என் மலர்tooltip icon

    நீலகிரி

    அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஓவேலி பகுதி மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்கு மளிகை, காய்கறி கடைகள் கிடையாது. இதன் காரணமாக அவர்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூருக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இதற்கு அரசு பஸ்களை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஓவேலி பேரூராட்சி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடலூருக்கு நடந்து வர வேண்டி உள்ளது. மேலும் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை கடந்து தலைச்சுமையாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து ஓவேலி பகுதி மக்கள் கூறியதாவது:-

    இங்கு பெரும்பாலும் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். தோட்ட நிர்வாகங்கள் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்துகின்றனர். ஆனால் எங்கள் பேரூராட்சியில் ஏ.டி.எம். வசதி கிடையாது. மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகள் கிடையாது. அதற்கு கூடலூருக்கு சென்று வர வேண்டி உள்ளது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அரசு பஸ்கள் ஓடவில்லை. மேலும் வாடகை ஆட்டோக்கள், ஜீப்புகளும் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூருக்கு நடந்து சென்று வர வேண்டி உள்ளது.

    சில நேரங்களில் வனவிலங்குகள் தாக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே தோட்ட நிர்வாகங்கள் எங்களது சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் எங்கள் பேரூராட்சி பகுதியிலேயே கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காயத்துக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவ குழுவினர், வனத்துறையினரை ஒற்றை யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சில்வர் கிளவுட், கோக்கால், மேல்கூடலூர், கெவிப்பாரா, கோத்தர்வயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிகிறது.

    அந்த யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்கள் மற்றும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர் கால் நடை டாக்டர் பரிந்துரைப்படி பழங்களுக்குள் மாத்திரையை வைத்து யானை வரும் பாதையில் பழங்களை போட்டனர்.

    யானையும் அந்த பழங்களை சாப்பிட்டதால் அதில் உள்ள மருந்துகள் மூலம் யானை குணமடைந்து வந்தது. இந்த நிலையில் கோவையில் இருந்து கால்நடை டாக்டர் மனோகரன், சுகுமாறன் தலைமையிலான குழுவினர் காட்டு யானையின் உடலை ஆய்வு செய்ய ஏழுமுறம் பகுதிக்கு சென்றனர். அங்கு நின்று காட்டு யானையை டாக்டர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர்.

    அப்போது திடீரென ஆக்ரோ‌ஷமான காட்டு யானை அவர்களை துரத்தி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான டாக்டர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் சிதறி அடித்து ஒடினர்.

    பின்னர் யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனச்சரகர் ராம கிருஷ்ணன் கூறுகையில், தொடர் சிகிச்சை மூலம் யானை குணமடைந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஆலோசனைப்படி பழங்களில் மாத்திரை வைத்து யானைக்கு கொடுத்து வருகிறோம். திடீரென யானை துரத்தியால் அனைவரும் அதிர்சியடைந்தோம் என்றார்.

    சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 1,471 பேர் வந்தனர். அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களது செல்போன் எண்களை தொடர்பு கொண்டு நலமாக இருக்கிறார்களா? என்று விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது 1,471 பேரும் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து, கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வீட்டு கண்காணிப்பில் யாரும் இல்லை.

    நீலகிரியில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 7 பேர் குணமடைந்து திரும்பி உள்ளனர். அவர்கள் தங்களது வீடுகளில் தனி அறைகளில் 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 2 பேர் ஓரிரு நாட்களில் குணமடைந்து திரும்புவார்கள். நமது மாவட்டம் பச்சை பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும்.

    அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகிறவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி தென்பட்ட ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைகாட்டி ஆகிய 4 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. அடுத்த மாதம்(மே) 7-ந் தேதி தனிமைப்படுத்துதல் முடிவடையும். அப்பகுதி பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

    100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். தோட்டக்கலை, வேளாண் பணிகளை சமூக இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து தொழிலாளர்கள் பணிபுரியலாம். தேயிலை தொழிற்சாலைகள் குறைந்த தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. சமூக இடைவெளி கடைபிடிக்காதது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். நீலகிரியில் இறைச்சி கடைகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்றால் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    கூடலூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாலைகளில் ஓவியம் வரைந்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வரலாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அலட்சியத்துடன் சிலர் சாலைகளில் வீணாக நடந்து செல்கின்றனர். இதனால் அவர்களிடமும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நீலகிரி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் பல்வேறு துறை அதிகாரிகள் ஓவியம் வரைந்து வருகின்றனர்.

