என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    ஊட்டி:
     
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தமிழகத்தில் கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று  2-வது வாரமாக நீலகிரியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    நீலகிரியில் ஊட்டி-சேரிங்கிராஸ் சாலை, கமர்சியல் சாலை, பஸ் நிலைய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகளில் எந்தவித மக்கள் நடமாட்டமோ, வாகன இரைச்சலோ இன்றி மிகவும் அமைதியாக இருந்தது. 

    குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் என முக்கிய பகுதிகளிலும் கடைகள்  அனைத்தும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டது. முக்கிய சாலைகளான ஊட்டி-குன்னூர் சாலை, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலை,  கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது.

    நீலகிரியில் முழு ஊரடங்கை யொட்டி மாவட்டம் முழுவதும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 5 காவல் உட்கோட்டங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப் படுத்தினர். விதி முறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
    பொங்கலையொட்டி முதுமலை யானைகள் முகாமில் பொங்கல் கொண்டாடப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

    முகாமில்  உள்ள 11 வளர்ப்பை யானைகளும், அபரணியம் முகாமில் உள்ள 17 யானைகள் என 28 வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து, சந்தனம் பூசி, யானைகளுக்கு மலர்மாலை சூடி அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. 

    அப்போது வளர்ப்பு யானைகளுக்கு மிகவும் பிடித்த கரும்பு, வெள்ளம், அண்ணாச்சி பழம், தேங்காய் உட்பட விருப்ப உணவுகளை யானைகளுக்கு வழங்கி பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

    இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அமிரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார். 

    இந்த நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண், வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், மனோஜ் குமார், மாரியப்பன், முரளி உள்பட வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
    பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது
    ஊட்டி:

    நீலகிரியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் வழக்கமான நேரத்துக்கு பதிலாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இருப்பினும் பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஊட்டி அரசு  தாவரவியல் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் சுமார் 2 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். 
    அதேபோல, ரோஜா பூங்காவுக்கு 700 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 124 பேரும், மரவியல் பூங்காவுக்கு 50 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 900 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 200 பேரும், கல்லார் பழப்பண்ணைக்கு 200 பேரும் வந்திருந்தனர்.

    நேற்று  ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 4 ஆயிரம் பேரும், ரோஜா பூங்காவுக்கு 1,200 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 200 பேரும், மரவியல் பூங்காவுக்கு 80 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 1,200  பேரும், காட்டேரி பூங்காவுக்கு 500 பேரும், கல்லார் பழப் பண்ணைக்கு 500 பேரும் வந்திருந்தனர். 2 நாட்களில் மட்டும் ஊட்டி சுற்றுலா தலங்களை 11,854 பேர் கண்டு ரசித்துள்ளனர்
    காட்டு யானை ஒன்று விடுதியின் கேட்டை உடைத்து தள்ளியது. நீண்ட நேரம் அந்த வளாகத்திலேயே முகாமிட்ட யானை இங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பென்ஸ்டாக். இப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தங்குவது வழக்கம்.

    தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விடுதி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று விடுதியின் கேட்டை உடைத்து தள்ளியது. நீண்ட நேரம் அந்த வளாகத்திலேயே முகாமிட்ட யானை இங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    பென்ஸ்டாக்கை ஒட்டியுள்ள கெத்தை பெரும்பள்ளம், உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக 2 குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் கெத்தை பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்வதும், மஞ்சூர் கோவை சாலையில் ஆங்காங்கே சென்று அந்த வழியாக வரக் கூடிய பஸ்கள், தனியார் வானங்களை வழிமறிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை ஒன்று தான் இந்த விடுதியின் முகப்பு கேட்டை உடைத்து தள்ளியுள்ளது. இதைதொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் வனவர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் பென்ஸ்டாக் கெத்தை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிதது வருகிறார்கள்.

    குட்டிகளுடன் நடமாடும் யானைகள் பெரும்பள்ளம் பகுதியில் இருந்து முள்ளி வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் ஒற்றை காட்டு யானை மட்டும் கெத்தை சுற்றுப்புற பகுதிகளில் நடமாடி வருவதாக தெரிவித்தனர்.

    பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர்.
    ஊட்டி:
    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருளர் மற்றும் குறும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டி கையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போன்று பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.கோத்தகிரி அருகே மாமரம், மேல்கூப்பு குறும்பர்  பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர். 

    அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தங்களின்  குலதெய் வத்தை வணங்கி பொங்கல் வைத்தனர். தொடர்ந்து ஆடி, பாடி பொங்கலை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பழங்குடியின மக்களுடன் பொங்கல் கொண்டாடினர். மேலும் பழங்குடியின இளைஞர்களுக்கு விளையாடுவதற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

    நூற்றாண்டுகளைக் கடந்து குறும்பர் பழங்குடியின மக்கள் பாரம்பரியமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
    பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் தாலிக்குத் தங்கம் வழங்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் 17 பயனாளி களுக்கு தலா 8 கிராம் வீதம் தாலிக்குத் தங்கம் வழங்கி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    2021-2022-ம் ஆண்டில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு பயின்ற ஒரு பெண்ணுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 50 ஆயிரம் வீதம் 330 பயனாளிகளுக்கு ரூ. 1,65,00,000, 10, 12-ம் வகுப்பு பயின்ற ஒரு பெண்ணுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் வீதம் 270 பயனாளிகளுக்கு ரூ.67,50,000 என மொத்தம் 600 பயனாளிகளுக்கு 2,32,50,000 நிதியுதவி மற்றும் 4.8 கிலோ தங்கம் நமது மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 16 பயனாளிகளுக்கும்,  ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரம் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த 17 பயனாளிகளுக்கும் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 

    இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பயனாளிகளுக்கும் விரைவில் வழங்கப்படும். இதனை முழுமையாக பயனாளிகள் பெற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவர்   பொன்தோஸ், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட சமூக நல   அலுவலர் பிரவீணா தேவி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், தாசில்தார் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    புதிதாக தொடங்கப்பட்ட ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.461.18 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி கட்டிடத்தினை  பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:

    முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மக்களின் தேவை அறிந்து அதற் கேற்றவாறு பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். 

    அதேபோல் வருமுன் காப்போம் திட்டம், வாகன விபத்தில் சிக்கி காயமடைந்து 48 மணி நேரத்திற்குள் அந்த நபரை மருத்துவமனைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் அதற்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். அதேபோல் நீட் தேர்வை பொறுத்தவரை ஏழை, எளிய மக்கள் பாதிக்கக் கூடாது  என்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து நீட் விலக்கு கோரிக்கையினை மத்திய அரசிடம் முன்னெடுத்துக் கொண்டே இருக்கும். 

    ஊட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி யில் உடற்கூறியல்,   உயிர் வேதியியல்,  நோய் குறியியல்,  நுண்ணுயிரியல், மருந்தியல் போன்ற மருத்துவத் துறைகளுக்கான ஆய்வகங்கள், விரிவுரை கூடங்கள், நூலகக் கட்டிடம், தேர்வுக் கூடம் மற்றும் செயல்முறை விளக்கக்கூடங்கள் ஆகிய வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

    மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக தனித்தனியாக விடுதிகள், செவிலியர் விடுதி, பயிற்சி மருத்துவர் விடுதி, பேராசிரியர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்காக குடியிருப்பு வசதிகள் 28 கட்டிட தொகுப்புகளாக 2,73,130 சதுரடி பரப்பளவில் கட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து கட்டிடங்களும் மலைப்பிர தேசத்தில் ஏற்படும் நிலச்சரிவினை தடுக்கும் வகையில் உரிய தடுப்புச்சுவருடன் கட்டப்பட்டு வருகிறது. 

    மேலும் குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் மற்றும் சாலை வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் இக்கல்லூரிக்கு நடப்பு கல்வி ஆண்டு (2021&2022) முதல் 150 மாண வர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். 

    விழாவில் மாவட்ட கலெக் டர் அம்ரித், எம்.எல்.ஏ.க்கள் பொன்.ஜெயசீலன், வானதி சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மனோகரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    மஞ்சூர் காத்தாடிமட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
    மஞ்சூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், மஞ்சூர் காத்தாடிமட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறையினர் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். இதேபோல் மஞ்சூர் மேல்முகாமில் மின்வாரிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாய்கிஷோர் தலைமையிலான மருத்துவகுழுவினர் மின்வாரிய ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். முள்ளிமலை, கீழ்குந்தா, உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைளை தீவிரப்படுத்தினர்.
    தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கோவை அல்லது கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது.

    ஊட்டி:

    தமிழகத்தில் நீலகிரி உள்பட 11 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று மாலை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார்.

    தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கோவை அல்லது கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது.

    பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நீலகிரி ஊட்டி எச்.பி.எப்.பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கரில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து இன்று மாலை திறப்பு விழா நடைபெற்றது.

    மலைப்பிரதேசம் என்பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் ஊட்டியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பிலேயே மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இன்று திறப்பு விழா காணக் கூடிய இந்த மருத்துவ கல்லூரியில், மருத்துவமனை வளாகம், மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் வகையில் மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவர்கள் குடியிருப்பு வளாகம் என 3 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.

    மருத்துவமனை வளாக மானது 19 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பளவில் 8 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. இதில் தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உயர்தர பிணவறை, மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்களுக்கான 1,200 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர 108 வாகன கட்டுப்பாட்டு அறை, வாகனம் நிறுத்துமிடம், மருத்துவமனை அலுவலக கட்டிடம், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான உணவு அருந்தும் அறை, கழிப்பறையும் அமைந்துள்ளது.

    இதுபோக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவ, மாணவிகளுக் கான ஆசிரியர் தொகுதி கட்டிட மும் 3 பிரிவுகளாக 9,438 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.

    இதில் மாணவ,மாணவிகள் கல்வி பயில்வதற்கு தேவையான நூலக கட்டிடம், மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும், குடியிருப்பு வளாகத்தில் மருத்துவ முதல்வர் குடியிருப்பு, குடிமை மற்றும் துணை குடிமை மருத்துவர் குடியிருப்பு, செவிலியர் விடுதி கட்டிடம், மருத்துவ மாணவ, மாணவிகள் விடுதி என அனைத்து அம்சங்களும் நிறைந்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மலைப் பிரதேசத்தில் அமைய உள்ள 2-வது அரசு மருத்துவ கல்லூரி இதுவாகும். ஏற்கனவே இமாசல பிரதேச மாநிலத்தில் மலைப்பகுதியில் இதுபோன்று அரசு மருத்துவ கல்லூரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    செயற்கையான பொருட்களை எரிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில்   நாளை போகி பண்டிகையை புகை மாசின்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாட பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
     
    தமிழகத்தில் பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை தொடங்க  வேண்டும் என்ற நோக்கில், ‘பழையன கழிதலும், புதியன புகுதலுமென’ என நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப்பண்டிகை, காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

     இத்தகைய பழக்கம் பெரும் நகர்புறங்களில் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கடைபிடிக்கப்பட்டு, போகியன்று தங்களிடமுள்ள பழைய பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் பழைய டையர் மற்றும் டியூப், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதாக மாறி புகை மாசு ஏற்படுகிறது . 
     
    இப்புகையால் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக் கும்  தீங்கு விளைவிப்பதாகும்.  கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சித்திணறல் மற்றும் இதர உடல் நலக்குறைவுகள் ஏற்பட ஏதுவாகும். அடர்த்தியான புகை மூட்டம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் படவும், விபத்து ஏற்படவும் வாய்ப்பாக அமையும். 

    ஆகவே இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது. செயற்கையான பொருட்களை எரிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும். புகை மாசற்ற போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில்  விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊட்டி புதுமந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள 5 போலீசார் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஊட்டி:

    நீலகிரியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 121 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரே தெரு அல்லது பகுதியில் 3 பேருக்கு தொற்று உறுதியானால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    தற்போது வரை ஊட்டியில் 16 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் தினந்தோறும் சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஊட்டி புதுமந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள 5 போலீசார் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து போலீஸ் குடியிருப்பில் வசிக்க கூடிய 50 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த முடிவுகள் விரைவில் வர உள்ளது. மேலும் அந்த பகுதியை தனிமைப்படுத்தி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 173 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நீலகிரி திரும்பிய 121 பேர் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதில் 32 பேர் தவிர்த்து மீதமுள்ள அனைவருக்கும் 8-வது நாள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

    தற்போது நோய்பரவல் அதிகமாக உள்ளதால் தினமும் 1,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் 0.6 சதவீதமாக இருந்தது. தற்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தமாதம் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரியில் உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தினம், 18-ந் தேதி வள்ளலார் நினைவு நாள், 26-ந் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு மதுபான விதிகளின் படி டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள், ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது.

    மேற்கண்ட நாட்களில் கட்டாயம் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்புகள், ஓட்டல் பார்கள் மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும்.

    இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதாக தகவல் தெரிந்தால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை 0423-2223802 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×