என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது செய்யப்பட்டார்
    • குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அசூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44), தொழிலாளி. இவரது மனைவி சுசியை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி முத்தழகன் (32) தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை தட்டி கேட்ட சிவக்குமாரை முத்தழகன் பிளேடால் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட்டில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்
    • விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை ஏ.வி.ஆர். நகர் அப்புசாமி 2-வது தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 53). இவருக்கு கல்யாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சசிக்குமார் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீன் ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி இரவு நண்பர் மணிகண்டனை மொபட்டில் அழைத்து கொண்டு பெரம்பலூா் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் கல்யாண் நகர் அருகே உள்ள திருமண மண்டபம் எதிரே சென்றபோது அந்த வழியாக ஒருவர் சாலையின் குறுக்கே சென்றதால் சசிகுமார் மொபட்டில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக துறையூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகுமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும் என கலெக்டர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய கடன் நிதியுதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும். இந்த அரிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் அருகே ஓடும் லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்தது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    பெரம்பலூர்,

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-செங்குணம் பிரிவு சாலை அருகே நேற்று காலை ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்க என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினார். இதையடுத்து லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து தீயணைப்பான் கருவியை கொண்டு, லாரியில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். பின்னர் தண்ணீரை ஊற்றி தீைய அணைக்க முயன்றனர். இதற்கிடையே பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மங்களமேடு பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • 30 மது பாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள முருக்கன்குடி கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். மது விற்பவர்களை கைது செய்வதாக மங்களமேடு போலீசார் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் முருக்கன்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மளிகை கடையில் சுப்பிரமணியன்(வயது 50), எழும்பூர் செல்லும் சாலையில் காட்டு கொட்டகையில் தனகராஜ்(49) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 30 மது பாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது
    • பிரதமர் நிதியில் இருந்து தள்ளுவண்டிகள் நகராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சாலையோர வியாபாரிகளுக்கு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பி.எம்.ஸ்வா நிதியில் தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமர், நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் 10 பேருக்கும், பூக்கடை வியாபாரிகள் 3 பேருக்கும், டிபன் கடை வியாபாரிகள் 2 பேருக்கும் தள்ளுவண்டிகளை வழங்கினார். இதில் நகர்மன்ற கவுன்சிலர்கள், நகரமைப்பு ஆய்வாளர் மாணிக்க செல்வன், இளநிலை உதவியாளர் பார்த்திபன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் இந்தியன் ஸ்வச்லீக்-2023 2.0 திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி சார்பில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிடும் வகையில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல் குறித்தும், கழிவுநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
    • முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன், மாவட்ட அவை தலைவர் குணசீலன், மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், ராணி, அந்தூர் ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார், சிவப்பிரகாசம், பேரூர் செயலாளர் செந்தில்குமார், வக்கீல்கள் கனகராஜ், ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • ஜெயங்கொண்டம் அருகே அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது
    • கார் கண்ணாடியை உடைத்து வெறிச்செயல்

    ஜெயங்கொண்டம், 

    பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன்.இவர் சீர்காழியில் நடைபெற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் புறப்பட்டார். காரை செந்தில் என்பவர் ஓட்டி சென்றார்.இந்த கார் ஜெயங்கொண்டம் வாரியாங் கோவில் பகுதியில் வந்த போது 2 வாலிபர்கள் அவரது காரை திடீரென வழிமறித்தனர். அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் மாவட்ட செயலாளரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறு செய்தனர்.பின்னர் அவரது கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். இதில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகேயனுக்கு முகம், கை,கால்களில் காயம் ஏற்பட்டது.பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.இதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்தது தெரிய வந்தது.பின்னர் தப்பி ஓடிய இலையூர்மேலவழி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சிவா (வயது 24) என்பவரை கைது செய்தனர். ரோட்டு தெருவை சேர்ந்த பூபாலன் என்பவரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் காரை வழிமறித்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருட்டுக்கு பயன் படுத்தப்பட்ட டிப்பர் லாரி யை பறிமுதல் செய்து விசாரணை
    • ரகசிய தகவலின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்

    அகரம்சீகூர், செப்.15-

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூரில் உள்ள வெள்ளாற்று பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அகரம்சீகூர் வெள்ளாற்றில் லாரியில் மணல் ஏற்றி கொண்டிருப்பது தெரிந்தது. மணல் ஏற்றிக் கொண்டு இருந்தவரை பிடித்து விசாரித்த போது ஒகளுர் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை யடுத்து மங்களமேடு காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து, மணல்

    திருட்டுக்கு பயன் படுத்தப்பட்ட டிப்பர் லாரி யை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்
    • ரூபாய் 12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையார்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.36 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி,

    இலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தி ன் கீழ் ரூபாய் 151.41 இலட்சம் மதிப்பீட்டில் இலையூர் - கண்டியங்கொல்லை சாலை அமைக்கும் பணி,

    பெரியாத்துக்குறிச்சியில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூபாய் 30.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணி,

    ஓலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூபாய் 225.00 இலட்சம் மதிப்பீட்டில் ஓலையூர் - அழகாபுரம் சாலை அமைக்கும் பணி,

    திருக்கோணத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூபாய் 222.00 இலட்சம் மதிப்பீட்டில் சிலம்பூர் - திருக்கோணம் சாலை அமைக்கும் பணி,

    விளந்தையில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் CFSIDS திட்டத்தின் கீழ் ரூபாய் 28.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    விளந்தையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    நாகம்பந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் NPMDMS திட்டத்தின் கீழ் ரூபாய் 5.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    இடையக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 5.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி,

    ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் இலக்குவன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு.அஜித்தா,

    உடையார்பாளையம் கோட்டாட்சியர் சா.பரிமளம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசி, உதவி பொறியாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி (வட்டார ஊராட்சி), ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் மரு T.கண்ணன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு விழா
    • பருத்தி ஆராய்ச்சி நிறுவன பயிரில் துறை தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லபுரம் பிரிவு அருகே உள்ள தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 16வது ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவும் புதிய மாணவர்கள் வரவேற்பு விழாவும் நடைபெற்றது

    விழாவிற்கு தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிறுவன பயிரில் துறை தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்

    கல்லூரி முதல்வர் வஹாப் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் சக்திஸ்வரன் ஆகியோர் பேசினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜெயசீலன் அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.

    முன்னதாக ஆசிரியர் அப்துல் ரகுமான் வரவேற்றார் முடிவில் முதலாம் ஆண்டு வகுப்பு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தொழிலாளி
    • குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் முருகானந்தம் (வயது 40), சத்தியமூர்த்தி (25). இதில், முருகானந்தம் சென்னையிலும், சத்தியமூர்த்தி துங்கபுரத்திலும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் முருகானந்தம் சென்னையில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து உள்ளார். கடந்த 10-ந் தேதி அண்ணன்-தம்பி இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி தனது அண்ணன் முருகானந்தத்தை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    ×