என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    ஒரே நாளில் அடுத்தடுத்து 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இதையடுத்து கைதான மீனவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் சேவாபாரதி பகுதியை சேர்ந்தவர் சிவா.

    இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 60), சிவபாரதி (27), சவுந்தரராஜன் (34), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), செல்வம் (45), அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன் (55) ஆகிய 9 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    நேற்று இரவு கச்சத்தீவு அருகே கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக உங்களை கைது செய்கிறோம் என கூறினர். அதற்கு தமிழக மீனவர்கள் நாங்கள் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் தான் மீன் பிடிக்கிறோம் என்றனர். இதனை ஏற்க மறுத்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சின்னத்துரை உள்பட 9 மீனவர்களையும் கைது செய்து யாழ்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். படகையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

    காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேற்று மாலை காரைக்காலை சேர்ந்த வீரமணி (35) என்பவர் தனது படகில் செல்வமணி, ரமேஷ், தீலிபன், நாகையை சேர்ந்த சத்தியநாதன், நிலவரசன், சுரேஷ் , நவின்குமார், பால்மணி, கவியரசன், ஆறுமுகசாமி, கிஷோர், கோகுல் ஆகிய 12 பேருடன் படகில் மீன்பிடிக்க புறப்பட்டார். தமிழக எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது வந்த இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி வீரமணி, செல்மணி உள்பட 13 மீனவர்களையும் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.

    ஒரே நாளில் அடுத்தடுத்து 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இதையடுத்து கைதான மீனவர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    பின்னர் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர். மறுபுறம் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களை கைது செய்கின்றனர். தொடரும் இந்த அட்டூழிய சம்பவத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்: 

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காட்டில் ஈஸ்வரி என்பவரது வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து இருப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கிவைக்கபட்டு இருந்த 3 லட்சம் மதிப்பு 2800 குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    பின்பு, அதனை பறிமுதல் செய்த போலீசார் சாராய பதுக்கி வியாபாரம் செய்த ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்தனர்.

    வீட்டில் பதுக்கி சாராயம் விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோவில் பற்றி ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 8&ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தங்க பல்லாக்கு திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக காலை பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் நாச்சியார்களுடன், சவுரிராஜப்பெருமாள், தெப்பத்தில் எழுந்தருளினார்.கோவிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி திருக்குளத்தில் மூன்று முறை நூதன பங்களாதெப்பம் என்ற தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், திருமருகல் ஒன்றியக்குழு தலைவருமான இரா.ராதாகிருட்டிணன், தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார் மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யம் நகராட்சியில் அதிக வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:

    வார்டு 1  அனிஸ்பத்திமா திமுக 483, ராணி அதிமுக 327, வார்டு 2 ரோஸ்னாபேகம் திமுக 363, ரபீயத்துல் பச்ஜீரியா சுயேச்சை 246, வார்டு 3 அம்சவள்ளி திமுக 328, செந்தமிழ்ச்செல்வி அதிமுக 156, வார்டு 4 இமயா திமுக 682, ராதா அதிமுக 560, 

    வார்டு 5 இளவரசி திமுக 512, செல்வி அதிமுக 456, வார்டு 6 பாலசுப்பிரமணியன் திமுக 384, பன்னீர் செல்வம் அதிமுக 290, வார்டு 7 அன்னலெட்சுமி திமுக 630, அம்சலேகா அதிமுக 283, வார்டு 8 மலர்கொடி திமுக 573, சத்யா அதிமுக 361, வார்டு 9 ரம்யாதிமுக 496, ஜெகிலா அதிமுக 278, வார்டு 10 திருக்குமரன் திமுக 522, சீனிவாசன் அதிமுக 384, 

    வார்டு 11 தங்கதுரை காங்கிரஸ் 458, குமரபாரதி அதிமுக 427, வார்டு 12 உமாபுகழேந்தி திமுக 463, புனிதா அதிமுக 391, வார்டு 13 மயில்வாகனன் சுயேட்சை 361, குமார் அதிமுக 266, வார்டு 14 மங்களநாயகி திமுக 479, வசந்தி அதிமுக 419, வார்டு 15 ராஜு திமுக 413, ரமேஷ் அதிமுக 379, வார்டு 16 புகழேந்தி திமுக 669, பாபுராஜன் அதிமுக 310, வார்டு 17 சுப்பிரமணியன் திமுக 520, சத்யா அதிமுக 374, வார்டு 18 நமச்சிவாயம் அதிமுக 419, சுப்பிரமணியன் திமுக368, வார்டு 19, செல்வம் திமுக 522, இளங்கோவன் அதிமுக 450, வார்டு 20 நாகராஜன் திமுக 507, கற்பகம் அதிமுக 297, வார்டு 21 ஆயிஷா ராணி திமுக 582, மணி நஞ்சான அதிமுக 383, மொத்த வார்டு21 திமுக 18, காங்கிரஸ் 1 அதிமுக 1 சுயேட்சை 1 வெற்றிபெற்று உள்ளார்கள்.
    திருமருகல் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப் பூதனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

    இந்த கொள்முதல் நிலையத்தில் அதிக அளவில் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.மேலும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நெல் கொள்முதல் நிலையங் களில் ஏற்படும் தவறுகளை சரி செய்யும்படி உத்தர விட்டுள்ளார்.
     
