என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை புதிய அட்டை வழங்கப்பட்டது.
    • அனீமியா பாதித்தவர்களுக்கான சிறப்பு பரிசோதனையும் செய்யப்பட்டது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில், வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை இணைந்து சிறப்பு முகாமினை நடத்தினார்கள். சங்க தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.

    சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ், துணை தலைவர் சந்திரபோஸ், மாற்றுதினாளிகள் சங்க தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வயநாடன் செட்டி சமுதாயமக்களுக்கு சிக்கில் செல் அனீமியா பாதித்தவர்களுக்கான சிறப்பு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை அடையாள அட்டை வழங்குதல், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை புதிய அட்டை வழங்கப்பட்டது.

    கூடலூர் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு எழும்புமுறிவு பிரிவு டாக்டர் பராஸ்வரன் மற்றும் அனைத்து பிரிவு சிறப்பு டாக்டர்கள் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலர் மலர்விழி மற்றும் அலுவலக பணியாளர்கள் சங்க துணைதலைவர் விஜயன் செயலாளர், சண்முகம் நிர்வாகிகள் சுரேந்திரன், கோபி, பிரபாகரன், சதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருவாசகம் நன்றி கூறினார்.

    • வாக்குச்சாவடி குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்

    குன்னூர்,

    குன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.மு.க. வாக்குசாவடி நிலை முகவர்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    குன்னூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஜெகதளா பேரூர் கழக செயலாளர் சஞ்சீவ்குமார் முன்னிலை வகித்தார்.

    மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாண்டி செல்வம்,பொது குழு உறுப்பினர் சதக்கத் துல்லா, உலிக்கல் பேரூர் கழக செயலாளர் ரமேஷ், கண்டோண்மென்ட் ஊராட்சி செயலாளர் மார்டின், மாவட்ட பிரதிநிதிகள் கண்டோன்மெண்ட் வினோத் குமார், கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
    • இந்த ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படம் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெற்றது.

    இதையடுத்து பல்வேறு தரப்பினரும் இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்து, பாகன் தம்பதியினரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்ற குட்டி யானை களையும் பார்வையிட்டு கரும்பு வழங்கினார்.

    பிரதமர் வருகைக்கு பிறகு முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளை பார்வையிட்டு யானைகளுடன் புகைப்ப டம் எடுக்கின்றனர். மேலும் பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியையும் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு ஆவணப்படத்தின் இயக்குனரான கார்த்திகி கோன்சால்வ்ஸ் வந்தார். அவர் முகாமில் ரகு, பொம்மி யானைகளுடனும், பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியுடனும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தில் குட்டி யானைகளுக்கு நடுவே கார்த்திகி கோன்சால்வ்ஸ், பாகன் தம்பதி நிற்கின்றனர். மேலும் குட்டி யானைகள் தங்களின் துதிக்கையால் ஆஸ்கர் விருதினை தூக்கி பிடித்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபடி நிற்கின்றன.

    இந்த காட்சி அங்கு வந்திருந்த சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.


    • பசுமாட்டை மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி சென்றுள்ளார்.
    • மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது.

    நீலகிரி

    பந்தலூர் தாலுகா எருமாடு அருகே இண்கோநகர ்பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் 2 வயதுடைய பசுமாட்டை புல்வெளிக்கு மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி நடைபாதையில் நடந்து சென்றுள்ளார். பசுமாடு முன்னால் சென்றது. அப்போது நடைபாதையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல்அறிந்ததும் சேரம்பாடி உதவிசெயற்பொறியாளர் முத்துகுமார், வருவாய்ஆய்வாளர் விஜயன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் மின்வாரியதுறையினரும் விரைந்துசென்று மின்சாரத்தை துண்டித்தனர். அதன்பிறகு பசுமாட்டின் உடலை மீட்டனர். மேலும் மின்வாரியதுறை மூலம் பசுமாட்டை இழந்தவருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மின்வாரியதுறையினர் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு சமரச விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

    அரவேணு

    தமிழ்நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக சுமுக தீர்வு காணும் வகையில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே 4 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாஜிஸ்திரேட்டு வனிதா தலைமை வகித்து பேசுகையில், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முன்னிலையில் வழக்கு தரப்பினர் நேரிடையாக பேசி சுமுக தீர்வு காணலாம். இதனால் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கிறது. எனவே சமரச மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். வக்கீல் மணிகுமார் பேசுகையில், சமரச மையத்தில் தீர்வு காணப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெறலாம். உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே விரைவாக கையாண்டு, சுமுகமான தீர்வுகளை கட்டணமின்றி காண முடியும். சமரச மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது. இதற்கு மேல் முறையீடு கிடையாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சமரச விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, துணை தாசில்தார் நந்தகுமார், வக்கீல் சங்க தலைவர் பாலசுப்பிரமணி, வக்கீல்கள் குயிலரசன், மோகன், ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சட்ட உதவி மைய அலுவலர் கஜலட்சுமி நன்றி கூறினார்.

    • சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாதவி பரிதாபமாக இறந்தார்.
    • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவருக்கு மணிகண்டன் என்ற மகனும், மாதவி (வயது 21) என்ற மகளும் உள்ளனர். மாதவி கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் விடுமுறையை ஒட்டி மாதவி தனது சொந்த ஊரான சோலூர்மட்டம் வந்திருந்தார். கடந்த 7-ந் தேதி மாதவியும், அவரது தாயாரான ராஜம்மாளும் கோத்தகிரி பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வந்தனர். மாதவி அவரது தாயாரிடம் மற்றொரு கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் மாதவி வராததால் அவரை தேடி ராஜம்மாள் சென்றார்.

    அப்போது கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாதவி விஷத்தை குடித்து விட்டு அமர்ந்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாதவி பரிதாபமாக இறந்தார்.

    மாதவி, அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விழாவில் பாரம்பரிய ஆடை அணிந்து பங்கேற்ற படுகர் இன மக்கள்
    • தேரோட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி கலச பூஜை மற்றும் பூச்சொரிதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. கோவில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து வருகிற 21-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெறும்

    நேற்று நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் சார்பில் விழா நடந்தது. இதனை முன்னிட்டு ஊட்டி மாரி யம்மன், ஹெத்தையம்மன் அலங்காரத்தில், காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார்.

    தேர்பவனி மாரியம்மன் கோவிலில் தொடங்கி கமர்சியல் சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக தேர்பவனி வந்தது. இதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்தும், நடனமாடியும் அம்மனை வீதி உலா அழைத்து வந்தனர்.

    இதில் அதிமுக மாவட்ட செயலாளரும் மத்தியகூட்டுறவு வங்கிதலைவருமான கப்பச்சிவினோத், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்ட னர்.

    மேலும், அன்னதான நிகழ்ச்சி, இசை கச்சேரி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

    இதேபோல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முகூர்த்தகால் நடுதல், 17-ந் தேதி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது

    • தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர்
    • வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்

    ஊட்டி

    நீலகிரி பந்தலூர் தாலுகா அத்திகுன்னா அருகே கே.கே.நகர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த மரங்களை காட்டுயானைகள் அவ்வப்போது புகுந்து நாசம் செய்து வருகின்றன. மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளையும் உடைத்து அட்டகாசம் செய்கின்றன. இது தவிர சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், மாணவ-மாணவிகளையும் துரத்தி வருகின்றன. இந்தநிலையில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. முன்னாள் கவுன்சிலர் மூர்த்தியின் தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது. இதை அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

    • பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
    • இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 400 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாத்திரை வாங்க வந்த முதியவர் ஒருவரிடம், ஆஸ்பத்திரி ஊழியர் மாத்திரை இல்லை என்று கூறினார். அதற்கு அந்த முதியவர் என்னால் நடக்க முடியவில்லை, கால்கள் நடுங்குகின்றன, எவ்வளவு முறை வர முடியும் என்று கேட்டார். அதற்கு அந்த ஊழியர் மாத்திரை இல்லை என்று கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டி அவரை வெளியே அனுப்பினார். இந்த காட்சியை, அங்கு நின்றிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

    • ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சட்டசபையில் அறிக்கப்பட்டது.
    • வருகிற 14-ந் தேதி குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்

    நீலகிரி

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், குன்னூர் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்டங்களில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி 7-வது நிதிக்குழு மூலம் ஊதிய உயர்வுக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சட்டசபையில் அறிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்படவில்லை. இதை கண்டித்து டேன்டீ ஊழியர்கள் கருப்பு கேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லியாளம் டேன்டீ அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதேபோன்று அனைத்து டேன்டீ அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருகிற 14-ந் தேதி குன்னூரில் உள்ள டேன்டீ தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்து உள்ளனர்

    • பெரிய சோலை வனப்பகுதியை இங்கிலாந்து அரசு பசுமை மாறா காடென அங்கீகரித்துள்ளது.
    • சதுப்பு நிலப் பகுதி ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சேமித்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.

