என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • புல் வெளிகள் தீயில் கருகி நாசமாகின
    • அருகில் கியாஸ் குடோன் உள்ளநிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே ஆலம்பாடி செல்லும் சாலையில் காய்ந்த புல்வெளி பகுதியில் நேற்று மாலை தீ பற்றி எரிவதாக பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அருகே சோளம் அறுக்கப்பட்டு சோளத்தட்டைகள் இருந்தமையால் காற்றின் மூலம் அங்கு பரவியதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து நடந்த பகுதிக்கு அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் குடோன் உள்ளது. இதனால் தீயணைப்பு துறையினர் கவனமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 200 மீட்டர் வரை புல்வெளிகள் எரிந்து கருகின. அருகில் இருந்த சில குறு மரங்களும் தீயில் கருகின. இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளக்காதல் விவகாரத்தை அம்பலப்படுத்தியதால் வெறிச்செயல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    மங்களமேட்டை அடுத்துள்ள நம்பியூர் கிராமத்தில் உள்ள நரியோடையை சேர்ந்த அல்லித்துரையின் மகன் அஜித்(வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வதாக அஜித் திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரஜினிக்கும்(45), அஜித்துக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த ரஜினி, அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை தடுக்க முயன்றனர்.அப்போது ஆத்திரம் அடைந்த ரஜினி, தான் உரிமமின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அஜித்தை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அஜித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ரஜினிக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை அஜித்தின் உறவினரான ஒரு பெண் கண்டித்ததோடு, மற்றவர்களிடம் இது பற்றி தெரிவித்ததாகவும், இதனால் அந்த பெண்ணுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டபோது, அவரை அஜித் தட்டிக்கேட்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ரஜினியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • யாகசாலை பூஜை நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள புலியூர் திருப்பதியான ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 25-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் கும்பகோணம் திவ்யதேச தலமான சாரநாதசுவாமி பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ராமன்பட்டர் மற்றும் புலியூர் திருப்பதி கோவில் ஸ்தானீகர் டி.என்.கோபாலன் அய்யங்கார், வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் பட்டாச்சாரியர் குழுவினர் மகா சாந்திஹோமம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. . திராவிட வேதமும், சதுர்வேத மந்திரங்களும் முழங்க ராஜகோபுரம், மூலவர் தாயார் சன்னதி கோபுர கலசங்களில் பட்டர்கள் புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
    • சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்ட பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பக்தர்களின் "அரோகரா அரோகரா" கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் செட்டிகுளம் நாட்டாரங்கலம் கூத்தனூர், ஆலத்தூர்கேட், பாடாலூர் சிறுவயலூர்,நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி இரூர், சீதேவிமங்கலம், சத்திரமனை, மாவிலிங்கை உள்ளி பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.நாள்தோறும் இரவு சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருவீதி உலா நடைபெறும்.வருகிற 02 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவுடன் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி என தேரோட்டம் வருகிற 04ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் வேல்முருகன்,அறங்காவலர் குழு, கோயில் ஊழியர்கள்,உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