    அதன் பேரில் தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலைய அலுவலக உதவியாளர் சுப்புரத்தினம், கொள்முதல் இயக்க துணை மேலாளர் ரங்கநாதன், கொள்முதல் தரக்கட்டுப்பாடு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அரசு அறிவித்த படி 40 கிலோ 650 கிராம் எடைக்கு மாறாக 42 கிலோ வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் அளவைவிட அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டிருந்ததால் அதிகாரிகள் தற்காலிகமாக நெல் கொள்முதலை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டனர். 
    மேலும் துறை சார்ந்த தவறுகள் சரி செய்யப்பட்டது கொள்முதல் வழக்கம்போல் நடைபெறும் எனவும் விவசாயிகளிடம் கூறிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் கூறிய தாவது:
    மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரி களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.

    அந்த ஆய்வின் போது 40 கிலோ 650 கிராம் தான் ஒரு மூட்டை எடை இருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக 42 கிலோ, 42 கிலோ 200 கிராம் என அதிக எடை கொண்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வரிசை படி கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் விருப்பப்படி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தவறுகளை தற்போது அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி உள்ளோம். மேலும் ஒரு விவசாயிடம் எந்த அளவிற்கு நெல்லை கொள்முதல் செய்யப்பட வேண்டுமோ அதைவிட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. 
    இதனை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
    கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூரில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

    நான்காம் கால யாகசாலை பூஜைக்குப்பின் திரவுபதை அம்மன், அய்யனார் பச்சை முத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31-ந்தேதி கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 21-ந்தேதி சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இன்றுடன் 21 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் 21 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
    வேதாரண்யம் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 

    பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், சேதுசாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட கணக்கன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (34). இவர் கடந்த 17-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது திருத்துறைப்பூண்டி சாலையில் வேம்பதேவன்காட்டைச் சேர்ந்த பழனிச்சாமி (34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மணி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அன்பழகனும் காயமடைந்தார்.

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் மணி திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்பழகன் நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பழனிசாமி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதில் மணி சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    வேதாரண்யத்தில் தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் சர்வகட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 51) விவசாயி. இவரது தாயார் கமலாம்பாள் (80) கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்தார். 

    அவரது படத்திறப்பு நடந்து முடிந்தது. இந்நிலையில் தாயார் இறந்த சோகத்தில் இருந்த நாகராஜன் துக்கம் தாங்காமல் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் இறந்தார். 

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்& இன்ஸ்பெகட்ர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நாகை நகராட்சியில் கள்ள ஓட்டுப்போட முயன்ற வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 28-வது வார்டுக்கு வாக்குப்பதிவு நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வாலிபர் ஒருவர் வாக்களிக்க வந்தார். 

    அப்போது அ.தி.மு.க வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் முரளிதரன், அந்த வாலிபரிடம் இருந்த பூத் சிலிப்பை வைத்து வாக்காளர் பட்டியலை பார்த்தபோது அதில் ராமச்சந்திரன் என்று பெயர் இருந்தது. ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள ராமச்சந்திரன் தற்போது வெளிநாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் ராமச்சந்திரன் பெயரில் கள்ள ஓட்டுப்போட வந்தது தெரிய வந்தது. உடனே அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வாலிபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் மீது யாரும் புகார் தராததால் அவரை வெளியே விடுவதாக தகவல் பரவியது.

    இதனால் அ.திமு.க.வினர் நகர செயலாளர் தங்க.கதிவரன் தலைமையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். 
    இதையடுத்து பூத் ஏஜெண்ட் முரளிதரன் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கொடுத்தார். ஆனாலும் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் டவுன் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். 

    அப்போது இன்ஸ்பெக்டர் பெரியசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிடிபட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 
    இதனையடுத்து அ.தி.மு.க.வினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    மாசிமகப் பிரமோற்சவத்தை முன்னிட்டு வடக்குபொய்கைநல்லூரில் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கை. நல்லூர் பழமை வாய்ந்த நந்தி நாதேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரமோற்சவம் 8&ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவத்தில் நந்திநாதேஸ்வரர், சவுந்தர நாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாட மஹா தீபாராதனை காட்டப்பட்டன.
     
    தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வர்ண வினாயகர் கோவிலில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் சிப்பந்திகள் மற்றும் வீரன்குடிகாடு நந்தவன காளியம்மன் கோவில் நண்பர்கள் குழு செய்திருந்தனர்.
    ×