என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    அறந்தாங்கி அருகே கண்மாயில் குளித்த விவசாயி நீரில் மூழ்கி பலி

    அறந்தாங்கி அருகே கண்மாயில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பத்தரசர் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (வயது 51). விவசாயியான இவர், தனது வீட்டருகே உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தனது 11 வயது மகன் சோமையாவையும் அழைத்து சென்று, அவனை குளிக்க வைத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.

    பிறகு அவர் கண்மாயில் இறங்கி குளித்துள்ளார். அப்போது திடீரென கைலாசம், நடு கண்மாயின் ஆழப்பகுதியில் மூழ்கிய நிலையில் கையை மட்டும் அசைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், கைலாசத்தை காப்பாற்ற முயற்சி செய்தும், முடியாததால், போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை கைலாசம் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். உடலை பெற்ற போலீசார், அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
    Next Story
    ×