    • இலவச தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • எழுத, படிக்க தெரிந்திருந்தாலே போதுமானது என அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் உள்ள ஐஒபி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாக தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அம்மைய இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூரில் உள்ள ஐஒபி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 2023-2024ம் ஆண்டில் இலவசமாக தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கவும் சுயவேலை வாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் எனும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில்,முன்னோடி வங்கியான இந்தியன் ஒவர்சீஸ் வங்கி தனது சிநேகா அறக்கட்டளையின் மூலம் ஐஒபி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தொழிற் பயிற்சிகள் இலவசமாகவும், குறுகிய கால தீவிரமான பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.பயிற்சி மையத்தின் 2023 -2024ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகள் - கறவை மாடு பராமரிப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், பசுமை குடில் மற்றும் நிழல் வலை அமைப்பு, பெண்களுக்கான தையற்கலை, ஆடு வளர்ப்பு, சணல் பொருட்கள் தயாரிப்பு, எம்பிராய்டரி & ஃபேப்ரிக் ஓவியம், காளான் சாகுபடி, அழகு கலை பயிற்சி, ஃபாஸ்ட் ஃபுட் (துரித உணவு) தயாரிப்பு, மலர் சாகுபடி பயிற்சி, ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் பழுது நீக்கல் பயிற்சி, சிசிடிவி கேமராவின் நிறுவல் மற்றும் சேவை, பாதுகாப்பு அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர், கறவை மாடு பராமரிப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், கொத்து & கான்கிரீட் வேலை, காய்கறி நாற்றங்கால் மேலாண்மை மற்றும் சாகுபடி, பட்டு வளர்ப்பு, கணினி கணக்கியல், பட்டு வளர்ப்பு, பெண்களுக்கான தையற்கலை, ஆடை அணிகலன் தயாரிப்பு, சணல் பொருட்கள் தயாரிப்பு, எம்பிராய்டரி & ஃபேப்ரிக் ஓவியம், டிரைவிங் பயிற்சி ஆகிய 24 பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை முழுநேர வகுப்புகளாக நடத்தப்படுகிறது. பயிற்சியின் போது காலை மற்றும் மதிய உணவு தேனீருடன் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இலவசமாக தரப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பொருளாதார உதவி பெற சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.பயிற்சிகளில் சேர்வதற்கு, வயது 19 க்கு மேல் மற்றும் 45 க்கு குறைவாகவும் , எழுத படிக்க தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது ஏஏஓய் குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் சங்குபேட்டை ஐஓபி வங்கி மேல் மாடியில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 04328- 77896, 9488840328 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
    • நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி உதவிதொகையை மீண்டும் வழங்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மாற்றுதிறனாளி கலெக்டர் கற்பகத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நான் மாற்றுத்திறனாளி . எனக்கு மருத்துவர் சான்றிதழ் வழங்கிய அடிப்படையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.ஆயிரத்து 500 பெற்று வந்தேன்.தற்போது எந்தவித விசாரணையின்றி மாற்றுத்திறனாளி உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளி சட்டத்திற்கு முரணாக உதவி தொகை நிறுத்தம் செய்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அளிக்கப்பட்ட உதவி தொகை மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் கற்பகம் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • சாலையின் குறுக்கே எழுப்பட்டுள்ள தடுப்பு சுவறை அகற்றிட பொதுக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
    • தனி நபர் ஒருவர் தடுப்பு சுவர் கட்டி சாலை அமையகூடாது என்று அடாவடி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பின்புறம் ரோஸ் நகருக்கு செல்லும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரை அகற்றி சாலை வசதியை செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பின்புறம் தலையாட்டி சித்தர் ஆசிரமம் வழியாக ரோஸ் நகருக்கு செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் 250ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறனர். மேலும் இந்த சாலை ரோஸ் நகரை இணைக்கிறது. அங்கு 700க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையிலான இந்த சாலையை தார் சாலையாக மாற்றி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து நகராட்சி சார்பில் மண் சாலை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டு ஜல்லி கொட்டப்பட்டு நிரவல் செய்யப்பட்டது. இந்நிலையில் அச்சாலை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து சாலையை அமைக்ககூடாது என சாலையின் நடுவே சுவர் கட்டி பாதையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் இந்த சாலையில் தார் சாலை அமைக்கமுடியாமலும், பொதுமக்கள் செல்ல முடியாமலும் தவிர்த்து வருகின்றனர்.எனவே தனிநபர் ஆக்கிரமித்து கட்டியுள்ள தடுப்பு சுவரை அகற்றி அச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதோடு, தார் சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நகராட்சி தலைவர் அம்பிகா, நகராட்சி ஆணையர் (பொ) ராதா மற்றும் 3 வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் ராதா மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • கண்டியாநத்ததிதில் இருந்து செல்லும் சாலைகள் அனைத்தும் படுமோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு
    • மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி அருகே பள்ளம் படுகுழியுமாக கிடக்கும் சாலையினை சீர் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்ததில் இருந்து ஆலவயல் செல்லும் சாலை கண்டியாநத்ததில் இருந்து உலகம்பட்டி செல்லும் சாலை கண்டியாநத்ததில் இருந்து புதுப்பட்டி வழியாக பொன்னமராவதி -உலகம்பட்டி இணைப்பு சாலைக்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்து செல்லமுடியாத வகையில் ஊரில் இருந்து நான்கு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது இதனால் இந்த சாலைகளில் எந்த வாகனமும் செல்லமுடியாத வகையில் உள்ளது.இந்த சாலை சீர் செய்யக்கோரி; அனைத்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இந்த சாலைகள் சரிசெய்ய படவில்லை எனவே இந்த சாலைகளை உடனடியாக சீர்செய்ய கோரி வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி காலை 9 மணிக்கு பொன்னமராவதி-உலகம்பட்டி சாலையில் க.புதுப்பட்டி விளக்கில் கண்டியாநத்தம் க.புதுப்பட்டி கேசராப்பட்டி பூதன்வளவு ஆகிய கிராம மக்கள் ஒன்றினைந்து சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • பெண் கூச்சலிட்டதால் திருடன் தப்பி ஓட்டம்
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அந்த பெண்ணிடம் தங்க சங்கலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் சுதாரித்து கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • புகையிலை பொருட்கள் விற்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது
    • காலாவதியான உணவு பொருட்களும் பறிமுதல்

    பெரம்பலூர்,

    குன்னம் அருகே உள்ள வேப்பூரில் ஓட்டல்கள், டீ கடை, மளிகை கடை, பேக்கரி மற்றும் இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான உணவு பெருட்கள், காலாவதியான குளிர் பானங்கள், பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதா? என்று சுகாதார துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், மாவட்ட நலக்கல்வியாளர் செல்லப்பாண்டியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாசன் மற்றும் பெருமத்தூர், முருக்கன்குடி, துங்கபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் ஸ்மித் சைமன் ஆகியோர் ஈடுபட்டனர். ஆய்வின்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, உணவு பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடினார்
    • பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.உத்தரவு

    பெரம்பலூர்,

    சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் பிரபாகரனை நேற்று முன்தினம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் இடையே பிரபாகரன் தப்பி ஓடி விட்டார். பின்னர் அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக, அவரை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டாா்.

    • மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் காங்கிரசார் போராட்டம்
    • வாய், கைகளில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து வாய் மற்றும் கையில் கருப்பு துணி கட்டி அறவழிப்போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.பெரம்பலூர் பழைய பஸ்ஸ்டாண்ட் காந்தி சிலை முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், அவரது எம்பி பதவியினை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் வாய் மற்றும் கைகளில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் அருணாச்சலம், அய்யம்பெருமாள், நகர தலைவர்கள் தேவராஜன், நல்லுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லதம்பி, வக்கீல் பிரிவு தலைவர் ரஞ்சித்குமார், வட்டார தலைவர்கள் சின்னசாமி, பாக்யராஜ், ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலமுருகன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மகேந்திரன், சட்டமன்ற ஊடக பிரிவு தலைவர் வசந்த், விவசாய மாவட்ட பிரிவு தலைவர் சித்தர், மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×