விஷத்தை தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனியாண்டி அளித்த புகாரின்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 2 பவுன் சங்கிலி-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    விராலிமலை தாலுகா, நீர்பழனி ஊராட்சி காரப்பட்டு காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 33). இவரது வீடு அப்பகுதியில் தனியாக உள்ளது. நேற்று முன்தினம் வெள்ளைச்சாமி மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று இருந்தனர். அன்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளைச்சாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது. இதேபோல, அன்றைய தினம் காரப்பட்டு காலனி அருகே உள்ள சின்ன மூலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லையாவின்(60) வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் திருட்டு சம்பவம் நடந்த 2 வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து தனித்தனியே வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விராலிமலை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு ராஜகிரி பெரியகுளம் நிரம்பியது. பட்டாசு வெடித்து இளைஞர்கள் கொண்டாடினர்.
    ஆவூர்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை இயல்பை விட அதிகமான அளவில் பெய்து வருகிறது. அதேபோல விராலிமலை ஒன்றிய பகுதிகளிலும் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள அனைத்து குளம், குட்டை, ஏரி, கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உபரி நீரானது கலிங்குகள் வழியாக கடந்த 2 வாரங்களாக வெளியேறி வருகிறது.

    இதில் விராலிமலை ஒன்றியம் ராஜகிரி பெரியகுளம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி கலிங்கு வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளமும், 750 ஏக்கர் பரப்பளவும் 4 குழுமிகளும் கொண்ட ராஜகிரி பெரிய குளத்தின் மூலம் சுமார் 1,300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பியது. இந்த வருடம் பெய்த தொடர் மழையால் இலுப்பூர் மற்றும் மலைக்குடிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி அதன் உபரி நீரானது காட்டாறு வழியே ராஜகிரி பெரிய குளத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அதிக அகலமும் ஆழமும் கொண்ட ராஜகிரி குளமானது நிரம்பி தற்போது அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீரானது சுமார் 300 அடி நீளமும், 40 அடி ஆழமும் கொண்ட கலிங்கு வழியாக வெளியேறி வருகிறது.

    வெளியேறும் உபரி நீரானது குற்றால மலைப்பகுதியில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி போல கொட்டி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி நீர்வீழ்ச்சி போல வெளியேறும் உபரி நீரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    இளைஞர்கள் அங்கு பட்டாசு வெடித்தும், ஆனந்த குளியல் போட்டும் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக ஊர் பொதுமக்கள் சார்பில் கலிங்கில் இருந்து வெளியேறும் உபரி நீரில் மலர் தூவி வரவேற்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இந்த குளத்தின் 40 அடி உயர கலிங்கு போல புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    விராலிமலை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு கொடும்பாளூர் பெரிய குளம் நிரம்பியது. பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முன்பு இல்லாத வகையில் இந்த வருடம் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் விராலிமலை வட்டார பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்கள் நிரம்பி கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பெரிய குளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பி நேற்று காலை கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது.

    இதையறிந்த அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்ததுடன் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்கும் விதமாக மலர்கள் தூவியும், பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் ஊர் காவல் தெய்வத்திற்கு தேங்காய் உடைத்து வழிபட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    வடகாடு அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே சூரன்விடுதி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர் என்று கூறி வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×