    கூடலூர் நகராட்சி பகுதியில் தலைமை தபால் அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் நகராட்சி அதிகாரிகள், போலீசார் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வைத்து உள்ளனர். இதேபோன்று ஒவியர்கள் சங்கம் சார்பிலும் ரத்தத்தை குடிக்கும் கொரோனா வைரஸ் என்பது போல் சித்தரித்து ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரையப்பட்ட ஓவியங்களை கண்டு விழிப்புணர்வு அடைகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கூறியதாவது:-

    தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும். சில மீட்டர் தூரம் தள்ளி நின்று பேச வேண்டும். மளிகை, காய்கறி கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதை உணர்த்துவதற்காக மக்கள் அதிகம் நடமாடும் சாலைகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஒவியங்கள் வரையப்பட்டு வருகிறது.குழந்தைகள், முதியவர்கள் வெளியில் நடமாடக்கூடாது. தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    இதேபோன்று பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி பகுதியிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஒவியங்கள் பல்வேறு அமைப்பினரால் வரையப்பட்டு உள்ளது. மஞ்சூர் தாலுகா பகுதியிலும் போலீசார் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு படங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் முதியோர்களின் பராமரிப்பாளர்களுக்கு பாஸ் வழங்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ சிகிச்சை, மருத்துவ உதவிகள் தேவைப்படும் மூத்த குடிமக்களை பராமரித்து கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது. எனவே தங்களது பராமரிப்பாளர்களுக்கு பாஸ் பெற விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பதாரரின் போட்டா-2, விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, பராமரிப்பாளரின் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து கொண்டு ஊட்டியில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணபிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வருவது நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகரித்து வருகிறது.
    கூடலூர்:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க நேர கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஆனால் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வருவது நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகரித்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தவிர மற்ற கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.

    இது தவிர ஆட்டோக்களும் இயக்கப்பட்டது. சாலைகளில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் செல்வதை காண முடிந்தது. கூடலூர்-கோழிக்கோடு சாலையின் இருபுறமும் வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நகருக்குள் குழந்தைகளுடன் பொதுமக்கள் நடந்து செல்லும் அலட்சியத்தையும் காண முடிந்தது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கொரோனா வைரசின் தாக்கத்தை பலர் உணர்ந்ததாக தெரியவில்லை. போலீசாரின் கண்காணிப்பையும் மீறி சிலர் தேவையின்றி சுற்றுகிறார்கள். இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் நகர்பகுதிகளில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைஅந்தந்த கிராமங்களில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதை சாதகமாக்கிய சில வியாபாரிகள், காய்கறி வகைகளை மொத்தமாக வாங்கி, வாகனங்களில் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். மருந்தகங்களிலும், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தலைவலி மாத்திரைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.

    இதையடுத்து இந்த புகார் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மேற்பார்வைக்கு சென்றது. இது குறித்து அவர் கூறியதாவது:-

    எல்லா அத்தியாவசிய பொருட்களும் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. இதனால் எந்த பொருளையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதை மீறியும் கூடுதல் விலைக்கு யாராவது அத்தியாவசிய பொருட்களை விற்றால், 1077 என்ற எண்ணுக்கு, மக்கள் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெலிங்டன் முகாமில் இருந்து வெளியேறிய பயிற்சி ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர்:

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சம்பத்குமார்(வயது 20). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ராணுவ தேர்வில் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்தார்.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ராணுவ முகாம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, பயிற்சி பெற்று வந்த இளம் ராணுவ வீரர்கள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதனால் வெளியே செல்ல முடியாததாலும், ஊருக்கும் செல்ல முடியாததால் சம்பத்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தடையை மீறி முகாமை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையில் நேற்று குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பிளாக் பிரிட்ஜ் அருகே ஒரு மரத்தில் சம்பத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கைப்பற்றி குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து வெளியேறிய பயிற்சி ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குன்னூர்:

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சம்பத்குமார்(வயது 20). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ராணுவ தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்தார்.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ராணுவ முகாம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, பயிற்சி பெற்று வந்த இளம் ராணுவ வீரர்கள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் வெளியே செல்ல முடியாமல் சம்பத்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தடையை மீறி முகாமை விட்டு வெளியேறினார். இதை அறிந்த அதிகாரிகள் அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பிளாக் பிரிட்ஜ் அருகே ஒரு மரத்தில் சம்பத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கைப்பற்றி குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தலை துண்டாகி இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக கேரட் கழுவும் எந்திர உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எதுமை கண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 50). இவரது மனைவி சுமித்ரா(45). இவர்களது மகள் நந்தினி(18). 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயும், மகளும் சேர்ந்து ஊட்டி அருகே எப்பநாடு பகுதியில் கேரட் அறுவடை செய்வதற்காக சென்றனர். அறுவடை செய்த பின்னர் கேரட்டுகளை மூட்டைகளில் நிரப்பி லாரியில் ஏற்றிக்கொண்டு, தொழிலாளர்கள் கேரட்டுகளை கழுவி சுத்தப்படுத்துவதற்காக கேத்தி பாலாடாவுக்கு வந்தனர்.

