என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    குன்னம் அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சின்னசாமி(வயது 65). விவசாயியான இவர் நேற்று வீட்டில் இருந்து பெரம்பலூர்- அரியலூர் மெயின் ரோட்டில் உள்ள தனது வயலுக்கு சைக்கிளில் சென்றார். மெயின் ரோட்டை கடந்தபோது பெரம்பலூர் நோக்கி வந்த மினி லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சின்னசாமி பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவர் திருச்சி முத்தரசநல்லூரை சேர்ந்த வைத்தீஸ்வரனை(24) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேப்பந்தட்டை அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார், பில்லங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை மறித்து சோதனையிட்டபோது சாக்குப்பையில் சுமார் 25 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை(வயது 39), கார்த்திக் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தை கைப்பற்றிய போலீசார், 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 9,643 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 7,611 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவிற்கு பலியானோர் பட்டியலுடன் நுரையீரல் நிமோனியா தொற்றால் மே, ஜூன் மாதங்களில் உயிரிழந்த 5 பேரின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டதால் உயிரிழப்பு 109 ஆக உயர்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 69 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 38 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 21 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 12 பேர் என மொத்தம் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 1,923 பேரில் 1,482 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர். 441 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பெரம்பலூரில் பட்டப்பகலில் மின்வாரிய ஒந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    பெரம்பலூர்:

    தர்மபுரியை சேர்ந்தவர் ராஜ்மோகன்(வயது 42). இவர் பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள கிரீன் சிட்டியில் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, தற்போது மின் வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார்.

    இவரது மனைவி கயல்விழி, வாழப்பாடியில் தமிழ்நாடு வனத்துறையில் காப்பாளராக உள்ளார். இதனால் கயல்விழி தனது குழந்தையுடன் வாழப்பாடியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

    இந்தநிலையில் ராஜ்மோகன் தினமும் வீட்டை பூட்டிவிட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். நேற்று ராஜ்மோகன் தனது வீட்டை பூட்டி விட்டு வங்கிக்கு சென்று விட்டார்.பின்னர் மீண்டும் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த அரை பவுன் தங்க நாணயங்கள் 3, வெள்ளிக்கொலுசு 3 ஜோடி வெள்ளியினாலான தட்டு, குங்கும சிமிழ், விளக்கு, அரைஞாண் கொடி ஆகியவற்றையும், சாமி அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சாமி காசு ரூ.3 ஆயிரத்தையும் திருடிச்சென்று இருந்தது தெரியவந்தது.

    பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு குறித்து ராஜ்மோகன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார், ராஜ்மோகன் வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    குன்னம் அருகே மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 55). விவசாயி. இவர் நேற்று மாலை பேரளியில் இருந்து பீல்வாடி செல்லும் சாலையில் பெரியாண்டவர் கோவில் அருகில், தனது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

    அப்போது, அப்பகுதியில் மழை பெய்தது. இதனால் ராமச்சந்திரன் அங்குள்ள மரத்தடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி குன்னம் பகுதி கிராமங்களில் உள்ள வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆண்டி குரும்பலூர், சின்ன பரவாய், பரவாய், வைத்தியநாதபுரம், பென்னகோணம், கிழுமத்தூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற காரணங்களை கூறி மக்களை ஏமாற்றக்கூடாது என்றும், இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

    இதில் 6 கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. மேலும் வீதிகளில் பொதுமக்கள் கருப்பு கொடியேந்தி கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
    கடந்த மாதம் 5,000-ஐ தொட்ட கொரோனா தொற்று கடந்த வாரம் முதல் படிப்படியாக குறைந்து வருகிறது.

    பெரம்பலூர்:

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் கொரோனா தாக்கம் சற்று தணிந்துள்ளது.

    கடந்த மாதம் 5,000-ஐ தொட்ட கொரோனா தொற்று கடந்த வாரம் முதல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய பரிசோதனை முடிவில் மத்திய மண்டலத்தில் 3,865 பேருக்கு தொற்று உறுதியானது. ஆனால் நேற்று ஒரே நாளில் 77 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 22 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 15 பேரும், நாகப்பட்டினத்தில் 13 பேரும், கரூரில் 8 பேரும், புதுக்கோட்டையில் 7 பேரும், அரியலூர், திருவாரூரில் தலா 5 பேரும், தஞ்சாவூரில் 2 பேரும் கொரோனாவுக்கு இரையாகினர்.

    நேற்றைய தினம் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 1,004 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஆனால் திருச்சியில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. நேற்றைய தினம் 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த சில தினங்களில் தினசரி பாதிப்பு 500-க்குள் வந்து விடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    திருவாரூரில் 576 பேரும், நாகப்பட்டினத்தில் 516 பேரும், பாதிக்கப்பட்டனர். கரூரில் கொரோனா தொற்று 337 ஆக குறைந்துள்ளது.

    மேலும் புதுக்கோட்டையில் 288 பேரும், அரியலூரில் 246 பேரும், பெரம்பலூரில் 209 பேரும் நேற்று தொற்றுக்கு ஆளாகினர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 228 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 9,136 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 6,490 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 2,576 பேர்களில் 2,042 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர். சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், சேலம், நாமக்கல் கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 58,254 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    பெரம்பலூரில் மது விற்ற டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்து, 16 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக எடுத்து வந்து, அதிக விலைக்கு விற்பதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெரம்பலூர் எல்லைக்கு உட்பட்ட ஆத்தூர் சாலையில் உள்ள ஜமாலியா நகரில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தி விசாரித்தனர். இதில் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சுந்தரராஜன்(வயது 47) என்பவர், கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்றது தெரியவந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசார், 16 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சுந்தரராஜனை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    பெரம்பலூர் அருகே சாராய ஊறல் போட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் மது பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இதனை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் சாராயம் ஊறல் போட்டு வைத்திருப்பதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் செஞ்சேரி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 50) என்பவர் தனது வீட்டில் 2 பேரல்களில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து பெருமாளை கைது செய்த போலீசார் சுமார் 300 லிட்டர் சாராய ஊறலை தரையில் ஊற்றி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கொரோனா தொற்று பெரம்பலூர் நகரில் முன்பு இருந்ததை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கடந்த 2 வாரங்களாக 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றும், தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். இதுவரை பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை 8,500-ஐ கடந்துள்ளது.

    கொரோனா தொற்று பெரம்பலூர் நகரில் முன்பு இருந்ததை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் இருந்த அவரது கணவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பார்த்திபன் மற்றும் அவர்களது 2 மகன்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சூப்பிரண்டு நிஷாபார்த்திபனும், அவரது கணவர் பார்த்திபனும் முதல்கட்ட தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசி செலுத்த வேண்டிய கால இடைவெளியில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    கருப்பு பூஞ்சை நோய்க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலத்தில் வசித்து வந்தவர் பொன்.கலியபெருமாள் (வயது 76). அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரான இவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந்தேதி அவர் உயிரிழந்தார். இதேபோல் அருமடல் கிராமத்தை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் அய்யாசாமி (40) கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

    இதேபோல விஜயகோபாலபுரத்தை சேர்ந்த மனோகர் (62) என்பவர் கொரோனா பாதிப்புக்கு பின் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு 7 பேர் பாதிப்படைந்திருந்தனர். அவர்களில் வெள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 55) மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ×