என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    • அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அதீஸ் (வயது29). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கும் அவரது அண்ணன் குமரேசனின் மகன்களான சுகாஷ் (25), சுனில் (21) ஆகியோருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுகாஷ், சுனில் ஆகிய இருவரும் சேர்ந்து அதீசை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தம்பி கொலையில் அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே அப்போது காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வேளியூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    • ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர்.
    • ஷீபாவிடம் கடைசியாக பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏலக்காய்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவருடைய மகள் ஷீபா (வயது 25), இவர் குன்னவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஷீபாவின் குடும்பத்தினர் ஷீபாவை காணவில்லை என ஒரகடம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர்.

    ஷீபாவிடம் கடைசியாக பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் (வயது 26) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சாமுவேலும் ஷீபாவும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து பழகி வந்ததாகவும் திருமணம் செய்து கொள்ளும்படி சாமுவேலிடம் ஷீபா கூறிவந்தார்.

    இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷீபா காதலன் சாமுவேலுடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோவலவேடு ஏரி பகுதிக்கு ஷீபாவை அழைத்துசென்று அங்கு வைத்து ஷீபாவின் கழுத்தை டிஷர்ட் மூலம் நெரித்து கொலை செய்ததும் உடலை ஏரியின் மதகுப்பகுதியில் வீசிவிட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து காதலன் சாமுவேலிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் பணம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை தேடினார்கள்.
    • கடத்தல் கும்பல் வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஷியாம் (வயது 17). பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷியாம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் ஷியாமிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென்று அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஷியாமை கடத்தி சென்றனர்.

    அன்று இரவு கடத்தல் கும்பல் ஷியாமிடம், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி போனை தருமாறு கூறினார்கள். அவர் உடனடியாக தனது உறவினர் பிரேம் (20) என்பவருக்கு போன் செய்து அழைத்தார். பிரேம் ஷியாமை தேடி அவர் சொன்ன இடத்துக்கு சென்றார். அப்போது அந்த கும்பல் பிரேமையும் கடத்தி வைத்துக் கொண்டனர்.

    பின்னர் கடத்தல் கும்பல் அவர்கள் இருவரையும் அங்குள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர் அங்கிருந்தபடியே 2 வாலிபர்களின் உறவினரான பிரேம் நசீர் என்பவரை கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்டனர். 2 பேரையும் விடுவிக்க வேண்டுமானால் தாங்கள் சொல்லும் மொபைல் நம்பருக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் செலுத்துமாறு கூறினார்கள். மேலும் போலீசில் புகார் அளித்தால் இருவரையும் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.

    இதையடுத்து பிரேம் நசீர், கடத்தல்காரர்கள் சொன்ன மொபைல் நம்பருக்கு ஜிபே மூலம் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். தன்னிடம் அவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கூறினார்.

    ஆனால் அதற்கு கடத்தல்காரர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் மேலும் ரூ.4 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். ஆனால் மேலும் பணம் வேண்டும் என்று அவர்கள் கூறியதால் மீண்டும் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். ஆனாலும் கடத்தல் கும்பல் 2 வாலிபர்களையும் விடவில்லை. ரூ.14 ஆயிரம் அனுப்பிய பிறகும் இருவரையும் விடுவிக்காததால் அவர்களது குடும்பத்தினர் ஒரகடம் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் பணம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை தேடினார்கள். அப்போது கடத்தல் கும்பல் வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் அங்கு செல்வதற்கு முன்பே ஊர் பொதுமக்கள் வனப்பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கு கடத்தப்பட்ட 2 வாலிபர்களும் கடத்தல் காரர்கள்கள் 4 பேரும் இருந்தனர். பொது மக்கள் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கடத்தல் கும்பல் கத்தியை காட்டி மிரட்டினார்கள்.

    பதிலுக்கு பொதுமக்கள் கற்கள் மற்றும் மரக்கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கடத்தல்காரர்கள் நிலை குலைந்தனர். பின்னர் கடத்தப்பட்ட 2 வாலிபர்களையும் பொதுமக்கள் மீட்டனர். அதன் பிறகு கடத்தல்காரர்கள் 4 பேரையும் பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஒருவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்தது. மற்றவர்களுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த நட்ராஜ் (31), அய்யப்பன் (19), படப்பையை சேர்ந்த மணிகண்டன் (19), சென்னை கண்ணகி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (19) என்று தெரிய வந்தது. இந்த கும்பல் இதே போல் பொதுமக்களை கடத்தி சென்று பணம் பறித்து வருவதாக கூறினார்கள்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடத்தல்காரர்களை ஊர் பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • திருப்பதி, காலடி, காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாடு முழுவதும் ஆதிசங்கரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு நிலைநாட்டியவர் ஆதிசங்கரர். இவரது 2532-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆதிசங்கரர் ஜெயந்தி விழா தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.

    திருப்பதியில் உள்ள விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதிசங்கரர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    இதேபோல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடுமுழுவதும் சங்கரர் ஜெயந்தி விழாவை கொண்டாட காஞ்சி சங்கரமடம் ஏற்பாடு செய்துள்ளது. ஆதி சங்கரரின் சத்தியம், ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை பரப்புவதே இதன் நோக்கம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சசிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஐம்பொன்னால் ஆன ஆதிசங்கரர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. அதேபோல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சார்பில் திருப்பதி, காலடி, காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாடு முழுவதும் ஆதிசங்கரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    இன்று மாலை நடை பெறும் நிகழ்ச்சியில் காஞ்சி பாடசாலையில் 4 வேதங்கள் கற்ற 175 மாணவர்களுக்கு சான்றிதழ்களை சங்கராச் சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்குகிறார்.

    இதுகுறித்து சங்கர மடத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'ஆதிசங்கரரின் 2532-வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வேதபண்டிதர்கள், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியா மலையிலும், புனேயை சேர்ந்தவர்கள் நேபாளத்திலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அமிர்தசரஸ் மற்றும் சண்டிகரிலும், புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சிக்கிமிலும் கூடி உள்ளனர். ஆதிசங்கரர் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டார்' என்றனர்.

    • நான்கு வருட படிப்பு முடித்த பிறகு பணம் திருப்பி அளிக்கப்படும்.
    • பிப்ரவரி மாதமே மாணவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டிய தொகை கடந்த மாதம் வரை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் உறுப்பு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் உதவியாளராக பணி செய்து வருகிறார். இவர் கல்லூரியின் வரவு-செலவு கணக்கு வழக்குகளை நிர்வகித்து வருவதாக தெரிகிறது.

    அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே இந்த கல்லூரியில் வசூலிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளிடம் பெறப்படும் டெபாசிட் பணம் வங்கியில் நிரந்தர வைப்புநிதி கணக்கில் செலுத்தப்படும். நான்கு வருட படிப்பு முடித்த பிறகு பணம் திருப்பி அளிக்கப்படும்.

    இந்நிலையில் பிப்ரவரி மாதமே மாணவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டிய தொகை கடந்த மாதம் வரை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அப்போது இந்த பணம் மோசடியாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. கல்லூரிக்கு சொந்தமான 9 வங்கி கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது அவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது.

    ரூ.3 கோடி வரை பண மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி முதல்வரின் போலி கையெழுத்து மற்றும் போலி லெட்டர் பேட் மூலம் இந்த பணத்தை எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வங்கி கணக்கு விவரங்களை நிர்வகித்து வரும் ஊழியர் பிரபு மீது சந்தேகம் உள்ளதாக கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது.
    • இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.இதில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் சென்னைக்கு வந்து நடிகர் ஆவதற்கு முன்பாக ஒரு ஓவியனாக இருந்தேன். சென்னையில் இருந்து 60 கி.மீ தூரம் சைக்கிளில் மாமல்லபுரம் வந்து தெரு ஓரம் தங்கியிருந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை வரைந்துள்ளேன். இதற்கு எனது ஆர்வமும் விடாமுயற்சியுமே காரணம் ஆகும். எனவே மாணவர்கள் முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது. இது ஒரு தெய்வீக கலைச்சார்பு பயிற்சியாகும். சாதாரண நபர்களுக்கு இது தோன்றாது. உங்களுக்கு கடவுள் வாய்ப்பளித்துள்ளார், வளருங்கள்.

