என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வெரிகோஸ் வெயின்ஸ் 5 நிலைகளுக்கும் டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள்.


    குன்றத்தூர் பஸ் டிப்போ அருகில் உள்ள நற்பவி ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் 18-ந்தேதி தொடங்கியது. இந்த முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    முகாமில் ஆயுர்வேதா, பஞ்சகர்மா, யோகா மற்றும் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் வெரிகோஸ் வெயின்ஸ் 5 நிலைகளுக்கும் டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். சிகிச்சை முகாம் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 91506 99903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
    காஞ்சீபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்குகிறது.

    இந்த கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11- வது நாளான இன்று அதிகாலை ஏலவார்குழலி- ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக நேற்று இரவே ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இரவு முழுவதும் கோவில் வளாகத்தில் பரதநாட்டியம், சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும்கு ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி வீதியுலா நடந்தது.

    வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறுகிறது.
    பரவலாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் உள்பட இதுவரை சுமார் 1,34,835 அரசு அலுவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    இப்பயிற்சியில் பல்வேறு துறைகளில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் 275 பேர் பயிற்சி பெற உள்ளனர். பரவலாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் உள்பட இதுவரை சுமார் 1,34,835 அரசு அலுவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, கல்லூரி முதல்வர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வண்டலூர் பூங்காவின் பின்புறம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் முழுவதும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி முதலைகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ள கொளப்பாக்கம் ஏரியை ஒட்டி வரபிரசாத் நகர் உள்ளது. இது வண்டலூர் பூங்காவின் பின்புறம் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் வர பிரசாத் நகருக்குள் நேற்று இரவு சுமார் 4 அடி நீளம் உள்ள முதலை ஒன்று ‘ஹாயாக’ சுற்றி வந்தது. இதனைக்கண்டு நாய்கள் குரைத்தன. அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது சாலையில் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து குடியிருப்புக்குள் புகுந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்புடன் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் வரபிரசாத் நகர் பகுதிக்குள் வேறு முதலை புகுந்துள்ளதா என்று சோதனையிட்டனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

    குடியிருப்புக்குள் முதலைகள் வந்தால் உடனடியாக வண்டலூர் பூங்கா நிர்வாகத்துக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் முதலை புகுந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதற்கு முன்பும் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதிகளுக்குள் முதலை புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் முதலைகள் சிறிதாக இருக்கும்போது உணவுக்காக பறவைகள் தூக்கி செல்கின்றன. அவை தவறி பூங்காவை தாண்டியுள்ள காட்டு பகுதிகளுக்குள்ளும், நீர்நிலைகளிலும் விழுந்து வளர்ந்து வருகிறது.

    இப்படி வளர்ந்த முதலைகள் சதானந்தபுரம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம் ஏரி பகுதிகளில் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    பொதுமக்களின் தொடர் குற்றச்சாட்டுக்கு பின்னர் வண்டலூர் பூங்காவில் முதலைகள் இருக்கும் நீர் நிலைகளின் மேல் பகுதியில் பறவைகள் புகாத வண்ணம் வலைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும் பூங்காவிற்கு வெளியே தண்ணீருக்குள் இருக்கும் முதலைகளை பிடிப்பதில் சிரமம் என்பதால் அதனை தேடும் முயற்சி நடைபெறவில்லை. நீர்நிலைகளில் உள்ள முதலைகள் வெளியே வரும்போது அதனை வனத்துறையினர் பிடித்துச் செல்கின்றனர்.

    எனவே வண்டலூர் பூங்காவின் பின்புறம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் முழுவதும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி முதலைகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காஞ்சீபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதிகளில் அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதையொட்டி,  பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அங்கு விரைந்து சென்றார்.  அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி வந்த கோவிந்தவாடி அகரம் பகுதியினை சேர்ந்த முருகன் 36, மேகநாதன் 33, ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஒரகடம் அருகே வேன் கவிழ்ந்து 8 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    சென்னை மடிப்பாக்கம் அடுத்த கோவிலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 15-க்கும் மேற்பட்டோர், நேற்று காலை ஆரணி அருகே உள்ள படவேட்டம்மன் கோவிலில் நடைபெற உள்ள காதுகுத்து நிகழ்ச்சிக்காக வேனில் சென்றனர். வேன் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி அருகே வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை திருப்பத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவன், என்ஜினீயர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடை பெற்று வருகிறது. நேற்று வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஓரிக்கை பகுதியை 12-ம் வகுப்பு மாணவன் ராகுல், திருப்பக்கூடல் தெருவை சேர்ந்த நரேஷ், கோவாவில் என்ஜினீயராக வேலை பார்த்து வரும் கவியரசு ஆகியோர் தங்களது நண்பர்களுடன் விழாவை காண வந்தனர்.

    அப்போது கூட்ட நெரிசலில் ஒருவரது காலை அவர்கள் மிதித்ததாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    சிறிது நேரம் கழித்து மாணவர்கள் நரசிங்கராவ் தெரு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 15 பேர் கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்து மாணவர்களை வழிமறித்தனர்.

    வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் மாணவர்கள் நரேஷ், கவியரசு, ராகுல் ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.

    உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நரேஷ், கவியரசு ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த கவியரசு செஸ் சாம்பியன் ஆவார். விடுமுறையில் கோவில் விழாவுக்கு வந்த போது அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

    இது குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேரோட்டத்தையொட்டி 24 அடி உயர தேர் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏல வார்குழலியும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரிய தலமாக ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஏகம்பர நாதர் கோவிலில் பங்குனி மாதஉற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான பங்குனி உற்சவ விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்டத்தையொட்டி 24 அடி உயர தேர் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏல வார்குழலியும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.

    இதைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில்ஏலவார் குழலியும், ஸ்ரீ ஏகாம்பர நாதரும் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வீ.பாரதிதாசன், ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா. ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம். மகாலெட்சுமி யுவராஜ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பொன் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தெருக்கள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    தேரோட்டத்தின் போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களை இசைத்தவாறு சென்றனர்.

    திருத்தேர் 4 ராஜ வீதிகளில் உலாவந்த பின்னர் மதியம் மீண்டும் தேர் நிலையை அடைந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் தேரில் இருந்து கோவிலுக்கு சென்று எழுந்தளி பக்தர்களுக்கு அருளி பாலித்தார்.

    இதனையடுத்து திருக்கோவில் உற்சவ மண்டபத்தில் பிராயச்சித்த அபிஷேகமும், விசே‌ஷ திவ்ய சமர்ப்பணமும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு காண கண் அடியேன் பெற்றவாறே என்ற தலைப்பில் அருட் குருநாதர் சிவாக்கர தேசிக சுவாமிகள் திருமுறை அருளுறை நிகழ்த்துகிறார்.

    தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் காலை முதல் இரவு வரை அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு இருந்தது. சிவகாஞ்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பங்குனி மாத உற்சவத்தையொட்டி வருகிற 15-ந் தேதி காலையில் ஆறுமுகப் பெருமான் வீதியுலாவும். மாலையில் பிட்சாடனர் தரிசனமும், இரவு மின் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.

    16-ந் தேதி ஆள்மேல் பல்லக்கு உற்சவமும், இரவு திருக்கோயில் வரலாற்றை விளக்கும் வெள்ளி மாவடி சேவைக்காட்சியும் நடைபெறுகிறது.

    17-ந் தேதி சபாநாதர் தரிசனம் மற்றும் ஏலவார் குழலியம்மை ஒக்கப் பிறந்தான் குளத்துக்கு எழுந்தருளி வீதி உலா நடக்ககிறது.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது ஏலவார் குழலி அம்மையும் ஏகாம்பர நாதரும் திருக்கல்யாண திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். அன்று இரவு தங்க இடப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வருகின்றனர்.

    18-ந் தேதி பகல் 12 மணிக்கு கந்தப்பொடி உற்சவமும், இரவு நூதன வெள்ளி உருத்திர கோடி விமானத்தில் வீதியுலா வருகின்றனர். 19-ந் தேதி புருஷாமிருக வாகனத்திலும், இரவு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.

    20-ந் தேதி காலையில் சந்திரசேகரர் வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி சர்வ தீர்த்தக்குளத்தில் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவைற்றை வெயிலில் இருந்து காத்துக்கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    தாம்பரம்:

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

    தற்போது பனிக்காலம் முடிந்து கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாது காக்க உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    யானைக்கு அதன் வளாகத்திலேயே சேற்று மண் குளியல் மற்றும் ‘‌ஷவர்’ குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிம்பன்சி குரங்குகளுக்காக அதன் வளாகத்தில் ‘‌ஷவர்’ குளியல் அமைக்கப்பட்டுள்ளது.

    கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பறவைகளுக்கு அதன் கூண்டுகளை சுற்றி சாக்கு பை மூலம் வெயில் உள்ளே வராத அளவுக்கு திரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவைற்றை வெயிலில் இருந்து காத்துக்கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    உள்ளரங்கில் காணக்கூடிய ஊர்வன உள்ளிட்ட விலங்குகளுக்கு வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் தரையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மரக்கிளைகள், மரப்பொந்து போன்றவை செயற்கை முறையில் அமைத்துள்ளனர்.