    அங்கு கேரட் கழுவும் எந்திரத்தில் கேரட்டுகளை கொட்டி சுத்தம் செய்த பின்னர் தொழிலாளர்கள் மூட்டைகளில் நிரப்பி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நந்தினியின் துப்பட்டா, கேரட் கழுவும் எந்திரத்தில் சிக்கியது. எந்திரம் வேகமாக சுழன்றதால், கண்ணிமைக்கும் பொழுதில் அவரும் சிக்கி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வருவாய்த்துறையினர், கேத்தி பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உரிய பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டதாக கூறி கேரட் கழுவும் எந்திரம் உள்ள நிலையம் மற்றும் பம்ப் அறைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி ஊட்டி வண்டிசோலையை சேர்ந்த கேரட் கழுவும் எந்திர உரிமையாளர் மஞ்சுநாத்(55), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் நந்தகிஷோார்(40) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
    கேரட் கழுவும் எந்திரத்தில் சிக்கி இளம்பெண் பலியானதை தொடர்ந்து எந்திரம் செயல்பட்டு வந்த நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எதுமை கண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது50). இவரது மனைவி சுமித்ரா (43). இவர்களது மகள் நந்தினி (18). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள நந்தினி தனது தாய் சுமித்ராவுடன் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று அதிகாலை தனது தாயுடன் எப்பநாடு பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கேரட் அறுவடை செய்ய சென்றார்.

    பின்னர் அறுவடை முடிந்த பின்னர் கேரட்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு பாலாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொழிலாளர்களும் லாரியில் சென்றனர்.

    அங்கு கேரட் மூட்டை களை பிரித்து கேரட் கழுவும் எந்திரத்தில் தண்ணீரை கொண்டு சுத்தப்படுத்தி மீண்டும் மூட்டைகளில் நிரப்பும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக நந்தினியின் துப்பட்டா எந்திரத்தில் சிக்கியது. எந்திரம் வேகமாக இயங்கியதால் நந்தினியும் எந்திரத்தினுள் இழுக்கப்பட்டு தலை துண்டாகி பலியானார். தன் கண்முன்னே தனது மகள் பலியானதை கண்டு நந்தினியின் தாய் சுமித்ரா கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே குன்னூர் தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண் டார். கேரட் கழுவும் எந்திரம் பாதுகாப்பாக உள்ளதா? அது சரிவர பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தனர்.பின்னர் உரிய அனுமதியின்றி இயங்கியதாக கூறி கேரட் கழுவும் எந்திரம் செயல்பட்டு வந்த நிலையத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். மேலும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

    குன்னூர் வெறிநாய்கடி மையத்தில் கொரோனா பரிசோதனை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாஸ்டியர் நிறுவனம் உள்ளது. இங்கு வெறிநாய்கடி மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் ரேபிஸ் கண்டறியும் மையமாக செயல்படுவதுடன் இங்கு வெறிநாய்கடிக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸிடியூட் ஆய்வகத்தில் உலக தரம் வாய்ந்த ஆய்வகங்களும் அதில் உலக தரம் வாய்ந்த கருவிகளும் உள்ளன. கொரோனா நோய் வைரஸை கண்டறிய உலக தரம் வாய்ந்த ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கருவியும் உள்ளது. ஆய்வு மேற்கொள்ள பயிற்சி பெற்ற விஞ்ஞானிகள் உள்ளனர்.

    பாலிமர் செயின் ரியக்சன் என்ற உபகரன கருவியும் உள்ளது. இது ஐ.சி.எம்.ஆர் நிபந்தனைக்களுக்கு உட்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இந்நோய் தொற்று பரிசோதனை செய்ய பெரும் உதவியாக இருக்கும் இதை பற்றி நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடமும் மத்திய அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர்-ரிடம் இருந்து உத்தரவு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் இந்த மையத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் குமார் ஜெயந்த், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிம் கூறுகையில், குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் ஓரிரு நாள்களில் இங்கு கொரோனா பரிசோதனை தொடங்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சிவகுமார், நிர்வாக அதிகாரி வைரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×