    நான் ஒரு நடிகன், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை என்கிற மகிழ்ச்சி எனக்கு நிறைவை தரவில்லை. நான் ஓவியனாக வாழ்ந்து அலைந்து திரிந்த அந்த நாட்களே எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அனைத்து பிரிவு மாணவ, மாணவிகள் இடையே நடத்தப்பட்ட மரச்சிற்பம் செதுக்குதல், கழிமண்,கற்சிலைகள் வடித்தல், உலோக உருவம் செய்வது, பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிவக்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    • ராமானுஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ஸ்ரீராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருமாளுக்கு 10-நாள் பிரம்மோற்சவமும், ஸ்ரீராமானுஜருக்கு 10 நாள் அவதார திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஸ்ரீராமானுஜரின் 1006-வது ஆண்டு அவதார திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. யானை, குதிரை, சூரிய பிரபை உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 9-வது நாளான இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. காந்தி சாலை, திருமங்கை ஆழ்வார் சாலை வழியாக ராமானுஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பிரம்மோற்சவ விழா மே 4-ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை 10-ம் நாள் நடை பெறுகிறது. பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 10-ந் தேதி காலை தேர் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மணிமங்லம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த காவனூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயரங்கன். நேற்று முன்தினம் விஜயரங்கன், அவரது மனைவி, 2 மகள்களும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    மாலையில் விஜயரங்கனும், அவரது மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிவலிங்க வீதி உலாவின் போது சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
    • ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிபட ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    காஞ்சீபுரம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் 8 அடி அகலம்,8 அடி உயரத்தில 5 முகங்கள் உடைய ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் ஆன சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது.

    இதனை பூ வியாபாரி கார்த்திகேயன் என்பவர் தலைமையில் ஏராளமான சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து ராஜவீதிகளில் வீதி உலாவாக எடுத்து வந்தனர்.

    இந்த பிரம்மாண்ட ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் மலர்தூவி வரவேற்று பயபக்தியுடன் வழிபட்டனர். பூக்கடை சத்திரத்தில் தொடங்கிய சிவலிங்கம் உலா பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை அடிவாரம் அடைந்ததும் அங்குள்ள உள்ள நித்ய அன்னதான சத்திரத்தின் தலைவர் விஸ்வநாதனிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    சிவலிங்க வீதி உலாவின் போது சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன. ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிபட ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பணம் கொடுக்காததால் வேன் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பாவாபேட்டை தெருவை சேர்ந்தவர் அயூப் கான்(வயது50).வேன் டிரைவர்.

    நேற்று இரவு அவர் சவாரிக்கு சென்றுவிட்டு ரங்கசாமி குளம் பகுதியில் வேனை நிறுத்தினார். பின்னர் அயூப்கான் அங்கு மதுகுடித்ததாக தெரிகிறது.

    அப்போது அவ்வழியே மதுபோதையில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் அயூப்கானிடம் பணம் கேட்டு மிரட்டினர். இதனை அயூப்கான் கண்டித்தார். இதனால் அவருக்கும், வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அயூப்கானை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். மேலும் அருகில் கிடந்த கல்லால் அவரது தலையில் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அயூப்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவ்வழியே சென்றவர்கள் அயூப்கான் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலையில் தொடர்புடைய சேக்குப்பேட்டையை சேர்ந்த பிரதீப் குமார் (20), பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    பணம் கொடுக்காததால் வேன் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் பால் வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவர் உள்ளே இருந்து கூடுதலாக பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு வெளியே அவற்றை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 576 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இருவர் மீதும் ஆவின் பால் நிறுவன பொது மேலாளர் சுஜாதா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்ததாக தெரிகிறது. புகாரின் அடிப்படையில் செம்மஞ்சேரி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×