என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு உரங்களுடன் இடுபொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கபடும்
- வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான 1312 மெட்ரிக் டன் யூரியா தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் வந்துள்ளது. இவைகள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள சில்லரை உர விற்பனையாளர்கள், உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.
உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது.மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், உரங்களை விற்பனை செய்வதும் கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
- கடலில் மீன்பிடிக்க சென்ற முதியவர் பலியானார்
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
மணமேல்குடியை அடுத்த பத்தகாடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் நேற்று அதிகாலை அம்மாபட்டிணம் கடற்கரை கிராமத்திலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்றார். இவர் கைவீச்சு வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது உடல் மணமேல்குடி கோடியக்கரையில் மிதப்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
- சிறப்பு காவல் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கே.புதுப்பட்டி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சிறப்பு காவல் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏம்பல் பகுதியில் உள்ள மதகம் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 44), இரும்பநாட்டை சேர்ந்த ஐயாசாமி (77), கொங்கன் தெருவை சேர்ந்த பாண்டியன் (47) ஆகியோர் தங்களது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதம் (44), மாங்காடு பூச்சிக்கடை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
- பொதுக்கூட்டம் தவபாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மாங்கோட்டை ஊராட்சி கீழப்பட்டியில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் புதுக் கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா–ளர் வழக் கறிஞர் கே.கே.செல்ல–பாண்டியன் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறினார்.
மேலும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, தலைமைக்கழக பேச்சா–ளரும், தலைமை கழக பாடகருமான ஜக்கரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ்.கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் என்.ஆர்.பரிமளம், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் மலையூர் ராமசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சிவபெருமாள் நன்றி கூறி–னார்.
- அறந்தாங்கி அருகே சிறைக்கு சென்று வந்தவர் மன உளைச்சலில் தற்கொலை செய்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (35) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதில் பழனிச்சாமி மீது பி.சி.ஆர். வழக்கும், ரவிக்குமார் மீது அடிதடி வழக்கும் போடப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். வழக்கு போடப்பட்ட பழனிச்சாமி அறந்தாங்கி காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 10 தினங்களாக சிறையிலிருந்தார். அவர் நேற்று ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இந்நிலையில் சிறைக்கு சென்று வந்த அவமானம் தாங்காமல் மன உளைச்சலுக்கு ஆளான பழனிச்சாமி நேற்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பழனிச்சாமியின் சாவிற்கு காரணமாவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகம் முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 1,700 கி.மீ. தூரத்தை 18 நாட்களில் கடந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த புறா
- டெல்லியில் இருந்து அறந்தாங்கி வந்தது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி அருகே ரத்தினக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் கடந்த 25 ஆண்டுகாலமாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஆறு வருடமாக பந்தைய புறாக்களையும் வளர்க்க தொடங்கினார். பந்தய புறாக்களை அவ்வப்போது குறிப்பிட்ட தூரம் வரை கொண்டு சென்று விட்டு விட்டு அதனை வீடு தேடி வருவதற்கான பயிற்சிகளையும் அளித்து வந்துள்ளார்.
அவ்வாறு பயிற்சி பெற்ற புறாக்களில் சுரையாதியாப்ஜி என்ற புறா மிகுந்த சுறுசுறுப்புடன் எவ்வளவு தொலைவில் விட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு வந்தடைந்துள்ளது. இதனால் இப்புறாவானது பல இடங்களில் வெற்றிபெற்றும், அதற்கான சான்றிதழ், கோப்பைகளும் பெற்றுள்ளது. இந்நிலையில் டி.ஆர்.பி.எப். என்ற அமைப்பின் சார்பில் டெல்லியில் சான்சியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புறா பந்தையத்தில் சுரையாதியாப்ஜி புறா போட்டியில் கலந்து கொண்டுள்ளது.
இப்போட்டியில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலிருந்து 44 புறாக்கள் கலந்து கொண்டன. இதில் ரத்தினக்கோட்டை பகுதியை சேர்ந்த சுரையா தியாப்ஜி பெயர் கொண்ட பெண் புறா சுமார் 1,700 கிலோ மீட்டரை 18 நாட்களில் கடந்து வந்து தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தில் முதல் இடத்தையும் தென்னிந்திய அளவில் நான்காவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது.
18 நாட்களில் 1,700 மீட்டரை கடந்து தமிழகத்தின் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றதை புறாவின் உரிமையாளர் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினார். மேலும் உறவினர்கள், நண்பர்கள், புறாவின் உரிமையாளர் முகமது சாதிக்கை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லியிலிருந்து 1,700 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து முதலிடம் பிடித்த புறாவால் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அறந்தாங்கியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை;
அறந்தாங்கி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதன்பேரில் அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான சித்தாலங்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சக்திவேல் அறந்தாங்கி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- கறம்பக்குடியில் தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி வாணியத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 62). இவருக்கு சொந்தமான குடோனில் இருந்த தாமிர கம்பிகளை காணவில்லை. இது குறித்து அவர் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் தாமிர கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
- அறந்தாங்கி பகுதியில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யபட்டன
- சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் மற்றும் இதர பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பேராவூரணி சாலையில் ஒதுக்குப்புறத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ரசாயனம் கலந்த பழங்களை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் உண்டியலில் ரூ.3.92 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்
- செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது
விராலிமலை,
புதுக்கோட்டை விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோயிலில் வருடம் முழுவதும் மார்கழி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய விழாக்கள் நடைபெறும்.இதில் பல்வேறு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து இருந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள். இந்த நிலையில் இக்கோயில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3 லட்சத்தி 92 ஆயிரத்தி 189 ரொக்கம் மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் அருள்முருகன், மாதவன்,கோயில் மகளிர் குழுக்கள், மற்றும் கோகிலா கலைக்கல்லூரி மாணவர்கள், விளக்குபூஜை மகளிர் குழுவினர், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான மறுகுடியமர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக விராலிமலை, குளத்தூர் மற்றும் புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 448.81 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 143.32 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.
விராலிமலை வட்டம், குன்னத்தூர் கலிமங்கலம், புதுக்கோட்டை தாலுகா நத்தம்பண்ணை, செம்பாட்டூர் மற்றும் கவிநாடு மேற்கு ஆகிய கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்படவுள்ள குடும்பங்கள் ஆகியவற்றிற்கான மறுவாழ்விற்காக, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட நிர்வாகி இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரால் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரால் சமர்ப்பிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான இறுதி திட்ட வரைவு அறிக்கையினை பரிசீலனை செய்து மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் நில நிர்வாக ஆணையருக்கு ஒப்புதலுக்கு அனுப்பும் பொருட்டு மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பத்திரப்பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் கிராமங்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் மேற்கண்ட காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கந்தர்வகோட்டை அருகே மது எடுப்பு விழா நடைபெற்றது.
- இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே நெப்புகை கிராமத்தில் சூலபிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நெப்புகை, முள்ளிக்காய்பட்டி, வேலாடிப்பட்டி, உரியம்பட்டி, ஒத்த வீடு, பெரியமனை கொல்லை, சிவன் தான் பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் தங்கள் வீடுகளில் கடந்த ஒரு வார காலமாக விரதம் இருந்து பூஜை செய்து வந்த மது குடங்களை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சூலபிடாரி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு குலவை போட்டு, கும்மி அடித்து, கோலாட்டம் ஆடி நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திடவும், உலக மக்களின் அமைதிக்காகவும் சூலப்பிடாரி அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