    ஊட்டி:

    உலக அளவில் பசுமை மாறா காடுகள் வரிசையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய சோலை வனப்பகுதியை இங்கிலாந்து அரசு பசுமை மாறா காடென அங்கீகரித்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் வனப்பகுதி நிறைந்த சுற்றுச்சூழல் பசுமை கொண்ட மாவட்ட மாகும். கோத்தகிரி நகர் பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் பாதுகாக்க ப்பட்ட வனப் பகுதியாக அறிவித்து வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு அரியவகை தாவரங்கள், பறவைகள், கருஞ்சிறுத்தைகள், வரிப்புலி, கேழையாடு, மலபார் அணில்கள், காட்டு மாடுகள், மற்றும் ஊர்வன உயிரினங்கள் வண்ண த்துப்பூச்சி இனங்கள் என வாழ்கின்ற வன உயிரின உய்விடமாகும். இங்குள்ள சதுப்பு நிலப் பகுதி ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சேமித்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.

    இதனால் கோத்தகிரி சுற்றுப்பகுதிகள் தொடங்கி கோவை, ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளுக்கு தண்ணீரை வழங்கும் நீராதாரமாக விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த வனப்பகுதி இந்திய அளவில் பார்வையை பெற்றுள்ளது. மேலும் இந்த வனப் பகுதியில் கல்லூரி மாணவ -மாணவிகள் சூழல் சுற்றுலா படிப்புகள் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் இயற்கை ஆர்வலர்களுக்கும், சூழலியலாளர்களுக்கும் பயனுள்ள பகுதியாக இந்த வனப்பகுதி அமைந்துள்ளது. தமிழக அரசு கடந்த நிதியாண்டில் சூழல் சுற்றுலா திட்டம் என்னும் பெயரில் இதனை மேம்படுத்த தமிழக அரசு ரூ. 4.6 கோடி நிதி ஒதுக்கி அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது இங்குள்ள வன உயிரினங்களுக்கும், இயற்கை நீரோடைகளுக்கும் எவ்வித பாதிப்பும் வராத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் கவுதம், கோட்டாட்சியர் பூசணக்குமார், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி வெங்கடேஷ், கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், வருவாய் வட்டாட்சியர் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வனத்துறை ஊழியர்களும் பங்கேற்றனர். நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் கோத்தகிரி பகுதியில் உள்ள லாங்வுட் என்ற பெரிய சோலை தமிழக அளவில் தனி கவனம் பெற்றுள்ளது.

    • பிரதமர் மோடி ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதியை பாராட்டி சென்றிருந்தார்.
    • மாயாறு கரையோரம் உள்ள காட்சி கோபுரத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளு, குளு கால நிலை நிலவி வருகிறது. இந்த இதமான காலநிலையை அனுபவிக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவ்வாறு வரும் பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, பின்னர் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு செல்வார்கள்.

    அங்குள்ள யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்வர். மேலும் வாகன சவாரி, யானை சவாரியும் செய்து மகிழ்ச்சி அடைவார்கள்.

    புலிகள் காப்பகத்திற்குள் வாகன சவாரி செய்து சென்று, அங்கு இருக்கும் பல்வேறு வகையான அரிய வகை வனவிலங்குகளை பார்வையிடுவார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 6-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டிருந்தது. யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

    பிரதமர் வந்து சென்ற பின்னர் நேற்று பிற்பகலில் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்தனர்.

    அவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுப்பதை பார்த்து மகிழ்ந்து, யானைகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று பிரதமர் மோடி முதுமலைக்கு வந்து வளர்ப்பு யானைகளை பார்வையிட்டதுடன், அவற்றுக்கு உணவு வழங்கி, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதியை பாராட்டி சென்றிருந்தார்.

    இதையடுத்து சுற்றுலா பயணிகளும், பாகன் தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டி அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து மாயாறு கரையோரம் உள்ள காட்சி கோபுரத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து மாயாற்றின் இயற்கை அழகையும் கண்டு ரசித்தனர்.

    மேலும் வாகன சவாரி செய்து வனத்திற்குள் சென்று, வனவிலங்குகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பிரதமர் வருகையை தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அங்குள்ள விடுதிகள், உணவகங்களும் திறக்கப்பட்டு விட்டது. இன்றும் தெப்பக்காடு யானைகள் முகாமில் அதிக சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    ×