    இதன்மூலம் வெயிலில் இருந்து ஊர்வன விலங்குகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிங்கம், புலி, சிறுத்தைகள் போன்றவற்றுக்கு ஐஸ்கட்டியாக உறைய வைத்த மாமிச உணவுகள் வெயிலை முன்னிட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதன் கூண்டுக்குள் வைத்து தண்ணீர் பீச்சி அடித்து வெயிலில் இருந்து காத்துக்கொள்ள 2 முறை குளிப்பாட்டி வருகின்றனர். இதுபோல் அனைத்து விலங்குகளுக்கும் அதன் வசிப்பிடத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    யானை, காண்டாமிருகம், குரங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக யானை மற்றும் சிம்பன்சி குரங்குகளுக்கு இளநீரும் கொடுக்கப்படுகிறது.
    நாட்டின் முன்னேற்றம், வேலைவாய்ப்பில் கட்டுமான நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெறும் 30-வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கரிகாலன் விருது வழங்கப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு வாக்குறுதி தந்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அது நடக்காமல் போய்விட்டது.  இப்போது மீண்டும் ஆட்சிமாற்றம் வந்திருக்கிறது. எனவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கலைஞர் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ, அது நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், செய்வதைத்தான் சொல்லும் என்று கலைஞர் அவர்கள் எந்த அடிப்படையிலே அந்த உறுதிமொழியை மக்களிடத்திலே தந்தாரோ, அதை இன்றைக்கு நாங்கள் கூடுதலாக நிறைவேற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். 

    மாநாட்டு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

    சொன்னதை மட்டுமல்ல, செய்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. ஏனென்றால், தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். 16 அடி பாய்ந்தால் எங்கள் தலைவருக்கு அது பெருமை இல்லை, 32 அடி பாய்ந்தால்தான் எங்கள் தலைவருக்கு பெருமை கிடைக்கும். 

    மத்திய - மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் நீங்கள். ஆம் - நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் ஒன்றிய - மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள். அந்தப் பயணத்தினுடைய ஒரு அங்கமாகவே  இந்த 30-வது அகில இந்திய கட்டுநர்கள் மாநாட்டை அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் தென்னக மையம் நடத்துகிறது. 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தென்னக மையம் - அகில இந்தியக் கட்டுநர்கள் சங்கத்தின் பழமையான மையம் என்பதையும் தாண்டி, “தாய் மையம்” என்பதாலோ என்னவோ - அதே தாய் மனப்பான்மையோடு, மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வேலை வழங்கும் அமைப்பாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல - வேலைவாய்ப்பிற்கும் உறுதுணையாக இருப்பதுதான் இந்தச் சங்கத்தின் சிறப்பு.

    இவ்வாறு அவர் பேசினார்.
    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூசிவாக்கம் கால்வாயில் இருந்து கலங்கல் ஓடையின் வழியாக கன்னிகாபுரம் சென்று கசிக்கால்வாயில் விழுந்து ஒட்டிவாக்கம் ஏரிக்கு செல்கிறது.
    காஞ்சிபுரம்:

    முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டு உறுப்பினர் ஷாலினி வேலு ஆகியோர் மாநகராட்சி இணை ஆணையர் நாராயணனிடம் கோரிக்கை மனு வழங்கினர் அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூசிவாக்கம் கால்வாயில் இருந்து கலங்கல் ஓடையின் வழியாக கன்னிகாபுரம் சென்று கசிக்கால்வாயில் விழுந்து ஒட்டிவாக்கம் ஏரிக்கு செல்கிறது. இதனை கண்ணிகாபுரம் மெயின்ரோட்டின் அருகே கால்வாயை அடைத்து கழிவுநீர் செல்லாமல் தடை ஏற்படுத்தி நீர் தேங்கி கொசு மற்றும் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட ஓடை, கால்வாயை சுத்தம் செய்து கால்வாயை கருங்கற்களால் கட்டி நிரந்தரமாக தடையின்றி செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுவை பெற்று கொண்ட இணை ஆணையர் நாராயணன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதையொட்டி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், இணை ஆணையர் நாராயணன் ஆகியோர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி வேலாயுதத்திற்கு உத்தரவிட்டனர். உடனடியாக கன்னிகாபுரம், பூசிவாக்கம் கால்வாயை நகரமைப்பு அதிகாரி வேலாயுதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கால்வாயில் நீர் செல்ல முடியாமல், அந்த பகுதி ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளதால் கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி தூர்நாற்றமும், கொசுக்கள் அதிக அளவில் காணப்பட்டது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்துறையினருக்கு பரிந்துரைப்பதாக நகரமைப்பு அதிகாரி உறுதியளித்தார்.
    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை சில மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பவழந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 29). இவரது மனைவி சுஜாதா(25). இவர்களுக்கு கடந்த 8-ந் தேதி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இந்தநிலையில் நேற்று தாய் சுஜாதாவை அவரது மாமியார் கழிவறைக்கு அழைத்து சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

    இதற்கிடையில் குழந்தையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, இப்போதுதான் குழந்தையுடன் ஒரு தம்பதியை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

    உடனடியாக அதே ஆட்டோவில் போலீசாரின் உதவியுடன் காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு சென்ற உறவினர்கள் அந்த தம்பதியை தீவிரமாக தேடினர். அப்போது அங்கு மறைவாக குழந்தையுடன் நின்று கொண்டிருந்த தம்பதியை பிடித்து அவர்களிடமிருந்த பச்சிளம் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை கடத்திய தம்பதியை கைது செய்தனர். குழந்தையை கடத்தியவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் பிச்சிவாக்கம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமன் (30) அவரது மனைவி சத்யபிரியா (23) என்பதும் திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், குழந்தையை கடத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    ×